முக்தி அடைய ஓர் எளிய வழி!
Author: மதன்
மனிதன் பிறப்பில் இருந்து தன் வாழ் நாளில் செய்திடும் பாவபுண்ணியங்களின் பலன்களைப் பொறுத்து, இறப்புக்குப் பின்னர் மீண்டும் இவ்வுலகில் பிறந்து அவற்றை அனுபவிப்பதாக நமது சித்தாந்தங்கள் நம்புகின்றன. மனிதனின் பாவக் கணக்குகள் தீரும் வரையில் இந்த சுழற்சி தொடர்வதாகவும் கருதப் படுகிறது.இந்த சுழற்சியில் இருந்து விடுபட்டு குறைவில்லா இன்பத்துடன் இருந்திடும் ஒரு நிலைதான் முக்தி எனப் படுகிறது.
முக்தி நிலை என்பது மிக உயரிய குறிக்கோளாய் கூறபபடுகிறது.கடுமையான முயற்சி மற்றும் பயிற்சியினால் மட்டுமே ஒருவர் இந்த மேலான நிலையினை அடைந்திட முடியும்.யோகம் என்கிற எட்டு நிலைகளில் தேர்ந்து தெளிந்தால் மட்டுமே முக்தி நிலை சாத்தியமாகும்.இது பற்றி விரிவாக முந்தைய பதிவுகளில் அலசியிருக்கிறோம்.
இத்தகைய கடினமான முக்தி நிலையினை எட்டிடும் புதிய வழி ஒன்றினை பாம்பாட்டிச் சித்தர் தனது பாடலில் பின்வருமாறு விளக்குகிறார்.
திரளான போரில்ஊசி தேடல் போல்முத்தி
சிக்காது தேசாசார தேசிகர் தம்மால்
அருளான மூலகுரு அவர் செயலால்
ஆனந்தம் கண்டோம் என்று ஆடாய் பாம்பே!
- பாம்பாட்டிச் சித்தர் -
பரந்து விரிந்த போர்களத்தில் படைகள் ஆவேசத்துடன் சண்டை போட்டுக் கொண்டிருக்கும். அந்த இடத்தில் ஊசியப் போட்டுவிட்டு மீண்டும் தேடி எடுக்க முடியாது அது போல முக்தியும் இலகுவில் கிடைக்காது. எத்தனை முயற்சிகள் கஷ்டங்கள் பட்டாலும் முக்தி என்பது அத்தனை இலகுவாகக் கிடைத்துவிடாது.
அதே நேரத்தில் இந்த உலகம் முழுவதும் எங்கும் சஞ்சரிக்கும் சித்தர்களின் அருளையும், மூலகுருவின் அருளையும்,கருணையையும் வேண்டிப் பெறுவதன் மூலமே கிடைப்பதற்க்கு அறிய முக்தியைப் பெறமுடியும். இவர்களின் மேலான அருளால் முக்தியை உணர்ந்து, ஆனந்தம் கொண்டோம் என்று ஆடு குண்டலினிப் பாம்பே என்கிறார் பாம்பாட்டிச் சித்தர்.
மேன்மையான குருவருளை பெறுவதன் மூலமே ஒருவர் முக்தி நிலையினை அடைந்திட முடியும் என்பது பலருக்கும் புதிய செய்திதானே..
பின்குறிப்பு:
பாம்பாட்டிச் சித்தரின் பாடல்கள் எளிமையான மொழி நடையில் எவரும் புரிந்து கொள்ளும் வகையில் இருப்பது சிற்ப்பு. ஆனால் பாம்பாட்டி சித்தரின் 129 பாடல்கள் மட்டுமே நமக்கு கிடைத்திருக்கிறது என்பது கொஞ்சம் வருத்தமான செய்தியே..
ஜீவன் முக்தி என்றால்...!
Author: மதன்
”சிவலோக பதவி”, “வைகுந்த பதவி”, “முக்தி அடைதல்”இவையெல்லாம் இறந்து போனவர்களை அடையாளப் படுத்தும் வார்த்தைகள் என்றே பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். உண்மை அதுவல்ல....
முக்தி அடைதல் என்பதன் தூய தமிழ் வடிவம் ”விட்டு விடுதலையாதல்” அல்லது ”வீடு பேறடைதல்” என்பதேயாகும். யோகத்தில் உயர் நிலையான சமாதி நிலைக்கு அடுத்த நிலைதான் இந்த முக்தி நிலை. இதனை மீண்டும் பிறவா பேரின்ப நிலை என்றும் சித்தர்கள் குறிப்பிடுகின்றனர்.
இறப்பிற்குப் பின்னர் முக்தி அடைதல் என்பது வெறும் வாய் வார்த்தை எனச் சொல்லும் சித்தர்கள், வாழும் காலத்தில், இந்த உடல் இருக்கும் போதே அத்தகைய பிறவா பேரின்ப நிலையினை அடைந்திட வேண்டும் என்கின்றனர்.
இந்த முக்தி நிலையை அடைய ஒரே வழி யோக மார்க்கம் என்று சொல்லும் சித்தர்கள், இந்த யோக உறுப்புக்கள் எட்டு நிலைகளைக் கொண்டதாக கூறியிருக்கின்றனர். அவை முறையே கடிவு (இமயம்), நோன்பு (நியமம்), இருக்கை (ஆசனம்), வளிநிலை (பிராணயாமம்), ஒருக்கம் (பிரத்தியாகாரம்), நிறை (தாரணை), ஊழ்கம் (தியானம்) , ஒன்றுகை (சமாதி) என்பதாகும்.
கொங்கணவர் தனது வாத காவியத்தில் முக்தி பற்றி இவ்வாறு சொல்கிறார்.
காணப்பா குருசொன்ன சாத்திரத்தின் படியே
கைமுறையாய் நடக்கிறதே விபரமென்பார்
பூணப்பா யெந்தெந்தக் காரியங்கள் வந்தும்
புகழாகத் தயக்கம் வந்தும் பிரமமென்றும்
தோணப்பா நிரந்தரமும் வேதாந்தம் பார்த்துச்
சொன்னமுறையாய் நிற்பதுவே விரதமாச்சு
ஆணப்பா நியமமென்ற பத்துஞ் சொன்னே
னறிந்திந்த விருபதையும் மறுட்டித்தேறே
- கொங்கணவர் -
குரு அருளிய யோக வழிமுறையின் படி நடப்பது தான் விரதம் என்பார்கள். இதன் வழி நிற்போர் எக்காரியம் வந்தாலும், எவ்வளவு தடங்கல் ஏற்பட்டாலும், அனுதினமும் தானே பிரம்மம் என்பதை உணர்ந்து தியானித்து வருவதே விரதம் ஆகும். இதுவே நியமம் என்ற பத்து வகை ஆகும். மற்றயது இயமம் என்று அழைக்கப்படும் பத்துவகை ஆகும். இயம,நியமமாகிய இந்த இருபதையும் முறையாக கடைப் பிடித்தாலேயே யோகத்தில் முன்னேற முடியும் என்று சொல்லும் இவர் தொடர்ந்து...
எறியிந்த விருபதையும் மநுட்டியாட்டால்
என்னசொல்வேன் சீவனில்லாச் சித்திரம் போலாம்
தேறியிந்த வடிப்படையை வைக்குமுன்னே
சிற்றெடுத்த சுழிகைக்கு மொக்குமொக்கும்
ஆறியிந்தக் காயசித்தி பண்ணுமுன்னே
யாயிரமாங் கலியுகத்தைக் கண்டதொக்கும்
மாறியிந்தச் சடத்தோடே முத்தி காணான்
மாண்டபின்பு முத்தியென்ற வாறுபோமே
- கொங்கணவர் -
இவ்விருபதையும் முறையாக கடை பிடிக்காதவன் ஜீவனில்லா சித்திரம் போலனவன். அத்தகைய செயல் முறையாக தொடங்கப்படும் எந்தக் காரியமும் பதியளவு நிறைவடைந்ததுக்கு சமானாகும் என்கிறார். அத்துடன் காய சித்தி செய்ய வெண்டும் என்று நினைத்தாலே ஆயிரம் கலியுகத்தை கண்டதற்க்கு சமனாகும் என்றும், இவ்வுடலுடன் இருக்கும் போதே முக்தி அடையாதவர்கள், இறந்த பின் முக்தி அடைவது என்பது வாயளவில் வார்த்தையாக ஆகிவிடும் என்கிறார்.
நாளைய பதிவில், வேளாண்மையில் விளைச்சலை பெருக்கும் ஜாலம் பற்றி பார்ப்போம்.
யோகத்தின் உச்ச நிலை...
Author: மதன்
"மனமென்னும் மாடு அடங்கில் தாண்டவக்கோனே - முத்தி
வாய்த்ததென்று எண்ணேடா தாண்டவக்கோனே"
"சினமென்னும் பாம்பு இறந்தால் தாண்டவக்கோனே - யாவும்
சித்தியென்றே நினையேடா தாண்டவக்கோனே"
"ஆசையெனும் பசுமாளின் தாண்டவக்கோனே - இந்த
அண்டமெல்லாம் கண்டறிவாய் தாண்டவக்கோனே"
- இடைக்காட்டு சித்தர் -
நமது ஐம்புலன்களின் செயல்பாடுகள் அனைத்தையும் ஒரு முகமாக்கி, அதனால் மனம் தெளிவதன் விளைவாய் சலனமற்றா அமைதி நிலை உருவாகும். இந்த நிலையில்தான் யோகம் பயில்பவர் இறைவன் தன்னிலும், ஆன்மாவிலும் நிறைந்து உறைந்திருப்பதை உணரத் தலைப்படுவார். இதுவே விவரிக்க இயலாத பேரின்ப நிலையாகும்.
இந்த நிலையைத்தான் யோகத்தின் அதி உயர் நிலையாக குறிப்பிடுகின்றனர். இந்த நிலையினை எய்தும் பயிற்சியினை குருமுகமாக மட்டுமே பயில இயலும்...அதுவே சிறப்பும் கூட
யோகம் பற்றிய தொடர் முற்றிற்று....அடுத்த பதிவில் வேறொரு தகவலுடன் சந்திக்கிறேன்.
யோகம் பயில்வோர் சந்திக்கும் தடைகள்...
Author: மதன்
முழுமையான தன்முனைப்போ அல்லது, கவன குவிப்போ இல்லாது யோகம் பயிலும் போது, பயிற்சி செய்பவருக்கு தடைகள் பல வரும் என்று சொல்லும் பதஞ்சலி முனிவர், அத்தகைய தடைகளை பின்வருமாறு விளக்குகிறார்.
எண்ணங்களைக் குழப்பும் சிந்தனைகள் உருவாகும், இதை"சித்த விகஷோப" என்கிறார்.
உடலை வருத்தும் நோய்களும் அதனால் உருவாகும் தடையினை "ஸ்தியானா"என்கிறார்.
தான் பயிலும் யோகம் கைகூடுமா என்கிற சந்தேகம் உருவாகும் மனத் தடையினை "சம்சயா" என்கிறார்.
அலட்சியத்தன்மையையினால் உருவாகும் கவனச் சிதறலை"பிரமாதா" என்கிறார்.
தொடர்ச்சியான பயிற்சியின் மூலம் கைவரப் பெற்ற மன ஒருமைப் பாட்டை தக்க வைத்துக்கொள்ள இயலாமல் அதை இழக்கும் தன்மையை "அனாவஸ்த்திதத்வா" என்றும் குறிப்பிடுகிறார்.
எனவே, ஒருவர் யோகப் பயிற்சி செய்யும் போது இது போன்ற தடைகளை எதிர் கொள்ள உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் தயாராக இருக்க வேண்டும். இவை முறையான குருவின் மேற்பார்வையில் பயிலும் போது தவிர்க்கப் படும்.
தடைகள் எது வந்த போதிலும் அதை தாண்டி தன் இலக்கை அடையும் மன உறுதியும், தீர்க்கமான சிந்தனையும் உள்ளவருக்கே யோகம் சித்திக்கும்.
அடுத்த பதிவில் யோகத்தின் உச்ச நிலை பற்றி பார்க்கலாம்...
யோகத்தின் நிலைகள்....
Author: மதன்
யோகம் எட்டு நிலைகளைக் கொண்டது. இதனை ”எட்டு படிகள்” என்கிறார், யோகத்தின் பிதாமகரான பதஞ்சலி முனிவர். இந்த எட்டு நிலைகளும் மனிதனின் வாழ்க்கையின் நெடுகில் ஆத்மாவுக்கு உறுதுணையாக இருப்பவை..
இந்த எட்டு நிலைகளும் ஒன்றோடு ஒன்று தொடர்பானவை.ஒரு நிலை முடியும் தருணத்தில் அடுத்த நிலை துவங்கும். எனவே ஒவ்வொரு நிலையாகவே பயில வேண்டும். ஒரு நிலையில் தேர்ச்சி பெறாமல் அடுத்தடுத்த நிலைகளை பழக முடியாது.எனவே தொடர் பயிற்ச்சிகளின் மூலமும், மனிதனை சூழ்ந்திருக்கும் எல்லா விதமான ஆசைகளில் இருந்தும் மனதை விடுவித்து வைப்பதன் மூலமும் இது சாத்தியமாகும்.
யோகத்தின் எட்டு நிலைகளையும் திரு மூலரும் தனது திருமந்திரத்தில் விரிவாக குறிப்பிடுகிறார்.
"அந்நெறி இந்நெறி என்னாதட் டாங்கத்
தன்னெறி சென்று சமாதியி லேநின்மின்
நன்னெறி செல்வார்க்கு ஞானத்தி லேகலாம்
புன்னெறி யாகத்திற் போக்கில்லை யாகுமே"
- திருமூலர் -
"இயம நியமமே எண்ணிலா ஆதனம்
நயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரஞ்
சயமிகு தாரணை தியானஞ் சமாதி
அயமுறும் அட்டாங்க மாவது மாமே"
- திருமூலர் -
இயமம், நியமம், ஆசனம், பிரணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி. ஆகியவையே யோகத்தின் எட்டு நிலைகளாக கொள்ளப் படுகின்றன.
இயமம் என்பது வாழ்வியல் சார்ந்த நல்லொழுக்கத்தையும், நியமம் என்பது ஒழுக்கத்தின் மூலம் ஆத்ம சுத்தத்தையும், ஆசனம் என்பது உடற்பயிற்சி நிலைகளையும், பிரணாயாமம் மூச்சு கட்டுக்குள் கொணரும் பயிற்சி முறைகளையும், பிரத்தியாகாரம் என்பது புலனடக்கத்தையும், தாரணை என்பது மன ஒருமைப்பாட்டையும், தியானம் என்பது பரமாத்மாவை உணரும் நிலையையும், சமாதி பரமாத்மாவுக்கு சமனான பேரின்ப நிலையை அடவைவதையும் குறிக்கும்.
உணபது,உறங்குவது,உழைப்பது என வாழ்வின் அனைத்து கூறுகளையும் அளவுடனும், நிதானமாகவும் செயல்படவேண்டியது அவசியம்.. இத்தகையவர்களே யோகமார்க்கத்தில் இயல்பாக வெற்றியடையலாம்.
வாழ்க வளமுடன்....
யோகத்தில் வெற்றியடைந்திட....
Author: மதன்
உணவு உட் கொள்வதில் நிதானம் கடைப்பிடிக்க வேண்டும். அருஞ்சுவை உணவாய் இருந்தாலும் அரை வயிறே உண்ணுதல் வேண்டும்.வட மொழியில் இதனை "மிதாகார" என்பர். அதாவது கூடுதலாய் இல்லாமலும், குறைவாக இல்லாமலும் மிதமாக உண்பதாகும்.
"பசித்த பின் புசி" இது சான்றோர் வாக்கு.பசியின் அளவிற்கு ஏற்றவாறு அல்லாமல் மிகுதியாக உண்டால் நோய் ஏற்படும். யோகம் பயில்பவர்களுக்கு உணவுக் கட்டுப்பாடு முக்கிய காரணியாகிறது.
அளவுக்கு அதிகமாய் உண்பவனும், மிகுந்த பட்டினியால் வாடுபவனும் யோகத்தில் வெற்றி பெறமுடியாது.
இது போலவே, நாள் முழுவதும் குறட்டை விட்டு தூங்குபவர்களுக்கும், எப்பொழுதும் தூங்காமல் விழித்துக் கொண்டே செயலாற்றுபவர்களுக்கும் யோகம் வெற்றியளிப்பதில்லை.
இந்த பொல்லாத தூக்கத்தினால். தான் பல விசயங்களை இழந்து விட்டதாக கண்ணதாசன் தான் எழுதிய அர்த்தமுள்ள இந்து மதம் என்னும் நூலில் குறிப்பிடுகிறார்.
கடுமையான உடல் உழைப்பும் கூடாது, சோம்பேறித் தனமாகவும் உட்கார்ந்திருக்க கூடாது, அதிகமாக உணவு உண்டு ருசிக்கு அடிமை ஆகவும் கூடாது, அதற்க்காக பட்டினி கிடந்தது உடலை வருத்தவும் கூடாது.
உண்பது,உறங்குவது, உழைப்பது என எல்லாவற்றிலும் அளவுடனும், நிதானமாகவும் செயல்படவேண்டியது அவசியம்.. இத்தகையவர்களே யோகமார்க்கத்தில் இயல்பாக வெற்றியடையலாம்.
யோகம் - சில தெளிவுகள்
Author: மதன்
ஆசையெனும் பெருங்கடலில் சிக்கித் தவிப்பதுதான் மனித வாழ்வென ஆகிவிட்ட சூழ்நிலையில், அத்தகைய மனிதர்களை மீட்டெடுக்க மனித குலத்திற்கு கிடைத்த அரும்பெரும் கொடைதான் யோகம்.
"யோகா" என்கிற வடமொழிச் சொல்லுக்கு, ஒருவரின் எண்ணங்களையும் , சிந்தனைகளையும் ஒருமுகப் படுத்தி அதனை செயல்படுத்துவது என்பதாக பொருள் சொல்லப் படுகிறது. இதனையே மனிதனாகிய ஜீவாத்மா, இறை நிலையான பரமாத்மாவோடு இணையும் செயல் என ஆன்மீக விளக்கமாகவும் கூறுகின்றனர்.
யோகத்தில் என்னதான் நடக்கிறது?
தூய்மையான எண்ணம், செயல், சிந்தனையுடன் உயர்வான இறை நிலையினை தியானித்து எமது உடம்பிலுள்ள அனைத்து சக்திகளையும் ஒன்று திரட்டி மனதை ஒருமுகமாக்கி, அதன் ஆற்றலை உயர்வான இறை நிலையோடு இனைத்துக் கொள்வதுதான் யோகாமுலம் நிறைவேறுகிறது.
யோக மார்க்கத்தில் ஈடுபடுவோரை யோகி என்கின்றனர். யோகி எனப் படுபவர் இனப துன்பங்களுக்கும், பந்த பாசங்களுக்கும், புகழ்ச்சிகளுக்கும், தூற்றுதல்களுக்கும் அப்பாற்பட்டவராக இருப்பர்.
எல்லா வினைகளுக்கும் எதிர் வினை நிச்சயம் உண்டு. இது மனிதனுக்கும் பொருந்தும், தான் செய்யும் ஒவ்வொரு செயலின் எதிர்வினையை எதிர்கொள்ளும் பக்குவம் இல்லாத போது, நிலை தடுமாறி சீர்குலைந்து துன்ப சகதியில் வீழ்ந்து அல்லல் படுகிறான்.
இத்தகைய துன்பங்களில் இருந்து தன்னை விடுவித்து பற்றற்ற நிலையை உருவாக்கி தருவதே யோகம் ஆகும். இப்படி விடுபட்டோரே யோகியாவர்.
ஆறறிவு படைத்த மனிதர்கள் அனைவரும் யோகமார்க்கத்தில் ஈடு பட்டு இறை நிலையினை அடையலாம். இதற்கு சாதி, மத, சமுதாய தடைகள் என எதுவும் கிடையாது. எனினும், யோகமார்க்கத்தில் வெற்றி அடைய சில நியதிகள் உள்ளன அவற்றை முறையாக கடைப்பிடிப்பவர்கள் குறுகிய காலத்திலேயே யோக மார்க்கத்தில் வெற்றியடையலாம்.
தீவினை அழிக்கும் புவனை யந்திரம்...
Author: மதன்
சித்தர்கள் வணங்கிய தெய்வத்தின் பெயர் வாலை என்பதாகும். ஆதி சக்தியின் பத்து வயது பெண் வடிவமே இந்த வாலை. வாலையை பூசிக்காத சித்தர்களே இல்லையெனலாம். வாலை தெய்வத்தைப் பற்றி மேலதிக விவரம் வேண்டுவோர் இந்தஇணைப்பில் சென்று வாசிக்கலாம்.
புவனை அம்மன் என்பவள் இந்த புவனமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் மகாசக்தியின் அம்சமாவாள். வாலை தெய்வம் குழந்தையின் அம்சமென்றால், புவனை அவளின் தாய் அம்சம் என்கின்றனர் சித்தர் பெருமக்கள். இந்த அன்னையின் அனுசரனையின்றி ஏதும் நடவாது என்பதும் சித்தர்களின் கூற்று. இந்த மகா சக்தியின் அருளினை ஒரு யந்திரத்தின் மூலம் ஒருவர் பெற முடியுமானால் எத்தனை ஆச்சர்யமான விஷயம்.
அத்தகைய யந்திரம் பற்றி அகத்தியர் தனது அகத்தியர் பரிபூரணம் என்னும் நூலில் விளக்கியிருக்கிறார்.
தெரிசிக்க இன்னமொரு கருவைக்கேளு
சிவசிவா புவனைபதி னாறுவீட்டில்
தெரிசிக்க வேணுமென்னா லந்தவீட்டில்
செம்மையுடன் ஓம்கிலி சிறிறீங்கென்று
தெரிசிக்கப் பதினாறு வீட்டிலேதான்
சிந்தையுடன் கால்தலையாய் மாரிக்கொண்டு
தெரிசிக்க மானதமாய்ப் பூசைசெய்து
திருவேற நூற்றெட்டு உருவேசெய்யே.
- அகத்தியர்.
உருவேத்திப் புவனையுட சக்கரத்தை
உண்மையுடன் மானிடர்க்குக் காட்டினாக்கால்
கருவொத்து நின்றுபல வியாதியெல்லாம்
கண்காணா தோடுமடா கருத்தாய்ப்பாரு
வருவித்த வஞ்சனைகள்ள பில்லிஏவல்
மகத்தான பிசாசுகளு மதிகெட்டோடும்
திருவுத்த குருவருளால் புவனைதானும்
தீர்க்கமுட வினைத்தபடி செய்வாள்பாரே.
- அகத்தியர்.
இந்த பாடலில் உள்ள குறிப்புகளின் படி வரைந்த யந்திரத்தின் படத்தினை கீழே கொடுத்திருக்கிறேன்.
இந்த யந்திரத்தினை மூன்றங்குல (3"x3") சதுரமான தங்கத்தால் ஆன தகட்டில் கீறிக் கொள்ளவேண்டும். யந்திரங்களை கீறுவதற்கென தனித்துவமான முறைகள் இருக்கின்றன. அந்த தகவல்களை முந்தைய பதிவுகளில் பார்க்கலாம். அதன் படியே இந்த யந்திரங்கள் கீறப்பட வேண்டும்.
இவ்வாறு கீறிய தகட்டினை தாம்பாளம் ஒன்றில் பட்டுத் துணி விரித்து அதில் வைத்து செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமை நாளில், கிழக்கு முகமாய் அமர்ந்து பின் வரும் மந்திரத்தை 108 தடவைகள் செபித்திட வேண்டும்.
"ஓம் கிலி சிறி றீங்"
இவ்வாறு செபித்து முடிந்ததும் தீர்வும், தேவையும் உள்ளவர்களுக்கு இந்த யந்திரத்தினை கட்டிவிட வேண்டுமாம். அதன் பின் அவர்களைப் பீடித்த நோய்கள் அனைத்தும் நீங்குவதுடன். அவர்களின் எதிரிகள், வஞ்சகர்கள் நீங்கிவிடுவார்களாம். பில்லி, சூனியம், ஏவல் போன்றவை எது இருந்தாலும் அது அவர்களை விட்டு நீங்கிவிடுமாம். அத்துடன் புவனை அம்மனின் அருளும் கிட்டும் என்கிறார் அகத்தியர்.
நம்பிக்கையுள்ளவர்கள் குருவினை வணங்கி முயற்சித்து பலன் பெற்றிடலாம்.
அஷ்ட கணபதியும், திரு நீற்று செபமும்!
Author: மதன்
அகத்தியர் தனது “அகத்திய வாத சௌமியம்” என்னும் நூலில் அஷ்ட கணபதி பற்றியும், அந்த கணபதியை வணங்கும் மூல மந்திரம் பற்றியும், அந்த மூல மந்திரத்தை பயன் படுத்தி பல்வேறு நோய்களை தீர்க்கும் முறையினையும் அருளியிருக்கிறார்.
ஆமப்பா அஷ்டதிசைக் கரசாய்நின்ற
அருமையுள்ள புலத்தியனே சொல்லக்கேளு
ஓமப்பா ஆதிகண பதிதானொன்று
உறுதியுள்ள மகாகண பதிதானொன்று
தாமப்பா நடனகண பதிதானொன்று
சங்கையுள்ள சக்திகண பதிதானொன்று
நாமப்பா சொல்லுகிறோம் ஒன்றாய்க்கேளு
நன்மையுள்ள வாலகண பதிதானொன்றே.
ஒன்றான உச்சிட்ட கணபதிதானொன்று
உத்தமமே உக்கிரகண பதிதானொன்று
நன்றான மூலகண பதிதானொன்று
நாட்டமுட அஷ்டகண பதிக்குமொன்றாய்க்
குன்றாத மூலமந்திர சூக்ஷந்தன்னைக்
குறிப்புடனே சொல்லுகிறேன் குணமாய்க்கேளு
நின்றாடு மூலமடா ஆதிமூலம்
நிலையறிந்து ஓம்கிலி அங்உங்கெண்ணே
ஆதி கணபதி, மகா கணபதி, நடன கணபதி, சக்தி கணபதி, பால கணபதி, உச்சிட்ட கணபதி, உக்கிர கணபதி, மூல கணபதி என எட்டு வகை கணபதி இருப்பதாக கூறுகிறார்.
இந்த எட்டு வகை கணபதிக்கும் ஒரே முலமந்திரம் இருக்கிறது. அது “ஓம் கிலி அங் உங்” என்பதாகும். இந்த மூல மந்திரத்தை எவ்வாறு பயன் படுத்தி பலனடைய வேண்டும் என்பதை பின் வருமாறு விளக்குகிறார்.
எண்ணமுடன் இடதுகையால் விபூதிவைத்து
ஏகாந்த கணபதியின் சுழியைநாட்டி
சொன்னமொழி தவறாமற் சுழியைப்பார்த்து
சுத்தமுடன் ஓம்கிலி அங்உங்கென்று
தன்னகமே சாட்சியாய் இருநூற்றெட்டுத்
தான்செபித்து விபூதியைநீ கடாட்சித்தாக்கால்
முன்னிறைந்த சற்குருவின் கடாக்ஷத்தாலே
மூர்க்கமுடன் தீருகிற வியாதிகேளே.
கேளப்பா சுரமுடனே சன்னிதீரும்
கெடியான குன்மமுடன் காசந்தீரும்
சூளப்பா வஞ்சினையும் ஏவல்தீரும்
சுருக்கான பலவிஷமுந் தோஷந்தீரும்
வாளப்பா கரப்பனொடு கெர்ப்பரோகம்
வயற்றிலுள்ள திரட்சியெல்லாம் வாங்கிப்போகும்
ஆளப்பா அஷ்டதிசைக் கரசாய்நின்று
ஆதியென்ற பூரணத்தில் அழுந்தலாமே.
