Wikipedia

Search results

Wednesday, 9 December 2015

Sithargal ulagam 9

பருவத்தே பயிர்செய்!
 
 
Labels: திருமூலர், மெய்ஞானம்
ஔவை பிராட்டியார் அருளிய நீதி நூலான ஆத்திச் சூடியில் இடம்பெற்ற வரிதான் "பருவத்தே பயிர் செய்". இந்த எளிய ஒற்றை வரியின் ஊடே பொதிந்திருக்கும் வாழ்வியல் தத்துவம் மகத்தானது. அதாவது செய்யக் கூடியவைகளை காலத்தே செய்யத் தவறிவிட்டு பின்னர் வருந்திப் பயனில்லை.  காலத்தே பயிர் செய்வதைப் போல நம் கடமைகளை உடலில் வலுவும் திறனும் இருக்கும் போதே செய்து விட வேண்டும். ஏனெனில் நம்முடைய இளமை நிலையில்லாதது. 
இதே கருத்தினை திருமூலர் பின்வருமாறு விளக்குகிறார்.
கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே
விழக்கண்டுந் தேறார் விழியிலா மாந்தர்
குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில ஹாளில்
விழக்கண்டுந் தேறார் வியனுல கோரே!
 
காலையில் கீழ்த்திசையிலே இளமையாய் எழுந்து விரைந்து மேற்சென்ற கதிரவன் நண்பகலில் இளமைத் தன்மை நீங்கிப் பின்னர் முதுமை எய்தி மாலையில் மேற்திசையில் வீழ்ந்து மறைதலைக் கண்ணாரக் கண்டும், ‘இளமை யெழுச்சி என்றும் நிலையுடையது அல்ல’ என்பதனை மக்கள் உணர்வது இல்லை. மேலும் தன் வீட்டிலே பிறந்த பசுவின் இளங்கன்று சில ஆண்டுகளில் காளைப் பருவம் நீங்கி முதுமையடைந்து எருதாய்ச் செயலற்று இறப்பதைக் கண்ட பின்னரும், இந்த உலகில் வாழும் மனிதர்கள் தமது இளமையும் அவ்வாறு நிலையற்றது என்று உணராதவர்களாக இருக்கின்றனர் என்கிறார்.
சூரியனும், கன்றும் சீக்கிரத்தில் இளமையை இழந்துவிடும் பொழுது, மனிதன் மட்டும் எவ்வாறு தோன்றியபடியே இளமையோடு இருக்க முடியும்?
சூரிய உதயத்தையும் மறைவையும் தினம் தினம் கண் கூடாக பார்த்தும்கூட, தோன்றிய பொருளுக்கு அழிவுண்டு என்பதை அறியாது,  கிடைத்தற்கரிய இளமைப் பருவத்தில் தீமைகளைச் செய்து நாம் நிர்க்கதிக்கு ஆளாகாமல் பஞ்சேந்திரியங்களையும் இளமையிலேயே ஜெயித்து வாழவேண்டும் என்கிறார் திருமூலர்.
இளமை கழிந்து போகுமுன் அருமையான செயல்களைச் செய்துவிட வேண்டும். முதுமையில் செய்ய எண்ணினாலும் கூட அச்செயல்களைச் செய்வதற்குரிய ஆற்றல் நமக்கு இல்லாது போய்விட வாய்ப்புள்ளது.  இதனை திருவள்ளுவப் பெருந்தகை பின்வருமாறு கூறியிருக்கிறார்.
 “அன்றறிவா மென்னா தறம்செய்க மற்றது
பொன்றுங்காற் பொன்றாத் துணை.”
 
 
 
ஆசை விடவிட ஆனந்த மாகுமே!
 
 
 
Labels: குதம்பைச் சித்தர், திருமூலர்,மெய்ஞானம்
நாம் பிறந்த நொடியில் இருந்து கடைசி மூச்சு வரை எப்படி காற்றின் தேவை அவசியம் ஆகிறதோ, அப்படியே வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஏதோ ஒரு தேவை அவசியமாகவும், அத்யாவசியமாகவும் ஆகிப் போகிறது. அந்த வகையில் தேவைதான் மனித வாழ்வின் ஆதாரம்.  தேவைகளே நம் வாழ்வின் அத்தனை தேடல்களுக்கும் ஆரம்பப் புள்ளியாக இருக்கிறது. இந்த தேடல்கள் எப்போதும் ஒரு தொடர் கதையைப் போலத்தான், முடிவடைவதே இல்லை. ஒரு தேவை பூர்த்தியானால், அடுத்தடுத்த தேவையை இலக்காக்கிக் கொண்டு நகர்கிறது. இந்த பயணத்தையே நாம் ஆசை என்கிறோம்.  
இந்த தேவைகள் மனிதருக்கு மனிதர் வேறுபடுகிறது. இது அவரவர் வளரும் சூழலைப் பொறுத்தவை.சிலருக்கு பணத்தின் மீது ஆசை, சிலருக்கு பகட்டான வாழ்க்கையின் மீது ஆசை, வேறு சிலருக்கோ வீடு வாசல் நிலம் இவைகளின் மீது ஆசை, இந்த ஆசைகள் எல்லாம் நமக்கு தேவையான, தகுதியான ஆசையாகவே இருக்கின்றவரையில் அதிகம் பிரச்சினை வராது. இது அளவு மீறி  தீவிரமாக வெளிப்படும்போது கவலையும் பிரச்சினைகளும் ஆரம்பித்து விடும்.அளவுக்கு மீறிய ஆசைகளே நம் அத்தனை துயரத்திற்கும் காரணம் என்கிறார் கௌதம புத்தர். பேராசை பெரு நஷ்டம் என்கிறது நம் முதுமொழி.
தேவை ஆசையாக மாறி, அந்த ஆசைகளே நம்முடைய முழுமுதற் தேவையாகிப் போகிற நிலையில் தான் நமது மனநிம்மதி போய்விடுகிறது. அதற்காக ஆசைப்படக்கூடாதா? ஆசைப்படாமல் இருந்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் எப்படி ஏற்படும் என்கிற கேள்வி வரும். யாரும், எதற்கும் ஆசைப்படலாம் ஆனால் நாம் ஆசைக்கு அடிமையாகிவிடக்கூடாது. ஆசை என்பது அடுப்பில் எரிகின்ற தீயைப்போல அடக்கமாக இருக்கவேண்டும். நெருப்பு அடுப்பிற்குள் அடங்கி எரியும் போது சமையல் ஆகும். ஆனால் அந்த நெருப்பே எல்லையை மீறி கூரை வரையில் எரிந்தால் வீடே சாம்பலாகி விடும் இல்லையா.
இதைத்தான் குதம்பைச் சித்தர் பின்வருமாறு சொல்கிறார்.
பொருளாசை உள்ளஇப் பூமியில் உள்ளோர்க்கு
இருளாம் நரகமடி குதம்பாய்
இருளாம் நரகமடி
 
பேராசை கொண்ட மனிதர்கள் வாழும்போதே அத்தனை துன்பத்தையும் அனுபவிக்கிறார்கள். அளவுக்கு மீறிய பொருளாசை கொண்டவர்களுக்கு நரகம் இங்கேயே கிடைத்து விடுகிறது  என்கிறார் குதம்பைச் சித்தர்.தகுதிக்கு மீறி ஆசைப்படுபவர்கள் அடிக்கடி அவமானத்திற்கு ஆளாவதையும், பிரச்சினைகளில் மாட்டிக் கொண்டு தவிப்பதையும் பார்க்கலாம். எனவே ஆசையை அறுப்பதே ஆனந்ததிற்கு சிறந்த வழி என்கிறார் திருமூலர்.
ஆசை யறுமின்கள் ஆசை யறுமின்கள்
ஈசனோ டாயினும் ஆசை யறுமின்கள்
ஆசை படப்பட ஆய்வருந் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்த மாகுமே.
 
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாம்.... எனவே தகுதிக்கு மீறிய ஆசைகளை தவிர்ப்பதன் மூலம் வாழும் நாட்களை நிம்மதி நிறைந்ததாக்கி  வாழ்வோம். 
 
 
 
எது துறவு?, ஏன் துறவு?
 
 
Labels: திருமந்திரம், திருமூலர், துறவு
அந்தக் காலத்தில் துறவு அல்லது துறவி என்றதும் உற்றார் உறவினர்கள், சொத்து சுகங்களைத் துறந்து காடுகளில் போய் தனித்திருப்பது என்பதாகவும், இக் காலத்திலோ மடம் ஒன்றை அமைத்து அதில சிஷ்யர்கள் புடை சூழ சகல சுகபோகங்களுடன் வாழ்வதுமே துறவு என்பதான எண்ணப் போக்கு பொதுவில் நிலவுகிறது.
சித்தரியலில் துறவு என்பது மேலே சொன்ன புற பற்றுக்ள் போலல்லாது, அகப் பற்றுக்கள் அனைத்தையும் துறத்தலே துறவாக கருதப் படுகிறது. அகத்தியர், சிவவாக்கியர் போன்ற சித்தர் பெருமக்கள் குடும்ப அமைப்புகளில் இருந்தவாறே பற்றுகளைத் துறந்து வாழ்ந்தது நாம் அறிந்ததே. லாஹிரி மகாசயர் குடும்ப அமைப்பில் இருந்தவாறே பற்றுகளைத் துறந்தவர் என்று அவரது குரு மகாமுனி பாபாஜிஅவர்களாலேயே பாராட்டப்பட்டார் என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். 
உழவன் உழவுழ வானம் வழங்க
உழவன் உழவினிற் பூத்த குவளை
உழவன் உழத்தியர் கண்ணொக்கு மென்றிட்டு
உழவன் அதனை உழவொழிந் தானே
 
எந்த மாதிரியான பற்றுக்களை எல்லாம் நாம் பற்றியிருக்கிறோம் என்பதற்கு உதாரணமாய் திருமூலரின் இந்த பாடலைக் கொள்ளலாம். நிலத்தை உழுததும், பெய்த மழையால் மகிழ்ந்த உழவன், உழவு செய்யும் பொழுது களையாகிய குவளை மலர்கள் விளைந்துள்ளதைக் காண்கிறான். அம் மலர்கள் தன் மனைவியின் கண்கள் போல் உழவனுக்கு மயக்கம் தர, களையாகிய குவளை மலர்களைக் களையாமல் விடுகிறானாம் அதனால் அவன் பயிர்கள் அழிந்து விடுகிறதாம். அதே போல் மனதில் தோன்றும் களையாகிய பற்றுக்களைத் துறக்காமல் அதன் பால் மயக்கம் கொண்டு வாழ்வைத் தொலைக்கிறோம் என அழகாக விளக்குகிறார்திருமூலர்.
பிறந்தும் இறந்தும் பல பேதைமை யாலே
மறந்து மலாவிருள் நீங்க மறைந்து
சிறந்த சிவனருள் சேர் பருவத்துத்
துறந்த உயிர்க்குச் சுடரொளியாமே
 
மேலும் அறியாமையால் பிறந்தும் இறந்தும் அவற்றை மறந்தும் ஆணவ மலம் என்னும் இருளில் மனிதர்கள் மூழ்கி உள்ளதை சுட்டிக் காட்டுகிறார் திருமூலர். மேலான குருவின் வழிகாட்டுதலில் பற்றுக்களைத் துறக்கும் நேரத்தில், உயிர்களுக்குள் சுடர் விட்டு விளங்கும் பேரொளியான சிவன் நமக்குள்ளும் துலங்குவார் என்பதை துறவால் ஏற்படும் பயனாக கூறுகிறார்.
மேற்றுறந் தண்ணல் விளங்கொளி கூற்றுவன்
நாட்டுறந் தார்க்கவன் நண்பன் அவாவிலி
கார்த்துறந் தார்க்கவன் கண்ணுத லாய்நிற்கும்
பார்த்துறந் தார்க்கே பதஞ்செய லாமே
 
அனைத்தையும் துறந்தவன்; ஒருவரும் விளக்க வேண்டாது தானே விளங்கும் ஒளியாய் உள்ளவன்; எமனைத் துறந்தவர்களுக்கு நண்பன்; விருப்பு, வெறுப்புக்கள் அற்றவன்; எப்பொருளிலும் பற்றில்லாதவன் என இத்தனை சிறப்புகளை கொண்ட சிவனின் நிலையை நாம் அடைய வேண்டுமெனில் நாம் நம்மை சூழ்ந்துள்ள பற்றுகளை அறிந்து விலக்க வேண்டும் என்கிறார் திருமூலர்.
பற்றைத் துறப்பது சாதாரண காரியமா என்ற மலைப்பு அனைவருக்கும் ஏற்படலாம். குருவருளின் துணை இருந்தால் எல்லாம் சாத்தியமே. 
 
