பஞ்சபூத அம்சங்களின் அறிவியல் குறித்த அடிப்படைகளை முந்தைய இரு பதிவுகளில் பார்த்தோம். அந்த வகையில் இன்று இந்த அறிவியலை அடிப்படையாகக் கொண்டு ஒரு தாழ்ந்த உலோகத்தை உயர் உலோகமாய் மாற்றும் முறையினை பார்ப்போம். இதற்கு முன்னரும் கூட இதே தத்துவத்தினை அடிப்படையாகக் கொண்டு தாழ்ந்த உலோகத்தினை உயர் உலோகமாய் மாற்றும் செயல் முறைகளை பகிர்ந்திருக்கிறேன் அந்தப் பதிவுகளை இந்தஇணைப்பில் சென்று வாசிக்கலாம்.
அகத்தியர் தனது “அகத்தியர் பரிபூரணம்” என்ற நூலில் பித்தளையை தங்கமாக மாற்றும் இரசவாத முறையொன்றை அருளியிருக்கிறார். அந்த விவரம் பின் வருமாறு.
பதிவாக இன்னமொரு கருமானங்கேள்
பதிவான பிருதிவியைப் பழச்சாற்றாலே
கெதியாகத் தானரைத்து மைந்தாகேளு
கெணிதமுடன் துருசுவெடி சாரங்கூட்டி
மதியான சருகுடனே பூரஞ்சேர்த்து
மைந்தனே பழச்சாற்றா லரைத்துருட்டி
விதியான பித்தளையைத் தகடுசெய்து
விரும்பியந்த மருந்ததிலே சேர்த்துமூடே.
சேர்ந்துநன்றாய்
மூடியபின் மைந்தாகேளு
சிவசிவா நிதானமுடன் புடத்தைப்போடு
பார்த்திபனே புடமாறி யெடுத்துப்பார்த்தால்
பத்தியுள்ள பித்தளைதான் செம்பாய்ப்போச்சு
போற்றியந்தச்
செம்பதனைப் பதனம்பண்ணி
புண்ணியனே வெள்ளிதனில் நாலுக்கொன்று
வாத்திமிகத் தாங்கொடு உருக்கிப்பார்க்க
மயங்காதே மகத்தான பொன்தான்பாரே.
பஞ்ச பூதங்களுள் மண்ணை முன்னிலைப்படுத்தும் ஒரு மூலகத்தை எடுத்து அத்துடன் பழச்சாறு சேர்த்து அரைத்து,பின்னர் அதனுடன் துரிசும், வெடிசாரமும், பூரமும் சம அளவில் சேர்த்து மீண்டும் அதே பழச்சாறு கொண்டு அரைத்து உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டுமாம்.
பித்தளையை தகடாக செய்து அதன் மீது மேலே சொன்ன உருண்டைகளை பூசி நன்கு கவசமிட வேண்டுமாம். பின்னர் அதை புடமிட்டு, புடம் ஆறிய பின்னர் எடுத்துப் பார்த்தால் அந்த பித்தளையானது செம்பாக மாறியிருக்குமாம். பின்னர் அந்த செம்பின் எடைக்கு நான்கில் ஒரு பங்கு வெள்ளி சேர்த்து உருக்கினால் அது தங்கமாக மாறிவிடும் என்கிறார்.
எளிய முறைதானே!, ஆனாலும் இங்கே சில விவரங்கள் தவிர்க்கப் பட்டிருக்கின்றன. அதாவது மண்ணை முன்னிறுத்தும் மூலகம் எது என்பதையும், எந்த வகையான புடம் போடவேண்டும் என்பதையும் அகத்தியர் இந்த நூலில் குறிப்பிடவில்லை. ஆனால் இந்த தகவல்கள் அகத்தியர் அருளிய மற்றொரு நூலான "அகத்தியர் 12000" என்னும் நூலின் ஒன்பதாவது காண்டத்தில் வரும் 637வது பாடலில் குறிப்பிடப் பட்டிருக்கிறது.
ஒரு உதாரணம் காட்டிடவே இந்த செயல் முறையினையும், அதன் பின்னே மறைக்கப் பட்டிருக்கும் தகவலின் இடத்தினையும் குறிப்பிட நேர்ந்தது. இது போல பல தகவல்கள் நூல்களின் ஊடே புதைந்திருக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் இத்தகைய தகவல்களைத் தொகுத்து மேலதிக ஆய்வுகளை செய்திடலாம்.
No comments:
Post a Comment