இடதுகையில் சிறிதளவு வீபூதியை எடுத்துக் கொண்டு அதில் கணபதியின் சுழியான “உ” என்பதை எழுதிக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த திரு நீற்றைப் பார்த்து கணபதியின் மூல மந்திரத்தை இருநூற்றி எட்டு தடவைகள் செபிக்க வேண்டும் என்கிறார்.
இப்படி செபிக்கப் பட்ட விபூதியை அணிவதால் சுரமுடன் ஜன்னியும் தீருமாம், குன்மமுடன் காசமும் தீருமாம் வஞ்சனை, ஏவல்கள் தீருமாம். அத்துடன் பலவித தோஷங்கள் நீங்குமாம். இது தவிர கரப்பான், கெர்ப நோய்கள் வயிற்றில் இருக்கும் திரட்சிகள் எல்லாம் தீரும் என்கிறார் அகத்தியர்.
ஆச்சர்யமான தகவல்தானே!
பில்லி, சூனிய ஏவலில் இருந்து காத்துக் கொள்ள...!
Author: மதன்
பில்லி,சூனியம் பற்றி சித்தரியல் கூறும் தகவல்களை பலவற்றை முந்தைய பதிவுகளில் பார்த்திருக்கிறோம். அந்த வகையில் இம் மாதிரியான மாந்திரிக முறைகளினால் பாதிக்கப் பட்டவர்கள் தங்களை காத்துக் கொள்ளும் ஒரு எளிய வழியை இன்று பார்ப்போம்.
புலிப்பாணிச் சித்தர் தனது "புலிப்பாணி வைத்தியசாரம்" என்னும் நூலில் பில்லி, சூனிய ஏவலில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளும் ஒரு வழியை பின்வருமாறு அருளியிருக்கிறார்..
போமேடா கண்டங்கத் திரியின்மூலம்
பொங்கமுடன் காட்டு சீரகத்தின்மூலம்
வாமடா கொடியறுகின் மூலம்
வகைவகைக்கு பலம்நூறு நிறுத்திக்கொண்டு
தாமடா வெவ்வேறு பாண்டத்திலிட்டுத்
தயவான தூணிநீர் தன்னை வார்த்து
நாமடா வெந்திறக்கித் தினமொன்றாக
நலமாகத் தான்வார்க்க பில்லிஏவல்போமே.
- புலிப்பாணி வைத்தியசாரம்.
கண்டங்கத்தரியின் வேர் நூறு பலமும், காட்டு சீரகத்தின் வேர் நூறு பலமும், கொடியறுகு வேர் நூறு பலமும் எடுத்துக் கொள்ள வேண்டுமாம். (பழந்தமிழர்கள் பயன்படுத்திய அளவை முறைகளுக்கு ஈடான தற்போதைய அளவை முறைகளை முந்தைய பதிவொன்றில் விளக்கியிருக்கிறேன்). இப்படி சேகரித்த வேர்களை தனித்தனியே சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் தினம் ஒரு வேராக நறுக்கி பாத்திரத்தில் போட்டு நீர் விட்டு அவிக்க வேண்டுமாம். ஆறிய பின்னர் இந்த நீரில் மூன்று நாட்கள் குளித்தால் பில்லி, சூனியம், ஏவல் போன்றவை எது இருந்தாலும் அது போய்விடும் என்கிறார்.
செய்வினைகள் , பில்லி, சூனியம் இவற்றிலிருந்து நம்மை நாமே காத்துக் கொள்வது எப்படி...
Author: மதன்
“பாரப்பா அனுமந்தன் வசியக் கட்டு
பகன்றிடுவேன் பதறாது உற்று நோக்கு
யாரப்பா அறிவார் இவரின் கூத்து
ஆணவத்தை வென்றவர்கள் அறிவாரப்பா
கூறப்பா ஓம் ஹரி ஆதி யென்று
குற்றமில்லா நாராயணா மேலும்
சேரப்பா அகிலாண்ட நாயகா வென்று
சொல்லிடுவாய் நமோ நமோ வென்றே
என்றுமே அனுதினமும் ஓதுமனுமந்தா
லெங்காபுரி ராவண சம்மாரா
சென்றுமே சஞ்சீவி ராயா மேலும்
சீக்கிரமே ஓடிவா உக்கிரமாவே ஓடிவா
வென்று நீ படித்து படித்து வரும்
விதமான பில்லி சூனியம் பேய் பிசாசும்
கொன்றுமே பிரம ராஷசிகளைப் பிடி பிடி
குலுங்க அடி அடி கட்டுக் கட்டே
கட்டிப் பின் வெட்டு வெட்டுக்
கதற கொட்டு கொட்டு நீ
முட்டி நீ தாக்கு தாக்கு ஓம்
மேலும் ஆம் மிளைய வனுமந்தா
கட்டி வா வா சுவா ஹா கூறு நீயும்
கட்டிய மந்திரந் தன்னை மைந்தா
மட்டில்லா பஞ்ச முறை சொல்லி பின்னே
மயங்காமல் நீறேடுத்து தூவு தூவே
தூவினால் திக்கெல்லாம் கட்டலாச்சு
துப்பரவாய் செய்வினையும் நீங்கலாச்சு
குறிப்புடனே யேதிராவார் எது தாழ்வே
பாவி தானாக்கால் யேது மேன்மை ”
அனுமாரின் வசியக் கட்டு மந்திரத்தை கூறுகிறேன் கேள், யார் அறிவார் இவரின் திருவிளையாட்டை ஆணவத்தை வென்றவர்கள் மட்டுமே அறிவர். இனி மந்திரத்தைக் கேள்,
“ஓம் ஹரி ஹரி ஆதி நாராயணா அகிலாண்ட நாயகா நமோ நமோ என்று அனுதினமும் ஓதும் அனுமந்தா லங்காபுரி ராவண சம்ஹாரா சஞ்சீவி ராயா ஓடிவா உக்கிரமாக ஓடிவா அடுத்து அடுத்து வரும் பில்லி சூனியம் பேய் பிசாசு பிரம்ம ராட்ஷர்களை பிடி பிடி அடி அடி கட்டு கட்டு வெட்டு வெட்டு கொட்டு கொட்டு தாக்கு தாக்கு ஓம் ஆம் இளைய ஹனுமந்தா வா வா சுவாஹா"
திருநீற்றைக் கையில் எடுத்து மேற்படி மந்திரத்தை மனதார ஐந்து தடவை ஓதி உனைச் சுற்றி தூவிக் கொண்டால் உன்னை எந்த வித எதிரிகளும் அண்ட மாட்டார்கள், யாரும் உன்னை எதுவும் செய்ய முடியாது, செய்வினைகள் , பில்லி, சூனியம், பேய், பிசாசு எதுவும் கிட்டே நெருங்காது என்கிறார் அகத்தியர்.
இத்துடன் "பாவி தானாக்கால் யேது மேன்மை" என்றும் சொல்கிறார். பாவியாக இருந்தால் எது செய்தாலும் மேன்மை இல்லை என்கிறார் அகத்தியர்.
இதை செய்யும் முன் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம்.
இல்லையேல் பலிக்காது.
செங்கடுக்காய் கற்பம்
Author: மதன்
சித்த மருத்துவத்தில் மகத்துவமான மூலிகைகளில் கடுக்காயும் ஒன்று. இது மரவகையைச் சேர்ந்தது. இந்த மரங்கள் உள்ள நிலம், அதன் தன்மை மற்றும் அதன் காயின் வடிவத்தைப் பொறுத்து கருங்கடுக்காய், செங்கடுக்காய், வரிக்கடுக்காய், பால்கடுக்காய் என பலவகைகளாக கூறப் பட்டிருக்கிறது. இவை ஒவ்வொன்றும் தனித்துவமான மருத்துவ குணங்களைக் கொண்டவை. செங்கடுக்காய் கற்பம் ஒன்றினை செய்திடும் முறையினை இன்றைய பதிவில் பார்க்க இருக்கிறோம்.
ஒரு புத்தகமாய் தொகுக்கக் கூடிய அளவில் ஏராளமான எளிய கற்பவகைகளை முந்தைய பதிவுகளில் பகிர்ந்திருக்கிறேன். ஆனால் இந்த கற்பம் கொஞ்சம் சிக்கலான, ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய சிக்கலான தயாரிப்பு முறையினைக் கொண்டது. இந்த கற்ப முறையில் விஷத்தன்மை உடைய பாதரசம் பயன்படுத்தப் படுவதால் தயவு செய்து யாரும் இதனை பரிட்சித்து பார்க்க வேண்டாமென தாழ்மையுடன் கேட்டுக் கொள்வதோடு இந்த பதிவை ஒரு தகவல் பகிர்வாக மட்டுமே அணுகிட வேண்டுகிறேன்.
இந்த கற்பமுறை அகத்தியர் அருளிய "அகத்தியர் 12000" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.
இருக்கவே புலஸ்தியனே யின்னங்கேளு
யெழிலான காயாதி கற்பஞ்சொல்வேன்
பொருக்கவே பூவுலகில் கோடிகாலம்
பொங்கமுடன் யிருப்பதற்கு வுறுதிசொல்வேன்
நிருத்தமுடன் செங்கடுக்காய் சேர்தான்ரெண்டு
நிலையான சூதமது சேர்தானொன்று
திருத்தமுடன் மலைத்தேனி லூறவைத்து
திகழுடனே பூமிதனில் புதைத்திடாயே.
புதைக்கவே மண்டலமு மூன்றுசென்றால்
புகழான செங்கடுக்காய் சூதமுண்டு
சிதைத்துமே தேனதுவும் பொசித்துமேதான்
சிறப்பான மெழுகதுபோ லாகும்பாரு
விதையான கடுக்காயுஞ் சூதஞ்சேர்ந்து
வீறான காயகற்பம் மெழுகதாச்சு
சதையான செங்கடுக்காய் கற்பமாகி
தன்மையுள்ள தேகமது கற்றூணாமே.
கல்லான தூணதுவுங் கடுக்காய் தன்னால்
காயாதி கற்பமதுக் குறுதியாச்சு
வல்லான காயமது கொண்டபோது
வரைகோடி திறைகோடி யிருக்கலாகும்
புல்லான தேகமது கற்றூண்போலே
புகழான வாசியது கீழ்நோக்காகும்
நல்லதொரு காயமதைக் கொண்டபோது
நரைதிரையும் நாயகனே யில்லைகாணே.
வருகவே தேகமது தங்கம்போலாம்
வண்மையுள்ள செங்கடுக்காய் காயகற்பம்
ஒருவருமே யறியார்க ளிந்தபாகம்
ஒகோகோ சித்துமுனி கண்டதில்லை
திருவருளின் மனோன்மணியின் கடாட்சத்தாலே
திறமான காயகற்பஞ் சொன்னேனப்பா
கருவறிந்து வுளவறிந்து கருத்தாயுண்டு
காசினியில் கோடிவரை யிருக்கலாமே.
கடுக்காயின் நடுவே உள்ள கொட்டை பகுதி நஞ்சு என்பதால் அதனை நீக்கி விட்டு சதைப் பகுதியை மட்டுமே கற்பம் தயாரிக்க பயன்படுத்த வேண்டும். இவ்வாறு சுத்தி செய்யப்பட்ட செங்கடுக்காய் இரண்டு சேர் அளவும், சுத்தி செய்யப்பட்ட பாதரசம் ஒரு சேர் அளவும் எடுத்து அவற்றை ஒரு மட்பாண்டத்தில் இட்டு அது மூழ்கும் வரையில் மலைத்தேன் விடவேண்டுமாம். பின்னர் இந்த மட் பாண்டத்தின் வாயினை நன்கு மூடி சீலைமண் செய்து நிலத்தில் புதைத்துவிட வேண்டும் என்கிறார்.
மூன்று மண்டல காலம் நிலத்தில் புதைத்து வைத்து பின்னர் எடுத்தால், பாதரசமும் கடுக்காயும் சேர்ந்து மெழுகு போல் ஆகியிருக்குமாம். இந்த மெழுகினை காயகற்ப மெழுகு என்கிறார் அகத்தியர். பின்னர் இந்த மெழுகினை உண்டு வந்தால் நரை திரை நீங்கி, உடல் கற்தூண் போல் உறுதியாக இருப்பதுடன் உலகில் இறுதிக் காலம் வரை வாழலாம் என்கிறார்.
இந்த கற்பமுறைக்கு பத்தியம் ஏதும் கூறப்படவில்லை.
ஒரு மண்டலம் - 48 நாட்கள். மூன்று மண்டலம் -144 நாட்கள்.
எட்டு பலம் = ஒரு சேர். ஒரு பலம் 35 கிராம்.
குருவைத் தேடி....
Author: மதன்
"குரு பரம்பரை" என்கிற இந்த ஒற்றை தத்துவத்தின் மீது கட்டமைந்ததுதான் சித்தரியல். இங்கே குரு ஆதியும், அந்தமும் ஆனவர். அவருக்கு மிஞ்சியது என எதுவும் இல்லை. எல்லாம் அவரால் ஆனதே, அவரன்றி ஓரணுவும் அசையாது என்பதைப் போன்ற ஆழ்ந்த சத்தியமான கருத்தாக்கங்களின் வழி நிற்பதுதான் நம் சித்தர்களின் பாரம்பரியம். இந்த அடிப்படைகளுக்கு எவரும் விதிவிலக்கில்லை. ஆதி குருவான சிவனில் துவங்கி அவருடைய அணுக்க சீடர்களின் வழி வந்தவர்களே நம் சித்தர் பெருமக்கள்.
இப்போதெல்லாம் தெருவுக்கு நாலு குருமார்கள் விளம்பர பதாகைகளோடு வலிய வந்து ஞானம் தரவும், தீட்சை கொடுக்கவும் தயாராக இருக்கின்றனர். என்ன அவர்கள் வசூலிக்கும் தட்சிணைதான் கொஞ்சம் அதிகமாய் இருக்கிறது. இத்தகைய குருமார்களின் வேடம் கலைகிற போது மட்டுமே நாம் மெய்யான குருவைப் பற்றி யோசிக்கவும், தேடவும் விழைகிறோம். மெய்யான குரு என்பவர் யார்?, அவர் எங்கிருப்பார்? அவரை எப்படித் தேடி கண்டறிவது? என்கிற கேள்வியும் குழப்பமும் நம்மில் அநேகருக்கு உண்டு.
மெய்யான குருவை கண்டறிவது என்பது ஒரு வகையான வாழ்நாள் பயணம். நம்மில் பலரும் இப்படி மெய்யான குருவை தேடிக் கொண்டிருப்பவர்கள்தாம். குருவை தேடிக் கண்டு பிடிக்கும் இந்த பயணத்தை எப்படித் துவங்குவது அல்லது எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பதில்தான் பலருக்கும் குழப்பம் வருகிறது. இதற்கு நம் முன்னோர்கள் எளிய தீர்வினை அருளியிருக்கின்றனர்.
ஆம் மிக எளியவழி. அது இதுதான் "மாதா, பிதா, குரு தெவ்யம்" . ஆம் நம் பெற்றோரே நமது முதல் குரு, இதை உணர்ந்து நம் தாய் தந்தையரை போற்றிப் பணிந்து அவர்களின் வழி நடத்துதலை ஏற்றுக் கொண்டு அதன்படி நடக்கும் போது அடுத்த கட்டமாய் மெய்யான குரு நம்மைத் தேடி நம் முன்னே வருவார். இத்தகைய வழி நடத்துதலில்தான் நாம் எதைத் தேடுகிறோமோ அதையே அடைகிறோம்.
இந்த எளிய அடிப்படையை புரிந்துணர்ந்து பயணிக்க ஒருவருக்கு மெய்யான குருவின் தரிசனம் கிடைக்கும். குரு என்றால் இருளை நீக்குபவர் என்று பொருள். மெய்யான குரு நம் அக இருளை நீக்கக் கூடியவர். இத்தகைய குருவின் உதவியால் நம்மை நாமே உணரத் துவங்கும் போது, நான் என்கிற அகந்தை அழியும் போது நம்மில் மிளிர்ந்திருக்கும் ஒப்பற்ற பரம்பொருளை நாம் உணரக்கூடியவர்களாய் ஆகி விடுகிறோம். இதனையே சித்த நிலை என்கிறோம். தெய்வ நிலை என்பதும் இதுதான்.
மாணிக்க வாசகர் மற்றும் சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் இறைவனே குருவாக நேரில் வந்து உபதேசம் செய்ததாக புராணங்கள் சொல்கின்றன. இறைவனோ உருவமற்ற சூக்குமமானவர். அப்படி சூக்குமமான நிலையிலிருந்தே ஏன் குரு உபதேசம் செய்யாமல் மனிதவடிவில் நேரில் வந்து உபதேசம் செய்தார் என்ற கேள்வி எழுவது இயற்கையே.."ஈஸ்வரோ மனுஷ்ய ரூபேணா" என்கின்றன வேதங்கள். கடவுளாக இருந்தாலும் மனித உருவில் வந்து ஆகவேண்டும் என்பதே இதன் பொருள். ஆக சூக்கும வடிவில் இருக்கும் ஒருவர் அது கடவுளாக இருந்தாலும் குருவாக இருந்து போதிக்க முடியாது என்பது இவற்றில் இருந்து தெளிவாகிறது.
சித்தரியலிலும் சூக்கும நிலையில் இருந்து எந்த குருவானவரும் போதித்ததாக எந்தவித குறிப்புகளும் கிடைக்கவில்லை. மாறாக ஜீவ சமாதி அடைந்த ஒரு சித்தர் அதிலிருந்து மீண்டுவந்து உபதேசம் செய்து பின்னர் வேறொரு இடத்தில் மீண்டும் ஜீவ சமாதியடைந்ததாக குறிப்புக்கள் காணக் கிடைக்கின்றன.
அந்தவகையில் அகத்தியர் தனது "அகத்தியர் பரிபூரணம்" என்னும் நூலில் குருவானவரை அணுகி பயனடையும் வழிவகையை விளக்குகிறார்.
பார்க்கவென்று பலநூலுந் தேடிப்பார்க்க
பக்குவங்க ளில்லையடா வயதோகொஞ்சம்
மார்க்கமுடன் கொஞ்சவய தானாலென்ன
மகத்தான சற்குருவைத் தேடிப்பார்த்து
ஏர்க்கையுட னவர்மனதுக் கேற்க வல்ல
இன்பமுடன் தயவுவர நடந்தாயானால்
தீர்க்கமுடன் சத்திசிவ தீச்சைவைத்து
செம்மையுட னுதியந்தத் திறஞ்சொல்வாரே.
திறஞ்சொல் சகலகலை சேதியெல்லாம்
தீர்க்கமுள்ள மவுனமதின் திறமுஞ் சொல்வார்
பறஞ்சொல்வார் பராபரத்தின் பதிவுஞ்சொல்வார்
பதிவாக மவுனமதின் திறமுஞ் சொல்வார்
நிறஞ்சொல்வார் நிஷ்டையுட நேர்மை சொல்வார்
நெஞ்சங்கள் தான்வலிக்க நிதியுஞ்சொல்வார்
கறஞ்சொல்வார் காயாதி கற்பஞ்சொல்வார்
கண்மணியே மனதுவரக் கருதிக்கேளே
கேழ்க்கையிலே நீசெய்த நன்மைப்பாகம்
கிருபையுடன் சொல்லிடுவா ரப்போதானும்
வாழ்க்கையுள்ள தேகமடா வலுத்துப்போகும்
மகத்தான புத்தியுமே சொலிக்க லாச்சு
தாழ்க்காமல் பதவியிலே மேவலாச்சு
சதாகாலம் போதையுமோ தரிக்கலாச்சு
காக்கையிலே கால்வலுத்து நடக்கலாச்சு
கதிரான தீபவொளி காணலாச்சு
பல நூல்களைத் தேடிப் படித்து அறிந்து பக்குவமடைய நமது வாழ்நாள் போதாது அதனால் சிறுவயது என்றாலும் கூட மகத்தான் குருவை தேடியடைந்து, அவருக்கு அணுக்கமாய் இருந்த் அவர் மனம் கோணாதபடி நடந்து கொண்டு அவரிடம் கற்கவேண்டும் என்கிறார். அப்படி இருந்தால் மட்டுமே குருவானவர் சிவ சக்தி தீட்சை தந்து, சிறப்பான ஆதி அந்த திறன் எல்லாம் உபதேசிப்பாராம். சகல கலை செய்திகள் முதல் மௌனத்தின் திறங்கள், நிஷ்டை முறைகள், காயகற்ப வகைகள் என அனைத்தும் உபதேசிப்பாராம். அத்துடன் செய்த நன்மைகள் அதனால் கிடைக்கும் பலன்கள் முதல் கர்ம வினைகள் நீக்குவதற்கான வகைகளை சொல்லி சமாதி நிலைக்கும் வழிகாட்டுவாராம் என்கிறார்.
இப்படி நேரடியாக குருவுடன் இருந்து கற்றால் குருவானவர் கருணையுடன் எல்லாம் சொல்லிதருவாராம். அதனால் காயசித்தியும், புத்திக்கூர்மையும், பேரானந்த நிலையும் கிடைப்துடன் புருவ மத்தியில் தீப ஒளியையும் காணலாமாம். என்கிறார்.
சித்தர்கள் இராச்சியம் வலைப் பதிவில் 900 பதிவு இது. அந்த வகையில் இந்த பதிவினை எல்லாம் வல்ல குருவுக்கு சமர்ப்பிப்பதில் பெருமிதம் கொள்கிறேன். இந்த பயணத்தில் இதுகாரும் என்னோடு பயணித்துக் கொண்டிருக்கும் அத்தனை நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில்வாசிக்க...
புண்களை குணமாக்கும் மேற்பூச்சு
Author: மதன்
உடலில் ஏற்படும் புண்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஒரு மருந்தினை அகத்தியர் அருளியிருக்கிறார். இதனை காயங்களின் மீது மேற் பூச்சாக பூசி வந்தால், எல்லா வகையான புண்களும் ஆறிவிடுமாம். இந்த தகவல் அகத்தியர்அருளிய "அகத்தியர் இரணவைத்தியம்" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.
முருங்கை யிலையும் முன்னையுந் தும்பையும்
அரிக்கையும் நீலியும் அத்தியும் வேம்புடன்
எருக்குஞ் செருப்படி பேயத்தி வேலியும்
கருத்த நொச்சியும் கையாந் தகரையே
வெளுத்த வெள்ளையும் வெண்ணாச்சி புங்குடன்
வளுத்த பூவும் வருந்தி வகையொன்று
இடித்த சார்படி பெள்ளெண்ணெய் தான்படி
படிக்க துத்தமும் பாங்குடன் கெந்தியே
ஆன சூதம் வெட்பாலை பரங்கியும்
வான சிந்தூரம் மாதவ லிங்கமும்
காண வேவடிக் கடுகு பதந்தனில்
ஏன் மாயெடு நேர மறிந்தரோ
வருந்திச் சூலை வரும்வெடி போக்கிடும்
புருந்தித் தொண்டையும் போல்சதை சிங்கியும்
அரிகி ரந்தியும் ஆறாத புண்களும்
பரிப ரங்கியும் குட்டமும் பாறுமே
முருங்கை இலைச்சாறு, தும்பை இலைச்சாறு, அத்திப்பால், எருக்கிலைச்சாறு, பேயத்திச்சாறு, கருநொச்சி இலைச்சாறு, வெண்நொச்சி இலைச்சாறு, புங்கம்பூச்சாறு, முன்னை இலைச்சாறு, அவுரி இலைச்சாறு, வேம்பு இலைச்சாறு, செருப்படை இலைச்சாறு, உத்தாமணிச்சாறு, கரிசாலைச்சாறு, புங்கம்பால், நல்லெண்ணெய், பாதரசம், படிக்காரம், பரங்கிப்பட்டை, வெள்ளைப் பாஷாணம், கெந்தகம், வெட்பாலை அரிசி, லிங்க சிந்தூரம், ஆகியவற்றைச் வகைக்கு அரைப்பலம் வீதம் சேகரித்துக் கோள்ள வேண்டுமாம்.
இவற்றில் படிக்காரம், பரங்கிப்பட்டை, வெள்ளைப் பாஷாணம், கெந்தகம், வெட்பாலை அரிசி, லிங்க சிந்தூரம், ஆகியவற்றை நன்கு பொடித்து ஒரு பழைய மட்பாண்டத்தில் சேகரித்துக்கொள்ள வேண்டுமாம் இவற்றுடன் மற்றைய பொருட்களையும் சேர்த்துக் கலந்து, மட்பாண்டத்தை அடுப்பிலேற்றி கடுகுத்திரள் பக்குவத்தில் காய்ச்சி வடித்து சேமித்துக் கொள்ள வேண்டுமாம்.
இந்த கரைசலில் தேவைக்கேற்ப, வெடிசூலை, சிங்கிப் புண், அரிகிரந்தி போன்ற ஆறாத ரணங்கள், பரங்கிப்புண், குஷ்டரணம் போன்ற சகலவித ரணங்களும் மேற்பூச்சாக பூசிவர குணமாகும் என்கிறார்.
அகத்தியர் அருளிய வெள்ளி பற்பம் (பஸ்பம்)
Author: மதன்
பற்பம் அல்லது பஸ்பம் என்பது சாம்பலைக் குறிக்கும். சித்த மருத்துவத்தில் தேவையான சரக்குகளை தனியாகவோ அல்லது சேர்த்தோ புடம் போட்டோ, வறுத்தோ, எரித்தோ, ஊதியோ வெளுக்கும் படி சாம்பலாக செய்வதையே பற்பம் என்கிறோம். இந்த பற்பங்கள் பல வகைப் படும். தேவைக்கு ஏற்ப உலோகங்களை அல்லது நவரத்தினங்களைக் கொண்டு பற்பங்களை தயாரிக்கும் முறையினை நமது முன்னோர்கள் அருளியிருக்கின்றனர்.
வெள்ளியை பற்பமாக்கும் ஒரு முறையினை முன்னரே இங்கேபகிர்ந்திருக்கிறேன். புதியவர்கள் இந்த இணைப்பில் சென்று அதனை வாசிக்கலாம். இந்த பற்பங்கள் உடல் வலிவையும், பொலிவையும் மேம்படுத்தக் கூடியவை. அந்த வகையில் அகத்தியர் அருளிய வெள்ளி பற்பம் ஒன்றினைப் பற்றி இன்றைய பதிவில் பார்ப்போம்.
இந்த தகவல் அகத்தியர் அருளிய "அகத்தியர் வைத்திய ரத்தின சுருக்கம்" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.
கேளப்பா வெள்ளியது தகடுதட்டிக்
கெடியான ரசபற்பம் வங்கபற்பம்
நாளப்பா நாகமொடு மூன்றுநேராய்
நலமாக நீரா லரைத்துக்கொண்டு
கேளப்பா வெள்ளிக்குச் சமனாய்ப்போடு
விருதான ரவியுலர்த்திச் சீலைசெய்து
சூளப்பா சுண்ணாம்புக்குள்ளே வைத்து
துடியாக முழப்புடத்தில் தூக்கிவாங்கே.
வாங்கியதோர் பற்பமதைப் பதனம்பண்ணு
வகையாக பணவெடைதான் தேனிற்கொள்ள
தேங்கிதோர் கல்லடைப்புச் சதையடைப்புத்
தீராத திரிச்சுரங்கள் தீரும்தீரும்
ஏங்கியதோர் காசமோ டிளைப்புந் தீரும்
மிளைக்குமே லிங்கப்புற்று யோனிப்புற்று
பாங்கியே கிரந்தி யரிமேகமெல்லாம்
பறக்குமடா வின்னமொரு பற்பங்கேளே.