 
 
எளிய காயகற்பம் - "கடுக்காய் கற்பம்"
 
 
Labels: அகத்தியர், காயகற்பம், சித்த மருத்துவம், திருமூலர், தேரையர்
கடுக்காய் என்பது மரவகையைச் சேர்ந்த மூலிகை. முதிர்ந்த கடுக்காய் கறுத்த பழுப்பு நிறத்தில் கெட்டியான ஓட்டுடன் நடுவில் கொட்டையுடன் கூடியதாக இருக்கும்.சித்த மருத்துவத்தின் பிரதான மருந்துகளில் கடுக்காய் முக்கிய இடம் வகிக்கிறது. கடுக்காயின் மகத்துவத்தை உணர தேரையரின் இந்த பாடல் உதவும்.
காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு
மாலையில் கடுக்காய் மண்டலம் தின்றால்
கோலை ஊன்றி குறுகி நடப்பவன்
கோலை வீசி குலுக்கி நடப்பனே! 
 
- தேரையர்.
 
கடுக்காய் பல்வேறு விதங்களில் மருந்தாக பயன்படுகிறது. கடுக்காயின் உள்ளிருக்கும் கொட்டைப் பகுதி நஞ்சாக கருதப் படுவதால் அதனை நீக்கி ஓடு மற்றும் சதைப் பகுதி மருந்துக்கு பயன்படுகிறது. இத்தனை சிறப்பு மிக்க கடுக்காயை கற்பமாய் செய்யும் முறை ஒன்று அகத்தியர் அருளிய "அகத்தியர் பரிபூரணம்" என்னும் நூலில் காணக் கிடைக்கிறது. அதனை இன்றைய பதிவில் பார்ப்போம்.
ஆச்சென்று கடுக்காய்தான் வருஷமொன்று
அப்பனே அதின்முறையை சொல்லக் கேளு
வாச்சென்று கடுக்காயைத் தகர்த்துக் கொண்டு
வளமாக அமுரியிலே ஊறப் போட்டு
காச்சென்று மறுநாள்தான் காயப் போட்டு
கணக்காகப் பத்துமுறை சுத்தி செய்யே
சுத்திசெய்த கடுக்காய் தான் செங்கடுக்காயாச்சு
சுகமான கடுக்காய்தான் முறையைக் கேளு
 
பத்தியுடன் இடித்து வடிக்கட்டி மைந்தா
பாங்கான கரகமதில் பதனம் செய்து
கொள்ளடா காலையிலே வல்லாரை கொள்ளு
கொண்டபின் மதியமதில் அமுது கொள்ளு
நேசமுடன் அமுதுகொள்ளு சிறு பயறு கொள்ளு
நேர்மையுள்ள சர்க்கரையும் பழமுங் கொள்ளு
 
வாசமுள்ள பதார்த்தமெல்லா மகிழ்ந்து கொள்ளு
துள்ளடா கடுக்காயை மாலைதன்னில்
தூளில் வெருகடி யளவாய்த் துணிந்து கொள்ளு
மகத்தான கடுக்காய்தான் வலுவாய்ப் பாரு
பாசமுடன்நா முரைத்த படியே கொண்டால்
பலிக்குமடா காயசித்தி யோகந்தானே.
 
கடுக்காயை துண்டுதுண்டாக நறுக்கி அமுரியில் ஒரு நாள் ஊறவைத்து எடுத்து, மறுநாள் காயவைத்து எடுக்க வேண்டுமாம். இப்படி இந்த செயலை பத்து தடவை செய்திட வேண்டும் என்கிறார் அகத்தியர். ஆக, ஒரு நாள் ஊற வைத்து மறு நாள் காய வைக்கும் செயலை தொடர்ந்து பத்து முறை  செய்யும் போது கடுக்காய் சுத்தியாகி "செங்கடுக்காய்" ஆகுமென்கிறார்.இந்த செங்கடுக்காயை நன்கு இடித்து சலித்து சேகரித்துக் கொள்ள வேண்டும்.
காலை வேளையில் வல்லாரைக் கீரையை உணவில் சேர்த்துக் கொண்டு. பகலில் சோற்றுடன் சிறுபயறுசேர்த்து உண்ண வேண்டுமாம். பின்னர் மாலை வேளையில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் கடுக்காய் தூளில் வெருகடி அளவு உண்ண வேண்டுமாம். இவ்வாறு தொடர்ந்து ஒருவருடம் உண்டால் காயசித்தி கைகூடும் என்கிறார். 
இந்த கற்பத்தினை உண்ணும் ஒரு வருட காலம் வல்லாரை, சோறு, சிறுபயறு, சர்க்கரை, பழங்கள், வாசனை உள்ள பொருட்கள் போன்றவைகளை மட்டுமே உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் சொல்கிறார்.
குறிப்பு : அமுரி என்பது நமது சிறுநீர்தான். சில பிரத்யேக உடல் மற்றும் உணவு கட்டுப்பாடுகளை குறிப்பிட்ட காலம் கடுமையாய் கடைபிடித்து உடலை பழக்கிய பின்னர், வெளியேறும் சிறுநீரே அமுரி எனப்படுகிறது. இதனை சுத்தி செய்து மருந்தாக பயன்படுத்துகின்றனர். அமுரியை சித்த மருத்துவத்தில் சிவநீர் என்றும் சொல்லுவர். இதன் சிறப்பைதிருமூலர் பின் வருமாறு கூறுகிறார்.
வீர மருந்தென்றும் விண்ணோர் மருந்தென்றும்
நாரி மருந்தென்றும் நந்தி அருள்செய்தான்
ஆதி மருந்தென் றறிவார் அகலிடஞ்
சோதி மருந்திது சொல்லவொண் ணாதே.
 
- திருமூலர்.
 
 
 
சித்தர்கள் எந்த மதம்?
Labels: சிவவாக்கியார், திருமூலர்,பட்டினத்தார்
 
சித்தர்கள் தமிழைச் சேர்ந்தவர்கள், இந்து மதத்தவர்கள், அதிலும் குறிப்பாக சைவ மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாகவே கருதிக் கொண்டிருக்கிறோம். இது உண்மையாக இருக்க முடியுமா?, சித்தர் பெருமக்களை இத்தகைய அடையாளங்களுக்கு அடக்கி விடமுடியுமா?
இப்படி ஒருக் கோணத்தில் சித்தர் பெருமக்களை அணுகினால், விடை என்னவாக இருக்கும் எனத் தோன்றியதன் விளைவே இந்தப் பதிவு. என்னுடைய தெளிவு இறுதியானது இல்லை, எனினும் தெளிவை நோக்கிய ஒரு துவக்கப் புள்ளியாக இருக்குமென நம்புகிறேன். தவறுகளிருந்தால் பொருத்தருளவும்.
நம்மில் பலரும் சித்தர்கள் என்றால் சிந்தை தெளிந்தவர்கள், தன்னை உணர்ந்தவர்கள் என்பதாகவே அறிந்திருக்கிறோம். நிதர்சனத்தில் இது ஒரு மேலோட்டமான சிந்தனைப் போக்கு. என்னுடைய வாசிப்பனுபவத்தில் சித்தர் பெருமக்கள் ஓவ்வொருவரும் ஏதோவொரு வகையில் தனித்துவமானவர்களாக, இம் மாதிரியான பொது வரையறைகளுக்கு அப்பாற் பட்டவர்களாகவே இருந்திருக்கின்றனர்.
ஏற்கனவே நிறுவப் பட்ட மதம், இனம், சாதி, மொழி, சடங்கு, சாத்திரங்கள் என இவை எல்லாவற்றையும் தாண்டிய சம நோக்குப் பார்வை ஒன்றே இவர்களிடத்தே நாம் காண முடிகிற பொதுமைப் பண்பு. இப்படி இருக்கையில் எதன் அடிப்படையில் இந்தப் பெருமக்களை ஒரு மதத்திற்கோ, மொழிக்கோ, இனத்திற்கோ அடையாளமாய் காட்டிட முடியும். 
சித்தரியல் என்பது வரையறைகள் இல்லாத தனித்துவமான சுதந்திரம் நிறைந்த, உயர் வாழ்வியல் கலாச்சாரம். இந்து மதச் சூழலில் நாம் பார்க்கும் சித்தர் பெருமக்களைப் போலவே மற்ற பிற மதங்களிலும் இத்தகைய மேன் மக்கள் அநேகர் வாழ்ந்திருந்தனர். இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மிக நிச்சயமாக இவர்கள் அமானுஷ்ய மனிதர்கள் இல்லை. நம்மினும் எளிய வாழ்வியல் தத்துவங்களை முன்னிறுத்தி வாழ்ந்த மாமனிதர்கள். முன் தீர்மானங்கள் எதுவும் இல்லாமல் இவர்களை அணுக துணிந்தால் மட்டுமே இந்த நிஜம் நமக்குப் புலப்படும்.
நுணுக்கமான இந்த தத்துவ நிலையினை புரிந்து கொள்வதில் புள்ளியளவு பிசகு ஏற்பட்டாலும் கூட, அது மத எதிர்ப்பு, கடவுள் எதிர்ப்பு, நாத்திக வாதம் என்பன போன்ற நேரெதிர் பிம்பங்களை கட்டமைத்துவிடும் ஆபத்தும் இருக்கிறது. சித்தர்களோ அல்லது அவர்களையொத்த மற்ற பிற மதங்களின் மெய்யுணர்வாளர்களோ கடவுள் கோட்பாட்டினை நிராகரிக்க வில்லை. மாறாக மெய்யான தெய்வம் எதுவென தேடித் தெளிவதை முன் வைத்தனர். 
தேடல் என்பது தன் இருப்பினை உணர்ந்து, தன் சுற்றத்தை, அதன் இயல்பைக் குறித்த புரிதலின் வாயிலாக உயர் நிலையான மெய்யறிவினைக் கைக் கொள்ளுதல் என்பதாகவே இருந்தது. மேலான குருவின் வழி காட்டுதலோடு இந்த தேடலின் பாதை அமைகிறது. தன்னை உணர்ந்த மேலான சித்த நிலையில் அவர்கள் யாருடைய பிரதிநிதியும் இல்லை, அல்லது தம்மை முன்னிலைப் படுத்தும் தன் முனைப்பும் இல்லை. இதையே சித்தியடைந்த மேலான இறைமை நிலை என்பதாகிறது.
ஸ்தாபனங்களை நிராகரித்த இப் பெருமக்கள், ஒரு போதும் கடவுளையோ அவரின் தன்மையையோ மறுக்கவில்லை. மாறாக தம்மில் உறைந்த இறையை உணராதவர்களை ஏழைகள் என்கிறார் பட்டினத்தார்.
ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு
ஒன்றாய் உயிராய் உடல்தோறும் நீஇருந்தும்
என்றும் அறியார்கள் ஏழைகள்தாம் பூரணமே.
 
இதனையே திருமூலரும்...
 
அகம் புகுந்தான் அடியேற்கு அருளாலே
அகம் புகுந்தும் தெரியான் அருள் இல்லோர்க்கு
                              
இந்தக் கருத்தினை இன்னும் தீவிரமாய் சிவ வாக்கியர் பின் வருமாறு கூறுகிறார்.
கோயில் பள்ளி ஏதடா குறித்துநின்ற தேதடா
வாயினால் தொழுதுநின்ற மந்திரங்க ளேதடா
ஞானமான பள்ளியில் நன்மையாய் வணங்கினால்
காயமான பள்ளியில் காணலா மிறையையே
 
திருமூலரின் இந்தப் பாடலும் இதனை வலியுறுத்தும்.
 
உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன் 
உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று
உடம்பினை யானிருந் தோம்புகின்றேனே
 
மனித வாழ்வியல் கூறுகளான அத்தனை துறைகளிலும் அவர்களின் தேடல்களும், அதன் தெளிவுகளும் நமக்குக் கிடைத்த பொக்கிஷங்கள். அவற்றை போற்றிப் பராமரித்து மேம்படுத்துவதே நாம் அவர்களுக்குச் செய்யும் மரியாதையாக இருக்கும். அன்பையே இறையாகக் கொண்டு, அகிலம் சிறக்க தம்மை அர்ப்பணித்த அப் பெருமக்களை மதங்களின் பிரதிநிதி என்பதை விடவும் மனிதர்களின் பிரதிநிதி என்பதே சாலப் பொருந்தும். 
மதங்களைத் தாண்டிய மனித நேயத்தை வலியுறுத்திய அப் பெருமக்களின் வழி நிற்பதில் பெருமை கொள்வோம்.
பிற் சேர்க்கை:
 
நண்பர்களே,
 
சித்தர்கள் இராச்சியம் வலைப் பதிவு இன்றோடு இரண்டாண்டுகளை பூர்த்தி செய்து, மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்க இருக்கிறது. தொடரும் உங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும், மேலான ஆலோசனைகளுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். 
எல்லாம் வல்ல குருவருளினால் மட்டுமே இத்தனையும் சாத்தியமாயிற்று.
 
 
 
அன்பே சிவம்....
 
 
 
Labels: திருமூலர்
 
“ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்” என்பது டால்ஸ்டாயின் பிரபலமான வாசகம். அதாவது நம்மினும் வறிய ஏழைகளுக்குத் நம்மாலான உதவியை அன்புடன் செய்திடும் பொழுது அவர்கள் உள்ளம் நிறையும், அப்போது நன்றிப் பெருக்கினால் அவர்களின் முகத்தில் தெரியும் கபடமில்லாத புன்னகையில் இறைவன் தெரிவார் என்பதே பொருள். அந்த வகையில் அன்பின் பெருமையை உலகுக்குச் சொன்ன வாசகம் இது.
அன்பே கடவுள் என்று அனைத்து மதங்களும் வலியுறுத்துகிறது.  உலக பொதுமறையான நமது திருக்குறளில் கூட அன்புடைமைக்கு என தனி அதிகாரமே உள்ளது. இத்தகைய மாசற்ற அன்பின் பெருமையை, மகத்துவத்தினை அகிலத்துக்கு முதலில் சொன்னவர்கள் நம் சித்தர் பெருமக்கள் என்றால் மிகையில்லை.
அன்பின் மகத்துவத்தினை திருமூலர் பின்வருமாறு விவரிக்கிறார்.
 
’’அன்பு சிவம் இரெண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவதொரு மறிகிலார்’’              
 
- திருமந்திரம்.
 
அன்பும், சிவமும் வெவ்வேறு என பிரித்துப் பார்ப்பவர்களை அறிவே இல்லாதவர்கள் என்கிறார். அன்பையும், சிவமாகிய இறை நிலையையும் பிரிக்கவே முடியாது, அன்புதான் சிவம் என ஆணித்தரமாக கூறுகிறார் திருமூலர்.
பசி, தாகம் ஆகியவற்றை மறந்து பல காலம் தவம் இயற்றி, உடலை வருத்தினால்தான் இறைஅருளைப் பெறமுடியும் என பலரும் நம்புகின்றனர். இந்த நம்பிக்கையை திருமூலர் நிராகரிப்பதோடு இறைஅருளைப் பெற எளிய வழி ஒன்றினையும் தன் பாடலில் குறிப்பிடுகிறார்.
என்பே விறகா இறைச்சி யறுத்திட்டுப்
பொன்போல் கனலில் பொரிய வறுப்பினும்
அன்போடு உருகி அகம் குழைவார்க் கன்றி
என்போல் மணியினை எய்த ஒண்ணாதே 
 
-  திருமந்திரம்.
 
உடலை வருத்தி எதைச் செய்தாலும் இறைவனை அடைய இயலாது. மாறாக நெஞ்சம் உருகி அன்பு மயமாய் குழைந்தால் மட்டுமே இறை நிலையினை அடைவது சாத்தியம் என்கிறார் திருமூலர்.
 
மேலும் எத்தகையவர் மீது இறைவன் அன்பு செலுத்துவார் என்பதையும் திருமூலர் பின் வருமாறு கூறுகிறார்.
 
’’கொழுந்து அன்பு செய்து கூரவல்லார்க்கு
மகிழ்ந்து அன்பு செய்யும் அருள் சாது ஆமே’’  
 
 - திருமந்திரம்.
 
எவர் ஒருவரால் சக உயிர்கள் மீது அன்பு செய்ய இயலுகிறதோ, அவர் மீதே இறைவன் அன்பு செலுத்துவார் என்கிறார். இறை அருளை உங்கள் பக்கம் ஈர்த்துக் கொள்ள பிறர் மீது அன்பு செலுத்துவதை விட எளிய வழி வேறு எதுவுமே இல்லை என்கிறார் திருமூலர்.
டால்ஸ்டாய் சொன்னதை உலகம் முழுக்க கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இவருக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே அன்பின் மகத்துவத்தை உலகத்தாருக்குச் சொல்லி வைத்த நம் முன்னோரின் பெருமையை நாம் எத்தனை தூரம் நினைவில் கொண்டிருக்கிறோம் அல்லது அதன் வழி நிற்கிறோம் என்ற கேள்விக்கான பதிலை உங்களின் தீர்மானத்துக்கே விட்டு இந்தப் பதிவினை நிறைவு செய்கிறேன்.
 
 
கூடு விட்டு கூடு பாய்தல் தொடர்ச்சி...
 
 
 
Labels: கருவூரார், கூடு விட்டு கூடு பாய்தல்,திருமூலர்
உடலை விட்டு வெளியேறி மீண்டும் அதே உடல் அல்லது வேறு உடலோடு இணையும் பரகாய பிரவேசக் கலையானது, ”கூடு விடா நிலை”, “கூடு விட்டு கூடு பாய்தல்” என இரண்டு படி நிலைகளை கொண்டது என்பதை நேற்று பார்த்தோம். முதல் நிலையில் தேறியவர்களுக்கு மட்டுமே இரண்டாவது நிலை சாத்தியமாகும்.
கூடு விடா நிலையில் உடலின் இயக்கம் யாவும் மட்டுப் பட்டு மிகமெலிதான சுவாசம் மட்டுமே இருக்குமாம். இத்தகைய நிலைக்கு உடலை பக்குவப் படுத்திட மிகக் கடுமையான பயிற்சிகள் அவசியமாகிறது. அவற்றை இரண்டு வகைகளாக கூறியிருக்கின்றனர். காய கற்பங்களை உண்பதன் மூலம் “காய சித்தி” நிலையை எட்டுவது. மற்றது யோகப் பயிற்சிகளின் மூலம் உயர் நிலையான யோக சித்தி அடைவது. இவ்விரண்டு பயிற்சிகளின் மூலமே கூடு விடா நிலையினை அடைய முடியுமாம். தற்போதைய நவீன அறிவியலோ இதன் சாத்தியங்களை முற்றாக நிராகரிக்கிறது.
ஆக, உடலை தகுதிப் படுத்துவதே இந்த கலையின் முதற்படி நிலை. ஏனெனில் உடலை விட்டு வெளியேறி மீண்டும் இணையும் வரை அந்த உடலானது அழியாமல் இருப்பது அவசியமாகிறது. இதன் பொருட்டே தங்களின் உடலை காடுகளிலும், மரபொந்துகளிலும், குகைகளிலும் மறைத்து வைத்ததாக தகவல்கள் காணக் கிடைக்கின்றன. இப்படி மறைத்து வைத்த உடல் ஒரு வேளை அழிந்து விட்டால் புதிதாக இணைந்த உடலுக்குத் தேவையான கற்பங்களை உண்டு அந்த உடம்பினை தகுதிப் படுத்திக் கொள்ள வேண்டுமாம். இந்தச் செய்தி கருவூரார் அருளிய கருவூரார் வாத காவியம் என்னும் நூலில் காணக் கிடைக்கிறது.
வழக்கத்தைச் சொல்லுகிறேன் நன்றாய்க் கேளு
வகையுள்ள சித்தநாதர்கள் மாறிமாறிப்
பழக்கமுள்ள கூடுவிட்டுக் கூடுபாய்வார்
பார்த்தவருங் காலமட்டு மிருந்து வாழ்வார்.
முழக்கமுடன் பின்புவந்து தன்சரீரம்
முழைந்து கொள்வார் தன்சரீரத் தப்பிப்போனால்
இளக்கமுள கற்பமதை சாப்பிட்டேன்தான்
இனிமையுடன் செடமலதைப் பெலஞ் செய்வாரே
பெலஞ் செய்வா ரதைவிட்டு மறுகூடேகிப்
பின்புமொரு கூடதனிற் பாய்ந்து வாழ்வார்
நலமுடனே அவர்கள் செய்யுந் தொழிலையேதான்
நானெடுத்துச் சொல்ல வென்றால் நாவோயில்லை.
பலமுடனே பரகாயஞ் செய்யும் பொழுது
பார்த்தாக்கால் வெகுசுருக்கு அதீதம் மெத்த
தலமுடனே தன்சரீர மொளித்து வைக்கத்
தான்செய்து வைத்துவைக்குங் குகையைப்பாரே.
மேலும் யோக சித்தி மற்றும் காயசித்தி அடைந்த நிலையில் உள்ள உடலை அழிப்பதும் கடினம் என்கிற செய்தியும் நமக்கு கிடைக்கிறது. திருமூலர் தன்னுடைய உடலில் இருந்து சமுத்திர ராஜன் உடலுக்கு கூடு விட்டு கூடு பாய்ந்து குடும்பம் நடத்தி வருகையில், மனைவியிடம் கொண்ட மோகத்தினால் தன் பூர்வ கதையையும், தன் உடல் இருக்கும் இடத்தையும் கூறிவிடுகிறார். மனைவி அந்த உடல் தன் இல்லற வாழ்க்கைக்கு ஆபத்து என கருதி அதை அழிக்கும் வகையினைக் கேட்க மனைவி மீதிருந்த அன்பினால் அந்த வகையினையும் சொல்கிறார். மனைவி தன் ஆட்களை அனுப்பி குகையில் இருந்த உடலைக் கண்டறிந்து திருமூலர் சொன்னபடி மருந்து பூட்டி எரித்த தகவல்கள் கருவூராரின் பின் வரும் பாடல்களின் மூலம் நமக்குத் தெரிய வருகிறது.
மற்றோருற் றோரும் மகிழ்ந்திருக்க இந்த
மாப்பிள்ளை பெண்ணும் பஞ்சணையில்
சற்றே படுத்துச்சந் தோஷமுற்றுப் பின்பு
தானிருந் தார்வெகு காலமட்டும்.
தாகம தாக யிருபேரு மொன்றாகச்
சந்தோஷ மாக யிருக்கையிலே
மோகத்தி னாலேமுன் வந்த சரிதையை
முற்றிலு மங்கே மொழிந்து விட்டார்.
என்றைக் கிருந்தாலும் மோசம் வருமென்று
எண்ணியே மாது இவரிடத்தில்
நன்றான வார்த்தைகள் பலது பேசியே
நன்மையுள்ள சன மெங்கேயென
கேட்ட வுடனே குகையிலிருப்ப தாய்க்
கெம்பீர மாகவுஞ் சொல்லி விட்டுத்
தேட்ட முடனதை யாருஞ் சுடாரென்றும்
தீயிடுஞ் சேதியுஞ் சொல்லி விட்டார்.
இந்த வகையெலாங் கண்டுகொண்டு அந்த
ஏந்திழை யாளும் புலையர்களை
விந்தை யுடனங்கு தானனுப் பிச்சடம்
விபரங் கூறியே வாக்களித்தாள்
மலையீனிற் சென்று குகையிற் பார்க்கையில்
மாது சொன்ன சடந்தானிருக்கப்
புலையர் கூடிச் சடத்தை மருந்துகள்
பூட்டியே மாட்டினார் தீயதனை
வெந்துநீ றாகியே போனபின்பு அதில்
மிக்க அஸ்திகளைத் தானெடுத்துச்
சந்தோஷ மாகவே ராஜாத்தி தன்னிடம்
தான் காட்டிப் போயினா ரேபுலையர்.
இப்படியாக இது முடிந்த தென
யாருக்குந் தோணாம லேயிருக்கச்
செப்பமுள்ள திரு மூல ராஜனும்
சிறப்பாய் வேட்டைக்குந் தானெழுந்து
வேட்டைக ளாடி முடித்தபின்பு மலை
மீதிலிருக்குங் குகையினிற் போய்
தாட்டிக மான சடத்தையுங் காணாமல்
தவித்து மயங்கியங் கேயிருந்து
வச்சிரந் தேகமதுஞ் சுட்டுக் கிடப்பதை
மனதாரக் கண்ணாலே தான்பார்த்து
உச்சித மாகத் தெரிந்து கொண்டு பின்பு
ஊரினி லேவந்து சேர்ந் திருந்தார்.
இந்தப் படியிவர் தானிருக்க இவர்க்
கினிமை யாகிய சீஷனுந்தான்
விந்தையுட னெங்குத் தான்தேடி இங்கு
விருப்ப மாகவே தேடிவர
சீஷன் வருவதைக் கண்டு திருமூலர்
செய்திகள் யாவு மவரிடத்தில்
நேசமுடன் சொல்லச் சீஷனுங் கண்டு
நெடுஞ்சாண் கடையாக வேதானும்.
பாதத்தில் வீழ்ந்து குருவென் றறிருந்துபின்
பத்தி யொடுசில வார்த்தை சொல்லி
நீத முடனேதான் தேடின சங்கதி
நேர்த்தியாய்ச் சொல்லி முடித்துவிட்டு
அன்றங்கு ராத்திரி தானிருந்து பின்
அருமையுள்ள மனை யாள் தனக்கும்
சென்றங்கு ஓர்சேதி சொல்லா மலிவர்
சேர்ந்தங் கிருவருந் தானேகி
காடு மலைகள் கடந்து குகைதனைக்
கண்டு யிருவரு மங்கிருந்து
தேடியே கற்பங்கள் சாப்பிட்டுப் பின்பவர்
தேகசித்தி செய்து கொண்டிருந்தார்.
ஆக கூடு விடா நிலை என்பது ஒரு வகையில் உடலினை உறுதி செய்து, உடல் இயக்கத்தை ஒரு ஒழுங்கில் கொண்டு அதன் இயக்கத்தை தேவைப் படும் போது நிறுத்தி வைக்கவும், செயல்படுத்தவுமான ஒரு கலை என்பது மட்டும் புரிகிறது. இந்த நிலையில் தேறினால் அழியாத உடலும் ஆரோக்கியமும் பெற்றிருக்க முடியும் என்பது தெளிவாகிறது. இது தொடர்பான மேலதிக ஆய்வுகள் நமக்கு உடற்கூறியல், மனித ஆயுட் காலம் பற்றிய பல புதிரான பக்கங்களை தெளிவு படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. எனவே ஆர்வமுள்ளவர்கள் இது தொடர்பாக முயற்சிக்கலாமே!
சித்தர் பெருமக்கள் கூடு விட்டு கூடு பாய்ந்த தகவல்களையும் அவற்றின் பின் புலத்தினையும் அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.
 