வெள்ளியை கெட்டியான தகடாக மாற்றிக் கொள்ள வேண்டும். ரச பற்பம், வங்க பற்பம், நாகபற்பம் இவை மூன்றையும் நீர் விட்டு நன்கு அரைத்து, அந்த கலவையை கெட்டியாக அடித்த வெள்ளித் தகட்டின் இருபுறமும் சமமாக பூசி வெய்யிலில் உலர வைத்து எடுத்துக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அதற்கு சுண்ணாம்புச் சீலை செய்து, சுண்ணாம்புக் குகைக்குள் வைத்து முழப் புடம் போட்டால் நல்ல பதமான வெள்ளி பற்பம் கிடைக்கும். இதனை சேமித்துக் கொள்ள வேண்டும் என்கிறார்.
இந்த பற்பத்தில் பண எடை அளவு எடுத்து தேனில் நன்கு குழைத்து உண்டு வந்தால் கல்லடைப்பு, சதையடைப்பு, வாத, பித்த சிலேத்தும சுரங்கள், காசம், ஈளை, இளைப்பு, லிங்கப்புற்று, யோனிப் புற்று, கிரந்தி, அரிமேகம் ஆகியவை நீங்கும் என்கிறார்.
இந்த மருத்துவ முறைக்கு பத்தியம் ஏதும் கூறப்படவில்லை.
விஷக் கடி வைத்தியம்
Author: மதன்
பாம்பு, தேள், பூரான், தேனீக்கள், வண்டுகள், எலி போன்ற உயிரினங்கள் தீண்டினால் நம் உடலில் பரவும் விஷத்தை முறிக்கவும், அதன் தீவிரத்தைக் குறைக்கவும் பல்வேறு வகயான எளிய தீர்வுகளை நம் முன்னோர்கள் கைக் கொண்டிருந்தனர். இது தொடர்பில் முன்னரே சில தகவல்களை இங்கு பகிர்ந்திருக்கிறேன். அந்த வரிசையின் இன்று அகத்தியர் அருளிய மருந்தொன்றினைப் பற்றி பார்ப்போம்.
இந்த தகவல் அகத்தியர் அருளிய "அகத்தியர் பரிபூரணம்" என்னும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது. அந்த பாடல் பின்வருமாறு....
வேமப்பா விஷங்களுக்கும் குழம்பு கேளு
வேப்பம்முத்து ரசகெந்திது ருக வெள்ளை
வெள்லையோடு மனோசிலையும்பெருங் காயமேழு
மேன்மையாய் வகைக்கரைக்க ழஞ்சு கூட்டி
தள்ளையென்ற நேர்வாளஞ் சுத்தி செய்து
தருவாகக் கழஞ்சதுவு மேழு மொன்றாய்
வள்ளவே கல்வத்திலிட் டெருக் கம்பால்
மாட்டியரை ஒருசாமமெ ழுகு போல
துள்ளவே பின்புநிம்ப நெய்தான் விட்டுத்
துருசாக வொருசாமம ரைத்துக் கேளே.
அரைத்துமதைக் கொம்புச்சிமிழ் தன்னில் வைத்து
அப்பனே விஷந்தீண்டி வந்த பேர்க்கு
திறத்துடனே பயிறளவுவெற்றி லையில் லீய்ந்து
தீர்க்கமுடன் கடிவாயிற் கொஞ்சம் பூச
பறந்துவிடுஞ் சகலவிஷம் போகு மென்று
பரமனது வடமொழிநூல் பாக மப்பா
உரைத்துவிட்டேன் பத்தியத்தான்ப சுமோ ராகும்
உத்தமனே சந்நிக்குக லிக்கங் கேளே.
வேப்பம் முத்து, ரசம், கெந்தகம், துருசு, வெள்ளைப் பாடாணம், மனோசிலை, பெருங்காயம், ஆகியவற்றை வகைக்கு அரைக்கழஞ்சு அளவு எடுத்து, அதனுடன் சுத்தி செய்த நேர்வாளம் ஏழு கழஞ்சு சேர்த்து, இந்த கலவையை கல்வத்திலிட்டு, எருக்கம்பால் சேர்த்து ஒரு சாம நேரம் அரைக்க கலவையானது மெழுகு பதத்தில் வருமாம். அப்போது அதில் வேப்பெண்ணெய் விட்டு மேலும் ஒரு சாமம் அரைத்து எடுத்த மருந்தினை, கொம்பினால் ஆன சிமிழில் சேகரித்துக் கொள்ள வேண்டுமாம். இந்த மருந்து கெட்டியான மெழுகு பதத்தில் இருக்கும்.
எந்தவகையான விஷக் கடியாக இருந்தாலும், நாம் சேமித்து வைத்த மெழுகில் இருந்து பயறு அளவு எடுத்து அதனை வெற்றிலையில் வைத்து மடித்து பாதிக்கப் பட்டவரிடம் உண்னக் கொடுக்க வேண்டுமாம். பிறகு அந்த மெழுகில் இருந்து சிறிதளவு எடுத்து கடிவாயிலும் பூசிவிட உடலில் இருந்த விஷங்கள் எல்லாம் நீங்கிவிடும் என்கிறார்.
ஆச்சர்யமான தகவல்தானே!
இதற்கு பத்தியமாக மருந்துண்ணும் நாளில் பசு மோரை நீக்க வேண்டும் என்கிறார்.
ஆர்வமும், வாய்ப்பும் உள்ளவர்கள், காலத்தே மறைந்து போன இது போன்ற நம் மருத்துவ முறைகளைப் பற்றி மேலதிக ஆய்வு செய்திடலாம்.
அரு மருந்தாகும் தூதுவளை லேகியம்
Author: மதன்
சமஸ்கிருத மொழியில் உள்ள அவலேஹம் என்கிற சொல்லே நாளடைவில் மருவி 'லேகியம்' என்றானது. தூய தமிழில் இதனை இளகல் அல்லது இளகம் என்று அழைப்பதே சரியானது. பொதுவில் லேகியம் என்பவை தண்ணீரைப் போலவோ, அல்லது குழம்பு போலவோ இல்லாமல் கெட்டியான நீர்ம நிலையில் இருக்கும். நோய் தீர்க்கும் இந்த இளகங்களைப் பற்றி நம் முன்னோர்கள் அருளிய பல்வேறு முறைகளை முன்னரே பகிர்ந்திருக்கிறேன். அந்த வரிசையில் இன்று தூதுவளை லேகியம் பற்றி பார்ப்போம்.
அகத்தியர் அருளிய "அகத்தியர் பரிபூரணம்" என்னும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்ட தகவல் இது. பாடல் பின்வருமாறு....
பூரணமா மின்னமொரு லேகி யங்கேள்
புலத்தியனே நானூற்றில்பு னித மாக
காரணமா முருங்கைப்பூதூது வளம் பூவும்
கணக்காக வகைக்குநால் பலம் நிறுத்து
தாரணியில் சதாவேரிக்கி ழங்கு மூணு
தருவான நன்னாரிவேர்ப லமி ரண்டு
காரணமாய் நிலப்பனையுநெ ருஞ்சி முள்ளும்
கருவாக வகைக்கொருப லமாய்க் கூட்டே.
கூட்டியே சூரணித்துப்ப சுவின் பால்தான்
குறுணியிலே போட்டுமேகு ழம்பு போலே
காட்டியே வற்றிவரும் போது மைந்தா
தருவான சீனிபலம்பண்ணி ரெண்டும் போட்டு
காட்டியே கிளரயிலேப சுவி நெய்தான்
நலமாகப் படியரைத்தேனு ழக்கு விட்டு
கெட்டியாய் லேகியம்போற் கிண்டி வாங்கிக்
கிருபையுள்ள கணபதியை வணங்கே
செய்துமே தான்றிக்காயளவு கொள்ளத்
தீருகிற வியாதிதனைத் திறமாய்க் கேளு
எய்துகின்ற பிரமியமு மேக நோயும்
இன்பமுள்ள எலும்புருக்கிப்பி ரமே கந்தான்
பெய்துமே மண்டலத்திற் றீர்ந்து தானும்
பெலமுண்டா யிந்திரியபெ லமுண் டாகும்
செய்துமே லேகியத்தில்மே கநோ யெல்லாந்
தீருமடா பத்தியமோ யில்லை பாரே.
முருங்கைப்பூ, தூதுவளைப்பூ ஆகியவற்றில் தலா நான்கு பலம் எடுத்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும். (ஒரு பலம் என்பது தற்போதைய அளவைகளின் படி சுமார் 35 கிராம் ஆகும். ). இந்த பூக்களுடன் தண்ணீர்விட்டான் கிழங்கு மூன்று பலம், நன்னாரிவேர் இரண்டுபலம், நிலப்பனைகிழங்கு, நெருஞ்சிமுள் ஆகியவைகளை தலா ஒரு பலம் சேர்த்து கொள்ள வேண்டுமாம். அந்த கலவையைச் சுத்தி செய்து இடித்துச் சூரணமாக செய்து கொள்ள வேண்டும் என்கிறார்.
இந்த சூரணத்துடன், ஒரு குறுணி அளவு பசும்பால் கலந்து அடுப்பில் வைத்து எரித்தால் பால் கொதித்து குழம்புபோல் நன்கு சுண்டி வருமாம். அந்த சமயத்தில் அதில் பன்னிரெண்டு பலம் சீனி சர்க்கரையும், அரைப்படி பசுநெய்யும், ஓர் உழக்கு தேனையும் சேர்த்துக் நன்கு கிளறி எடுத்து சேமித்துக் கொள்ள வேண்டுமாம்.
சேமித்த லேகியத்தில் தான்றிக் காயளவு எடுத்து அதனை காலை மாலை என இரு வேளையும் தொடர்ந்து நாற்பத்தி எட்டு நாட்கள் உண்டுவர பிரமியம், எலும்புருக்கி, பிரமேகம், மேக நோய்கள் அனைத்தும் குணமாகுமாம். அத்துடன் இந்திரிய பலமும் உண்டாகும் என்கிறார் அகத்தியர்.
* பிரமியம் என்பது விந்து அடைப்பு, விந்து ஒழுக்கு , விந்து நீர்த்துப் போதல் போன்ற குறைபாடுகளைக் குறிக்கும் பொதுச் சொல்.
* பிரமேகம் என்பது பல்வேறு உடல் நோவுகளைக் குறிக்கும் பொதுச் சொல். சித்த மருத்துவத்தில் 21 வகையான பிரமேகம் உள்ளது.
* மேக நோய் என்பது "சிபிலிஸ்" எனும் பாலியல் நோயைக் குறிக்கும்.
* சூரணம் என்பது ஒருவகையான மருந்து தயாரிக்கும் முறை. தேவையான மூலிகை சரக்குகளை சுத்தம் செய்து அவற்றை வெயிலில் நன்கு உலர்த்தி அல்லது நெருப்பில் வறுத்து பின்னர் இடித்து சலித்து எடுப்பதையே சூரணமாக்குதல் என்கின்றனர்.
குறிப்பு: பதிவுகளை தட்டச்சுவதில் உள்ளம் சிரமம் காரணமாகவே தற்போது சிறிய பதிவுகளாய் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். அடுத்த சில வாரங்களுக்கு இந்த நிலையே நீடிக்கும் என்பதால் தற்போதைக்கு மின் நூல்களையோ, நெடுந்தொடர்களையோ பகிர இயலாத நிலையில் இருக்கிறேன். தாமதத்திற்கு பொறுத்தருள வேண்டுகிறேன்.
இது வரை பகிர்ந்த மின்னூல்களை இங்கே தரவிறக்கிக் கொள்ளலாம்.
வசிய திருநீறு...
Author: மதன்
கோவிலில் இறைவனை தரிசித்த பிறகும், பெரியவர்கள், ஆன்றோர்களை சந்தித்து விடை பெறும்போதும் அவர்கள் விபூதி வழங்கி ஆசிர்வதிப்பது காலம் காலமாய் நடைமுறையில் இருக்கும் ஒரு வழக்கம். கால ஓட்டத்தில் பெரியவர்களிடம் விபூதி வாங்கிடும் பழக்கம் அருகி விட்டாலும், கோவிலில் இந்த மரபு இன்றும் வழக்கில் இருக்கிறது. இந்த விபூதியானது அதனை அணிந்து கொள்கிறவர்களை தீவினைகளில் இருந்து காப்பாற்றும் கவசமாய் இருப்பதுடன், செல்வத்தையும் தருகிறது. இது பொது விதியாக இருந்தாலும், சிலர் தங்கள் தேவைகளை, லட்சியங்களை நிறைவேற்றிடும் பொருட்டு வசிய விபூதியை உருவாக்கி பயன் படுத்தி இருக்கின்றனர்.
இத்தகைய வசிய திருநீற்றைத் தயாரிக்கும் பல்வேறு முறைகளை சித்தர்களின் நூல்களிலும், மலையாள மாந்திரிக நூல்களிலும் காணமுடிகிறது. அப்படியான ஒரு வசிய திருநீற்றினை தயாரிக்கும் முறையினை இன்றைய பதிவில் பகிர்ந்து கொள்கிறேன். அகத்தியரின் "அகத்தியர் பரிபூரணம்" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்ட தகவல் இது. இதன் உண்மைத் தன்மை ஆய்வுக்கும் விவாதத்திற்கும் உரியது. எனவே இதனை ஒரு தகவல் பகிர்வாக மட்டும் அணுகிட வேண்டுகிறேன்..
கிருபையுள்ள புலத்தியனேவ சிய மொன்று
கெணிதமுடன் சொல்லுகிறே னன்றாய் கேளு
துருவமுள்ள வுருத்திரபூமி யிலே சென்று
சுகமாக வெந்தஅஸ்திநீயெ டுத்து மைந்தா
அருவமுள்ள அஸ்தியுடன் விஷ்ணு மூலி
ஆதிசத்தி தன்னுடைய வேருங் கூட்டிக்
கருவையினிச் சொல்லுகிறேன்க லசப் பாலாற்
கருணையுடன் றானரைத்தே யுண்டை செய்யே.
செய்யடா உருண்டைதனையு லர வைத்துச்
செம்மையுட னெருவடுக்கிப் புடத்தைப்போடு
மெய்யடா சொல்லுகிறே நீறிப் போகும்
வேகாந்த மானதொரு நீற்றை வாங்கி
வையடா சவ்வாதுடனேபு னுகு சேர்த்து
மார்க்கமுடன் அங்கெனவே லட்ச மோதி
மையமென்ற நெற்றியிலேவி பூதி பூசி
மார்க்கமுடன் அரசரிடஞ் சென்று பாரே.
சென்றுமிக நின்றுடனேயி ராச மோகம்
சிவசிவா செகமோகம்ஸ்ரீவ சிய மாகும்
அண்டர் பிரானருள் பெருகிவ சிய முண்டாம்
அப்பனே ஓம்கிலியு றீயு மென்று
பண்டுபோலி லட்சமுரு வேற்றிப் பின்னர்
பாலகனே லலாடமிசைப் பூசிச் சென்றால்
தொண்டரென்றே சத்துருக்கள்வ ணங்கு வார்கள்
துஷ்டனென்ற மிருகமெல்லாம்வ சிய மாமே.
ஆதி குருவான சிவன் விரும்பி வசிக்கும் பூமியான இடுகாட்டிற்குச் சென்று எரியும் சுடலையில் இருந்து நன்கு வெந்த அஸ்தியை சேகரித்து எடுத்து வந்து, அதன் எடைக்கு சம அளவில் விஷ்ணு கிரந்தியின் வேரினைச் சேர்த்து கல்வத்தில் இட்டு அதனோடு தாய்ப்பால் சேர்த்து நன்கு அரைத்து உருண்டையாக செய்து கொள்ள வேண்டுமாம். இந்த உருண்டைகளை சூரிய ஒளியில் நன்கு உலரவிட்டு எடுத்து நான்கு வரட்டிகளைக் கொண்டு புடமிட வேண்டுமாம். இதனால் அந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும் என்கிறார். இந்த திருநீற்றுடன் சவ்வாதும், புனுகும் சேர்த்து ஒரு சிமிழில் சேகரித்துக் கொள்ள வேண்டுமாம்.
இந்த திருநீற்றில் இருந்து சிறிதளவு எடுத்து கைகளில் வைத்துக் கொண்டு "அங்" என்று லட்சம் உரு செபித்து பின்னர் அதனை நெற்றியில் பூசிக்கொண்டு அரசரிடம் சென்றால் அரசர்கள் வசியமாவார்களாம். இது இராஜவசியம் என்றும் அத்துடன் செக மோகமும் பெண்வசியமும் உண்டாகும் என்கிறார்.
மேலும் இந்த திருநீற்றில் இருந்து சிறிதளவு எடுத்து கைகளில் வைத்துக் கொண்டு "ஓம்கிலிறீ" என்று லட்சம் உரு ஓதி நெற்றியில் விபூதியைப் பூசிக் கொள்ள வேண்டுமாம் அப்போது எதிரிகளும் வணங்கும் நிலை உண்டாவதுடன் தீங்கு செய்யும் விலங்குகளும் வசியமாகும் என்கிறார்.
ஈரேழு பதினாலு உலகங்களையும் பார்த்திட....!
Author: மதன்
"ஈரேழு பதினாலுலோகம்" என்றொரு சொற்றொடரை நம்மில் பலரும் கேள்விப் பட்டிருப்போம். இந்து வேத மரபில் மொத்தம் பதின்நான்கு உலகங்கள் இருப்பதாக நம்பப் படுகிறது. அவை நாம் வாழும் இந்த பூமி என்கிற பூலோகத்தின் மேலும் கீழுமாய் அமைந்திருக்கின்றன. பூமியின் மேலே ஆறு உலகங்களும், பூமியின் கீழே ஏழு உலகங்களும் இருக்கின்றனவாம்.
இந்த பதின்நான்கு உலகங்களையும் நம் கண்களால் பார்ப்பது எப்படி என்கிற தகவலைத்தான் இன்றைய பதிவில் பார்க்க இருக்கிறோம். இந்த தகவல் அகத்தியர் அருளிய "அகத்தியர் பூரணகாவியம்" எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.
அகத்தியர் அருளிய முறையினை பார்ப்பதற்கு முன்னர் இந்த ஈரேழு பதின்நான்கு உலகம் பற்றி சுருக்கமாய் பார்த்துவிடுவோம்.
நாம் வாழும் இந்த பூமியின் மேலே உள்ள ஆறு உலகங்கள் பின்வருமாறு....
சத்யலோகம்
தபோலோகம்
ஜனோலோகம்
மஹர்லோகம்
சுவர்லோகம்
புவர்லோகம்
இந்த ஆறு உலகங்களின் கீழேதான் ஏழாவதாக நாம் வாழும் இந்த "பூலோகம்" அமைந்திருக்கிறது. இனி பூமிக்குக் கீழே உள்ள ஏழு உலகங்கள் பின்வருமாறு...
அதலலோகம்
விதலலோகம்
சுதலலோகம்
தலாதலலோகம்
மகாதலலோகம்
ரஸாதலலோகம்
பாதாளலோகம்
இந்த பதின்நான்கு உலகங்களைப் பற்றியும், அதன் தலைவர்கள், அங்கு வாழ்கிறவர்கள், அந்த உலகத்தின் தன்மை என தனித்துவமான வரையறைகள் கூறப் பட்டிருக்கின்றன. இதன் படி பூமியின் மேல் உள்ள ஆறு உலகங்கள் நன்மை தரும் உயர் நிலை உலகங்களாகவும், பூமியின் கீழ் உள்ள ஏழு உலகங்கள் தீய சக்திகளின் குறியீடாகவும் அமைந்திருக்கிறது.
அதாவது மேல் நிலையில் உள்ள சத்யலோகம் படைப்புக் கடவுளான பிரம்மாவின் உலகமாகவும், கீழ் நிலையில் உள்ள பாதாள உலகம் வாசுகி என்கிற பாம்பின் உலகமாகவும் குறிப்பிடப் பட்டிருக்கிறது.
மிகவும் விரிவாக விளக்கிட வேண்டிய ஒன்றினைப் பற்றி இயன்ற வரை சுருக்கமாய் பகிர்ந்திருக்கிறேன். ஏனெனில் நம் பதிவின் நோக்கம் இவைகளை அலசுவது இல்லை. இந்த உலகங்களை வெறும் கண்களினால் பார்க்கும் அகத்தியரின் வழிமுறை ஒன்றினை பகிர்வதே இந்த பதிவின் நோக்கம்.
பதின்நான்கு உலகங்களைப் பற்றிய தகவல்களை தேரையர் உள்ளிட்ட பல்வேறு சித்தர் பெருமக்கள் தங்கள் பாடல்களின் ஊடே பகிர்ந்திருக்கின்றனர். அகத்தியர் தனது "அகத்தியர் பூரணகாவியம்" என்னும் நூலில் சத்தியலோகம் முதல் கீழ் உலகமான பாதாள உலகம் வரை நம் கண்களினால் பார்க்கும் சக்தியைத் தரும் ஒரு மையினைப் பற்றி பின்வருமாறு விளக்கியிருக்கிறார்.
ஆமப்பா யின்னமொரு வசியஞ்சொல்வேன்
அண்டரண்ட பதங்களெல்லா மங்கேகாணும்
நாமப்பா சொல்லுகிறோம் புலத்தியாகேள்
நல்லகரு ஆமையிலே முன்றானாமை
ஓமப்பா குருவருளால் கண்டுதேறி
உறுதியுடன் மனதறிவால் கருவைவாங்கி
தாமப்பா சிவந்தபட்டு தன்னால்சுத்தி
சங்கையுடன் நெய்துவைத்த தீபமேற்றே.
ஏற்றிநன்றாய் கருகிநின்ற கருவைப்பார்த்து
யின்பமுடன் தானெடுத்து கல்வத்திட்டு
பார்த்திபனே காரெள்ளுத் தயிலத்தாலே
பதிவாகத் தானாட்டி வழித்துக்கொண்டு
போற்றியந்த மைக்கினிகர் சவ்வாதுசேர்த்து
பத்தியுடன் தானிருந்து திலர்தம்போட்டால்
நால்திசையும் வெகுதூரங் கண்ணோட்டம்பார்
நன்மையுடன் மேல்கீழும் தன்றாய்ப்பாரே.
பார்க்கயிலே அண்டவரை நன்றாய்க்காணும்
பத்தியுடன் பூமியில் பாதாளந்தோணும்
ஏற்கவே பாதாளந் தன்னைக்காணில்
இருநிதியு மொருநிதியா யேகந்தோணுங்
காக்கவே பெருநிதியை யகலத்தள்ளி
கயிலாச பூரணமாய் நிதியைத்தேடு
மார்க்கமுடன் கயிலாச நிதியைத்தேட
வந்துதடா அஷ்டாங்க வளமைதானே.
கருஆமையில் முன்றானாமை என்றொரு வகை இருக்கிறதாம். அதை குருவருளால் கண்டு அதன் கருவை எடுத்துக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அந்தக் கருவை சிவப்பு பட்டுத் துணியால் சுற்றி திரியாக செய்து கொள்ள வேண்டுமாம். அந்தத் திரியை விளக்கில் வைத்து நெய்விட
தீபமேற்ற வேண்டுமாம். தீபமேற்றினால் திரி எரிந்து அந்தக் கருவானது கருகி இருக்குமாம்.
அப்போது அதை எடுத்து கல்வத்தில் போட்டு காரெள்ளுத் தைலம் சேர்த்து கடைந்து எடுத்தால் மையாகுமாம். அந்த மைக்கு சம எடை சவ்வாது சேர்த்து திலகமாக இட்டு நான்கு திசையையும் சுற்றிப் பார்த்தால் வெகு தூரம் வரை தெளிவாய் தெரியுமாம்.
அப்படியே மேலும் கீழும் நன்றாகப் பார்த்தால் மேலே பார்க்கும் போது அண்டம் வரையும், கீழே பார்க்கும் போது பாதாளம் வரையும் தெளிவாகத் தென்படுமாம். அப்போது அங்கே பாதாளத்தில் சங்கநிதி, பதுமநிதி என்னும் இரண்டு நிதிகளும் ஒன்றாகி பெருநிதியாகத் தோன்றுமாம். அப்போது அவற்றையெல்லாம் ஒதுக்கி விட்டு பூரணத்தில் மனதை நிலை நிறுத்தி கைலாய நிதியைத் தேட, அட்டாங்க வளமைகள் அனைத்தும் வந்து சேரும் என்கிறார் அகத்தியர்.
ஆச்சர்யமான தகவல்தானே!, வேறொரு தகவலுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.
அஞ்சனா தேவியின் அருளைத் தரும் மந்திரம்.
Author: மதன்
சித்தர் பெருமக்கள் வணங்கிய ஒரு பெண் தெய்வத்தைப் பற்றியும், அந்த தெய்வத்தின் அருளை பெறுவதற்கான மந்திரம் மற்றும் தந்திரத்தை இன்றைய பதிவில் பார்க்க இருக்கிறோம். சித்த மரபில் வாலை என்கிற பெண் தெய்வ வழிபாடு பற்றி முந்தைய பதிவுகளில் பார்த்திருக்கிறோம். வாலை தெய்வம் எத்தனை சக்தி வாய்ந்தது, அதன் மகத்துவம் பற்றிய தகவல்களை இந்த இணைப்பில் சென்று வாசிக்கலாம்.
இன்று நாம் பார்க்க இருக்கும் தெய்வத்தின் பெயர் "அஞ்சனா தேவி" அல்லது "அஞ்சனை தேவி". இந்த தெய்வத்தைப் பற்றிய தகவல்கள் என பார்த்தால் அரிதாய் ஒன்றிரண்டு குறிப்புகளே எனக்குக் கிடைத்திருக்கிறது. ஆரம்பத்தில் இந்த தெய்வம் வாயு புத்திரனான ஆஞ்சனேயரின் தாயாராக இருக்கும் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் அதற்கான சாத்தியங்கள் குறைவு என்பதாலும், அத்தகைய குறிப்புகள் வேறெங்கும் இல்லாததினாலும் இந்த தெய்வம் வாலையைப் போல தனித்துவமான தன்மைகளையும், பண்புகளையும் கொண்டவளாய் இருக்க வேண்டும்.
சித்தர் பெருமக்களைப் பொறுத்தவரையில் அவர்களின் படைப்புகளின் ஊடே புராணங்களுக்கும், மிகைப் படுத்திய கதைகளுக்கும் இடமில்லை. எனது சிறிய அனுபவத்தில் நான் பார்த்த வரையில் அவர்களின் ஒவ்வொரு சொல்லுக்கும், செயலுக்கும் பின்னால் ஏதோ ஒரு காரணமோ, காரியமோதான் இருக்கிறது. அந்த வகையில் இந்த அஞ்சனா தேவியின் அருளை பெறுவதற்கான மந்திரத்தையும், அதை செயலாக்கும் நுட்பத்தையும் அகத்தியர் தனது "அகத்தியர் 12000" எனும் நூலில் அருளியிருக்கிறார். அந்த பாடல்கள் பின் வருமாறு.....
ஆச்சப்பா இன்னமொரு மார்க்கங்கேளு
அருளான அஞ்சனா தேவிமூலம்
பேச்சப்பா பேசாத மவுனமூலம்
பிலமான புலத்தியனே சொல்லக்கேளு
மூச்சப்பா நிறைந்தவெளி மூலாதாரம்
முத்திதரும் ஆதாரத்தில் மனக்கண்சாத்தி
காச்சப்பா ஓங்கிலியும் ரங்ரங்கென்று
கண்ணார நூறுருவிற் காணலாமே.