 
 
குண்டலினி.... நாடிகளின் சூட்சுமம்!!
 
 
Labels: குண்டலினி, திருமந்திரம், திருமூலர்
குண்டலினி தொடரின் நெடுகே ஒவ்வொரு சக்தி ஆதார சக்கரங்களில் இருந்து தாமரை இதழைப் போல வெளிக் கிளம்பும் நாடிகளைப் பற்றி பார்த்தோம்.
இதன் பின்னே இருக்கும் சூட்சுமத்தை தொடரின் இறுதியில் பகிர்வதாக கூறியிருந்தேன். தொடரின் போக்கில் இந்த குறிப்பை அவதானிக்க தவறி விட்டேன். நிறைய நண்பர்கள் இதைக் குறிப்பிட்டு மின்னஞ்சல் அனுப்பி இருந்தனர்.
சுட்டிக் காட்டியமைக்கு நன்றி....
 
குண்டலினி யோகத்தின் போது மூலாதாரத்தில் நான்கு இதழ்களும், சுவாதிஷ்டானத்தில் ஆறு இதழ்களும்; மணிபூரகத்தில் பத்து இதழ்களும், அநாகதத்தில் பன்னிரெண்டு இதழ்களும், விசுத்தியில் பதினாறு இதழ்களும், ஆக்ஞையில் இரண்டு இதழ்களும் வெளிக் கிளம்புவதைப் பார்த்தோம். இந்த நாடிகள் அதிரும் போது ஒலி உருவாவதையும் பார்த்தோம்.
சித்தரியலில் பஞ்சாக்கர எழுத்துக்கள் என்பது மிக நுட்பமானது, சூட்சுமம் நிறைந்ததும் கூட. பஞ்சாக்கரம் என்பது ஐம்பத்தியோரு தமிழ் எழுத்துக்களையே குறிக்கிறது. ”சிதம்பர சக்கரம்” எனப்படும் திருவம்பலச் சக்கரத்தின் உயிர் நாடியாகவும் இந்த எழுத்துக்களே விளங்குகிறது.
அகத்தியர் துவங்கி திருமூலர், பட்டினத்தார், சிவவாக்கியார், கோரக்கர் போன்ற பல சித்தர் பெருமக்கள் இந்த ஐம்பத்தி ஒன்று எழுத்த்துக்களின் மகத்துவத்தை பாடியுள்ளனர்.
திருமூலர் தனது திருமந்திர மாலை என்னும் நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
"பெறுதியில் அம்முதல் பேசும்க்ஷவ் வீறாய்
அறிவதெழுத்தைம்பத் தொன்றுமங் கானதே"
 
- திருமூலர்.
 
மேலும் திருமூலரே தனது திருமந்திரம் என்னும் நூலிலும் பஞ்சாக்கரம் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்.
அடையும் மகாரத்தில் அந்தமாம் க்ஷவ்வும்
அடைவின் எழுத்துஐம் பத்தொன்றும் அமர்ந்ததே.
- திருமூலர்.
 
அருணகிரி நாதரும் தனது திருப்புகழில் பஞ்சாக்கரத்தை இவ்வாறு குறிப்பிடுகிறார்.
"அகர முதலென உரைசெய் ஐம்பத்தோரட்சரமும்" 
 
-அருணகிரிநாதர்.
 
இப்படி இன்னும் எத்தனையோ சித்தர்களின் பாடல்களை பஞ்சாக்கரத்திற்கு எடுத்துக் காட்டாய்ச் சொல்லலாம். இவற்றின் படி, இந்த ஐம்பத்தி ஒரு எழுத்துக்களையும் மிக முக்கியமானதாகவும், உயர் தனித்துவமானவை என்று போற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப்போது மீண்டும் குண்டலினிக்கு வருவோம். குண்டலினி யோகத்தில் ஏழு முக்கிய ஆதாரங்களில் இருந்து வெளிக்கிளம்பும் நாடிகளின் அதிர்வுகளால் ஏற்படும் ஒலிகளை தமிழ் எழுத்துக்களாக குறித்திருப்பது உங்களுக்கு இப்போது நினைவுக்கு வரலாம்.
நண்பர்களே, குண்டலினி யோகத்தில் ஒவ்வொரு ஆதார மையமும் சித்திக்கும் போது உருவாகும் அதிர்வுகள் எழுப்பும் ஓசையைத்தான் சித்தர்கள் பஞ்சாக்கர எழுத்துக்கள் என குறிப்பிட்டிருக்கின்றனர். ஆறு ஆதார சக்கரத்தில் இருந்து எழும்பும் ஐம்பது நாடிகளின் சப்பதங்கள் அய்ம்பது எழுத்துக்களாகவும், துரிய நிலை சித்திக்கும் போது உருவாகும் உருவாகும் பேசாமொழியான ஓரெழுத்தும் சேர ஐம்பத்தியோரு எழுத்துக்கள் ஆகின்றன. இந்த பேசா மொழியைப் பற்றி முந்தைய பதிவு ஒன்றில் பகிர்ந்திருக்கிறேன். இதனை நாயோட்டு மந்திரம் என்றும் அழைப்பர்.
வேறெந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு இது. இதனை மனதில் கொண்டே நம் பெரியவர்கள் தமிழை அழுத்தம் திருத்தமாய் உச்சரித்து பேசினாலே உடல்நலம், ஆன்மநலம் சிறக்கும் என கூறியிருக்கின்றனர். நாம்தான் அதனை மனதில் கொள்ளாமல் பிறமொழி மோகத்தில் உழன்று கொண்டிருக்கிறோம்.
பிற்சேர்க்கை: பஞ்சாக்கர எழுத்துக்கள் பற்றிய எனது பழைய பதிவினை இந்த இணைப்பில் சென்று வாசிக்கலாம்.
 
 
 
சித்தர்கள் அருளிய உடற்கூறியல்..
 