காணுகிற விதமென்ன மைந்தாகேளு
கற்பூர தீபஒளி சோதிபோலே
தோணுகிற போதுமனம் ஒன்றாய்நின்று
சோதியெனு மஞ்சனா தேவியென்று
பேணியவள் பாதமதைசிர மேல்கொண்டு
பிலமாக மானதாய்ப் பூசைப்பண்ணி
ஊணிமன மொன்றாக நீறுசாத்தி
உத்தமனே நித்தியமுந் தியானம்பண்ணே.
பண்ணப்பா நித்தியமுந் தியானம்பண்ண
பதிவான இருதயமே வாசமாகி
முண்ணப்பா நிறைந்ததிரு சோதிபோலே
முக்யமுடன் காணுமந்த சோதிதன்னால்
கண்ணப்பா கண்ணுமன மொன்றாய்நின்று
காணுதடா அண்டபதங் கண்ணிநேரே
உண்ணிப்பா உன்னியந்த விண்ணுமண்ணும்
ஊடுருவிப் பார்த்ததைநீ ஒண்டிக்கேளே.
ஒண்டுமிடந் தனையறிந்து அண்டத்தேகி
ஊசாடு மஞ்சனா தேவிமூலம்
நின்றுமன தறிவாலே தியானம்பண்ணி
நேமமுடன் விபூதியைநீ தரித்துக்கொண்டு
சென்றுஅந்த ஆகாச வெளியைப்பாரு
திருவான அஞ்சனா தேவிதன்னால்
கண்டுகொள்வாய் பகல்காலம் நட்சத்திரங்கள்
காணுமடா கண்னறிந்து கண்ணால்பாரே.
கண்ணாரப் பூமியைநீ நன்றாய்ப்பார்த்து
கருணைவிழிப் பார்வையினால் உண்ணிப்பாரு
பொன்னான பூமிநடுப் பாதளத்தில்
பொருளான வெகுநிதிகள் பொருந்தக்காணும்
முன்னோர்கள் வைத்தநிதி கண்டாயானால்
மோகமென்ற ஆசையைநீ வைக்கவேண்டாம்
மெய்ஞானி செய்தவத்தை நன்றாய்ப்பாரு
மெஞ்ஞான அஞ்சனா தேவிதானே.
மூலாதாரத்தில் மனதை நிறுத்தி, அஞ்சனா தேவியின் மூலமந்திரமான "ஓங் கிலியும் ரங்ரங்" என்ற மந்திரத்தினை நூறு தடவைகள் செபிக்க வேண்டுமாம். இவ்வாறு தொடர்ந்து செபித்து வந்தால் அஞ்சனாதேவி மனக்கண்ணில் ஜோதி வடிவாக காட்சி தருவாளாம். அப்போது நம் நெற்றியில் திருநீறு சாத்தி அந்த தேவியை வணங்கி, மனதால் பூசித்து மந்திர ஜெபத்தை தொடர வேண்டும் என்கிறார்.
இவ்வாறு தொடர்ந்து ஜெபித்து வந்தால், பகல் நேரத்தில் நட்சத்திரங்கள் தென்படுமாம், அத்துடன் பூமியில் பாதாளத்தில் முன்னோர் வைத்த நிதிகளும் தென்படுமாம். அப்போது அந்த பொருட்களின் மீது ஆசை கொள்ளாமல், மெய்ஞானிகள் செய்த தவ முறைகளை எண்ணினால், அஞ்சனா தேவியின் அருளினால் அவை யாவும் கைகூடும் என்கிறார் அகத்தியர்.
நலம் பல தரும் "சண்முகயந்திரம்"
Author: மதன்
எதிர்பாராத நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் பதிவுகளை குருவருளினால் எழுதத் துவங்கி இருக்கிறேன். அந்த வகையில் இந்தப் பதிவினை தமிழ் கடவுளாம் முருகனை பணிந்து அவரைப் பற்றிய ஒரு தகவலுடன் துவங்குகின்றேன்.
எங்கும் நிறைந்திருக்கும் இறையருளை யந்திர வடிவில் வழிபடும் வழக்கம் நம்மிடையே காலம் காலமாய் இருந்து வருகிறது. இலங்கையில் கதிர்காமம் கோவிலில் மூலவர் யந்திரமாகவே இருக்கிறார். இது பற்றிய தகவல்களை முன்னரே பகிர்ந்திருக்கிறேன். புதியவர்கள் இந்த இணைப்பில்சென்று வாசிக்கலாம்.
உலோகத் தகட்டில் கோடுகளாகவும், முக்கோணங்களாகவும் கீறப்படும் இந்த யந்திரங்கள் சூட்சுமமான பல அர்த்தங்களை தன்னகத்தே கொண்டவை.இந்த யந்திரங்களை உயிர்ப்பிக்க மந்திரங்கள் அவசியம் ஆகிறது. மந்திரங்களினால் உயிர்ப்பிக்கப் படும் யந்திரங்கள் சக்தி கேந்திரமாய் விளங்குகின்றன.யந்திரம் மற்றும் அதை உயிர்ப்பிக்கும் மந்திரம் ஆகியவற்றை அறிந்து உணர்ந்து தெளிவதையே தந்திரம் என்கிறோம்.
இத்தகைய யந்திர வழிபாட்டினைப் பற்றிய தகவல்கள் சித்தர் பெருமக்களின் பாடல்களின் ஊடே கொட்டிக் கிடக்கின்றன. அவற்றில் இருந்து சிலவற்றை ஏற்கனவே இங்கே பகிர்ந்திருக்கிறேன். அதன் தொடர்ச்சியாக இன்றைய பதிவில்அகத்தியர் அருளிய "சண்முக யந்திரம் " பற்றிய தகவலை பகிர்ந்து கொள்கிறேன். இந்தத் தகவல் "அகத்தியர் 12 000 " என்னும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.
பாரப்பா சண்முகனார் பூசைகேளு
பத்தியுடன் முக்கோணம் பதிவாய்ச் செய்து
நேரப்பா அறுகோணந் தன்னிலேதான்
நிசமான ஓம்மென்றே நன்றாய்ப்போடு
காரப்பா அதனிடையின் வெளியிலேதான்
கருணையுடன் சரவணபவா வென்றேதான்
சேரப்பா அட்சரத்தை நாட்டிக்கொண்டு
சிவசிவா அதனைச் சுற்றி ஓம்போடே.
போடப்பா சுற்றியே ஓங்காரம்போட
நன்மையுள்ள சக்கரமுஞ் சித்தியாச்சு
வீடப்பா பிலப்பதற்கு சக்கரத்தைச்சுத்தி
விருத்தமென்ற வளையமடா மூன்றுபோடு
கோடப்பா கீற நன்றாயக் கோட்டைபோட்டு
குறிப்பாக நால்வாச லிட்டுக்கேளே.
கேளப்பா வாசலிற் தேவதையைக்கேளு
கீழ்வாசலில் பிரமனுட பீஷம்போடு
தாளப்பா தென்வாசல் மாலின்பீஷம்
தயவான மேல்வாசல் ருத்திரபீஷம்
வாளப்பா வடவாசல் மயேசன்பீஷம்
மைந்தனே வாசலிலே தேவதைகள்நாட்டி
ஆளப்பா சதாசிவன்போல் நீயிருந்துகொண்டு
அன்பாகச் சக்கரத்தைப் பூசைசெய்யே.
செய்யப்பா பூசைவிதி தன்னைநன்றாய்
செப்பமுடன் செய்வதற்குத் திருவைநோக்கி
கையப்பா கால்முகங்கள் சுத்திசெய்து
கருரணைபெற விபூதியுத் தளமாய்ப்பூசி
வையப்பா சக்கரத்தைப் பீடமீதில்
மார்க்கமுடன் தானிருத்தி வைத்துமேதான்
மெய்யப்பா தூபமொடு தீபஞ்செய்து
வேதாந்தப் புருவமதில் சிம்மென்றுநில்லே.
நில்லப்பா மனதறிவால் வணக்கமாக
நினைவாகப் சண்முகர்க்குப் பூசைசெய
சங்கையுடன் ஓம்கிலி சிம்மென்றோதே
ஒமெனவே சண்முகர்க்குப் பூசைசெய்து
சோல்லப்பா மூலமென்ற அக்கினியினாலே
சிவசிவா புருவநடுக் கமலம்நோக்கி
நல்லப்ப நல்மனதாய் நோக்கமானால்
நாதாந்த சண்முகனார் தெரிசனையாம்பாரு.
பாரப்பா யோகபூசை அறிவானந்தம்
பதிவான தீபமென்ற மனக்கண்பார்வை
நேரப்பா வாசியென்ற அமுதபானம்
நிலையான பிர்மமாமாயே மாய்கைமாழும்
கருவான சூட்சமடா நாதவித்து
காத்து மனக்கண்ணாலே தன்னைக்காணே
அட்டாங்க யோகமுடன் மௌனயோகம்
அட்டசித்து னித்தனையு மறியலாச்சே.
இந்த பாடலில் உள்ள குறிப்புகளின் படி வரைந்த யந்திரத்தின் படத்தினை கீழே கொடுத்திருக்கிறேன். யந்திரங்களை கீறுவதற்கென தனித்துவமான சில முன்னெடுப்புகளும், முறைகளும் உண்டு. அதன்படியே அவற்றினை கீறிட வேண்டும்.
இந்த யந்திரத்தினை ஆறங்குல (6"x6") சதுரமான தங்கத்தால் ஆன தகட்டில் கீறிக் கொள்ளவேண்டும். இவ்வாறு கீறிய தகட்டினை, பீடம் ஒன்றில் பட்டுத் துணி விரித்து அதில் வைத்து செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளில் பூசைகளை தொடங்க வேண்டுமாம். விளக்கேற்றி வைத்து, உடல் தூய்மை செய்து, திருநீறு அணிந்து சுகாசனத்தில் கிழக்கு முகமாய் அமர்ந்து மனதை ஒரு முகமாக்கி, குருவை பணிந்து "ஓம்கிலி சிம்" எனும் மந்திரத்தை 108 தடவைகள் செபித்து மலர் தூவி பூசைகளை செய்திட வேண்டுமாம்.
தொடர்ந்து இம்மாதிரி பூசை செய்து வந்தால் யோக பூசை, அறிவானந்தம், தீபம் என்ற மனக்கண் பார்வை, வாசி என்ற அமிர்த பானம், பிரம்ம மய நிலை, மாயை நீங்குதல், நாதவித்து சூட்சுமங்கள், மனக்கண்ணால் தன்னை அறிதல். அட்டாங்க யோகம், மௌன யோகம், அட்டமா சித்துக்கள் ஆகியவை சித்திக்கும் என்கிறார் அகத்தியர்.
ஆர்வமும், நம்பிக்கையும் உள்ளவர்கள் குருவினை பணிந்து வணங்கி முயற்சிக்கலாம்.
..
நந்தி தேவரை தரிசிக்கும் முறை!
Author: மதன்
சித்தர்கள் மரபில் ஆதி குருவான சிவனின் நேரடி சீடராக அறியப் படுகிறவர் நந்தி. இவரை நந்தி தேவர், நந்தீசர் எனவும் குறிப்பிடுகின்றனர். நந்தி என்றால் எப்போதும் பேரானந்த நிலையில் இருப்பவர் என பொருள் கூறப் படுகிறது . சித்த மரபின் இரண்டாவது குருவாக அறியப் படும் இவரே திருமூலரின் குருவாக விளங்கியவர்.
இத்தனை சிறப்புகள் வாய்ந்த நந்தி தேவரை அகத்தில் தரிசிக்கும் ஒரு முறையினையே இன்று பார்க்க இருக்கிறோம். நம்புவதற்கு சற்று சிரமமான தகவல்தான் இது. நிஜத்தில் நம்முடன் இல்லாத சித்தர் பெருமக்களை தரிசிக்கும் முறை பற்றி பல பாடல்கள் நமக்கு கிடைத்திருக்கின்றன. இந்த பாடல்களின் பின்னால் ஏதேனும் சூட்சுமமோ அல்லது மறைபொருளோ இருக்கலாம், என்னுடைய சிற்றறிவுக்கு எட்டிய அளவில் எனக்கு கிடைத்த ஒரு தகவலை இங்கே பகிர்கிறேன்.
அகத்தியர் அருளிய "அகத்திய பூரண சூத்திரம்" என்னும் நூலில்தான் நந்திதேவரை தரிக்கும் முறை கூறப் பட்டிருக்கிறது. அந்த பாடல் பின்வருமாறு....
பார்க்கையிலே பரமகுரு தியனாங்கேளு
பக்குவமாய்ச் சொல்லுகிறேன் புத்தியாக
ஏர்க்கையுட னுதையாதி காலந்தன்னில்
இன்பமுடன் சரீரமதைச் சுத்திசெய்து
மார்க்கமுடன் பூதியுத் வளமாய்ப்பூசி
மைந்தனே சுகாசனமா யிருந்துகொண்டு
தீர்க்கமுடன் புருவநடுக் கமலமீதில்
சிவசிவா மனதுபூ ரணமாய்நில்லே.
- அகத்தியர்.
நில்லாந்த நிலைதனிலே நின்றுமைந்தா
நிஸ்பயமாய் லிங்கிலிசிம் மென்றுஓது
சொல்லந்த மானகுரு நாதன்றானும்
சுடரொளிபோ லிருதயத்தில் தோன்றும்பாரு
நல்லதொரு நாதாந்தச் சுடரைக்கண்டா
நந்தியென்ற சோதிவெகு சோதியாச்சு
சொல்லந்தச் சோதிதனைக் கண்டால்மைந்தா
தீர்க்கமுட னட்டசித்துஞ் சித்தியாமே.
- அகத்தியர்.
சூரிய உதய நேரத்தில் உடல் தூய்மை செய்து, திருநீறு அணிந்து சுகாசனத்தில் அமர்ந்து கொள்ள வேண்டுமாம். உடலையும் மனதையும் தளர்த்திய பின்னர் கண்களை மூடி புருவ மத்தியில் மனதினை ஒருமைப் படுத்தி, தியான நிலையில் இருந்து "லிங் கிலி சிம்" என்கிற மந்திரத்தினை தொடர்ந்து செபிக்க வேண்டுமாம்.
இவ்வாறு தினசரி செபித்து வந்தால் பரமகுருவான நந்திதேவர் நம் இதயத்தில் சோதிவடிவாகக் காட்சி கொடுப்பார் என்றும், அவர் தரிசனத்தினைக் கண்டால் அட்ட சித்துக்களும் சித்திக்கும் என்கிறார் அகத்தியர்.
ஆச்சர்யமான தகவல்தானே!
தும்பிக்கையான் பாதம் பணிவோம்!
Author: மதன்
"காணபதம்" அல்லது கணாபத்யம் என்றழைக்கப் படும் மரபின் தனிப் பெருங் கடவுளான விநாயகரின் அவதார தினம் இன்று. ஒவ்வொரு வருடம் ஆவணி மாதத்தில் வரும் சதுர்த்தி திதி விநாயகரின் அவதார தினமாக கொண்டாடப் படுகிறது. ஆறு வெவ்வேறு வழிபாட்டு மரபுகள் ஒன்றிணைந்து இந்து மதமாய் உருவெடுத்த போது விநாயகர் இந்து மதத்தின் முழு முதற் கடவுளாக அங்கீகரிக்கப் பட்டார்.
ஓம்காரத்தின் சூட்சும வடிவம்தான் விநாயகர் என்று சொல்வோரும் உண்டு. இத்தகைய சிறப்புகள் வாய்ந்த விநாயகரை சித்தர் பெருமக்களும் போற்றித் துதித்தனர். அநேகமாய் சித்தர் பெருமக்கள் அனைவருமே தாங்கள் அருளிய நூல்களின் முதல் பாடலில் விநாயகரை துதித்துப் போற்றியே துவங்கியிருப்பது சிறப்பு. இது தொடர்பான தகவல்களை முன்னரே பகிர்ந்திருக்கிறேன். தேவையுள்ளவர்கள் இந்த இணைப்பில் அவற்றை காணலாம்.
விநாயகரின் அவதார தினமான இன்று அகத்தியர் அருளிய "கணபதி யந்திர" வழிபாட்டு முறை ஒன்றினைப் பற்றிய தகவலை பகிர்வது பொருத்தமாய் இருக்கும். இந்தத் தகவல் அகத்தியர் அருளிய “அகத்தியர் பரிபூரணம்” என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.
பாரப்பா சிவயோகம் பூரணமேயாகும்
பத்திகொண்டு பூரணமே கெதியென்றெண்ணி
நேரப்பா தானிருந்து அட்டாங்கயோகம்
நேர்மையுடன் பார்ப்பதற்க்கு கருவைக்கேளு
காரப்பா கருணைவளர் கணபதியின் தியானம்
கருணையுள்ள வட்டமதில் ஓங்காரஞ்சாத்தி
சேரப்பா ஓங்காரந் தன்னிலேதான்
ஸ்ரீயென்று கணபதியின் பீசஞ்சாத்தே.
சாத்தியதோர் சக்கரத்தை முன்னேவைத்து
சகல உபசாரமதாய்ப் பூசைபண்ணி
போத்திநன்றாய்ப் பூரணத்தில் மனதைநாட்டி
புத்தியுடன் செபிக்கிறதோர் மந்திரங்கேள்
பார்த்திபனே ஓம் நமோகுரு கிலியும்
ஸ்ரீகுரு கணபதி சுவாகாவென்று
புத்தியுடன் பதினாறு உறுவே செய்தால்
நேத்திரத்தின் பேரொளிபோல் மூலநாயன்
நிச்சயமாய் உனதுவசம் வசியமாமே.
ஆமப்பா கணபதியை வசியம்பண்ணி
அதன்பிறகு அஷ்டாங்க யோகம்பார்த்தால்
தாமப்பா தன்வசமா யஷ்டகர்மம்
சச்சிதா னந்த பூரணத்தினாலே
ஓமப்பா அறுபத்து நாலுசித்தும்
உண்மையுடன் தானவனாய்த் தானேசெய்வாய் .
வாமப்பா பூரணத்தின் மகிமையாலே
வரிசையுட னட்டாங்க வரிசைகேளே.
இந்த பாடல்களில் உள்ள தகவல்களைக் கொண்டு வரையப் பட்ட யந்திரத்தை கீழே உள்ள படத்தில் காணலாம்.
இந்த யந்திரத்தினை மூன்று அங்குலம் சதுரமான வெள்ளி அல்லது செப்புத் தகட்டில் கீறிடலாம். இதற்கு செப்பாலான ஆணியினை பயன் படுத்திட வேண்டுமாம். உடல் சுத்தியுடன் கிழக்கு முகமாய் அமர்ந்து குருவினை வணங்கி, இந்த யந்திரத்தை தகட்டில் கீறிட வேண்டும் என்கிறார் அகத்தியர்.
இவ்வாறு கீறிய தகட்டினை தாம்பாளம் ஒன்றில் பட்டுத் துணி விரித்து, அதில் வைத்து செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளில் பூசைகளை செய்ய வேண்டுமாம். விளக்கேற்றி வைத்து, கிழக்கு முகமாய் அமர்ந்து பின் வரும் மந்திரத்தை 16 தடவைகள் செபித்து மலர் தூவி பூசைகளை செய்திட வேண்டும் என்கிறார்.
"ஓம் நமோ குரு கிலியும் ஸ்ரீ குரு கணபதி சுவாகா"
இம்மாதிரி பூசை செய்து வந்தால் கணபதியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்றும், அதன் பின் அஷ்டாங்க யோகம் செய்தால் அவை சித்தியாகும் என்கிறார். மேலும் இதனால் அறுபத்தி நான்கு சித்தும் கைகூடிவரும் என்கிறார் அகத்தியர். இது போன்று விநாயக வணக்கதின் முக்கியதுவத்தும் சித்தர் இலக்கியங்களில் நிறையவே விரவிக் கிடக்கிறது.
இந்த நல்ல நாளில் விநாயகப் பெருமானின் பாதம் பணிந்து அவரது பேரருள் நம் எல்லோருடைய வாழ்விலும் நிலைத்திருக்க வேண்டி வணங்கிடுவோம்.
அகத்தியர் அருளிய சூரணங்கள்.
Author: மதன்
தேவையான சரக்கினை சுத்தம் செய்து, வெயிலில் நன்கு உலர்த்தி, அதனை அடுப்பிலேற்றி வறுத்து, அதனை இடித்து சலித்து எடுப்பதையே சூரணமாக்குதல் என்கிறோம்.சித்த மருத்துவத்தில் இத்தகைய பல சூரணங்கள் கூறப் பட்டிருக்கின்றன. இவற்றில் திரிகடுகம் எனப்படும் "சுக்கு", "மிளகு", "திப்பிலி" சூரணங்களை மாமருந்துகள் என்றால் மிகை இல்லை.
இந்த மூன்று பொருள்களையும் கொண்டு திரிகடுக சூரணம், திரிகடுக லேகியம், திரிகடுக குளிகை, திரிகடுக நெய், திரிகடுக குடிநீர் என பலவகையான மருந்துகளை தயாரிக்கும் முறைகளையும் அவற்றின் சிறப்பையும், மருத்துவ குணங்களையும் முன்னரே பல பதிவுகளின் ஊடே விரிவாகவும் விளக்கமாகவும் பார்த்திருக்கிறோம். அவற்றை மீள் வாசிக்க விரும்புவோர் இந்த இணைப்பில் சென்று அந்த பதிவுகளை வாசித்தறியலாம்.
அந்த வரிசையில் இன்று "சுக்கு", "மிளகு", "திப்பிலி" சூரணங்களின் மருத்துவ குணங்களை தனித்தனியாக பார்க்கலாம். இந்த தகவல் அகத்தியர் அருளிய "அகத்தியர் பரிபூரணம்" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது. அந்த பாடல்கள் பின்வருமாறு...
சுக்குச் சூரணம்
பாரேநீ யின்னமொரு சூட்சங் கேளு
பாங்கான சுக்குதனைச்சூர ணமே பண்ணி
காரேநீ கரும்புச்சர்க்க ரையவ் வீதங்
கலந்துமே யிருவேளை யேழு நாளுஞ்
சேரேநீ தின்றுவர வாய்வு தீருந்
திறமான தீபன முண்டா மப்பா
ஊரெல்லா மருந்திருக்கக் காட்டிற் போய்நீ
உலுத்தரைப் போலலையாதே உண்மை கேளே.
சுக்கைச் சூரணம் செய்து, அந்த எடைக்கு சமமாக கரும்புச் சர்க்கரையை கலந்து சேமித்துக் கொள்ள வேண்டுமாம். இம்மருந்தை ஏழுநாள் காலை மாலை உண்டு வர வாய்வு தீருவதுடன், பசியும் உண்டாகுமாம்.
திப்பிலி சூரணம்
உண்மையென்ற திப்பிலையைசூர ணமே செய்து
உகமையுடன் றேனிலேகு ழைத்துத் தின்ன
வண்மையுடன் புகைந்திருமுஞ் சேத்தும நோய்தான்
மாறியே பசியுண்டாம ருவிப் பாரு
திப்பிலியை சூரணம் செய்து தேனில் குழைத்துச் சாப்பிட புகைந்து இருமும் இருமலும், சிலேத்தும நோய்களும் குணமடைந்து பசி உண்டாகுமாம்.
மிளகு சூரணம்
நன்மையுடன் மிளதகுதனைசூர ணமே செய்து
நலமான பசுநெய்யிற் சீனி கூட்டி
தன்மையுடன் மூன்றுநாள் அந்தி சந்தி
தானருந்த சளியிருமத வறிப் போமே.
மிளகினை சூரணம் செய்து அதனுடன் பசுநெய்யும், சீனியும் சேர்த்து மூன்றுநாள் காலை மாலை சாப்பிட சளி இருமல் ஆகியவை நீங்குமாம்.
மாதவிலக்கும், சித்தர்கள் அருளிய தீர்வுகளும்!
Author: மதன்
இதுவரை மாதவிலக்கு, மாதவிலக்கு சுழற்சி, அவற்றின் இயங்கியல், ஏற்படும் பிரச்சினைகள் என விரிவாகவே பார்த்து விட்டோம். இந்த தகவல்கள் யாவும் நவீன அறிவியல் நமக்கு கண்டறிந்து சொன்ன உண்மைகள். இனி நம் முன்னோர்கள் இந்த பிரச்சினைகளை எவ்வாறு எதிர்கொண்டார்கள் என்பதைப் பற்றியே பார்க்க இருக்கிறோம். மாதவிலக்கு பிரச்சினைகள் தொடர்பில் நிறைய தகவல்கள் சித்தர்களின் பாடல்களின் ஊடே காணக் கிடைக்கிறது.
இந்த தகவல்களை முழுமையாக தொகுப்பது என்பது சவாலான ஒன்று.மேலும் நிறைய நேரம் பிடிக்கும் காரியம் என்பதால், என்னால் இயன்ற அளவில் திரட்டிய தகவல்களையே இனி வரும் பதிவுகளின் ஊடே பார்க்க இருக்கிறோம். இந்தத் தகவல்கள் பலவற்றை இன்றும் நாம் கைவைத்தியம் என்கிற பெயரிலும், பாட்டி வைத்தியம் என்கிற பெயரில் அன்றாடம் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம் என்பதையும் இந்த இடத்தில் நினைவு படுத்திட விரும்புகிறேன்.
மற்றொரு முக்கிய குறிப்பு ஒன்றினையும் இந்த இடத்தில் பதிவது அவசியம் என கருதுகிறேன். சித்தர் பெருமக்கள் இத்தகைய பிரச்சினைகளுக்கு எத்தகைய தீர்வுகளை முன் வைத்திருக்கின்றனர் என்பதை பகிர்வதே "சித்தர்கள் இராச்சியம்" வலைப்பதிவின் முதன்மையான நோக்கம். எனவே இங்கே பகிரப் படும் தகவல்களை ஒரு வழிகாட்டுதலாய் மட்டும் அணுகிட வேண்டுகிறேன். தேவையும், அவசியமும் உள்ளவர்கள் தேர்ந்த வல்லுனர்கள்/மருத்துவர்களின் ஆலோசனையோடு சிகிச்சை மேற்கொள்வதே சிறப்பு.
சித்தர் பெருமக்கள் மாதவிலக்கு தொடர்பில் அருளிய தீர்வுகளை மூன்று வகையாய் அணுகிடலாமென நினைக்கிறேன். அவை முறையே...
மாதவிலக்கு வராமல் இருப்பது, தள்ளிப் போவது போன்ற பிரச்சினைகளுக்கான தீர்வு.
மாதவிலக்கின் போது ஏற்படும் வலி, உடல் தளர்வு போன்ற பிரச்சினைகளுக்கான தீர்வு.
பெரும்பாடு எனப்படும் அதிகமான, தொடர் குருதிப் போக்கினை கட்டுப் படுத்துவதற்கான தீர்வு.
இன்றைய பதிவில் மாதவிலக்கு வராமல் இருப்பது அல்லது தள்ளிப் போகும் பிரச்சினைகளுக்கான இரண்டு தீர்வுகளை மட்டும் பார்ப்போம்.“அகத்தியர் வைத்தியம் 600” எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்ட தகவல்கள் இவை.
மீறாமற் றூரமில்லாப் பெண்களுக்கு
வேலியிலைப் பசுவின்பாலில்மிகவருந்த நேரும்
கூறான தூதுவளை சாறுவாங்கி
கொடைகொடையாகக் கிடக்குங் குளத்துப்பாசி
ஏறாமற் புனைக்கா யளவுகூட்டி
யிதமாகச் சர்க்கரையும் மேகமொன்றாய்
பேறுபட மூன்றுநா ளருந்தும்போது
புறப்படுமே செங்குருதி சிவப்பதாமே
வேலிப் பருத்தி இலையை அரைத்து பசுப்பாலில் கலக்கி, அதிகளவில் அருந்த மாதவிலக்கு ஏற்படும் என்கிறார். மேலும் குளத்துப்பாசியை புனைக்காய் அளவு எடுத்து அத்துடன் தூதுவளை சாற்றையும் அளவான சர்க்கரையும் சேர்த்து மூன்று நாட்கள் அருந்த மாதவிலக்கு உண்டாகுமாம்.
கிரமாதீத சூதகம்
ஒழுங்கான மாதவிலக்கு சுழற்சி என்பது 28 தினங்களுக்கு ஒருமுறை ஏற்படும். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு இப்படி நடப்பதில்லை. ஒரு சிலருக்கு இரண்டு, மூன்று தினங்களுக்கு முன்னதாகவே மாதவிலக்கு கண்டு மறைந்து போவதையும், அல்லது சேர்ந்தாற் போல 2-3 மாதங்களுக்கு சூதகமே வெளிப்படாமலும் இருக்கும். இதனை சித்த மருத்துவத்தில் 'ஒழுங்கீன சூதகம்' 'கிரமாதீத சூதகரோமம்' என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இதற்கு வெங்காயம், கரியபோளம், மிளகு இவைகளில் வகைக்கு 21/2 கிராம் எடுத்து, அவற்றைத் தனித்தனியே இடித்துத் தூளாகச் சேகரித்துக் கொள்ள வேண்டும். பிறகு அம்மியில் சிறிதளவு தேன் விட்டு அதில் இந்த தூளை இட்டு, மை போல் அரைத்து, அதை 16 சிறு மாத்திரைகளாக உருட்டி வைத்துக் கொண்டு தினசரி காலை, பகல், மாலை ஆக மூன்று வேளை உணவிற்குப் பின்னர் இரண்டு மாத்திரை வீதம் வாயில் போட்டு, அரை ஆழாக்கு அளவு பசுவின்பால் குடித்து வர வேண்டும்.
இந்த விதமாக மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து சாப்பிட்டால், மாதவிலக்கு ஒழுங்கு முறையுடன் மாதா மாதம் தவறாது வெளியேறுமாம்.
குறிப்பு : "மாதவிலக்கு பிரச்சினைகளும், தீர்வுவும்" என்கிற பழைய பதிவினை இங்கே வாசிக்கலாம்.
தேகநலம் தரும் வெள்ளி பற்பம்.
Author: மதன்
சித்த மருத்துவத்தில் தேவையான சரக்குகளை தனியாகவோ அல்லது சேர்த்தோ புடம் போட்டோ, வறுத்தோ, எரித்தோ, ஊதியோ வெளுக்குபடிச் செய்து எடுத்துக் கொள்வது பற்பம் அல்லது பஸ்பம் எனப்படும். உலோகங்களை பற்பமாக்கி அவற்றை மருந்தாகக் கொடுக்கும் வழக்கம் சித்தரியலில் உண்டு. ஆயுர்வேத மருத்துவத்திலும் கூட ஏழு வகையான பற்பங்கள் குறிப்பிடப் பட்டிருக்கின்றது.
அந்த வகையில் அகத்தியர் அருளிய "அகத்தியர் வைத்திய காவியம்" என்ற நூலில் வெள்ளியைப் பற்பமாக்கும் முறை ஒன்று காணக் கிடைக்கிறது. அந்தத் தகவலை இன்றைய பதிவில் காண்போம். இந்த பற்பம் "ரசிதம்" எனப் படுகிறது.
செய்யவே இன்னம் ஒரு பற்பம் கேளு
செயமாக வூதசட்டி வெளி தன்னை
துய்யதாய் குகையில் இட்டு உருகும்போது
துரையான வெளியிடை மகிழம்பூச்சார்
அய்யனே இரண்டு இடை விட்டு இறக்கி
அப்பனே வெய்யது மடிந்து போகும்
பொய்யல்ல அப்பொடியை முன்சாற்றாலே
புகழாக அரைத்து பில்லை உலர்த்திக் கேளே.
உலர்த்தியதோர் வில்லைக்கு கவசம் கேளே
உண்மையுடன் முட்கா வேளை வேரைத் தானும்
பிலக்கவதை முன்னீரால் அரைத்துக் கட்டி
பிரியமுடன் குகையில் இட்டுச் சில்லும் மூடி
உலர்த்தி நன்றாய் மண்சீலை வலுவாய்ச் செய்து
உள்ளபடி நூறெருவில் புடத்தைப் போடு
பெலத்ததோர் ரசிதம் என்ற வெள்ளி பற்பம்
பெருமையுள்ள வெண்ணையிலே கொடுத்துப் பாரே.
கொடுத்து மிகப் பார்க்கையிலே தீரும் நோய்கேள்
குணம் இல்லாக் காசமொடு இரத்த காசம்
அடுத்து நின்ற மேகம் சயம் மந்தகாசம்
அப்பனே திப்பிலியலகலும் சொன்னோம்
தெடுத்து மிகப் புளி புகையைத் தவிர்க்க வேணும்
சுயமாக வேளைக்குப் பணவிடையி பாதி
கடுத்து நின்ற பவுத்திரமும் மூலைச் சூலை
காணாமல் ஓடுமடா கண்டு பாரே.
வெள்ளியின் எடைக்கு சரி சமனாக மகிழம் பூச்சாறு விட்டு உருக்க வேண்டுமாம். பின்னர் உருக்கிய வெள்ளியை பொடியாய் ராவி மகிழம்பூச் சாறுவிட்டு அரைத்து வில்லைகளாக்கி உலர்த்தி சேமித்துக் கொள்ள வேண்டுமாம். முட்கா வேளை வேரினை எடுத்து மகிழம்பூ சாறுவிட்டு அரைத்து முன்னர் உலர்த்தி சேமித்த வில்லைக்கு கவசமாய் இட்டு மேலே சீலைமண் செய்து நன்றாக காயவைத்து, நூறு வறட்டிகளைக் கொண்டு புடம் இட்டுக் கொள்ள வேண்டும் என்கிறார் அகத்தியர். (புடங்கள் பற்றிய எனது முந்தைய பதிவில் நூறு வறட்டிப் புடம் பற்றிய தகவல் இருக்கிறது.)இப்படி செய்தால் அந்த வில்லைகள் நீறி பற்பம் ஆகியிருக்குமாம். இதுவே "ரசிதம்" என்று அழைக்கப்படும் வெள்ளி பற்பம்.
இப்படி தயார் செய்யப் பட்ட வெள்ளி பற்பத்தை ஒரு மண்டல கால அளவிற்கு அரைப்பண எடை அளவில் எடுத்து வெண்ணையில் குழைத்துக் காலையும், மாலையும் தொடர்ந்து உண்ண வேண்டும் என்கிறார். இப்படி தொடர்ந்து ஒரு மண்டலம் உண்டுவர காசம், இரத்த காசம், மேகம், சயம், மந்த காசம் ஆகியவை குணமாகும்.
இந்த வெள்ளி பற்பத்தை ஒரு மண்டல கால அளவிற்கு அரைப்பண எடை அளவில் எடுத்து சம அளவு திப்பிலியுடன் கலந்து தினமும் ஒரு வேளையாக தொடர்ந்து உண்ண வேண்டும் என்கிறார். இப்படி தொடர்ந்து ஒரு மண்டலம் உண்டுவர பவுத்திரம், மூலச் சூடு ஆகியவை நீங்கும் என்கிறார்.
பத்தியமாக மருந்துண்ணும் நாட்களில் புளி, புகை போன்றவைகளும் தவிர்க்க வேண்டுமாம்.
குழந்தைப் பேறு!... அகத்தியரின் தீர்வு!!
தாய்மையே ஒரு பெண்ணை பூரணத்துவமானவளாக ஆக்குகிறது என்கிற நம்பிக்கை நமது சமூகத்தில் வேரோடியிருக்கிறது. திருமணம் ஆன ஒவ்வொரு பெண்ணும் அவளது சுற்றமும் இந்த தாய்மை அடைதலை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பது தொட்டுத் தொடரும் பாரம்பரிய நிகழ்வு.
ஒரு வேளை அதே பெண்ணிற்கு தாய்மை அல்லது கருவுறுதல் தாமதமானால் கொஞ்சமும் ஈவிரக்கம் இல்லாத அவளின் சமூகம், அந்த பெண்ணிற்கு தரும் பட்டம் ”மலடி”, இது காலம் காலமாய் பெண்கள் மீது நடத்தப்படும் உளவியல் ரீதியான வன்முறை, தற்காலத்தில் இந்த போக்கில் கொஞ்சம் விழிப்புணர்வு வந்திருப்பது ஆறுதலான ஒன்று.
தற்போதைய நவீன அலோபதி மருத்துவம் பல தீர்வுகளை முன் வைத்தாலும் கூட அவை செலவு பிடிப்பனவாக இருக்கிறது. சித்த மருத்துவத்தில் இதற்கு பல தீர்வுகளை சித்தர் பெருமக்கள் அருளியிருக்கின்றனர். அவற்றை தொடர்ச்சியாக பதிவுகளின் ஊடே பகிர்ந்து வருகிறேன். அந்த வரிசையில் இன்று அகத்தியர் அருளிய வைத்திய முறை ஒன்றினை பார்ப்போம். "அகத்தியர் வைத்தியம் 600" என்னும் நூலில் இந்த முறை அருளப் பட்டிருக்கிறது.
கேளுநீ கெர்ப்பந்தான் வாழ்வதற்கு
கெடியான நன்னாங்கள்ளி வேரு
ஆளவேயரைத்துப் புன்னைக்காய் போலே
ஆவின்வெண்ணெய் பாக்களவு கலந்து
நீளநீகுளித்த முதல் மூன்றுநாளும்
நினைவாகத் தானருந்த கெர்ப்பமுண்டாம்
கோளறவே பத்தியந்தான் புளிபுகையும்
கொள்ளாம லாவின்பால் சோறுமுண்ணே.
- அகத்தியர்.
கர்ப்பம் தரிக்காத பெண்களுக்கு மாதவிலக்கு ஆன மூன்றாவது நாள் தலை முழுகி அதற்கு மறுநாள் முதல் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு நன்னாங்கள்ளி வேரினை அரைத்து புன்னைக் காயளவு எடுத்து அத்துடன் பசுவின் வெண்ணெய் பாக்களவு கலந்து உட்கொண்டு, இல்லறத்தில் ஈடுபட்டு வர கருத்தரிக்குமாம்.
பத்தியமாக மருந்துண்ணும் மூன்று நாட்களும் புளியும், புகையும் நீக்குவதுடன் சாதத்தில் பசுப்பால் விட்டு சாப்பிடவேண்டும் என்கிறார்.
ஆச்சர்யமான தகவல்தானே!,
தேவையிருப்பவர்கள் தகுதியான சித்த மருத்துவரின் ஆலோசனை பெற்று, இந்த முறையினை பயன்படுத்தி தீர்வு காணலாம். மற்றவர்கள் தேவையுள்ளோருக்கு இந்த தகவலை அறியத் தரலாம்.
அடுத்த பதிவில் வேறொரு தகவலுடன் சந்திக்கிறேன்.
உடலுக்கு வலிமை தரும் சந்தனாதி தைலம்.
Author: மதன்
எள் + நெய் என்பதே எண்ணெய்யாகும். எண்ணெய் என்பது நல்லெண்ணையையே குறிக்கும். எள் என்பதை 'திலம்' என்று வடமொழியில் கூறுவர். திலத்தால் உண்டானதை தைலம் எனக் கூறுவர். தேவையான சரக்குகளைப் பொடித்து எள் நெய் சேர்த்துப் பக்குவத்தில் காய்ச்சி எடுப்பதே எண்ணெய் அல்லது தைலம் எனப்படும்.
இவ்வாறு தயார் செய்யப்படும் தைல வகைகளில் ஒன்றான "சந்தனாதி தைலம்" தயாரிக்கும் முறை ஒன்று அகத்தியர்அருளிய "அகத்தியர் வைத்திய காவியம்" என்னும் நூலில் காணக் கிடைக்கிறது. அந்த தகவல்களை இன்றைய பதிவில் பார்ப்போம்.
பாரப்பா இன்னுமொரு சந்தனாதி
பகருகிறேன் அமுக்குறாவேர் பொடியும்நாழி
சேரப்பா சித்தாமுட்டி பொடியும்நாழி
சிறப்பான கொம்பரக்கு பொடியும்நாழி
நேரப்பா இம்மூன்றும் பதக்குநீரில்
தீயிட்டு நாலொன்றாய்க் குறுக்கிவாங்கி
அரப்பா நல்லெண்ணெய் நாழிவிட்டு
அப்பனே பசுமோர் நாழியூற்றே
மோர்விட்டு நன்னாரியரத்தை முதல்
முகிழ்மதுரஞ் குப்பைகடுகு ரோகிணி
வாரிட்ட கச்சோலந் தேவதாரம்
மஞ்சளொடு மரமஞ்சள்கஸ்தூரி மஞ்சள்
மாரிட்ட பெருங்குரும்பை யமுக்குறாவேர்
மஞ்சிட்டி கெந்தியொடு நாகப்பூவும்
நேரிட்ட வகையொன்று விராகனொன்று
நிறுத்திநீ யாட்டியதைக் கலக்கிக் காய்ச்சே
காச்சப்பா மூன்றுநாள் கொதிக்கச்செய்து
களரவே நாலாநாள் வடித்துமைந்தா
தேச்சப்பா வுடம்பெல்லாம் நசியம்பன்னு
தீராத சுரம்தணியும் முடம்பும்தேறும்.
- அகத்தியர்.
அமுக்குறாவேர்ப் பொடி, சித்தாமுட்டி பொடி, கொம்பரக்கு பொடி இவைகளை வகைக்கு ஒரு நாழி அளவில் எடுத்து ஒரு பாண்டத்தில் இட்டு அத்துடன் ஒரு பதக்கு அளவு நீர் வார்த்து நான்கில் ஒருபங்காகக் காய்ச்சிக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அத்துடன் நல்லெண்ணெய் ஒரு நாழி அளவும் பசு மோர் ஒரு நாழி அளவும் சேர்த்துகொள்ள வேண்டுமாம். மேலும் நன்னாரி, அரத்தை, அதிமதுரம், குப்பைமேனி, கடுகுரோகிணி, கச்சோலம், தேவதாரு, மஞ்சள், மரமஞ்சள், கஸ்தூரிமஞ்சள், பெருங்குரும்பை, அமுக்குறாவேர், மஞ்சிட்டி, கெந்தி, நாகப்பூ ஆகியவற்றை வகைக்கு விராகன் எடைவீதம் எடுத்து சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ள வேண்டுமாம்.
அந்தக் கலவையினை மூன்று நாட்கள் தொடர்ச்சியாகக் கொத்திக்கவைத்து நான்காம் நாள் வடிகட்டி உடல் முழுவதும் சொட்டுச் சொட்டாக விட்டு நன்கு பூசி 10 நிமிடம் ஊறவைத்து தலை முழுக வேண்டும். இப்படி முழுகிவந்தால் தீராத சுரங்கள் நீங்குவதுடன் உடலும் வலிமையடையும் என்கிறார்.
தேவை உள்ளவர்கள் அனுபவம் வாய்ந்த சித்த மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் இதனைப் பயன் படுத்தி பலன் பெறலாம்.
படர்தாமரைக்கு ஓர் எளிய தீர்வு!
Author: மதன்
தோலில் ஏற்படும் தொற்று நோய்களில் முதன்மையானது “படர்தாமரை” எனப்படும் ஒரு வகையான தேமல் ஆகும். இது உச்சந்தலை, முகம், பிறப்பு உறுப்புகள் ஆகிய இடங்களில் படர்ந்து பரவும் தன்மையுடைய தொற்று நோயாகும்.
இத்தகைய தேமல் பரவிய இடங்களில் தோல் நிறமாற்றம் அடைந்து அடர் கருப்பு நிறமாகி விடும். தீராத அரிக்கும் தன்மை உடைய இதனை சொறிந்து விட்டால் அதிலிருந்து வெளியாகும் நீர்மத்தினால் இது மேலும் உடலின் மற்ற பாகங்களில் பரவிடும். பெரும்பாலும் உடல் சுத்தம் மற்றும் உடைச் சுத்தம் இல்லாதவர்களுக்கே இத்தகைய தொற்று உண்டாகிறது.
தற்போதைய நவீன மருத்துவம் இந்த பிரச்சினைக்கு நல்ல பல தீர்வுகளை அளிக்கிறது. இருப்பினும் இந்த நோய்க் கிருமிகள் உடலின் உள்ளுறையும் தன்மையுடவை என்பதால் தொடர் சிகிச்சையினால் மட்டுமே முழுமையான தீர்வு கிடைக்கும். இது செலவு பிடிக்கக் கூடியது.
இந்த படர்தாமரை பிரச்சினைக்கு அகத்தியர் அருளிய தீர்வு ஒன்றினை பார்ப்போம். "அகத்தியர் வைத்தியகாவியம்" என்னும் நூலில் இருந்து இந்தக் குறிப்பு எடுக்கப் பட்டது.
சாகுமாம் படு தாமரைக்குக்கேளு
சாதக மாம்வேரின் பட்டை
காவதிக மதுக்காரை வேரும்வித்தும்
கழஞ்சிரண்டு பழச்சாற்றில் கரையஆட்டே
ஆட்டியே பாக்களவாய் மூன்றுகட்டி
யப்பனே யுள்ளுக்கும் மேலும்பூசு
வாட்டியே யுதிர்ந்துவிடும் பாரே.
- அகத்தியர்.
மாமரத்தின் வேரின் பட்டையும், மதுக்காரை வேரும் அதன் விதையும் ஆகியவற்றை சம அளவில் எடுத்து தூளாக்கிக் கொள்ளவேண்டும். பின்னர் இவற்றில் இரண்டு கழஞ்சு அளவில் எடுத்து பழச்சாறு விட்டு நன்கு அரைத்து பாக்களவு உருண்டைகளாக மூன்று உருண்டைகள் உருட்டி உண்ணவேண்டுமாம். மிகுதியை படர்தாமரை பாதிப்பு உண்டான இடங்களில் பூசிவர குணமாகும் என்கிறார்.
மேலே சொன்ன மூலிகைகள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. விலையும் மிக மலிவுதான். தேவை உள்ளவர்கள் தகுதியான சித்த மருத்துவரின் ஆலோசனை பெற்று இயற்கையான இந்த மருந்தினை நாம் வீட்டிலேயே தயாரித்து பலன் பெறலாம்.
குறிப்பு : ஒரு கழஞ்சி என்பது சற்றேற 5 கிராம் ஆகும்.
தீவினை அழிக்கும் புவனை யந்திரம்...
Author: மதன்
சித்தர்கள் வணங்கிய தெய்வத்தின் பெயர் வாலை என்பதாகும். ஆதி சக்தியின் பத்து வயது பெண் வடிவமே இந்த வாலை. வாலையை பூசிக்காத சித்தர்களே இல்லையெனலாம். வாலை தெய்வத்தைப் பற்றி மேலதிக விவரம் வேண்டுவோர் இந்தஇணைப்பில் சென்று வாசிக்கலாம்.
புவனை அம்மன் என்பவள் இந்த புவனமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் மகாசக்தியின் அம்சமாவாள். வாலை தெய்வம் குழந்தையின் அம்சமென்றால், புவனை அவளின் தாய் அம்சம் என்கின்றனர் சித்தர் பெருமக்கள். இந்த அன்னையின் அனுசரனையின்றி ஏதும் நடவாது என்பதும் சித்தர்களின் கூற்று. இந்த மகா சக்தியின் அருளினை ஒரு யந்திரத்தின் மூலம் ஒருவர் பெற முடியுமானால் எத்தனை ஆச்சர்யமான விஷயம்.
அத்தகைய யந்திரம் பற்றி அகத்தியர் தனது அகத்தியர் பரிபூரணம் என்னும் நூலில் விளக்கியிருக்கிறார்.
தெரிசிக்க இன்னமொரு கருவைக்கேளு
சிவசிவா புவனைபதி னாறுவீட்டில்
தெரிசிக்க வேணுமென்னா லந்தவீட்டில்
செம்மையுடன் ஓம்கிலி சிறிறீங்கென்று
தெரிசிக்கப் பதினாறு வீட்டிலேதான்
சிந்தையுடன் கால்தலையாய் மாரிக்கொண்டு
தெரிசிக்க மானதமாய்ப் பூசைசெய்து
திருவேற நூற்றெட்டு உருவேசெய்யே.
- அகத்தியர்.
உருவேத்திப் புவனையுட சக்கரத்தை
உண்மையுடன் மானிடர்க்குக் காட்டினாக்கால்
கருவொத்து நின்றுபல வியாதியெல்லாம்
கண்காணா தோடுமடா கருத்தாய்ப்பாரு
வருவித்த வஞ்சனைகள்ள பில்லிஏவல்
மகத்தான பிசாசுகளு மதிகெட்டோடும்
திருவுத்த குருவருளால் புவனைதானும்
தீர்க்கமுட வினைத்தபடி செய்வாள்பாரே.
- அகத்தியர்.
இந்த பாடலில் உள்ள குறிப்புகளின் படி வரைந்த யந்திரத்தின் படத்தினை கீழே கொடுத்திருக்கிறேன்.
இந்த யந்திரத்தினை மூன்றங்குல (3"x3") சதுரமான தங்கத்தால் ஆன தகட்டில் கீறிக் கொள்ளவேண்டும். யந்திரங்களை கீறுவதற்கென தனித்துவமான முறைகள் இருக்கின்றன. அந்த தகவல்களை முந்தைய பதிவுகளில் பார்க்கலாம். அதன் படியே இந்த யந்திரங்கள் கீறப்பட வேண்டும்.
இவ்வாறு கீறிய தகட்டினை தாம்பாளம் ஒன்றில் பட்டுத் துணி விரித்து அதில் வைத்து செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமை நாளில், கிழக்கு முகமாய் அமர்ந்து பின் வரும் மந்திரத்தை 108 தடவைகள் செபித்திட வேண்டும்.
"ஓம் கிலி சிறி றீங்"
இவ்வாறு செபித்து முடிந்ததும் தீர்வும், தேவையும் உள்ளவர்களுக்கு இந்த யந்திரத்தினை கட்டிவிட வேண்டுமாம். அதன் பின் அவர்களைப் பீடித்த நோய்கள் அனைத்தும் நீங்குவதுடன். அவர்களின் எதிரிகள், வஞ்சகர்கள் நீங்கிவிடுவார்களாம். பில்லி, சூனியம், ஏவல் போன்றவை எது இருந்தாலும் அது அவர்களை விட்டு நீங்கிவிடுமாம். அத்துடன் புவனை அம்மனின் அருளும் கிட்டும் என்கிறார் அகத்தியர்.
நம்பிக்கையுள்ளவர்கள் குருவினை வணங்கி முயற்சித்து பலன் பெற்றிடலாம்.
Author: மதன்
மனிதன் பிறப்பில் இருந்து தன் வாழ் நாளில் செய்திடும் பாவபுண்ணியங்களின் பலன்களைப் பொறுத்து, இறப்புக்குப் பின்னர் மீண்டும் இவ்வுலகில் பிறந்து அவற்றை அனுபவிப்பதாக நமது சித்தாந்தங்கள் நம்புகின்றன. மனிதனின் பாவக் கணக்குகள் தீரும் வரையில் இந்த சுழற்சி தொடர்வதாகவும் கருதப் படுகிறது.இந்த சுழற்சியில் இருந்து விடுபட்டு குறைவில்லா இன்பத்துடன் இருந்திடும் ஒரு நிலைதான் முக்தி எனப் படுகிறது.
முக்தி நிலை என்பது மிக உயரிய குறிக்கோளாய் கூறபபடுகிறது.கடுமையான முயற்சி மற்றும் பயிற்சியினால் மட்டுமே ஒருவர் இந்த மேலான நிலையினை அடைந்திட முடியும்.யோகம் என்கிற எட்டு நிலைகளில் தேர்ந்து தெளிந்தால் மட்டுமே முக்தி நிலை சாத்தியமாகும்.இது பற்றி விரிவாக முந்தைய பதிவுகளில் அலசியிருக்கிறோம்.
இத்தகைய கடினமான முக்தி நிலையினை எட்டிடும் புதிய வழி ஒன்றினை பாம்பாட்டிச் சித்தர் தனது பாடலில் பின்வருமாறு விளக்குகிறார்.
திரளான போரில்ஊசி தேடல் போல்முத்தி
சிக்காது தேசாசார தேசிகர் தம்மால்
அருளான மூலகுரு அவர் செயலால்
ஆனந்தம் கண்டோம் என்று ஆடாய் பாம்பே!
- பாம்பாட்டிச் சித்தர் -
பரந்து விரிந்த போர்களத்தில் படைகள் ஆவேசத்துடன் சண்டை போட்டுக் கொண்டிருக்கும். அந்த இடத்தில் ஊசியப் போட்டுவிட்டு மீண்டும் தேடி எடுக்க முடியாது அது போல முக்தியும் இலகுவில் கிடைக்காது. எத்தனை முயற்சிகள் கஷ்டங்கள் பட்டாலும் முக்தி என்பது அத்தனை இலகுவாகக் கிடைத்துவிடாது.
அதே நேரத்தில் இந்த உலகம் முழுவதும் எங்கும் சஞ்சரிக்கும் சித்தர்களின் அருளையும், மூலகுருவின் அருளையும்,கருணையையும் வேண்டிப் பெறுவதன் மூலமே கிடைப்பதற்க்கு அறிய முக்தியைப் பெறமுடியும். இவர்களின் மேலான அருளால் முக்தியை உணர்ந்து, ஆனந்தம் கொண்டோம் என்று ஆடு குண்டலினிப் பாம்பே என்கிறார் பாம்பாட்டிச் சித்தர்.
மேன்மையான குருவருளை பெறுவதன் மூலமே ஒருவர் முக்தி நிலையினை அடைந்திட முடியும் என்பது பலருக்கும் புதிய செய்திதானே..
பின்குறிப்பு:
பாம்பாட்டிச் சித்தரின் பாடல்கள் எளிமையான மொழி நடையில் எவரும் புரிந்து கொள்ளும் வகையில் இருப்பது சிற்ப்பு. ஆனால் பாம்பாட்டி சித்தரின் 129 பாடல்கள் மட்டுமே நமக்கு கிடைத்திருக்கிறது என்பது கொஞ்சம் வருத்தமான செய்தியே..
ஜீவன் முக்தி என்றால்...!
Author: மதன்
”சிவலோக பதவி”, “வைகுந்த பதவி”, “முக்தி அடைதல்”இவையெல்லாம் இறந்து போனவர்களை அடையாளப் படுத்தும் வார்த்தைகள் என்றே பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். உண்மை அதுவல்ல....
முக்தி அடைதல் என்பதன் தூய தமிழ் வடிவம் ”விட்டு விடுதலையாதல்” அல்லது ”வீடு பேறடைதல்” என்பதேயாகும். யோகத்தில் உயர் நிலையான சமாதி நிலைக்கு அடுத்த நிலைதான் இந்த முக்தி நிலை. இதனை மீண்டும் பிறவா பேரின்ப நிலை என்றும் சித்தர்கள் குறிப்பிடுகின்றனர்.