 
Labels: சித்த மருத்துவம், திருமூலர்
ஆங்கில மருத்துவமான அலோபதி மருத்துவத்தின் பெரியதோர் வெற்றிக்கு அடிப்படைக் காரணம், அந்த துறையில்தான் உடற்கூறு அறிவியல் துறையானது பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது. இன்றும் கூட மாற்று மருத்துவத் துறையினர் அலோபதி மருத்துவமுறை உருவாக்கியுள்ள உடற்கூறியல் முறைகளின் படியே நோய்களை அணுகுகின்றனர்.
உடற்கூறியல் என்பது மனிதர்கள் மற்றும் விலங்குகளின் உடல் உறுப்புகளின் கட்டமைப்புகளை பற்றி விரிவாக விளக்கிடும் அறிவியல் துறை. இந்த துறை இரண்டு பெரும் பிரிவுகளாய் வகைப் படுத்தப் பட்டிருக்கிறது. வெறும் கண்களால் பார்த்து உணரக் கூடிய உறுப்புகளின் கட்டமைப்பை ஆராய்ந்து அறியும் வகையினை “மாக்ராஸ்கோப்பிக் அனாடமி” என்றும், கண்களால் பார்க்க முடியாத அல்லது நுண்ணோக்கிகளின் வழியே மட்டும் ஆராய்ந்து அறியும் வகையினை “மைக்ராஸ்கோப்பிக் அனாடமி” என்கின்றனர்.
என்னுடைய துறை என்பதால் அறிமுகத்தை கொஞ்சம் நீட்டி முழக்கிவிட்டேன். அலோபதி மருத்துவம் தவிர மற்ற மருத்துவ முறைகளில் உடற்கூறியலை தங்களுக்கே உரிதான வகையில் அணுகியிருக்கின்றனர். அந்த வகையில் நமது சித்தர் பெருமக்களும் மனித உடலின் கட்டமைப்புகளைப் பற்றி அறிவியல் முன்னேற்றம் ஏதும் இல்லாத ஒரு காலத்தில் மிக விரிவாக கூறியிருக்கின்றனர். அந்த வகையில் சித்தர்கள் நமது உடலின் அடிப்படை கட்டமைப்புகளை எவ்வாறு பகுத்துக் கூறியிருக்கின்றனர் என்பதை பார்ப்போம்.
மனித உடலானது தொண்ணூற்றி பொறிகளால் கட்டப் பட்டது என்கின்றனர். ஆம்!, தொண்ணூற்றி ஆறு வகையான கூறுகள் ஒன்றிணைந்ததே ஒரு மனிதனின் உடல் என்று கூறியிருக்கின்றனர்.
அது பற்றி திருமூலர் பின்வருமாறு உரைக்கிறார்.
 
"பூதங்கள் ஐந்தும் பொறியவை ஐந்துளும்
ஏதம் படஞ்செய்து இருந்து புறநிலை
ஓதும் மலம்குணம் ஆகும்ஆ தாரமொடு
ஆதி அவத்தைக் கருவிதொண் ணூற்றாறே" 
 
- திருமூலர் -
 
இந்த தொண்ணூற்றி ஆறு பொறிகளை அறிந்து தெளிந்து கொள்வதே சித்த மருத்துவத்தின் அடிப்படையாகிறது. இவை ஒவ்வொன்றின் இயல்பு, குணம், தொழிற்பாடு போன்றவைகளை உணர்ந்து கொண்டு விட்டால், சித்த மருத்துவத்தின் மகிமைகளை புரிந்து கொள்ளமுடியும். அதனை வெற்றிகரமாய் பயன்படுத்திடவும் முடியும்.
இந்த தொண்ணூற்றி ஆறு பொறிகளையும் இருபது வகைகளாய் பிரித்துக் கூறியிருக்கின்றனர். பதிவின் நீளம் கருதி அந்த பாடல்களை இங்கே தவிர்க்கிறேன்.
அந்த இருபது வகைகள் பின்வருமாறு...
 
அறிவு
இருவினை
மூவாசை
அந்தகரணங்கள்
பஞ்சபூதங்கள்
பஞ்சஞானேந்திரியங்கள்
பஞ்சகன்மேந்திரியஙக்ள்
பஞ்சதன்மாத்திரைகள்
பஞ்சகோசங்கள்
மூன்று மண்டலஙக்ள்
குணங்கள்
மலங்கள்
பிணிகள்
ஏடனை
ஆதாரங்கள்
அவஸ்தைகள்
தாதுக்கள்
ராகங்கள்
தச நாடிகள்
தசவாயுக்கள்
 
இந்த இருபது வகைகளில் தொண்ணூற்றி ஆறு பொறிகளும் அடங்கி இருக்கிறது. இவையே நம் உடலை இயக்குகிறது. இவற்றில் ஏதேனும் ஒன்றில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் கூட அது உடலுக்கு சுகவீனம் ஏற்பட காரணமாய் அமைந்து விடுகிறது.
அத்தனை முக்கியமான இந்த தொண்ணூற்றி ஆறு பொறிகளைப் பற்றி நாளைய பதிவில் பார்ப்போம்.
 
 
 
உருத்திராட்சமும் சித்தர்களும்!
 
 
 
Labels: அகத்தியர், உருத்திராட்சம், திருமூலர்
உருத்திராட்ச மணி மாலைகள் சித்தர் பெருமக்களின் அடையாளங்களில் ஒன்றாகவே இருந்திருக்கிறது. இன்றும் கூட நாம் உருவகப் படுத்தும் சித்தர் உருவங்களில் இந்த உருத்திராட்ச மாலைகள் இடம் பெறுவதை கவனித்திருப்பீர்கள். உருத்திராட்ச மணிகளைப் பற்றிய குறிப்புகள் பல்வேறு சித்தர்களின் பாடல்களில் நமக்கு காணக் கிடைக்கிறது. அந்த பாடல்களை எல்லாம் தொகுத்து இங்கே பகிர வேண்டுமெனில் இந்த தொடர் இரண்டு வாரஙக்ளுக்கு மேல் நீளும் என்பதால் திருமூலர் மற்றும் அகத்தியர் கூறியவைகளை மட்டும் இந்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.
திருமூலர் உருத்திராட்ச மணிகளின் மகத்துவம் பற்றி பின்வருமாறு விளக்குகிறார்.உருத்திராட்ச மணிகள் எந்த அளவுக்கு மகத்துவமானவை என்பது இந்த பாடல்களின் மூலம் அறியலாம்.
"பூதி யணிவது சாதன மாதியிற்
காதணி தாம்பிர குண்டலங் கண்டிகை
ஓதி யவர்க்கும் உருத்திர சாதனந்
தீதில் சிவயோகி சாதனந் தேரிலே"
 
- திருமூலர் -
 
"காதணி குண்டலம் கண்டிகை நாதமுன்
ஊதுநற் சங்கம் உயர்கட்டி கப்பரை
ஓதுமில் பாதுகம் யோகாந்த ஆதனம்
ஏதுமில் யோகபட் டம்தண்டம் ஈரைந்தே"
 
- திருமூலர் -
 
அகத்தியரும் தனது பாடல்களில் உருத்திராட்ச மணி பற்றிய பல தகவல்களை கூறியிருக்கிறார். அந்த வகையில் இன்று நாம் காண இருப்பது மிகவும் அரியதான ஒரு தகவல். ஆன்மீகத்தில் நாட்டமுள்ளவர் அல்லது துறவறம் மேற்கொண்டவர்கள் உருத்திராட்ச மணி மாலையினை உடலில் அணிந்திருப்பதை அவதானித்திருப்பீர்கள். அந்த மணி மாலைகள் எத்தகையதாக என்ன அளவுடன் இருத்தல் வேண்டும் என்பதை அகத்தியர் தனது சீடருக்கு அருளியிருக்கிறார். அந்த பாடல் பின்வருமாறு...
"துதிக்கவென்றால் புலத்தியனே இன்னங்கூர்வேன்
துப்புரவாய் செபமாலை பூணுங்காலம்
மதிக்கவே செபமாலை ருத்திரட்ச
மன்னவனே யாறுமுகந் தானெடுப்பாய்
பதிக்கவே செபமாலை முப்பதிரெண்டு
பாங்குடனே சடையதிலே யணியவேண்டும்
விதிப்படியே ருத்ராட்ச மன்பத்தொன்று
வேதவிதிப் பிரமாணம் செப்பக்கேளே"
 
- அகத்தியர் -
 
"கேளப்பா புலத்தியனே யின்னங்கூர்வேன்
கொடியான ருத்திராட்சம் மன்பத்தொன்று
மீளப்பா மாலயது களுத்திலேதான்
மிக்கவே தான்றரிக்க விதியேயாகும்
தாளப்பா கரகணுக்கில் செபமாலை
தகமையுட னுத்திராட்சம் பன்னிரெண்டாகும்
வேளப்பா ருத்திராட்சம் கங்கணந்தான்
நாதமுறைத் தான்படியே வட்டமாச்சே"
 
- அகத்தியர் -
 
"அட்டமாம் ருத்திராட்ச முழங்கைமேலே
அன்புடனே சரமதுவும் சோடசந்தான்
திட்டமுடன் சோடசமாம் பதினாறப்பா
தீர்க்கமுடன் முழங்கரமா மணியத்துள்ளே
நிட்டையிலே தான்பூண்டு மதியங்கொண்டு
நிஷ்களங்க மானசெப மாலைபூண்டு
சட்டமுட னசுவினியர் சொன்னநீதி
சடாட்சரனே யுந்தமக்கு சாற்றினேனே"
 
- அகத்தியர் -
 
மனதை ஒருநிலைப் படுத்தி செபம் செய்திடும் வேளையில் அணிந்திட வேண்டிய உருத்திராட்சங்கள் பற்றிய தகவலை தான் அசுவினி தேவரிடம் இருந்து அறிந்து கொண்டதாக கூறுகிறார். அதாவது இந்த உருத்திராட்சங்கள் அனைத்துமே ஆறு முகங்களை உடையதாக இருக்க வேண்டுமாம். முப்பதி இரண்டு மணிகளால் கோர்க்கப் பட்ட உருத்திராட்ச மாலையினை சடையிலும், ஐம்பத்தியோரு மணிகளால் கட்டப் பட்ட மாலையினை கழுத்திலும், பன்னிரெண்டு மணிகளால் கோர்க்கப் பட்ட மாலையினை மணிக்கரத்திலும், பதினாறு மணிகளால் கட்டப் பட்ட மாலையினை முழங்கைக்கு மேற்பட்ட பகுதியிலும் அணிய வேண்டுமென்கிறார்.
அடுத்த முறை துறவியர் அல்லது சிவனடியார் எவரையேனும் சந்திக்க நேர்ந்தால் அகத்தியர் அருளியபடி அணிந்திருக்கின்றனரா என்பதை அவதானியுங்கள்.
நாளைய பதிவில் உருத்திராட்ச மணிகளின் மருத்துவ குணங்க்ளைப் பற்றி பார்ப்போம்.
 
 
 
 
ஹோமங்களின் அறிவியல்!Labels: அகத்தியர், திருமந்திரம், திருமூலர்,யாகம்
ஹோமம் அல்லது யாகம் என்கிற சடங்குமுறை மதரீதியான ஒன்று என்றாலும், இதன் பின்னர் அறிவியலின் கூறுகள் இருப்பதாக முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். சித்தர்களின் யாக முறைகளைப் பற்றி பகிர்வதற்கு முன்னர், நானறிந்த சில அறிவியல் கூறுகளை இன்று பகிர விரும்புகிறேன்.
ஒலியும், ஒளியும் இல்லாத ஒரு வாழ்க்கையை நாம் நினைத்தே பார்க்கமுடியாது. இந்த இரண்டு சக்திகள் நமது வாழ்வில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை கண்ணிழந்த, செவித்திறனற்ற நமது சகோதர, சகோதரிகளை பார்க்கும் போது எவரும் உணரமுடியும்.
ஒலியின் மூலம் அதிர்வுகள், ஒளியின் மூலம் வெப்பம். யாகம் என்பது இந்த இரண்டு சக்திகளை ஒருங்கினைக்கும் ஒரு நிகழ்வு. இந்த ஒருங்கினைப்பு மனித உடலுக்கும், உள்ளத்துக்கும் நன்மை விளைவிப்பதோடு, யாகம் செய்யும் இடத்தின் சுற்றுப்புற சூழலிலும் பாதிப்புகளை உண்டாக்குவதாகவே இந்த அறிவியல் வாதங்கள் முன்வைக்கப் படுகின்றன.
அமெரிக்க அறிவியலார் Dr.Howard steingull என்பவர் காயத்ரி மந்திரங்களை உச்சரிக்கும் பொழுது ஒரு நொடிக்கு 1,10,000 ஒலி அலைகள் உருவாவதாக கூறுகிறார். இந்த அதிர்வானது உச்சரிப்பவரின் உடலில் ஏற்படுத்தும் விளைவுகளையும் கூறியிருக்கிறார். இது மாதிரி ஒவ்வொரு மந்திரமும் தனித்துவமான அதிர்வுகளை உருவாக்கக் கூடியவை. இம் மாதிரியான மந்திரங்களை ஒத்திசைவுடன் குழுவாக சொல்லும்போது அவை உருவாக்கும் உணர்வுகளையும், அதிர்வுகளை அந்த சூழலில் இருப்பவர்கள் அனுபவித்தே அறியமுடியும்.
யாக தீயினால் உருவாகும் புகையானது மனிதர்களுக்கும் அவர்கள் வாழும் சுற்றுப் புற சூழலிலும் பாதிப்புகளை உண்டாக்குவதாக பல தெளிவுகள் முன்வைக்கப் பட்டிருக்கின்றன. மும்பை மாநகரில் இயங்கிவரும் மருத்துவ ஆய்வு நிறுவனமான Haffkine Institute for Training, Research and Testing நிறுவனத்தை நிறுவிய Dr. Waldemar Mordecai Haffkine இது தொடபான பல தெளிவுகளை ஆதாரப் பூர்வமாய் முன்வைத்திருக்கிறார்.
பதிவின் நீளம் கருதி யாகம் தொடர்பான மேலதிக தகவல்களை நாளை தொடர்கிறேன்.
 
 
சமாதி நிலை - ஓர் அறிமுகம்
 
 
Labels: கொங்கணவர், திருமந்திரம், திருமூலர்
சமாதி நிலை என்பது எந்த வித எண்ணங்களும் இல்லாது கண்களை மூடி அமர்ந்திருப்பது என்பதாகவே நம்மில் பலரும் புரிந்து கொண்டிருக்கிறோம். உண்மையில், சமம் + ஆதி = சமாதி, அதாவது ஆதியும் அந்தமுமாய் சொல்லப்படுகிற இறை நிலைக்கு சமனான ஒன்றுமற்ற அல்லது வெறுமையான மனநிலையில் இருப்பதே சமாதி எனப்படும்.
இன்னொரு வகையில் சொல்வதானால், கண்ணை திறந்து கொண்டு அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்று கொண்டே, உள்ளார்ந்த விழிப்புணர்வுடன் "நான்" "எனது" "என்னுடையது" என்ற அகங்காரம் இல்லாத பக்குவமும் சமாதி நிலையாக சொல்லப் படுகிறது.
இதனை திருமூலர் தனது திருமந்திரத்தில் பின் வருமாறு கூறுகிறார்.
"சமாதி யமாதியிற் றான்செல்லக் கூடும்
சமாதி யமாதியிற் றானெட்டுச் சித்தி
சமாதி யமாதியிற் றங்கினோர்க் கன்றே
சமாதி யமாதி தலைப்படுந் தானே"
- திருமந்திரம் -
"சமாதிசெய் வார்க்குத் தகும்பல யோகஞ்
சமாதிகள் வேண்டாம் இறையுடன் னேகிற்
சமாதிதா னில்லை தானவ னாகிற்
சமாதியில் எட்டெட்டுச் சித்தியும் எய்துமே"
 
- திருமந்திரம் -
இந்த நிலை எல்லோருக்கும் சாத்தியமில்லை. குருவருளுடன் கூடிய விடாமுயற்சியும், பயிற்சியுமே இந்த நிலைக்கு இட்டுச் செல்லும். பதஞ்சலி முனிவர் தனது பதஞ்சலி யோகம் என்னும் நூலில் சாமாதி நிலைக்கு இட்டுச் செல்லும் எட்டுப் படிநிலைகளின் வகைகளை விரிவாக அருளியிருக்கிறார். அது தொடர்பான பதிவுகளை இந்த இணைப்பில் வாசிக்கலாம்.
கொங்கணவர் தனது “கொங்கணவர் வாதகாவியம்” என்ற நூலில் சமாதி நிலைகளைப் பற்றி விரிவாக விளக்கியிருக்கிறார். ஆறுவகையான சமாதி நிலைகள் இருப்பதாக கொங்கணவர் குறிப்பிடுகிறார்.
அவையாவன...
தத்துவல்ய சமாதி
சவிகற்ப சமாதி
நிருவிகற்ப சமாதி
அகண்டவிர்த்தி சமாதி
சஞ்சார சமாதி
ஆரூட சமாதி
இனிவரும் பதிவுகளில் இவற்றைத் தனித்தனியாகவும், விளக்கமாகவும் பார்ப்போம்.
 
 
 
முன்வினைப் பயனை தீர்த்திடும் உபாயம்!
 
 
Labels: திருமந்திரம், திருமூலர்
ஒருவருடைய எண்ணம், செயல், சிந்தனைகளையொட்டியே அவர்களின் வினைகளும் அதற்கான எதிர் வினைகளும் அமைகின்றன. சந்தர்ப்பம் அப்படி!, சூழ்நிலை அப்படி!, நான் என்ன செய்வேன்; என்று நமது வினைகளின் பலன் அல்லது பழியை அவற்றின் மீது சுமத்தி, நமது செயல்களை நியாயப் படுத்திக் கொள்கிறோம். உண்மையில் சுற்றம், சூழல் என்பவை எப்போதும் சாட்சிகளாகவே இருக்கின்றன.
முந்தைய பிறவியில் செய்த வினைகளின் பலனாகத்தான் இந்த பிறவி எடுத்திருக்கிறோம் என்பது காலம் காலமாய் நமது மரபியலில் நம்மப் பட்டு வருகிறது. நல்லவைகளை செய்வதவனுக்கு நல் வினைகளும், தீமைகளை செய்தவனுக்கு தீய வினைகளும் இந்த பிறப்பின் பரிசாய் கிடைக்கின்றன. இதுவே நமது பிறப்பு, வாழ்க்கை, வசதி, வாய்ப்பு, தொழில், விசிப்பிடம், திருமணம், உணவுப் பழக்கம் ஆகியவற்றை தீர்மானிக்கிறது என்கின்றனர்.
இதன் பொருட்டே ஒருவர் முன்னெடுக்கும் செயல்களில் தடங்கல், முட்டுக் கட்டை, தோல்விகள், வெற்றிகள், ஏமாற்றங்கள், அவமானங்கள் நிகழ்கிறது என்கின்றனர். ஆக, எவரும் தன் வினைப் பயனை அனுபவிக்காமல் தப்பிக்க இயலாது என்பது புலனாகிறது.
இத்தகைய வினைப் பயனை ஞானிகளும், முனிவர்களும் தங்களை அணுகாது எவ்வாறு நீக்குகின்றனர் என்பதை திருமூலர் தனது திருமந்திரத்தில் பின் வருமாறு கூறுகிறார்.
"தன்னை யறிந்திடும் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை யவிழ்பவர்கள்
பின்னை வினையைப் பிடித்து பிசைவர்கள்
சென்னியின் வைத்த சிவனரு ளாலே"
- திருமூலர்-
தன்னை உணர்ந்து, தன்னிலை அறிந்த ஞானியர், தமது முன்வினை தொடர்பை சிவ சிந்தனையால் இல்லாதொழித்து விடுகிறார்கள். பின்னர் வர இருக்கும் வினைகளை அவர்கள் அவை தோற்றம் பெறுமுன்பே இவ்வாறு சிதைத்துவிடுவர். ஞானியர் இவை அனைத்தையும் தங்கள் சித்ததில் இருக்கும் சிவனருளால் செய்து முடிப்பார்கள் என்கிறார்.
 
 
 
திருமந்திர ரகசியம் - பஞ்சாக்கர எழுத்துக்கள் தொடர்ச்சி...
 
 
Labels: திருமந்திரம், திருமூலர்
பஞ்சாக்கர எழுத்துக்களைப் பற்றிய அறிமுகத்தினையும், ஐம்பத்தியோரு எழுத்துக்களைப் பற்றியும், மகிமை வாய்ந்த இந்த எழுத்துக்கள் மனித உடலின் பாகங்களை ஆட்சி செய்வதாக திருமூலர் கூறியிருப்பதை நேற்றைய பதிவில் பார்த்தோம். இன்று இந்த எழுத்துக்கள் ஆட்சி செய்திடும் அவயங்கள் பற்றியும் அவற்றின் தத்துவார்த்த குறியீடுகளை குறித்து நான் அறிந்தவகையில் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
 
பஞ்சாக்கர எழுத்துக்கள் ஆட்சி செய்யும் அவயங்கள் என திருமூலர் கூறிடும் பட்டியலை கான்போம்.
 
திருமுடி, நெற்றி, வலக்கண், இடக்கண், வலது செவி, இடது செவி, வலது மூக்கு, இடதுமூக்கு, வலதுகன்னம், இடதுகன்னம், மேலுதடு, கீழுதடு, மேல்வாய்ப்பல், கீழ்வாய்ப்பல், தாடை, உச்சந்தலை, வலக்கை, இடக்கை, வலது திருவடி, இடது திருவடி, வலது விலா, இடது விலா, குலை( மார்புக்கும் வயிற்றுக்கும் இடையில் உள்ள உறுப்பு), கீழ்வயிறு, வயிறு, குறி, வித்து, மூலாதாரம், குதம், தொண்டைக் குழி, இடது மார்பு, வலதுமார்பு, உச்சி, ஆக்கினை, விசுத்தி, அனாகதம், மணிபூரகம், சுவதிஷ்டானம், தொடை, முழந்தாள், கணுக்கால், இதயம், நாக்கு, முள்ளந்தண்டு, மூளை, சிறுநீர்ப்பை, இடுப்புக்கூடு, சிறுநீரகம், ஈரல், மண்டையோடு, புருவமத்தி என ஐம்பத்தியொரு அவயங்களை குறிப்பிடுகிறார்.
 
இந்த அவயங்களுக்கு உரிய எழுத்துக்களை குருமுகமாய் அறிந்து அதற்கான யோகம் செய்ய்வதே சிறப்பு என்பதால் அந்த தகவலை மட்டும் இங்கே தவிர்க்கிறேன். முறையான பயிற்சியும், பக்குவ நிலையினை அடைந்தவரே இந்த சூட்சுமத்தினை மற்றவருக்கு அருள வேண்டுமென விதியிருப்பதால் முழுமையாக கூறிட இயலவில்லை. எதிர்காலத்தில் அனுமதி கிடைக்கும் பட்சத்தில் அவசியம் பகிர்ந்து கொள்கிறேன்.
 
இனி இந்த பஞ்சாக்கர எழுத்துக்களின் பின்னாலிருக்கும் தத்துவ விளக்கத்தினை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.
 
"மண்டலம் ஐந்து வரைகளுள் ஈர் ஆறு
கொண்டிட நிற்க்கும் குடிகளும் ஆறு எண்மர்
கண்டிட நிற்கும் கருத்து நடுவாக
உண்டு நிலாவிடும் ஓடும் பதத்தையே"
 
- திருமந்திரம் -
 
நமது ஆத்மாவை ஐந்து வகையான மண்டலங்களும், பன்னிரெண்டு காவல்களும் நிறைத்திருப்பதாகவும். நமக்குள் ஆறுவகையான குடிகள் இருப்பதாகவும், இந்த உடலை எட்டு கண்ணியர் கண்காணிப்பதாகவும் கூறுகிறார்.
 
இதில் ஐந்து மண்டலங்கள் என்பது பூமி மண்டலம், நீர் மண்டலம், வாயு மண்டலம், தீ மண்டலம், ஆகாய மண்டலம் என பஞ்சபூத கூறுகளை உணர்த்துகிறது.
 