இறப்பிற்குப் பின்னர் முக்தி அடைதல் என்பது வெறும் வாய் வார்த்தை எனச் சொல்லும் சித்தர்கள், வாழும் காலத்தில், இந்த உடல் இருக்கும் போதே அத்தகைய பிறவா பேரின்ப நிலையினை அடைந்திட வேண்டும் என்கின்றனர்.
இந்த முக்தி நிலையை அடைய ஒரே வழி யோக மார்க்கம் என்று சொல்லும் சித்தர்கள், இந்த யோக உறுப்புக்கள் எட்டு நிலைகளைக் கொண்டதாக கூறியிருக்கின்றனர். அவை முறையே கடிவு (இமயம்), நோன்பு (நியமம்), இருக்கை (ஆசனம்), வளிநிலை (பிராணயாமம்), ஒருக்கம் (பிரத்தியாகாரம்), நிறை (தாரணை), ஊழ்கம் (தியானம்) , ஒன்றுகை (சமாதி) என்பதாகும்.
கொங்கணவர் தனது வாத காவியத்தில் முக்தி பற்றி இவ்வாறு சொல்கிறார்.
காணப்பா குருசொன்ன சாத்திரத்தின் படியே
கைமுறையாய் நடக்கிறதே விபரமென்பார்
பூணப்பா யெந்தெந்தக் காரியங்கள் வந்தும்
புகழாகத் தயக்கம் வந்தும் பிரமமென்றும்
தோணப்பா நிரந்தரமும் வேதாந்தம் பார்த்துச்
சொன்னமுறையாய் நிற்பதுவே விரதமாச்சு
ஆணப்பா நியமமென்ற பத்துஞ் சொன்னே
னறிந்திந்த விருபதையும் மறுட்டித்தேறே
- கொங்கணவர் -
குரு அருளிய யோக வழிமுறையின் படி நடப்பது தான் விரதம் என்பார்கள். இதன் வழி நிற்போர் எக்காரியம் வந்தாலும், எவ்வளவு தடங்கல் ஏற்பட்டாலும், அனுதினமும் தானே பிரம்மம் என்பதை உணர்ந்து தியானித்து வருவதே விரதம் ஆகும். இதுவே நியமம் என்ற பத்து வகை ஆகும். மற்றயது இயமம் என்று அழைக்கப்படும் பத்துவகை ஆகும். இயம,நியமமாகிய இந்த இருபதையும் முறையாக கடைப் பிடித்தாலேயே யோகத்தில் முன்னேற முடியும் என்று சொல்லும் இவர் தொடர்ந்து...
எறியிந்த விருபதையும் மநுட்டியாட்டால்
என்னசொல்வேன் சீவனில்லாச் சித்திரம் போலாம்
தேறியிந்த வடிப்படையை வைக்குமுன்னே
சிற்றெடுத்த சுழிகைக்கு மொக்குமொக்கும்
ஆறியிந்தக் காயசித்தி பண்ணுமுன்னே
யாயிரமாங் கலியுகத்தைக் கண்டதொக்கும்
மாறியிந்தச் சடத்தோடே முத்தி காணான்
மாண்டபின்பு முத்தியென்ற வாறுபோமே
- கொங்கணவர் -
இவ்விருபதையும் முறையாக கடை பிடிக்காதவன் ஜீவனில்லா சித்திரம் போலனவன். அத்தகைய செயல் முறையாக தொடங்கப்படும் எந்தக் காரியமும் பதியளவு நிறைவடைந்ததுக்கு சமானாகும் என்கிறார். அத்துடன் காய சித்தி செய்ய வெண்டும் என்று நினைத்தாலே ஆயிரம் கலியுகத்தை கண்டதற்க்கு சமனாகும் என்றும், இவ்வுடலுடன் இருக்கும் போதே முக்தி அடையாதவர்கள், இறந்த பின் முக்தி அடைவது என்பது வாயளவில் வார்த்தையாக ஆகிவிடும் என்கிறார்.
நாளைய பதிவில், வேளாண்மையில் விளைச்சலை பெருக்கும் ஜாலம் பற்றி பார்ப்போம்.
யோகத்தின் உச்ச நிலை...
Author: மதன்
"மனமென்னும் மாடு அடங்கில் தாண்டவக்கோனே - முத்தி
வாய்த்ததென்று எண்ணேடா தாண்டவக்கோனே"
"சினமென்னும் பாம்பு இறந்தால் தாண்டவக்கோனே - யாவும்
சித்தியென்றே நினையேடா தாண்டவக்கோனே"
"ஆசையெனும் பசுமாளின் தாண்டவக்கோனே - இந்த
அண்டமெல்லாம் கண்டறிவாய் தாண்டவக்கோனே"
- இடைக்காட்டு சித்தர் -
நமது ஐம்புலன்களின் செயல்பாடுகள் அனைத்தையும் ஒரு முகமாக்கி, அதனால் மனம் தெளிவதன் விளைவாய் சலனமற்றா அமைதி நிலை உருவாகும். இந்த நிலையில்தான் யோகம் பயில்பவர் இறைவன் தன்னிலும், ஆன்மாவிலும் நிறைந்து உறைந்திருப்பதை உணரத் தலைப்படுவார். இதுவே விவரிக்க இயலாத பேரின்ப நிலையாகும்.
இந்த நிலையைத்தான் யோகத்தின் அதி உயர் நிலையாக குறிப்பிடுகின்றனர். இந்த நிலையினை எய்தும் பயிற்சியினை குருமுகமாக மட்டுமே பயில இயலும்...அதுவே சிறப்பும் கூட
யோகம் பற்றிய தொடர் முற்றிற்று....அடுத்த பதிவில் வேறொரு தகவலுடன் சந்திக்கிறேன்.
யோகம் பயில்வோர் சந்திக்கும் தடைகள்...
Author: மதன்
முழுமையான தன்முனைப்போ அல்லது, கவன குவிப்போ இல்லாது யோகம் பயிலும் போது, பயிற்சி செய்பவருக்கு தடைகள் பல வரும் என்று சொல்லும் பதஞ்சலி முனிவர், அத்தகைய தடைகளை பின்வருமாறு விளக்குகிறார்.
எண்ணங்களைக் குழப்பும் சிந்தனைகள் உருவாகும், இதை"சித்த விகஷோப" என்கிறார்.
உடலை வருத்தும் நோய்களும் அதனால் உருவாகும் தடையினை "ஸ்தியானா"என்கிறார்.
தான் பயிலும் யோகம் கைகூடுமா என்கிற சந்தேகம் உருவாகும் மனத் தடையினை "சம்சயா" என்கிறார்.
அலட்சியத்தன்மையையினால் உருவாகும் கவனச் சிதறலை"பிரமாதா" என்கிறார்.
தொடர்ச்சியான பயிற்சியின் மூலம் கைவரப் பெற்ற மன ஒருமைப் பாட்டை தக்க வைத்துக்கொள்ள இயலாமல் அதை இழக்கும் தன்மையை "அனாவஸ்த்திதத்வா" என்றும் குறிப்பிடுகிறார்.
எனவே, ஒருவர் யோகப் பயிற்சி செய்யும் போது இது போன்ற தடைகளை எதிர் கொள்ள உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் தயாராக இருக்க வேண்டும். இவை முறையான குருவின் மேற்பார்வையில் பயிலும் போது தவிர்க்கப் படும்.
தடைகள் எது வந்த போதிலும் அதை தாண்டி தன் இலக்கை அடையும் மன உறுதியும், தீர்க்கமான சிந்தனையும் உள்ளவருக்கே யோகம் சித்திக்கும்.
அடுத்த பதிவில் யோகத்தின் உச்ச நிலை பற்றி பார்க்கலாம்...
யோகத்தின் நிலைகள்....
Author: மதன்
யோகம் எட்டு நிலைகளைக் கொண்டது. இதனை ”எட்டு படிகள்” என்கிறார், யோகத்தின் பிதாமகரான பதஞ்சலி முனிவர். இந்த எட்டு நிலைகளும் மனிதனின் வாழ்க்கையின் நெடுகில் ஆத்மாவுக்கு உறுதுணையாக இருப்பவை..
இந்த எட்டு நிலைகளும் ஒன்றோடு ஒன்று தொடர்பானவை.ஒரு நிலை முடியும் தருணத்தில் அடுத்த நிலை துவங்கும். எனவே ஒவ்வொரு நிலையாகவே பயில வேண்டும். ஒரு நிலையில் தேர்ச்சி பெறாமல் அடுத்தடுத்த நிலைகளை பழக முடியாது.எனவே தொடர் பயிற்ச்சிகளின் மூலமும், மனிதனை சூழ்ந்திருக்கும் எல்லா விதமான ஆசைகளில் இருந்தும் மனதை விடுவித்து வைப்பதன் மூலமும் இது சாத்தியமாகும்.
யோகத்தின் எட்டு நிலைகளையும் திரு மூலரும் தனது திருமந்திரத்தில் விரிவாக குறிப்பிடுகிறார்.
"அந்நெறி இந்நெறி என்னாதட் டாங்கத்
தன்னெறி சென்று சமாதியி லேநின்மின்
நன்னெறி செல்வார்க்கு ஞானத்தி லேகலாம்
புன்னெறி யாகத்திற் போக்கில்லை யாகுமே"
- திருமூலர் -
"இயம நியமமே எண்ணிலா ஆதனம்
நயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரஞ்
சயமிகு தாரணை தியானஞ் சமாதி
அயமுறும் அட்டாங்க மாவது மாமே"
- திருமூலர் -
இயமம், நியமம், ஆசனம், பிரணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி. ஆகியவையே யோகத்தின் எட்டு நிலைகளாக கொள்ளப் படுகின்றன.
இயமம் என்பது வாழ்வியல் சார்ந்த நல்லொழுக்கத்தையும், நியமம் என்பது ஒழுக்கத்தின் மூலம் ஆத்ம சுத்தத்தையும், ஆசனம் என்பது உடற்பயிற்சி நிலைகளையும், பிரணாயாமம் மூச்சு கட்டுக்குள் கொணரும் பயிற்சி முறைகளையும், பிரத்தியாகாரம் என்பது புலனடக்கத்தையும், தாரணை என்பது மன ஒருமைப்பாட்டையும், தியானம் என்பது பரமாத்மாவை உணரும் நிலையையும், சமாதி பரமாத்மாவுக்கு சமனான பேரின்ப நிலையை அடவைவதையும் குறிக்கும்.
உணபது,உறங்குவது,உழைப்பது என வாழ்வின் அனைத்து கூறுகளையும் அளவுடனும், நிதானமாகவும் செயல்படவேண்டியது அவசியம்.. இத்தகையவர்களே யோகமார்க்கத்தில் இயல்பாக வெற்றியடையலாம்.
வாழ்க வளமுடன்....
யோகத்தில் வெற்றியடைந்திட....
Author: மதன்
உணவு உட் கொள்வதில் நிதானம் கடைப்பிடிக்க வேண்டும். அருஞ்சுவை உணவாய் இருந்தாலும் அரை வயிறே உண்ணுதல் வேண்டும்.வட மொழியில் இதனை "மிதாகார" என்பர். அதாவது கூடுதலாய் இல்லாமலும், குறைவாக இல்லாமலும் மிதமாக உண்பதாகும்.
"பசித்த பின் புசி" இது சான்றோர் வாக்கு.பசியின் அளவிற்கு ஏற்றவாறு அல்லாமல் மிகுதியாக உண்டால் நோய் ஏற்படும். யோகம் பயில்பவர்களுக்கு உணவுக் கட்டுப்பாடு முக்கிய காரணியாகிறது.
அளவுக்கு அதிகமாய் உண்பவனும், மிகுந்த பட்டினியால் வாடுபவனும் யோகத்தில் வெற்றி பெறமுடியாது.
இது போலவே, நாள் முழுவதும் குறட்டை விட்டு தூங்குபவர்களுக்கும், எப்பொழுதும் தூங்காமல் விழித்துக் கொண்டே செயலாற்றுபவர்களுக்கும் யோகம் வெற்றியளிப்பதில்லை.
இந்த பொல்லாத தூக்கத்தினால். தான் பல விசயங்களை இழந்து விட்டதாக கண்ணதாசன் தான் எழுதிய அர்த்தமுள்ள இந்து மதம் என்னும் நூலில் குறிப்பிடுகிறார்.
கடுமையான உடல் உழைப்பும் கூடாது, சோம்பேறித் தனமாகவும் உட்கார்ந்திருக்க கூடாது, அதிகமாக உணவு உண்டு ருசிக்கு அடிமை ஆகவும் கூடாது, அதற்க்காக பட்டினி கிடந்தது உடலை வருத்தவும் கூடாது.
உண்பது,உறங்குவது, உழைப்பது என எல்லாவற்றிலும் அளவுடனும், நிதானமாகவும் செயல்படவேண்டியது அவசியம்.. இத்தகையவர்களே யோகமார்க்கத்தில் இயல்பாக வெற்றியடையலாம்.
யோகம் - சில தெளிவுகள்
Author: மதன்
ஆசையெனும் பெருங்கடலில் சிக்கித் தவிப்பதுதான் மனித வாழ்வென ஆகிவிட்ட சூழ்நிலையில், அத்தகைய மனிதர்களை மீட்டெடுக்க மனித குலத்திற்கு கிடைத்த அரும்பெரும் கொடைதான் யோகம்.
"யோகா" என்கிற வடமொழிச் சொல்லுக்கு, ஒருவரின் எண்ணங்களையும் , சிந்தனைகளையும் ஒருமுகப் படுத்தி அதனை செயல்படுத்துவது என்பதாக பொருள் சொல்லப் படுகிறது. இதனையே மனிதனாகிய ஜீவாத்மா, இறை நிலையான பரமாத்மாவோடு இணையும் செயல் என ஆன்மீக விளக்கமாகவும் கூறுகின்றனர்.
யோகத்தில் என்னதான் நடக்கிறது?
தூய்மையான எண்ணம், செயல், சிந்தனையுடன் உயர்வான இறை நிலையினை தியானித்து எமது உடம்பிலுள்ள அனைத்து சக்திகளையும் ஒன்று திரட்டி மனதை ஒருமுகமாக்கி, அதன் ஆற்றலை உயர்வான இறை நிலையோடு இனைத்துக் கொள்வதுதான் யோகாமுலம் நிறைவேறுகிறது.
யோக மார்க்கத்தில் ஈடுபடுவோரை யோகி என்கின்றனர். யோகி எனப் படுபவர் இனப துன்பங்களுக்கும், பந்த பாசங்களுக்கும், புகழ்ச்சிகளுக்கும், தூற்றுதல்களுக்கும் அப்பாற்பட்டவராக இருப்பர்.
எல்லா வினைகளுக்கும் எதிர் வினை நிச்சயம் உண்டு. இது மனிதனுக்கும் பொருந்தும், தான் செய்யும் ஒவ்வொரு செயலின் எதிர்வினையை எதிர்கொள்ளும் பக்குவம் இல்லாத போது, நிலை தடுமாறி சீர்குலைந்து துன்ப சகதியில் வீழ்ந்து அல்லல் படுகிறான்.
இத்தகைய துன்பங்களில் இருந்து தன்னை விடுவித்து பற்றற்ற நிலையை உருவாக்கி தருவதே யோகம் ஆகும். இப்படி விடுபட்டோரே யோகியாவர்.
ஆறறிவு படைத்த மனிதர்கள் அனைவரும் யோகமார்க்கத்தில் ஈடு பட்டு இறை நிலையினை அடையலாம். இதற்கு சாதி, மத, சமுதாய தடைகள் என எதுவும் கிடையாது. எனினும், யோகமார்க்கத்தில் வெற்றி அடைய சில நியதிகள் உள்ளன அவற்றை முறையாக கடைப்பிடிப்பவர்கள் குறுகிய காலத்திலேயே யோக மார்க்கத்தில் வெற்றியடையலாம்.
தீவினை அழிக்கும் புவனை யந்திரம்...
Author: மதன்
சித்தர்கள் வணங்கிய தெய்வத்தின் பெயர் வாலை என்பதாகும். ஆதி சக்தியின் பத்து வயது பெண் வடிவமே இந்த வாலை. வாலையை பூசிக்காத சித்தர்களே இல்லையெனலாம். வாலை தெய்வத்தைப் பற்றி மேலதிக விவரம் வேண்டுவோர் இந்தஇணைப்பில் சென்று வாசிக்கலாம்.
புவனை அம்மன் என்பவள் இந்த புவனமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் மகாசக்தியின் அம்சமாவாள். வாலை தெய்வம் குழந்தையின் அம்சமென்றால், புவனை அவளின் தாய் அம்சம் என்கின்றனர் சித்தர் பெருமக்கள். இந்த அன்னையின் அனுசரனையின்றி ஏதும் நடவாது என்பதும் சித்தர்களின் கூற்று. இந்த மகா சக்தியின் அருளினை ஒரு யந்திரத்தின் மூலம் ஒருவர் பெற முடியுமானால் எத்தனை ஆச்சர்யமான விஷயம்.
அத்தகைய யந்திரம் பற்றி அகத்தியர் தனது அகத்தியர் பரிபூரணம் என்னும் நூலில் விளக்கியிருக்கிறார்.
தெரிசிக்க இன்னமொரு கருவைக்கேளு
சிவசிவா புவனைபதி னாறுவீட்டில்
தெரிசிக்க வேணுமென்னா லந்தவீட்டில்
செம்மையுடன் ஓம்கிலி சிறிறீங்கென்று
தெரிசிக்கப் பதினாறு வீட்டிலேதான்
சிந்தையுடன் கால்தலையாய் மாரிக்கொண்டு
தெரிசிக்க மானதமாய்ப் பூசைசெய்து
திருவேற நூற்றெட்டு உருவேசெய்யே.
- அகத்தியர்.
உருவேத்திப் புவனையுட சக்கரத்தை
உண்மையுடன் மானிடர்க்குக் காட்டினாக்கால்
கருவொத்து நின்றுபல வியாதியெல்லாம்
கண்காணா தோடுமடா கருத்தாய்ப்பாரு
வருவித்த வஞ்சனைகள்ள பில்லிஏவல்
மகத்தான பிசாசுகளு மதிகெட்டோடும்
திருவுத்த குருவருளால் புவனைதானும்
தீர்க்கமுட வினைத்தபடி செய்வாள்பாரே.
- அகத்தியர்.
இந்த பாடலில் உள்ள குறிப்புகளின் படி வரைந்த யந்திரத்தின் படத்தினை கீழே கொடுத்திருக்கிறேன்.
இந்த யந்திரத்தினை மூன்றங்குல (3"x3") சதுரமான தங்கத்தால் ஆன தகட்டில் கீறிக் கொள்ளவேண்டும். யந்திரங்களை கீறுவதற்கென தனித்துவமான முறைகள் இருக்கின்றன. அந்த தகவல்களை முந்தைய பதிவுகளில் பார்க்கலாம். அதன் படியே இந்த யந்திரங்கள் கீறப்பட வேண்டும்.
இவ்வாறு கீறிய தகட்டினை தாம்பாளம் ஒன்றில் பட்டுத் துணி விரித்து அதில் வைத்து செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமை நாளில், கிழக்கு முகமாய் அமர்ந்து பின் வரும் மந்திரத்தை 108 தடவைகள் செபித்திட வேண்டும்.
"ஓம் கிலி சிறி றீங்"
இவ்வாறு செபித்து முடிந்ததும் தீர்வும், தேவையும் உள்ளவர்களுக்கு இந்த யந்திரத்தினை கட்டிவிட வேண்டுமாம். அதன் பின் அவர்களைப் பீடித்த நோய்கள் அனைத்தும் நீங்குவதுடன். அவர்களின் எதிரிகள், வஞ்சகர்கள் நீங்கிவிடுவார்களாம். பில்லி, சூனியம், ஏவல் போன்றவை எது இருந்தாலும் அது அவர்களை விட்டு நீங்கிவிடுமாம். அத்துடன் புவனை அம்மனின் அருளும் கிட்டும் என்கிறார் அகத்தியர்.
நம்பிக்கையுள்ளவர்கள் குருவினை வணங்கி முயற்சித்து பலன் பெற்றிடலாம்.
அஷ்ட கணபதியும், திரு நீற்று செபமும்!
Author: மதன்
அகத்தியர் தனது “அகத்திய வாத சௌமியம்” என்னும் நூலில் அஷ்ட கணபதி பற்றியும், அந்த கணபதியை வணங்கும் மூல மந்திரம் பற்றியும், அந்த மூல மந்திரத்தை பயன் படுத்தி பல்வேறு நோய்களை தீர்க்கும் முறையினையும் அருளியிருக்கிறார்.
ஆமப்பா அஷ்டதிசைக் கரசாய்நின்ற
அருமையுள்ள புலத்தியனே சொல்லக்கேளு
ஓமப்பா ஆதிகண பதிதானொன்று
உறுதியுள்ள மகாகண பதிதானொன்று
தாமப்பா நடனகண பதிதானொன்று
சங்கையுள்ள சக்திகண பதிதானொன்று
நாமப்பா சொல்லுகிறோம் ஒன்றாய்க்கேளு
நன்மையுள்ள வாலகண பதிதானொன்றே.
ஒன்றான உச்சிட்ட கணபதிதானொன்று
உத்தமமே உக்கிரகண பதிதானொன்று
நன்றான மூலகண பதிதானொன்று
நாட்டமுட அஷ்டகண பதிக்குமொன்றாய்க்
குன்றாத மூலமந்திர சூக்ஷந்தன்னைக்
குறிப்புடனே சொல்லுகிறேன் குணமாய்க்கேளு
நின்றாடு மூலமடா ஆதிமூலம்
நிலையறிந்து ஓம்கிலி அங்உங்கெண்ணே
ஆதி கணபதி, மகா கணபதி, நடன கணபதி, சக்தி கணபதி, பால கணபதி, உச்சிட்ட கணபதி, உக்கிர கணபதி, மூல கணபதி என எட்டு வகை கணபதி இருப்பதாக கூறுகிறார்.
இந்த எட்டு வகை கணபதிக்கும் ஒரே முலமந்திரம் இருக்கிறது. அது “ஓம் கிலி அங் உங்” என்பதாகும். இந்த மூல மந்திரத்தை எவ்வாறு பயன் படுத்தி பலனடைய வேண்டும் என்பதை பின் வருமாறு விளக்குகிறார்.
எண்ணமுடன் இடதுகையால் விபூதிவைத்து
ஏகாந்த கணபதியின் சுழியைநாட்டி
சொன்னமொழி தவறாமற் சுழியைப்பார்த்து
சுத்தமுடன் ஓம்கிலி அங்உங்கென்று
தன்னகமே சாட்சியாய் இருநூற்றெட்டுத்
தான்செபித்து விபூதியைநீ கடாட்சித்தாக்கால்
முன்னிறைந்த சற்குருவின் கடாக்ஷத்தாலே
மூர்க்கமுடன் தீருகிற வியாதிகேளே.
கேளப்பா சுரமுடனே சன்னிதீரும்
கெடியான குன்மமுடன் காசந்தீரும்
சூளப்பா வஞ்சினையும் ஏவல்தீரும்
சுருக்கான பலவிஷமுந் தோஷந்தீரும்
வாளப்பா கரப்பனொடு கெர்ப்பரோகம்
வயற்றிலுள்ள திரட்சியெல்லாம் வாங்கிப்போகும்
ஆளப்பா அஷ்டதிசைக் கரசாய்நின்று
ஆதியென்ற பூரணத்தில் அழுந்தலாமே.
இடதுகையில் சிறிதளவு வீபூதியை எடுத்துக் கொண்டு அதில் கணபதியின் சுழியான “உ” என்பதை எழுதிக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த திரு நீற்றைப் பார்த்து கணபதியின் மூல மந்திரத்தை இருநூற்றி எட்டு தடவைகள் செபிக்க வேண்டும் என்கிறார்.
இப்படி செபிக்கப் பட்ட விபூதியை அணிவதால் சுரமுடன் ஜன்னியும் தீருமாம், குன்மமுடன் காசமும் தீருமாம் வஞ்சனை, ஏவல்கள் தீருமாம். அத்துடன் பலவித தோஷங்கள் நீங்குமாம். இது தவிர கரப்பான், கெர்ப நோய்கள் வயிற்றில் இருக்கும் திரட்சிகள் எல்லாம் தீரும் என்கிறார் அகத்தியர்.
ஆச்சர்யமான தகவல்தானே!
பில்லி, சூனிய ஏவலில் இருந்து காத்துக் கொள்ள...!
Author: மதன்
பில்லி,சூனியம் பற்றி சித்தரியல் கூறும் தகவல்களை பலவற்றை முந்தைய பதிவுகளில் பார்த்திருக்கிறோம். அந்த வகையில் இம் மாதிரியான மாந்திரிக முறைகளினால் பாதிக்கப் பட்டவர்கள் தங்களை காத்துக் கொள்ளும் ஒரு எளிய வழியை இன்று பார்ப்போம்.
புலிப்பாணிச் சித்தர் தனது "புலிப்பாணி வைத்தியசாரம்" என்னும் நூலில் பில்லி, சூனிய ஏவலில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளும் ஒரு வழியை பின்வருமாறு அருளியிருக்கிறார்..
போமேடா கண்டங்கத் திரியின்மூலம்
பொங்கமுடன் காட்டு சீரகத்தின்மூலம்
வாமடா கொடியறுகின் மூலம்
வகைவகைக்கு பலம்நூறு நிறுத்திக்கொண்டு
தாமடா வெவ்வேறு பாண்டத்திலிட்டுத்
தயவான தூணிநீர் தன்னை வார்த்து
நாமடா வெந்திறக்கித் தினமொன்றாக
நலமாகத் தான்வார்க்க பில்லிஏவல்போமே.
- புலிப்பாணி வைத்தியசாரம்.
கண்டங்கத்தரியின் வேர் நூறு பலமும், காட்டு சீரகத்தின் வேர் நூறு பலமும், கொடியறுகு வேர் நூறு பலமும் எடுத்துக் கொள்ள வேண்டுமாம். (பழந்தமிழர்கள் பயன்படுத்திய அளவை முறைகளுக்கு ஈடான தற்போதைய அளவை முறைகளை முந்தைய பதிவொன்றில் விளக்கியிருக்கிறேன்). இப்படி சேகரித்த வேர்களை தனித்தனியே சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் தினம் ஒரு வேராக நறுக்கி பாத்திரத்தில் போட்டு நீர் விட்டு அவிக்க வேண்டுமாம். ஆறிய பின்னர் இந்த நீரில் மூன்று நாட்கள் குளித்தால் பில்லி, சூனியம், ஏவல் போன்றவை எது இருந்தாலும் அது போய்விடும் என்கிறார்.
செய்வினைகள் , பில்லி, சூனியம் இவற்றிலிருந்து நம்மை நாமே காத்துக் கொள்வது எப்படி...