பன்னிரெண்டு காவல் என்பது இந்திரன், அங்கி, வருணன் , வாயு, குபேரன், ஆதித்தன், சந்திரன், யமன் ஆகியோர் எட்டு திசைக்கும் காவலாக இருப்பதாகவும், இவர்களைத் தாண்டி கணபதி, குமரன், வயிரவன், துர்க்கை என்கிற நால்வரோடு சேர்த்து மொத்தம் பன்னிரெண்டு காவல்கள் இருக்கின்றது என்கிறார்
 
நமக்குள் இருக்கும் ஆறு குடிகள் எனப்படுவது மெய், வாய், கண் ,மூக்கு ,செவி, மனம் என்பவற்றை குறிக்கிறது.
 
உடலைக் கண்கானிக்கும் எட்டு கன்னியர்களாக அனங்க குசுமை, அங்க மேகலை, அனங்க மதனை, அங்க மதனா, அனங்க ரேகை, அங்க வேகினி, அனங்க குசை, அங்க மாலினி என்பாரை குறிப்பிடுகிறார்.
 
இந்த உண்மைகளை அறிந்து இந்த் பஞ்சாக்கர எழுத்துக்களின் யோகத்தை முறையே பயன் படுத்துவோனுக்கு அழிவில்லை என்கிறார். இதன் படி நின்று ஒழுகினால் இறையருள் சித்திக்குமாம்.
 
நாளை இந்த வருடத்தின் கடைசி தினமாகையால், புதிய ஆண்டினை நம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும் எதிர்கொள்ளும் வகையில் சித்தர்கள் அருளியதும், அனைவருக்கும் நன்மை பயக்க கூடியதுமான ஒரு தகவலுடன் சந்திக்கிறேன்.
 
 
 
 
திருமந்திர ரகசியம் - பஞ்சாக்கர எழுத்துக்கள்
 
 
Labels: திருமந்திரம், திருமூலர்
தினமும் காலையில் திருமந்திரத்தை பொருளுணர்ந்து வாசித்து வந்தால் குருவருள் சித்திக்குமென நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். பாடல்களின் பொருளறிவது தொடர்பாக நண்பர்கள் சிலர் மின்னஞ்சல் மூலம் கேட்டிருந்தனர். கீழே இருக்கும் இணைப்பில் திருமந்திர பாடல்களும், அவற்றின் பொருளும் எளிய தமிழிலும், ஆங்கிலத்திலும் விவரிக்கப் பட்டிருக்கிறது. பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
 
திருமந்திரம்
 
இந்த பதிவில் திருமந்திரத்தில் மறைபொருளாய் கூறப்பட்டுள்ள பஞ்சாக்கர எழுத்துக்களை பற்றி பார்ப்போம். பஞ்சாக்கர எழுத்துக்கள் என்பது ஐம்பத்தியோரு தமிழ் எழுத்துக்களையே குறிக்கிறது. ”சிதம்பர சக்கரம்” எனப்படும் திருவம்பலச் சக்கரத்தின் உயிர்நாடியாகவும் இந்த எழுத்துக்களே விளங்குகிறது.இந்த சூட்சும தகவல்கள் அனைத்துமே திருமூலரால் மறைபொருளாகவே கூறப்பட்டிருக்கின்றன.
 
திருவம்பல சக்கரம் குறித்து முன்னரே ஒரு பதிவில் விவரமும், அதன் படத்தினையும் பகிர்ந்திருக்கிறேன். இந்த இணைப்பில் சென்று அந்த பதிவினை வாசிக்கலாம்.இத்தகைய பெருமையுடைய பஞ்சாக்கர எழுத்துக்கள் ம்னித உடலை ஆட்கொண்டிருப்பதாகவும், இதனை உணர்ந்து தெளிந்து திருவம்பலசக்கரத்தினை பூசிப்பவர்களுக்கு அழியாத உடல் கிடைக்குமென்கிறார் திருமூலர்.
 
"ஆகின்ற சக்கரத்து உள்ளே எழுத்து ஐந்து ஐந்தும்
பாகு ஒன்றி நின்ற பதங்களில் வர்த்திருக்கும்
ஆகின்ற ஐம்பத்தி ஓரெழுத்து உள்நிற்கப்
பாகு ஒன்றி நிற்கும் பராபரன் தானே"
 
- திருமந்திரம் -
 
திருவம்பல்ச் சக்கரத்தின் மையத்தில் உள்ள இருபத்தியைந்து அறைகளினுள் இந்த ஐம்பத்தியோரு பஞ்சாக்கர எழுத்துக்கள் எழுத்தப்படல் வேண்டும் என்று குறிப்பிடுகிறார். இந்த எழுத்துக்களில் இறைவனும் நெறிமுறையாக அமர்ந்திருப்பார் என்கிறார். இந்த எழுத்துக்களின் பெருமையை பார்ப்பதற்கு முன்னர் இந்த எழுத்துக்கள் எவையென தெரிந்து கொள்வோம்.
 
 
பன்னிரெண்டு உயிர் எழுத்துக்களான....
 
அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஒள
 
ஆய்த எழுத்து கூடிய நிலையில் உயிர் எழுத்துக்கள் பன்னிரெண்டு...
 
ஃஅ,அஃ,ஃஇ,இஃ,ஃஉ,உஃ,ஃஎ,எஃ,ஃஐ,ஐஃ,ஃஒ,ஒஃ
 
மெய்யெழுத்து பதினெட்டு..
 
க,ங,ச,ஞ,ட,ண,த,ந,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன
 
ஆய்த எழுத்து கூடிய நிலையில் மெய்யெழுத்து எட்டு..
 
ஃக,கஃ,ஃச,சஃ,ஃப,பஃ,ஃய,யஃ
 
ஆயுத எழுத்து ஒன்று
 

ஆக மொத்தம் ஐம்பத்திய்யோரு எழுத்துக்கள். இந்த எழுத்துக்கள் ஒவ்வொன்றும் மனிதனின் உடல் அவயங்களை ஆட்சி செய்வதாக திருமூலர் கூறுகிறார்.அந்த விவரங்களை நாளைய பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.
 
இந்த வலைப் பதிவில் முன்னூற்றி ஐம்பதாவது பதிவு இது.
 
 
திருமந்திர ரகசியம்...தொடர்ச்சி!
Labels: திருமூலர்
திருமூலர் அருளிய திருமந்திரம் பத்து பிரிவுகளில் மூவாயிரம் பாடல்களைக் கொண்டது என்பதை நேற்றைய பதிவில் பார்த்தோம். பாயிரம் என்ற முதல் பிரிவில் பதின்மூன்று தலைப்புகளின் கீழ் நூற்றி ஐம்பத்தியாறு பாடல்கள் இருப்பதையும் பார்த்தோம். இன்று தந்திரங்களின் கட்டமைப்பினை பற்றி பார்ப்போம்.
 
முதலாம் தந்திரம்
 
பதினேழு தலைப்புகளின் கீழ் நூற்றி அறுபத்தியாறு பாடல்களைக் கொண்டது முதலாம் தந்திரம். இது பொதுவில் ஒழுக்க நெறிகளைப் பற்றி கூறுகிறது.
 
இரெண்டாம் தந்திரம்
 
இருபத்தி ஐந்து தலைப்புகளின் கீழ் இருநூற்றி எட்டு பாடல்கலைக் கொண்டது இரெண்டாம் தந்திரம். இவை சிவனையும், சீவனையும் விளக்குகின்றன.
 
மூன்றாம் தந்திரம்
 
இருபத்தியொரு தலைப்புகளின் கீழ் முன்னூற்று முப்பத்துமூன்று பாடல்களைக் கொண்டது மூன்றாம் தந்திரம். இவற்றில் பெரும்பாலும் யோகம் பற்றிய விளக்கங்கள் காணக் கிடைக்கிறது.
 
நான்காம் தந்திரம்
 
பதின்மூன்று தலைப்புகளின் கீழ் ஐநூற்று முப்பது பாடல்களைக் கொண்டது நான்காம் தந்திரம். இவற்றில் உபாசனை வழிமுறைகள் கூறப் பட்டிருக்கிறது.
 
ஐந்தாம் தந்திரம்
 
இருபது தலைப்புகளின் கீழ் நூற்றி ஐம்பத்திநான்கு பாடல்களைக் கொண்டது ஐந்தாம் தந்திரம். சைவ சமயத்தின் வகைகள் மற்றும் சரியை, கிரியை, யோகம், ஞானம் போன்றவைகளை இந்த பகுதி விளக்குகிறது.
 
ஆறாம் தந்திரம்
 
பதின்நான்கு தலைப்புகளின் கீழ் நூற்றி இருபத்தியெட்டு பாடல்களைக் கொண்டது ஆறாம் தந்திரம். குருதரிசனம், ஞானநிலை, துறவு, தவம் மற்றும் திருநீற்றின் பெருமைகள் இந்த பிரிவில் காணலாம்.
 
ஏழாம் தந்திரம்
 
முப்பது தலைப்புகளில் நானூற்றிஏழு பாடல்களைக் கொண்டது ஏழாம் தந்திரம். இவை ஆறு ஆதாரங்கள், ஆறு லிங்கங்கள், புலனடக்கம், தகாத ஒழுக்கம் பற்றி விளக்குகின்றது.
 
எட்டாம் தந்திரம்
 
முப்பத்தி மூன்று தலைப்புகளில் ஐநூற்றி பதினெட்டு பாடல்களைக் கொண்டது எட்டாம் தந்திரம். இவை சித்தாந்த விளக்கம், ஞானிகள் செயல் மற்றும் முக்குணங்கள் பற்றி விளக்குகின்றது.
 
ஒன்பதாம் தந்திரம்
 
இருபத்தி இரண்டு தலைப்புகளில் நாநூறு பாடல்களைக் கொண்டது ஒன்பதாம் தந்திரம். இவை குரு தரிசனம், மூவகை பஞ்சாட்சரங்கள், ஞான உதயம், வாழ்த்து என்பது பற்றி விளக்குவதோடு திருமந்திரம் நிறைவடைகின்றது.
 
ஆக மொத்தமாய் பாயிரம் சேர்த்து ஒன்பது தந்திரங்கள் நூற்று தொன்னூற்றி ஐந்து தலைப்புகளுடன், மூவாயிரத்தி எண்பத்தியோரு பாடல்களைக் கொண்ட பொக்கிஷம்தான் திருமந்திரம்.
 
குருவருளைப் பெற ஓர் எளிய வழி தினமும் காலையில் எழுந்து திருமந்திரத்தை உணர்ந்து படித்து வந்தாலே சித்திக்கும். இப்படி சிறப்புகள் பலவற்றை தன்னகத்தே கொண்ட திருமந்திரத்தில் மறைபொருளாய் உணர்த்தப்பட்டு இன்று வரை ரகசியமென கருதப் படும் ஒன்றினைப் ப்ற்றி நாளைய பதிவில் பார்ப்போம்.
 
 
 
திருமந்திர ரகசியம் - ஓர் அறிமுகம்
Labels: திருமந்திரம், திருமூலர்
"மூலன் உரைசெய்த மூவாயிரம் தமிழ்
ஞாலம் அறியவே நந்தி அருளது!
காலை எழுந்து கருத்துஅறிந்து ஓதிடின்
ஞாலத் தலைபவனை நண்ணுவர் அன்றே!"
 
-திருமூலர்
 
சைவ சமய திருமுறைகளில் பத்தாவது திருமுறையாக போற்றப் படுவது திருமூலர் அருளிய திருமந்திரம். பன்னிரு திருமுறைகளில் முதல் ஒன்பது திருமுறைகள் தோத்திர வகையாகவும், பத்தாவது திருமுறையான திருமந்திரம் சாத்திர வகையாகவும், பதினோராவது திருமுறை பிரபந்த வகையாகவும், பன்னிரெண்டாவது திருமுறை புராணவகையாகவும் குறிக்கப் பட்டிருக்கிறது. சாத்திரவகையான திருமந்திரம்தான் மெய்யான இறையின் தத்துவத்தையும், அதன் மேலான மாண்பினையும் தமிழுக்கு உரைத்த ஆதிநூல் என்றால் மிகையில்லை.
 
என்னுடைய தனிப்பட்ட அவதானத்தில், அழியும் தன்மையுடைய நமது உடலை யோகத்தின் மூலம் பக்குவமாக்கி, சிற்றின்பங்களின் பிடியில் இருந்து விலகி, எல்லா உயிர்களிடத்தும் கபடமில்லாத அன்பு செலுத்துவதன் மூலம் நம் சீவனை சிவனாக்கி மரணமில்லா பெருவாழ்வு வாழ்வதன் நுட்பநிலைகளை விவரிக்கும் நூலாகவே திருமந்திரத்தை பார்க்கிறேன்.
 
இந்த நூலில் பொதிந்திருக்கும் பல அரிய தகவல்கள் இன்னமும் முழுமையாக கட்டவிழ்க்கப் படவில்லை. எளிய சொல்லாடல்களால் அமையப் பெற்ற இந்த பாடல்களின் பின்னே இருக்கும் சூட்சுமங்கள் சிலதை நானறிந்த வகையில் இந்த வாரத்தில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். திருமூலரின் வாக்கின் படி மூவாயிரம் பாடல்களால் ஆன இந்த நூல் நமக்கு முழுமையாக கிடைத்திருக்கிறது
 
முதலில் இந்த நூலின் அமைப்பு எத்தகையது என்பதை பார்ப்போம்.மொத்தமாக பத்து பிரிவுகளாய் பிரிக்கப் பட்டுள்ள இந்த நூலின் முதல் பகுதியை “பாயிரம்” என்கின்றனர். மற்ற ஒன்பது பிரிவுகளும் “தந்திரங்கள்” என்று அழைக்கப் படுகின்றன.
 
பாயிரம்
 
இதில் மொத்தம் நூற்றி ஐம்பத்தியாறு பாடல்கள் உள்ளது. இந்த பாடல்கள் பதின்மூன்று தலைப்புகளில் பிரிக்கப் பட்டிருக்கிறது. அவை முறையே,.. கடவுள் வாழ்த்து, அந்தணர் ஒழுக்கம், அரசாட்சி முறை, அவையடக்கம், அறஞ்செய்யான் திறம், அறஞ்செய்வான் திறம், ஆகமச் சிறப்பு, ஆகுதி வேட்டல், மும்மூர்த்திகளின் முறைமை, வானச் சிறப்பு, வேதச்சிறப்பு, குருபரம்பரை, திருமூலர் தன் வரலாறு கூறுதல் என பிரிக்கப் பட்டிருக்கிறது.
 
பதிவின் நீளம் கருதி திருமந்திர ரகசியத்தை நாளைய பதிவில் தொடர்கிறேன்..
 
 
அறம் செய விரும்பு - திருமூலர்!
Labels: திருமூலர்
"ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின்
பார்த்திருந் துண்மின் பழம்பொருள் போற்றன்மின்
வேட்கை யுடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்
காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே."
- திருமூலர் -
"யாவர்க்குமாம் இறைவர்க்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கின்னுரை தானே!"
- திருமூலர் -
 
உங்களால் எதைக் கொடுக்க முடியுமொ அதை, பாகுபாடு பாராமல் எல்லோருக்கும் கொடுங்கள், அதுவே அறம் எனப்படும். மற்ற பிற உயிரினங்களின் துயரைத் துடைக்கும் எதுவும் நல்லறமே!. அதுவே நிலை பேற்றினை தரும். இத்தகைய அறமானது மனதாலும், செயலாலும், சொல்லாலும் செய்யப் படல் வேண்டும். இவ்வாறு செய்யும் அறமானது செய்கிறவனையும், அவனது சுற்றத்தையும் மேல் நிலைக்கு இட்டுச் செல்லும்.
மேலும் பொன்னையும், பொருளையும் வாரி வழங்குவது மட்டுமே அறம் இல்லை. பசித்த பசுவுக்கு ஒரு பிடி புல்லைத் தருவதும், தூய மனதோடு ஒரு பச்சிலை இட்டு இறைவனை வணங்குவதும் கூட அறம்தான். குறைந்த பட்சம் பிறர் மனம் நோகாமல் இனிமையான சொற்களை பேசுவதும் கூட மேலான அறம்தான் என்கிறார் திருமூலர்.
எளிய வார்த்தைகளில் உயரிய தத்துவம்!
அறம் செய விரும்புவோம்!
 
 
 
சித்தர்கள் வணங்கிய தெய்வம்...!
 
Labels: இறை பக்தி, குரு வணக்கம், திருமூலர்
சித்தர் மரபியலில் குருவின் மகத்துவம், குரு வணக்கம், குரு தரிசனம் போன்றவைகளைப் இதுவரை பார்த்தோம். அந்த வரிசையின் தொடர்ச்சியாகவே இந்த பதிவுகளை வாசிக்க வேண்டுகிறேன்.
ஓமெனும் ஓங்காரத்துள்ளே ஒரு மொழி
ஓமெனும் ஓங்காரத்துள்ளே ஒரு அழகு
ஓமெனும் ஓங்காரத்துள்ளே பல பேதம்
ஓமெனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே!
- திருமூலர் -
அனைவருக்கும் மேலான குரு இறைவனே! சாதித்த புண்ணியர்களுக்கும், சாதிக்க நினைக்கும் அனைவருக்கும் இறைவனே மேலான குருவாக இருப்பார். இதை உணர, அல்லது உணர்த்தி வழிகாட்டிட, ஒரு நல்ல மானிட குரு தேவை.
அத்தகைய உண்மையான குருவினைத் கண்டறிந்து யோகம் மற்றும் ஞான பயிற்சிகளை அறிவதுடன், அவற்றை நம்பிக்கையுடனும், வைராக்கியத்துடனும், முழுமையான அர்ப்பணிப்புடனும் தொடந்து செய்து வர வேண்டும். தொடர் பயிற்சி உள்ளவர்களுக்கே சித்தியும், ஞானமும் கிடைக்கும். விதைகளை நசுக்கி எண்ணை எடுப்பது போல ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்க வேண்டும். இவ்வாறு ஊனினை உருக்கி உள்ளொளி கண்டவர்களே சித்தர்கள்.
இந்தகைய உயர்நிலை ஆன்மாக்களாகிய சித்தர்கள் போற்றி வணங்கிய மேலான தெய்வம் எது?
சித்தர்கள் எல்லோரும் அந்த ஒரே தெய்வத்தைத்தான் வணங்கினரா?
இது பற்றி பரவலாக பல்வேறு கருத்தாக்கங்கள் இருக்கின்றன. விவாத பொருளாகவும் இது இருந்து வருகிறது. யார் எதைச் சொன்னாலும் நமக்கு கிடைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில் சித்தர்கள் அனைவரும் ஒரேயொரு தெய்வத்தையே பூசித்திருக்கின்றனர்.அந்த தெய்வத்தை பூசிக்காமல் சித்திபெற்ற சித்தர் எவருமே இல்லை என்று அறுதியிட்டுக் கூறலாம்.
அத்தனை சிறப்பும் மகத்துவமும் வாய்ந்த தெய்வம் எது?
விவரங்கள் அடுத்த பதிவில்.....
 
 
காயந்திரி மந்திரம் மறைந்ததா?,மறைக்கப் பட்டதா...?
Labels: காயந்திரி மந்திரம், திருமூலர், மந்திரம்
காயத்ரி மந்திரம் என்பது அநேகமாய் நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்....ஆனால் இந்த தொடர் அது பற்றியதல்ல, தலைப்பை இன்னொரு முறை தீர்க்கமாய் படித்துக் கொள்ளுங்கள்.
குறிப்பிட்ட சில சொற்கள் அல்லது அட்சரத்தை ஒரே சீரான கதியில் திரும்பத் திரும்பச் சொல்லிட அந்த ஒலி அதிர்வுகள் சக்தியாய் உருமாறி ஜெபிப்பவரின் உடலையும் , உயிரையும் கவசம் போல காக்கிறது. இதுவே மந்திரங்களின் அடிப்படை தத்துவம்.
இத்தகைய மந்திரங்களில் தலையாயதாக கருதப் படுவது காயத்ரி மந்திரம். இதை தொடர்ந்து முறையாக ஜெபித்து வருபவர்களுக்கு நலத்தையும், வளத்தையும் அருளக் கூடியது. மேலும் இவர்களுக்கு எந்த தீங்கும் நேராது என்கிற நம்பிக்கையும் உள்ளது.
காயத்திரி மந்திரத்தை ஜெபிப்பவரின் மனம், வாக்கு , காயம் ஆகியவற்றால் செய்த பாவங்களை அகற்றி பிரம்மத்தை உணரவைக்கும் என்றும் கூறப் படுகிறது.ஞானத்தின் உயரிய நிலையான பிரம்மத்தையே உணரவைக்கும் வல்லமை கொண்டு விளங்குவதால் இந்த காயத்ரி உபதேசத்தை "பிரம்மோபதேசம்" என்றும் கூறுகின்றனர்.
"வேத சாஸ்திரங்களில் நான் காயத்ரியாக இருக்கிறேன்"என்று பகவத்கீதையில் பகவான் கிருஷ்ணர் கூறுவது இதன் மகத்துவத்தை உணர்த்தும்.
இத்தனை பெருமை வாய்ந்த காயத்திரி மந்திரத்தை உலகுக்கு அளித்தவர் விசுவாமித்ர முனிவர். இவர் காயத்தையே(உடலை) திரியாக எரித்து மாகா மந்திர சக்தியான காயத்திரி மந்திரத்தினால் வேத மாதாவான காயத்திரி அம்மனை தரிசித்து எண்ணற்ற சித்திகளைப் அடைந்து பிரம்மரிஷி என்ற பட்டம் பெற்றவர்.
விசுவாமித்ர முனிவரால் அருளப்பட்ட காயத்ரி மந்திரம் இதுதான்...சமஸ்கிருத மொழியில் அமைந்திருக்கிறது இந்த மந்திரம்....
"ஓம் பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்"
இத்தனை சிறப்பான காயத்ரி மந்திரம் பற்றி திருமூலர் தமிழில் இப்படி சொல்கிறார்...
காயத்திரியே கருது சாவித்திரி
ஆய்தற்க்குவப்பவர் மந்திரமாங்குன்னி
நேயத்தேர்ரேறி நினைவுற்று நேயத்தாய்
மாயத்துள் தோயா மறையோர்கள் தாமே!
- திருமூலர் -
இந்த இடத்தில்தான் நெருடல் வருகிறது. பொதுவாக சித்தர்கள் மந்திரங்கள் அனைத்துமே தமிழிலேயே இருக்கின்றது அப்படி இருக்க திருமூலர் சொல்லும் காயத்திரி மந்திரம் வேதங்களில் சொல்லப்பட்ட சமஸ்கிருத காயத்ரி மந்திரமா? அல்லது சித்தர்கள் தங்களுக்கென தனியான காயத்ரி மந்திரம் சொல்லி இருக்கிறார்களா? அப்படி சொல்லி இருந்தால் அது என்ன?
காத்திருங்கள்.....விவரங்கள் அடுத்த பதிவில்.....

No comments:

Post a Comment