Author: மதன்
“பாரப்பா அனுமந்தன் வசியக் கட்டு
பகன்றிடுவேன் பதறாது உற்று நோக்கு
யாரப்பா அறிவார் இவரின் கூத்து
ஆணவத்தை வென்றவர்கள் அறிவாரப்பா
கூறப்பா ஓம் ஹரி ஆதி யென்று
குற்றமில்லா நாராயணா மேலும்
சேரப்பா அகிலாண்ட நாயகா வென்று
சொல்லிடுவாய் நமோ நமோ வென்றே
என்றுமே அனுதினமும் ஓதுமனுமந்தா
லெங்காபுரி ராவண சம்மாரா
சென்றுமே சஞ்சீவி ராயா மேலும்
சீக்கிரமே ஓடிவா உக்கிரமாவே ஓடிவா
வென்று நீ படித்து படித்து வரும்
விதமான பில்லி சூனியம் பேய் பிசாசும்
கொன்றுமே பிரம ராஷசிகளைப் பிடி பிடி
குலுங்க அடி அடி கட்டுக் கட்டே
கட்டிப் பின் வெட்டு வெட்டுக்
கதற கொட்டு கொட்டு நீ
முட்டி நீ தாக்கு தாக்கு ஓம்
மேலும் ஆம் மிளைய வனுமந்தா
கட்டி வா வா சுவா ஹா கூறு நீயும்
கட்டிய மந்திரந் தன்னை மைந்தா
மட்டில்லா பஞ்ச முறை சொல்லி பின்னே
மயங்காமல் நீறேடுத்து தூவு தூவே
தூவினால் திக்கெல்லாம் கட்டலாச்சு
துப்பரவாய் செய்வினையும் நீங்கலாச்சு
குறிப்புடனே யேதிராவார் எது தாழ்வே
பாவி தானாக்கால் யேது மேன்மை ”
அனுமாரின் வசியக் கட்டு மந்திரத்தை கூறுகிறேன் கேள், யார் அறிவார் இவரின் திருவிளையாட்டை ஆணவத்தை வென்றவர்கள் மட்டுமே அறிவர். இனி மந்திரத்தைக் கேள்,
“ஓம் ஹரி ஹரி ஆதி நாராயணா அகிலாண்ட நாயகா நமோ நமோ என்று அனுதினமும் ஓதும் அனுமந்தா லங்காபுரி ராவண சம்ஹாரா சஞ்சீவி ராயா ஓடிவா உக்கிரமாக ஓடிவா அடுத்து அடுத்து வரும் பில்லி சூனியம் பேய் பிசாசு பிரம்ம ராட்ஷர்களை பிடி பிடி அடி அடி கட்டு கட்டு வெட்டு வெட்டு கொட்டு கொட்டு தாக்கு தாக்கு ஓம் ஆம் இளைய ஹனுமந்தா வா வா சுவாஹா"
திருநீற்றைக் கையில் எடுத்து மேற்படி மந்திரத்தை மனதார ஐந்து தடவை ஓதி உனைச் சுற்றி தூவிக் கொண்டால் உன்னை எந்த வித எதிரிகளும் அண்ட மாட்டார்கள், யாரும் உன்னை எதுவும் செய்ய முடியாது, செய்வினைகள் , பில்லி, சூனியம், பேய், பிசாசு எதுவும் கிட்டே நெருங்காது என்கிறார் அகத்தியர்.
இத்துடன் "பாவி தானாக்கால் யேது மேன்மை" என்றும் சொல்கிறார். பாவியாக இருந்தால் எது செய்தாலும் மேன்மை இல்லை என்கிறார் அகத்தியர்.
இதை செய்யும் முன் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம்.
இல்லையேல் பலிக்காது.
செங்கடுக்காய் கற்பம்
Author: மதன்
சித்த மருத்துவத்தில் மகத்துவமான மூலிகைகளில் கடுக்காயும் ஒன்று. இது மரவகையைச் சேர்ந்தது. இந்த மரங்கள் உள்ள நிலம், அதன் தன்மை மற்றும் அதன் காயின் வடிவத்தைப் பொறுத்து கருங்கடுக்காய், செங்கடுக்காய், வரிக்கடுக்காய், பால்கடுக்காய் என பலவகைகளாக கூறப் பட்டிருக்கிறது. இவை ஒவ்வொன்றும் தனித்துவமான மருத்துவ குணங்களைக் கொண்டவை. செங்கடுக்காய் கற்பம் ஒன்றினை செய்திடும் முறையினை இன்றைய பதிவில் பார்க்க இருக்கிறோம்.
ஒரு புத்தகமாய் தொகுக்கக் கூடிய அளவில் ஏராளமான எளிய கற்பவகைகளை முந்தைய பதிவுகளில் பகிர்ந்திருக்கிறேன். ஆனால் இந்த கற்பம் கொஞ்சம் சிக்கலான, ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய சிக்கலான தயாரிப்பு முறையினைக் கொண்டது. இந்த கற்ப முறையில் விஷத்தன்மை உடைய பாதரசம் பயன்படுத்தப் படுவதால் தயவு செய்து யாரும் இதனை பரிட்சித்து பார்க்க வேண்டாமென தாழ்மையுடன் கேட்டுக் கொள்வதோடு இந்த பதிவை ஒரு தகவல் பகிர்வாக மட்டுமே அணுகிட வேண்டுகிறேன்.
இந்த கற்பமுறை அகத்தியர் அருளிய "அகத்தியர் 12000" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.
இருக்கவே புலஸ்தியனே யின்னங்கேளு
யெழிலான காயாதி கற்பஞ்சொல்வேன்
பொருக்கவே பூவுலகில் கோடிகாலம்
பொங்கமுடன் யிருப்பதற்கு வுறுதிசொல்வேன்
நிருத்தமுடன் செங்கடுக்காய் சேர்தான்ரெண்டு
நிலையான சூதமது சேர்தானொன்று
திருத்தமுடன் மலைத்தேனி லூறவைத்து
திகழுடனே பூமிதனில் புதைத்திடாயே.
புதைக்கவே மண்டலமு மூன்றுசென்றால்
புகழான செங்கடுக்காய் சூதமுண்டு
சிதைத்துமே தேனதுவும் பொசித்துமேதான்
சிறப்பான மெழுகதுபோ லாகும்பாரு
விதையான கடுக்காயுஞ் சூதஞ்சேர்ந்து
வீறான காயகற்பம் மெழுகதாச்சு
சதையான செங்கடுக்காய் கற்பமாகி
தன்மையுள்ள தேகமது கற்றூணாமே.
கல்லான தூணதுவுங் கடுக்காய் தன்னால்
காயாதி கற்பமதுக் குறுதியாச்சு
வல்லான காயமது கொண்டபோது
வரைகோடி திறைகோடி யிருக்கலாகும்
புல்லான தேகமது கற்றூண்போலே
புகழான வாசியது கீழ்நோக்காகும்
நல்லதொரு காயமதைக் கொண்டபோது
நரைதிரையும் நாயகனே யில்லைகாணே.
வருகவே தேகமது தங்கம்போலாம்
வண்மையுள்ள செங்கடுக்காய் காயகற்பம்
ஒருவருமே யறியார்க ளிந்தபாகம்
ஒகோகோ சித்துமுனி கண்டதில்லை
திருவருளின் மனோன்மணியின் கடாட்சத்தாலே
திறமான காயகற்பஞ் சொன்னேனப்பா
கருவறிந்து வுளவறிந்து கருத்தாயுண்டு
காசினியில் கோடிவரை யிருக்கலாமே.
கடுக்காயின் நடுவே உள்ள கொட்டை பகுதி நஞ்சு என்பதால் அதனை நீக்கி விட்டு சதைப் பகுதியை மட்டுமே கற்பம் தயாரிக்க பயன்படுத்த வேண்டும். இவ்வாறு சுத்தி செய்யப்பட்ட செங்கடுக்காய் இரண்டு சேர் அளவும், சுத்தி செய்யப்பட்ட பாதரசம் ஒரு சேர் அளவும் எடுத்து அவற்றை ஒரு மட்பாண்டத்தில் இட்டு அது மூழ்கும் வரையில் மலைத்தேன் விடவேண்டுமாம். பின்னர் இந்த மட் பாண்டத்தின் வாயினை நன்கு மூடி சீலைமண் செய்து நிலத்தில் புதைத்துவிட வேண்டும் என்கிறார்.
மூன்று மண்டல காலம் நிலத்தில் புதைத்து வைத்து பின்னர் எடுத்தால், பாதரசமும் கடுக்காயும் சேர்ந்து மெழுகு போல் ஆகியிருக்குமாம். இந்த மெழுகினை காயகற்ப மெழுகு என்கிறார் அகத்தியர். பின்னர் இந்த மெழுகினை உண்டு வந்தால் நரை திரை நீங்கி, உடல் கற்தூண் போல் உறுதியாக இருப்பதுடன் உலகில் இறுதிக் காலம் வரை வாழலாம் என்கிறார்.
இந்த கற்பமுறைக்கு பத்தியம் ஏதும் கூறப்படவில்லை.
ஒரு மண்டலம் - 48 நாட்கள். மூன்று மண்டலம் -144 நாட்கள்.
எட்டு பலம் = ஒரு சேர். ஒரு பலம் 35 கிராம்.
குருவைத் தேடி....
Author: மதன்
"குரு பரம்பரை" என்கிற இந்த ஒற்றை தத்துவத்தின் மீது கட்டமைந்ததுதான் சித்தரியல். இங்கே குரு ஆதியும், அந்தமும் ஆனவர். அவருக்கு மிஞ்சியது என எதுவும் இல்லை. எல்லாம் அவரால் ஆனதே, அவரன்றி ஓரணுவும் அசையாது என்பதைப் போன்ற ஆழ்ந்த சத்தியமான கருத்தாக்கங்களின் வழி நிற்பதுதான் நம் சித்தர்களின் பாரம்பரியம். இந்த அடிப்படைகளுக்கு எவரும் விதிவிலக்கில்லை. ஆதி குருவான சிவனில் துவங்கி அவருடைய அணுக்க சீடர்களின் வழி வந்தவர்களே நம் சித்தர் பெருமக்கள்.
இப்போதெல்லாம் தெருவுக்கு நாலு குருமார்கள் விளம்பர பதாகைகளோடு வலிய வந்து ஞானம் தரவும், தீட்சை கொடுக்கவும் தயாராக இருக்கின்றனர். என்ன அவர்கள் வசூலிக்கும் தட்சிணைதான் கொஞ்சம் அதிகமாய் இருக்கிறது. இத்தகைய குருமார்களின் வேடம் கலைகிற போது மட்டுமே நாம் மெய்யான குருவைப் பற்றி யோசிக்கவும், தேடவும் விழைகிறோம். மெய்யான குரு என்பவர் யார்?, அவர் எங்கிருப்பார்? அவரை எப்படித் தேடி கண்டறிவது? என்கிற கேள்வியும் குழப்பமும் நம்மில் அநேகருக்கு உண்டு.
மெய்யான குருவை கண்டறிவது என்பது ஒரு வகையான வாழ்நாள் பயணம். நம்மில் பலரும் இப்படி மெய்யான குருவை தேடிக் கொண்டிருப்பவர்கள்தாம். குருவை தேடிக் கண்டு பிடிக்கும் இந்த பயணத்தை எப்படித் துவங்குவது அல்லது எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பதில்தான் பலருக்கும் குழப்பம் வருகிறது. இதற்கு நம் முன்னோர்கள் எளிய தீர்வினை அருளியிருக்கின்றனர்.
ஆம் மிக எளியவழி. அது இதுதான் "மாதா, பிதா, குரு தெவ்யம்" . ஆம் நம் பெற்றோரே நமது முதல் குரு, இதை உணர்ந்து நம் தாய் தந்தையரை போற்றிப் பணிந்து அவர்களின் வழி நடத்துதலை ஏற்றுக் கொண்டு அதன்படி நடக்கும் போது அடுத்த கட்டமாய் மெய்யான குரு நம்மைத் தேடி நம் முன்னே வருவார். இத்தகைய வழி நடத்துதலில்தான் நாம் எதைத் தேடுகிறோமோ அதையே அடைகிறோம்.
இந்த எளிய அடிப்படையை புரிந்துணர்ந்து பயணிக்க ஒருவருக்கு மெய்யான குருவின் தரிசனம் கிடைக்கும். குரு என்றால் இருளை நீக்குபவர் என்று பொருள். மெய்யான குரு நம் அக இருளை நீக்கக் கூடியவர். இத்தகைய குருவின் உதவியால் நம்மை நாமே உணரத் துவங்கும் போது, நான் என்கிற அகந்தை அழியும் போது நம்மில் மிளிர்ந்திருக்கும் ஒப்பற்ற பரம்பொருளை நாம் உணரக்கூடியவர்களாய் ஆகி விடுகிறோம். இதனையே சித்த நிலை என்கிறோம். தெய்வ நிலை என்பதும் இதுதான்.
மாணிக்க வாசகர் மற்றும் சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் இறைவனே குருவாக நேரில் வந்து உபதேசம் செய்ததாக புராணங்கள் சொல்கின்றன. இறைவனோ உருவமற்ற சூக்குமமானவர். அப்படி சூக்குமமான நிலையிலிருந்தே ஏன் குரு உபதேசம் செய்யாமல் மனிதவடிவில் நேரில் வந்து உபதேசம் செய்தார் என்ற கேள்வி எழுவது இயற்கையே.."ஈஸ்வரோ மனுஷ்ய ரூபேணா" என்கின்றன வேதங்கள். கடவுளாக இருந்தாலும் மனித உருவில் வந்து ஆகவேண்டும் என்பதே இதன் பொருள். ஆக சூக்கும வடிவில் இருக்கும் ஒருவர் அது கடவுளாக இருந்தாலும் குருவாக இருந்து போதிக்க முடியாது என்பது இவற்றில் இருந்து தெளிவாகிறது.
சித்தரியலிலும் சூக்கும நிலையில் இருந்து எந்த குருவானவரும் போதித்ததாக எந்தவித குறிப்புகளும் கிடைக்கவில்லை. மாறாக ஜீவ சமாதி அடைந்த ஒரு சித்தர் அதிலிருந்து மீண்டுவந்து உபதேசம் செய்து பின்னர் வேறொரு இடத்தில் மீண்டும் ஜீவ சமாதியடைந்ததாக குறிப்புக்கள் காணக் கிடைக்கின்றன.
அந்தவகையில் அகத்தியர் தனது "அகத்தியர் பரிபூரணம்" என்னும் நூலில் குருவானவரை அணுகி பயனடையும் வழிவகையை விளக்குகிறார்.
பார்க்கவென்று பலநூலுந் தேடிப்பார்க்க
பக்குவங்க ளில்லையடா வயதோகொஞ்சம்
மார்க்கமுடன் கொஞ்சவய தானாலென்ன
மகத்தான சற்குருவைத் தேடிப்பார்த்து
ஏர்க்கையுட னவர்மனதுக் கேற்க வல்ல
இன்பமுடன் தயவுவர நடந்தாயானால்
தீர்க்கமுடன் சத்திசிவ தீச்சைவைத்து
செம்மையுட னுதியந்தத் திறஞ்சொல்வாரே.
திறஞ்சொல் சகலகலை சேதியெல்லாம்
தீர்க்கமுள்ள மவுனமதின் திறமுஞ் சொல்வார்
பறஞ்சொல்வார் பராபரத்தின் பதிவுஞ்சொல்வார்
பதிவாக மவுனமதின் திறமுஞ் சொல்வார்
நிறஞ்சொல்வார் நிஷ்டையுட நேர்மை சொல்வார்
நெஞ்சங்கள் தான்வலிக்க நிதியுஞ்சொல்வார்
கறஞ்சொல்வார் காயாதி கற்பஞ்சொல்வார்
கண்மணியே மனதுவரக் கருதிக்கேளே
கேழ்க்கையிலே நீசெய்த நன்மைப்பாகம்
கிருபையுடன் சொல்லிடுவா ரப்போதானும்
வாழ்க்கையுள்ள தேகமடா வலுத்துப்போகும்
மகத்தான புத்தியுமே சொலிக்க லாச்சு
தாழ்க்காமல் பதவியிலே மேவலாச்சு
சதாகாலம் போதையுமோ தரிக்கலாச்சு
காக்கையிலே கால்வலுத்து நடக்கலாச்சு
கதிரான தீபவொளி காணலாச்சு
பல நூல்களைத் தேடிப் படித்து அறிந்து பக்குவமடைய நமது வாழ்நாள் போதாது அதனால் சிறுவயது என்றாலும் கூட மகத்தான் குருவை தேடியடைந்து, அவருக்கு அணுக்கமாய் இருந்த் அவர் மனம் கோணாதபடி நடந்து கொண்டு அவரிடம் கற்கவேண்டும் என்கிறார். அப்படி இருந்தால் மட்டுமே குருவானவர் சிவ சக்தி தீட்சை தந்து, சிறப்பான ஆதி அந்த திறன் எல்லாம் உபதேசிப்பாராம். சகல கலை செய்திகள் முதல் மௌனத்தின் திறங்கள், நிஷ்டை முறைகள், காயகற்ப வகைகள் என அனைத்தும் உபதேசிப்பாராம். அத்துடன் செய்த நன்மைகள் அதனால் கிடைக்கும் பலன்கள் முதல் கர்ம வினைகள் நீக்குவதற்கான வகைகளை சொல்லி சமாதி நிலைக்கும் வழிகாட்டுவாராம் என்கிறார்.
இப்படி நேரடியாக குருவுடன் இருந்து கற்றால் குருவானவர் கருணையுடன் எல்லாம் சொல்லிதருவாராம். அதனால் காயசித்தியும், புத்திக்கூர்மையும், பேரானந்த நிலையும் கிடைப்துடன் புருவ மத்தியில் தீப ஒளியையும் காணலாமாம். என்கிறார்.
சித்தர்கள் இராச்சியம் வலைப் பதிவில் 900 பதிவு இது. அந்த வகையில் இந்த பதிவினை எல்லாம் வல்ல குருவுக்கு சமர்ப்பிப்பதில் பெருமிதம் கொள்கிறேன். இந்த பயணத்தில் இதுகாரும் என்னோடு பயணித்துக் கொண்டிருக்கும் அத்தனை நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில்வாசிக்க...
புண்களை குணமாக்கும் மேற்பூச்சு
Author: மதன்
உடலில் ஏற்படும் புண்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஒரு மருந்தினை அகத்தியர் அருளியிருக்கிறார். இதனை காயங்களின் மீது மேற் பூச்சாக பூசி வந்தால், எல்லா வகையான புண்களும் ஆறிவிடுமாம். இந்த தகவல் அகத்தியர்அருளிய "அகத்தியர் இரணவைத்தியம்" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.
முருங்கை யிலையும் முன்னையுந் தும்பையும்
அரிக்கையும் நீலியும் அத்தியும் வேம்புடன்
எருக்குஞ் செருப்படி பேயத்தி வேலியும்
கருத்த நொச்சியும் கையாந் தகரையே
வெளுத்த வெள்ளையும் வெண்ணாச்சி புங்குடன்
வளுத்த பூவும் வருந்தி வகையொன்று
இடித்த சார்படி பெள்ளெண்ணெய் தான்படி
படிக்க துத்தமும் பாங்குடன் கெந்தியே
ஆன சூதம் வெட்பாலை பரங்கியும்
வான சிந்தூரம் மாதவ லிங்கமும்
காண வேவடிக் கடுகு பதந்தனில்
ஏன் மாயெடு நேர மறிந்தரோ
வருந்திச் சூலை வரும்வெடி போக்கிடும்
புருந்தித் தொண்டையும் போல்சதை சிங்கியும்
அரிகி ரந்தியும் ஆறாத புண்களும்
பரிப ரங்கியும் குட்டமும் பாறுமே
முருங்கை இலைச்சாறு, தும்பை இலைச்சாறு, அத்திப்பால், எருக்கிலைச்சாறு, பேயத்திச்சாறு, கருநொச்சி இலைச்சாறு, வெண்நொச்சி இலைச்சாறு, புங்கம்பூச்சாறு, முன்னை இலைச்சாறு, அவுரி இலைச்சாறு, வேம்பு இலைச்சாறு, செருப்படை இலைச்சாறு, உத்தாமணிச்சாறு, கரிசாலைச்சாறு, புங்கம்பால், நல்லெண்ணெய், பாதரசம், படிக்காரம், பரங்கிப்பட்டை, வெள்ளைப் பாஷாணம், கெந்தகம், வெட்பாலை அரிசி, லிங்க சிந்தூரம், ஆகியவற்றைச் வகைக்கு அரைப்பலம் வீதம் சேகரித்துக் கோள்ள வேண்டுமாம்.
இவற்றில் படிக்காரம், பரங்கிப்பட்டை, வெள்ளைப் பாஷாணம், கெந்தகம், வெட்பாலை அரிசி, லிங்க சிந்தூரம், ஆகியவற்றை நன்கு பொடித்து ஒரு பழைய மட்பாண்டத்தில் சேகரித்துக்கொள்ள வேண்டுமாம் இவற்றுடன் மற்றைய பொருட்களையும் சேர்த்துக் கலந்து, மட்பாண்டத்தை அடுப்பிலேற்றி கடுகுத்திரள் பக்குவத்தில் காய்ச்சி வடித்து சேமித்துக் கொள்ள வேண்டுமாம்.
இந்த கரைசலில் தேவைக்கேற்ப, வெடிசூலை, சிங்கிப் புண், அரிகிரந்தி போன்ற ஆறாத ரணங்கள், பரங்கிப்புண், குஷ்டரணம் போன்ற சகலவித ரணங்களும் மேற்பூச்சாக பூசிவர குணமாகும் என்கிறார்.
அகத்தியர் அருளிய வெள்ளி பற்பம் (பஸ்பம்)
Author: மதன்
பற்பம் அல்லது பஸ்பம் என்பது சாம்பலைக் குறிக்கும். சித்த மருத்துவத்தில் தேவையான சரக்குகளை தனியாகவோ அல்லது சேர்த்தோ புடம் போட்டோ, வறுத்தோ, எரித்தோ, ஊதியோ வெளுக்கும் படி சாம்பலாக செய்வதையே பற்பம் என்கிறோம். இந்த பற்பங்கள் பல வகைப் படும். தேவைக்கு ஏற்ப உலோகங்களை அல்லது நவரத்தினங்களைக் கொண்டு பற்பங்களை தயாரிக்கும் முறையினை நமது முன்னோர்கள் அருளியிருக்கின்றனர்.
வெள்ளியை பற்பமாக்கும் ஒரு முறையினை முன்னரே இங்கேபகிர்ந்திருக்கிறேன். புதியவர்கள் இந்த இணைப்பில் சென்று அதனை வாசிக்கலாம். இந்த பற்பங்கள் உடல் வலிவையும், பொலிவையும் மேம்படுத்தக் கூடியவை. அந்த வகையில் அகத்தியர் அருளிய வெள்ளி பற்பம் ஒன்றினைப் பற்றி இன்றைய பதிவில் பார்ப்போம்.
இந்த தகவல் அகத்தியர் அருளிய "அகத்தியர் வைத்திய ரத்தின சுருக்கம்" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.
கேளப்பா வெள்ளியது தகடுதட்டிக்
கெடியான ரசபற்பம் வங்கபற்பம்
நாளப்பா நாகமொடு மூன்றுநேராய்
நலமாக நீரா லரைத்துக்கொண்டு
கேளப்பா வெள்ளிக்குச் சமனாய்ப்போடு
விருதான ரவியுலர்த்திச் சீலைசெய்து
சூளப்பா சுண்ணாம்புக்குள்ளே வைத்து
துடியாக முழப்புடத்தில் தூக்கிவாங்கே.
வாங்கியதோர் பற்பமதைப் பதனம்பண்ணு
வகையாக பணவெடைதான் தேனிற்கொள்ள
தேங்கிதோர் கல்லடைப்புச் சதையடைப்புத்
தீராத திரிச்சுரங்கள் தீரும்தீரும்
ஏங்கியதோர் காசமோ டிளைப்புந் தீரும்
மிளைக்குமே லிங்கப்புற்று யோனிப்புற்று
பாங்கியே கிரந்தி யரிமேகமெல்லாம்
பறக்குமடா வின்னமொரு பற்பங்கேளே.
வெள்ளியை கெட்டியான தகடாக மாற்றிக் கொள்ள வேண்டும். ரச பற்பம், வங்க பற்பம், நாகபற்பம் இவை மூன்றையும் நீர் விட்டு நன்கு அரைத்து, அந்த கலவையை கெட்டியாக அடித்த வெள்ளித் தகட்டின் இருபுறமும் சமமாக பூசி வெய்யிலில் உலர வைத்து எடுத்துக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அதற்கு சுண்ணாம்புச் சீலை செய்து, சுண்ணாம்புக் குகைக்குள் வைத்து முழப் புடம் போட்டால் நல்ல பதமான வெள்ளி பற்பம் கிடைக்கும். இதனை சேமித்துக் கொள்ள வேண்டும் என்கிறார்.
இந்த பற்பத்தில் பண எடை அளவு எடுத்து தேனில் நன்கு குழைத்து உண்டு வந்தால் கல்லடைப்பு, சதையடைப்பு, வாத, பித்த சிலேத்தும சுரங்கள், காசம், ஈளை, இளைப்பு, லிங்கப்புற்று, யோனிப் புற்று, கிரந்தி, அரிமேகம் ஆகியவை நீங்கும் என்கிறார்.
இந்த மருத்துவ முறைக்கு பத்தியம் ஏதும் கூறப்படவில்லை.
விஷக் கடி வைத்தியம்
Author: மதன்
பாம்பு, தேள், பூரான், தேனீக்கள், வண்டுகள், எலி போன்ற உயிரினங்கள் தீண்டினால் நம் உடலில் பரவும் விஷத்தை முறிக்கவும், அதன் தீவிரத்தைக் குறைக்கவும் பல்வேறு வகயான எளிய தீர்வுகளை நம் முன்னோர்கள் கைக் கொண்டிருந்தனர். இது தொடர்பில் முன்னரே சில தகவல்களை இங்கு பகிர்ந்திருக்கிறேன். அந்த வரிசையின் இன்று அகத்தியர் அருளிய மருந்தொன்றினைப் பற்றி பார்ப்போம்.
இந்த தகவல் அகத்தியர் அருளிய "அகத்தியர் பரிபூரணம்" என்னும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது. அந்த பாடல் பின்வருமாறு....
வேமப்பா விஷங்களுக்கும் குழம்பு கேளு
வேப்பம்முத்து ரசகெந்திது ருக வெள்ளை
வெள்லையோடு மனோசிலையும்பெருங் காயமேழு
மேன்மையாய் வகைக்கரைக்க ழஞ்சு கூட்டி
தள்ளையென்ற நேர்வாளஞ் சுத்தி செய்து
தருவாகக் கழஞ்சதுவு மேழு மொன்றாய்
வள்ளவே கல்வத்திலிட் டெருக் கம்பால்
மாட்டியரை ஒருசாமமெ ழுகு போல
துள்ளவே பின்புநிம்ப நெய்தான் விட்டுத்
துருசாக வொருசாமம ரைத்துக் கேளே.
அரைத்துமதைக் கொம்புச்சிமிழ் தன்னில் வைத்து
அப்பனே விஷந்தீண்டி வந்த பேர்க்கு
திறத்துடனே பயிறளவுவெற்றி லையில் லீய்ந்து
தீர்க்கமுடன் கடிவாயிற் கொஞ்சம் பூச
பறந்துவிடுஞ் சகலவிஷம் போகு மென்று
பரமனது வடமொழிநூல் பாக மப்பா
உரைத்துவிட்டேன் பத்தியத்தான்ப சுமோ ராகும்
உத்தமனே சந்நிக்குக லிக்கங் கேளே.
வேப்பம் முத்து, ரசம், கெந்தகம், துருசு, வெள்ளைப் பாடாணம், மனோசிலை, பெருங்காயம், ஆகியவற்றை வகைக்கு அரைக்கழஞ்சு அளவு எடுத்து, அதனுடன் சுத்தி செய்த நேர்வாளம் ஏழு கழஞ்சு சேர்த்து, இந்த கலவையை கல்வத்திலிட்டு, எருக்கம்பால் சேர்த்து ஒரு சாம நேரம் அரைக்க கலவையானது மெழுகு பதத்தில் வருமாம். அப்போது அதில் வேப்பெண்ணெய் விட்டு மேலும் ஒரு சாமம் அரைத்து எடுத்த மருந்தினை, கொம்பினால் ஆன சிமிழில் சேகரித்துக் கொள்ள வேண்டுமாம். இந்த மருந்து கெட்டியான மெழுகு பதத்தில் இருக்கும்.
எந்தவகையான விஷக் கடியாக இருந்தாலும், நாம் சேமித்து வைத்த மெழுகில் இருந்து பயறு அளவு எடுத்து அதனை வெற்றிலையில் வைத்து மடித்து பாதிக்கப் பட்டவரிடம் உண்னக் கொடுக்க வேண்டுமாம். பிறகு அந்த மெழுகில் இருந்து சிறிதளவு எடுத்து கடிவாயிலும் பூசிவிட உடலில் இருந்த விஷங்கள் எல்லாம் நீங்கிவிடும் என்கிறார்.
ஆச்சர்யமான தகவல்தானே!
இதற்கு பத்தியமாக மருந்துண்ணும் நாளில் பசு மோரை நீக்க வேண்டும் என்கிறார்.
ஆர்வமும், வாய்ப்பும் உள்ளவர்கள், காலத்தே மறைந்து போன இது போன்ற நம் மருத்துவ முறைகளைப் பற்றி மேலதிக ஆய்வு செய்திடலாம்.
அரு மருந்தாகும் தூதுவளை லேகியம்
Author: மதன்
சமஸ்கிருத மொழியில் உள்ள அவலேஹம் என்கிற சொல்லே நாளடைவில் மருவி 'லேகியம்' என்றானது. தூய தமிழில் இதனை இளகல் அல்லது இளகம் என்று அழைப்பதே சரியானது. பொதுவில் லேகியம் என்பவை தண்ணீரைப் போலவோ, அல்லது குழம்பு போலவோ இல்லாமல் கெட்டியான நீர்ம நிலையில் இருக்கும். நோய் தீர்க்கும் இந்த இளகங்களைப் பற்றி நம் முன்னோர்கள் அருளிய பல்வேறு முறைகளை முன்னரே பகிர்ந்திருக்கிறேன். அந்த வரிசையில் இன்று தூதுவளை லேகியம் பற்றி பார்ப்போம்.
அகத்தியர் அருளிய "அகத்தியர் பரிபூரணம்" என்னும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்ட தகவல் இது. பாடல் பின்வருமாறு....
பூரணமா மின்னமொரு லேகி யங்கேள்
புலத்தியனே நானூற்றில்பு னித மாக
காரணமா முருங்கைப்பூதூது வளம் பூவும்
கணக்காக வகைக்குநால் பலம் நிறுத்து
தாரணியில் சதாவேரிக்கி ழங்கு மூணு
தருவான நன்னாரிவேர்ப லமி ரண்டு
காரணமாய் நிலப்பனையுநெ ருஞ்சி முள்ளும்
கருவாக வகைக்கொருப லமாய்க் கூட்டே.
கூட்டியே சூரணித்துப்ப சுவின் பால்தான்
குறுணியிலே போட்டுமேகு ழம்பு போலே
காட்டியே வற்றிவரும் போது மைந்தா
தருவான சீனிபலம்பண்ணி ரெண்டும் போட்டு
காட்டியே கிளரயிலேப சுவி நெய்தான்
நலமாகப் படியரைத்தேனு ழக்கு விட்டு
கெட்டியாய் லேகியம்போற் கிண்டி வாங்கிக்
கிருபையுள்ள கணபதியை வணங்கே
செய்துமே தான்றிக்காயளவு கொள்ளத்
தீருகிற வியாதிதனைத் திறமாய்க் கேளு
எய்துகின்ற பிரமியமு மேக நோயும்
இன்பமுள்ள எலும்புருக்கிப்பி ரமே கந்தான்
பெய்துமே மண்டலத்திற் றீர்ந்து தானும்
பெலமுண்டா யிந்திரியபெ லமுண் டாகும்
செய்துமே லேகியத்தில்மே கநோ யெல்லாந்
தீருமடா பத்தியமோ யில்லை பாரே.
முருங்கைப்பூ, தூதுவளைப்பூ ஆகியவற்றில் தலா நான்கு பலம் எடுத்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும். (ஒரு பலம் என்பது தற்போதைய அளவைகளின் படி சுமார் 35 கிராம் ஆகும். ). இந்த பூக்களுடன் தண்ணீர்விட்டான் கிழங்கு மூன்று பலம், நன்னாரிவேர் இரண்டுபலம், நிலப்பனைகிழங்கு, நெருஞ்சிமுள் ஆகியவைகளை தலா ஒரு பலம் சேர்த்து கொள்ள வேண்டுமாம். அந்த கலவையைச் சுத்தி செய்து இடித்துச் சூரணமாக செய்து கொள்ள வேண்டும் என்கிறார்.
இந்த சூரணத்துடன், ஒரு குறுணி அளவு பசும்பால் கலந்து அடுப்பில் வைத்து எரித்தால் பால் கொதித்து குழம்புபோல் நன்கு சுண்டி வருமாம். அந்த சமயத்தில் அதில் பன்னிரெண்டு பலம் சீனி சர்க்கரையும், அரைப்படி பசுநெய்யும், ஓர் உழக்கு தேனையும் சேர்த்துக் நன்கு கிளறி எடுத்து சேமித்துக் கொள்ள வேண்டுமாம்.
சேமித்த லேகியத்தில் தான்றிக் காயளவு எடுத்து அதனை காலை மாலை என இரு வேளையும் தொடர்ந்து நாற்பத்தி எட்டு நாட்கள் உண்டுவர பிரமியம், எலும்புருக்கி, பிரமேகம், மேக நோய்கள் அனைத்தும் குணமாகுமாம். அத்துடன் இந்திரிய பலமும் உண்டாகும் என்கிறார் அகத்தியர்.
* பிரமியம் என்பது விந்து அடைப்பு, விந்து ஒழுக்கு , விந்து நீர்த்துப் போதல் போன்ற குறைபாடுகளைக் குறிக்கும் பொதுச் சொல்.
* பிரமேகம் என்பது பல்வேறு உடல் நோவுகளைக் குறிக்கும் பொதுச் சொல். சித்த மருத்துவத்தில் 21 வகையான பிரமேகம் உள்ளது.
* மேக நோய் என்பது "சிபிலிஸ்" எனும் பாலியல் நோயைக் குறிக்கும்.
* சூரணம் என்பது ஒருவகையான மருந்து தயாரிக்கும் முறை. தேவையான மூலிகை சரக்குகளை சுத்தம் செய்து அவற்றை வெயிலில் நன்கு உலர்த்தி அல்லது நெருப்பில் வறுத்து பின்னர் இடித்து சலித்து எடுப்பதையே சூரணமாக்குதல் என்கின்றனர்.
குறிப்பு: பதிவுகளை தட்டச்சுவதில் உள்ளம் சிரமம் காரணமாகவே தற்போது சிறிய பதிவுகளாய் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். அடுத்த சில வாரங்களுக்கு இந்த நிலையே நீடிக்கும் என்பதால் தற்போதைக்கு மின் நூல்களையோ, நெடுந்தொடர்களையோ பகிர இயலாத நிலையில் இருக்கிறேன். தாமதத்திற்கு பொறுத்தருள வேண்டுகிறேன்.
இது வரை பகிர்ந்த மின்னூல்களை இங்கே தரவிறக்கிக் கொள்ளலாம்.
வசிய திருநீறு...
Author: மதன்
கோவிலில் இறைவனை தரிசித்த பிறகும், பெரியவர்கள், ஆன்றோர்களை சந்தித்து விடை பெறும்போதும் அவர்கள் விபூதி வழங்கி ஆசிர்வதிப்பது காலம் காலமாய் நடைமுறையில் இருக்கும் ஒரு வழக்கம். கால ஓட்டத்தில் பெரியவர்களிடம் விபூதி வாங்கிடும் பழக்கம் அருகி விட்டாலும், கோவிலில் இந்த மரபு இன்றும் வழக்கில் இருக்கிறது. இந்த விபூதியானது அதனை அணிந்து கொள்கிறவர்களை தீவினைகளில் இருந்து காப்பாற்றும் கவசமாய் இருப்பதுடன், செல்வத்தையும் தருகிறது. இது பொது விதியாக இருந்தாலும், சிலர் தங்கள் தேவைகளை, லட்சியங்களை நிறைவேற்றிடும் பொருட்டு வசிய விபூதியை உருவாக்கி பயன் படுத்தி இருக்கின்றனர்.
இத்தகைய வசிய திருநீற்றைத் தயாரிக்கும் பல்வேறு முறைகளை சித்தர்களின் நூல்களிலும், மலையாள மாந்திரிக நூல்களிலும் காணமுடிகிறது. அப்படியான ஒரு வசிய திருநீற்றினை தயாரிக்கும் முறையினை இன்றைய பதிவில் பகிர்ந்து கொள்கிறேன். அகத்தியரின் "அகத்தியர் பரிபூரணம்" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்ட தகவல் இது. இதன் உண்மைத் தன்மை ஆய்வுக்கும் விவாதத்திற்கும் உரியது. எனவே இதனை ஒரு தகவல் பகிர்வாக மட்டும் அணுகிட வேண்டுகிறேன்..
கிருபையுள்ள புலத்தியனேவ சிய மொன்று
கெணிதமுடன் சொல்லுகிறே னன்றாய் கேளு
துருவமுள்ள வுருத்திரபூமி யிலே சென்று
சுகமாக வெந்தஅஸ்திநீயெ டுத்து மைந்தா
அருவமுள்ள அஸ்தியுடன் விஷ்ணு மூலி
ஆதிசத்தி தன்னுடைய வேருங் கூட்டிக்
கருவையினிச் சொல்லுகிறேன்க லசப் பாலாற்
கருணையுடன் றானரைத்தே யுண்டை செய்யே.
செய்யடா உருண்டைதனையு லர வைத்துச்
செம்மையுட னெருவடுக்கிப் புடத்தைப்போடு
மெய்யடா சொல்லுகிறே நீறிப் போகும்
வேகாந்த மானதொரு நீற்றை வாங்கி
வையடா சவ்வாதுடனேபு னுகு சேர்த்து
மார்க்கமுடன் அங்கெனவே லட்ச மோதி
மையமென்ற நெற்றியிலேவி பூதி பூசி
மார்க்கமுடன் அரசரிடஞ் சென்று பாரே.
சென்றுமிக நின்றுடனேயி ராச மோகம்
சிவசிவா செகமோகம்ஸ்ரீவ சிய மாகும்
அண்டர் பிரானருள் பெருகிவ சிய முண்டாம்
அப்பனே ஓம்கிலியு றீயு மென்று
பண்டுபோலி லட்சமுரு வேற்றிப் பின்னர்
பாலகனே லலாடமிசைப் பூசிச் சென்றால்
தொண்டரென்றே சத்துருக்கள்வ ணங்கு வார்கள்
துஷ்டனென்ற மிருகமெல்லாம்வ சிய மாமே.
ஆதி குருவான சிவன் விரும்பி வசிக்கும் பூமியான இடுகாட்டிற்குச் சென்று எரியும் சுடலையில் இருந்து நன்கு வெந்த அஸ்தியை சேகரித்து எடுத்து வந்து, அதன் எடைக்கு சம அளவில் விஷ்ணு கிரந்தியின் வேரினைச் சேர்த்து கல்வத்தில் இட்டு அதனோடு தாய்ப்பால் சேர்த்து நன்கு அரைத்து உருண்டையாக செய்து கொள்ள வேண்டுமாம். இந்த உருண்டைகளை சூரிய ஒளியில் நன்கு உலரவிட்டு எடுத்து நான்கு வரட்டிகளைக் கொண்டு புடமிட வேண்டுமாம். இதனால் அந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும் என்கிறார். இந்த திருநீற்றுடன் சவ்வாதும், புனுகும் சேர்த்து ஒரு சிமிழில் சேகரித்துக் கொள்ள வேண்டுமாம்.
இந்த திருநீற்றில் இருந்து சிறிதளவு எடுத்து கைகளில் வைத்துக் கொண்டு "அங்" என்று லட்சம் உரு செபித்து பின்னர் அதனை நெற்றியில் பூசிக்கொண்டு அரசரிடம் சென்றால் அரசர்கள் வசியமாவார்களாம். இது இராஜவசியம் என்றும் அத்துடன் செக மோகமும் பெண்வசியமும் உண்டாகும் என்கிறார்.
மேலும் இந்த திருநீற்றில் இருந்து சிறிதளவு எடுத்து கைகளில் வைத்துக் கொண்டு "ஓம்கிலிறீ" என்று லட்சம் உரு ஓதி நெற்றியில் விபூதியைப் பூசிக் கொள்ள வேண்டுமாம் அப்போது எதிரிகளும் வணங்கும் நிலை உண்டாவதுடன் தீங்கு செய்யும் விலங்குகளும் வசியமாகும் என்கிறார்.
ஈரேழு பதினாலு உலகங்களையும் பார்த்திட....!
Author: மதன்
"ஈரேழு பதினாலுலோகம்" என்றொரு சொற்றொடரை நம்மில் பலரும் கேள்விப் பட்டிருப்போம். இந்து வேத மரபில் மொத்தம் பதின்நான்கு உலகங்கள் இருப்பதாக நம்பப் படுகிறது. அவை நாம் வாழும் இந்த பூமி என்கிற பூலோகத்தின் மேலும் கீழுமாய் அமைந்திருக்கின்றன. பூமியின் மேலே ஆறு உலகங்களும், பூமியின் கீழே ஏழு உலகங்களும் இருக்கின்றனவாம்.
இந்த பதின்நான்கு உலகங்களையும் நம் கண்களால் பார்ப்பது எப்படி என்கிற தகவலைத்தான் இன்றைய பதிவில் பார்க்க இருக்கிறோம். இந்த தகவல் அகத்தியர் அருளிய "அகத்தியர் பூரணகாவியம்" எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.
அகத்தியர் அருளிய முறையினை பார்ப்பதற்கு முன்னர் இந்த ஈரேழு பதின்நான்கு உலகம் பற்றி சுருக்கமாய் பார்த்துவிடுவோம்.
நாம் வாழும் இந்த பூமியின் மேலே உள்ள ஆறு உலகங்கள் பின்வருமாறு....
சத்யலோகம்
தபோலோகம்
ஜனோலோகம்
மஹர்லோகம்
சுவர்லோகம்
புவர்லோகம்
இந்த ஆறு உலகங்களின் கீழேதான் ஏழாவதாக நாம் வாழும் இந்த "பூலோகம்" அமைந்திருக்கிறது. இனி பூமிக்குக் கீழே உள்ள ஏழு உலகங்கள் பின்வருமாறு...
அதலலோகம்
விதலலோகம்
சுதலலோகம்
தலாதலலோகம்
மகாதலலோகம்
ரஸாதலலோகம்
பாதாளலோகம்
இந்த பதின்நான்கு உலகங்களைப் பற்றியும், அதன் தலைவர்கள், அங்கு வாழ்கிறவர்கள், அந்த உலகத்தின் தன்மை என தனித்துவமான வரையறைகள் கூறப் பட்டிருக்கின்றன. இதன் படி பூமியின் மேல் உள்ள ஆறு உலகங்கள் நன்மை தரும் உயர் நிலை உலகங்களாகவும், பூமியின் கீழ் உள்ள ஏழு உலகங்கள் தீய சக்திகளின் குறியீடாகவும் அமைந்திருக்கிறது.
அதாவது மேல் நிலையில் உள்ள சத்யலோகம் படைப்புக் கடவுளான பிரம்மாவின் உலகமாகவும், கீழ் நிலையில் உள்ள பாதாள உலகம் வாசுகி என்கிற பாம்பின் உலகமாகவும் குறிப்பிடப் பட்டிருக்கிறது.
மிகவும் விரிவாக விளக்கிட வேண்டிய ஒன்றினைப் பற்றி இயன்ற வரை சுருக்கமாய் பகிர்ந்திருக்கிறேன். ஏனெனில் நம் பதிவின் நோக்கம் இவைகளை அலசுவது இல்லை. இந்த உலகங்களை வெறும் கண்களினால் பார்க்கும் அகத்தியரின் வழிமுறை ஒன்றினை பகிர்வதே இந்த பதிவின் நோக்கம்.
பதின்நான்கு உலகங்களைப் பற்றிய தகவல்களை தேரையர் உள்ளிட்ட பல்வேறு சித்தர் பெருமக்கள் தங்கள் பாடல்களின் ஊடே பகிர்ந்திருக்கின்றனர். அகத்தியர் தனது "அகத்தியர் பூரணகாவியம்" என்னும் நூலில் சத்தியலோகம் முதல் கீழ் உலகமான பாதாள உலகம் வரை நம் கண்களினால் பார்க்கும் சக்தியைத் தரும் ஒரு மையினைப் பற்றி பின்வருமாறு விளக்கியிருக்கிறார்.
ஆமப்பா யின்னமொரு வசியஞ்சொல்வேன்
அண்டரண்ட பதங்களெல்லா மங்கேகாணும்
நாமப்பா சொல்லுகிறோம் புலத்தியாகேள்
நல்லகரு ஆமையிலே முன்றானாமை
ஓமப்பா குருவருளால் கண்டுதேறி
உறுதியுடன் மனதறிவால் கருவைவாங்கி
தாமப்பா சிவந்தபட்டு தன்னால்சுத்தி
சங்கையுடன் நெய்துவைத்த தீபமேற்றே.
ஏற்றிநன்றாய் கருகிநின்ற கருவைப்பார்த்து
யின்பமுடன் தானெடுத்து கல்வத்திட்டு
பார்த்திபனே காரெள்ளுத் தயிலத்தாலே
பதிவாகத் தானாட்டி வழித்துக்கொண்டு
போற்றியந்த மைக்கினிகர் சவ்வாதுசேர்த்து
பத்தியுடன் தானிருந்து திலர்தம்போட்டால்
நால்திசையும் வெகுதூரங் கண்ணோட்டம்பார்
நன்மையுடன் மேல்கீழும் தன்றாய்ப்பாரே.
பார்க்கயிலே அண்டவரை நன்றாய்க்காணும்
பத்தியுடன் பூமியில் பாதாளந்தோணும்
ஏற்கவே பாதாளந் தன்னைக்காணில்
இருநிதியு மொருநிதியா யேகந்தோணுங்
காக்கவே பெருநிதியை யகலத்தள்ளி
கயிலாச பூரணமாய் நிதியைத்தேடு
மார்க்கமுடன் கயிலாச நிதியைத்தேட
வந்துதடா அஷ்டாங்க வளமைதானே.
கருஆமையில் முன்றானாமை என்றொரு வகை இருக்கிறதாம். அதை குருவருளால் கண்டு அதன் கருவை எடுத்துக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அந்தக் கருவை சிவப்பு பட்டுத் துணியால் சுற்றி திரியாக செய்து கொள்ள வேண்டுமாம். அந்தத் திரியை விளக்கில் வைத்து நெய்விட
தீபமேற்ற வேண்டுமாம். தீபமேற்றினால் திரி எரிந்து அந்தக் கருவானது கருகி இருக்குமாம்.
அப்போது அதை எடுத்து கல்வத்தில் போட்டு காரெள்ளுத் தைலம் சேர்த்து கடைந்து எடுத்தால் மையாகுமாம். அந்த மைக்கு சம எடை சவ்வாது சேர்த்து திலகமாக இட்டு நான்கு திசையையும் சுற்றிப் பார்த்தால் வெகு தூரம் வரை தெளிவாய் தெரியுமாம்.
அப்படியே மேலும் கீழும் நன்றாகப் பார்த்தால் மேலே பார்க்கும் போது அண்டம் வரையும், கீழே பார்க்கும் போது பாதாளம் வரையும் தெளிவாகத் தென்படுமாம். அப்போது அங்கே பாதாளத்தில் சங்கநிதி, பதுமநிதி என்னும் இரண்டு நிதிகளும் ஒன்றாகி பெருநிதியாகத் தோன்றுமாம். அப்போது அவற்றையெல்லாம் ஒதுக்கி விட்டு பூரணத்தில் மனதை நிலை நிறுத்தி கைலாய நிதியைத் தேட, அட்டாங்க வளமைகள் அனைத்தும் வந்து சேரும் என்கிறார் அகத்தியர்.
ஆச்சர்யமான தகவல்தானே!, வேறொரு தகவலுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.
அஞ்சனா தேவியின் அருளைத் தரும் மந்திரம்.
Author: மதன்
சித்தர் பெருமக்கள் வணங்கிய ஒரு பெண் தெய்வத்தைப் பற்றியும், அந்த தெய்வத்தின் அருளை பெறுவதற்கான மந்திரம் மற்றும் தந்திரத்தை இன்றைய பதிவில் பார்க்க இருக்கிறோம். சித்த மரபில் வாலை என்கிற பெண் தெய்வ வழிபாடு பற்றி முந்தைய பதிவுகளில் பார்த்திருக்கிறோம். வாலை தெய்வம் எத்தனை சக்தி வாய்ந்தது, அதன் மகத்துவம் பற்றிய தகவல்களை இந்த இணைப்பில் சென்று வாசிக்கலாம்.
இன்று நாம் பார்க்க இருக்கும் தெய்வத்தின் பெயர் "அஞ்சனா தேவி" அல்லது "அஞ்சனை தேவி". இந்த தெய்வத்தைப் பற்றிய தகவல்கள் என பார்த்தால் அரிதாய் ஒன்றிரண்டு குறிப்புகளே எனக்குக் கிடைத்திருக்கிறது. ஆரம்பத்தில் இந்த தெய்வம் வாயு புத்திரனான ஆஞ்சனேயரின் தாயாராக இருக்கும் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் அதற்கான சாத்தியங்கள் குறைவு என்பதாலும், அத்தகைய குறிப்புகள் வேறெங்கும் இல்லாததினாலும் இந்த தெய்வம் வாலையைப் போல தனித்துவமான தன்மைகளையும், பண்புகளையும் கொண்டவளாய் இருக்க வேண்டும்.
சித்தர் பெருமக்களைப் பொறுத்தவரையில் அவர்களின் படைப்புகளின் ஊடே புராணங்களுக்கும், மிகைப் படுத்திய கதைகளுக்கும் இடமில்லை. எனது சிறிய அனுபவத்தில் நான் பார்த்த வரையில் அவர்களின் ஒவ்வொரு சொல்லுக்கும், செயலுக்கும் பின்னால் ஏதோ ஒரு காரணமோ, காரியமோதான் இருக்கிறது. அந்த வகையில் இந்த அஞ்சனா தேவியின் அருளை பெறுவதற்கான மந்திரத்தையும், அதை செயலாக்கும் நுட்பத்தையும் அகத்தியர் தனது "அகத்தியர் 12000" எனும் நூலில் அருளியிருக்கிறார். அந்த பாடல்கள் பின் வருமாறு.....
ஆச்சப்பா இன்னமொரு மார்க்கங்கேளு
அருளான அஞ்சனா தேவிமூலம்
பேச்சப்பா பேசாத மவுனமூலம்
பிலமான புலத்தியனே சொல்லக்கேளு
மூச்சப்பா நிறைந்தவெளி மூலாதாரம்
முத்திதரும் ஆதாரத்தில் மனக்கண்சாத்தி
காச்சப்பா ஓங்கிலியும் ரங்ரங்கென்று
கண்ணார நூறுருவிற் காணலாமே.
காணுகிற விதமென்ன மைந்தாகேளு
கற்பூர தீபஒளி சோதிபோலே
தோணுகிற போதுமனம் ஒன்றாய்நின்று
சோதியெனு மஞ்சனா தேவியென்று
பேணியவள் பாதமதைசிர மேல்கொண்டு
பிலமாக மானதாய்ப் பூசைப்பண்ணி
ஊணிமன மொன்றாக நீறுசாத்தி
உத்தமனே நித்தியமுந் தியானம்பண்ணே.
பண்ணப்பா நித்தியமுந் தியானம்பண்ண
பதிவான இருதயமே வாசமாகி
முண்ணப்பா நிறைந்ததிரு சோதிபோலே
முக்யமுடன் காணுமந்த சோதிதன்னால்
கண்ணப்பா கண்ணுமன மொன்றாய்நின்று
காணுதடா அண்டபதங் கண்ணிநேரே
உண்ணிப்பா உன்னியந்த விண்ணுமண்ணும்
ஊடுருவிப் பார்த்ததைநீ ஒண்டிக்கேளே.
ஒண்டுமிடந் தனையறிந்து அண்டத்தேகி
ஊசாடு மஞ்சனா தேவிமூலம்
நின்றுமன தறிவாலே தியானம்பண்ணி
நேமமுடன் விபூதியைநீ தரித்துக்கொண்டு
சென்றுஅந்த ஆகாச வெளியைப்பாரு
திருவான அஞ்சனா தேவிதன்னால்
கண்டுகொள்வாய் பகல்காலம் நட்சத்திரங்கள்
காணுமடா கண்னறிந்து கண்ணால்பாரே.
கண்ணாரப் பூமியைநீ நன்றாய்ப்பார்த்து
கருணைவிழிப் பார்வையினால் உண்ணிப்பாரு
பொன்னான பூமிநடுப் பாதளத்தில்
பொருளான வெகுநிதிகள் பொருந்தக்காணும்
முன்னோர்கள் வைத்தநிதி கண்டாயானால்
மோகமென்ற ஆசையைநீ வைக்கவேண்டாம்
மெய்ஞானி செய்தவத்தை நன்றாய்ப்பாரு
மெஞ்ஞான அஞ்சனா தேவிதானே.
மூலாதாரத்தில் மனதை நிறுத்தி, அஞ்சனா தேவியின் மூலமந்திரமான "ஓங் கிலியும் ரங்ரங்" என்ற மந்திரத்தினை நூறு தடவைகள் செபிக்க வேண்டுமாம். இவ்வாறு தொடர்ந்து செபித்து வந்தால் அஞ்சனாதேவி மனக்கண்ணில் ஜோதி வடிவாக காட்சி தருவாளாம். அப்போது நம் நெற்றியில் திருநீறு சாத்தி அந்த தேவியை வணங்கி, மனதால் பூசித்து மந்திர ஜெபத்தை தொடர வேண்டும் என்கிறார்.
இவ்வாறு தொடர்ந்து ஜெபித்து வந்தால், பகல் நேரத்தில் நட்சத்திரங்கள் தென்படுமாம், அத்துடன் பூமியில் பாதாளத்தில் முன்னோர் வைத்த நிதிகளும் தென்படுமாம். அப்போது அந்த பொருட்களின் மீது ஆசை கொள்ளாமல், மெய்ஞானிகள் செய்த தவ முறைகளை எண்ணினால், அஞ்சனா தேவியின் அருளினால் அவை யாவும் கைகூடும் என்கிறார் அகத்தியர்.
நலம் பல தரும் "சண்முகயந்திரம்"
Author: மதன்
எதிர்பாராத நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் பதிவுகளை குருவருளினால் எழுதத் துவங்கி இருக்கிறேன். அந்த வகையில் இந்தப் பதிவினை தமிழ் கடவுளாம் முருகனை பணிந்து அவரைப் பற்றிய ஒரு தகவலுடன் துவங்குகின்றேன்.
எங்கும் நிறைந்திருக்கும் இறையருளை யந்திர வடிவில் வழிபடும் வழக்கம் நம்மிடையே காலம் காலமாய் இருந்து வருகிறது. இலங்கையில் கதிர்காமம் கோவிலில் மூலவர் யந்திரமாகவே இருக்கிறார். இது பற்றிய தகவல்களை முன்னரே பகிர்ந்திருக்கிறேன். புதியவர்கள் இந்த இணைப்பில்சென்று வாசிக்கலாம்.
உலோகத் தகட்டில் கோடுகளாகவும், முக்கோணங்களாகவும் கீறப்படும் இந்த யந்திரங்கள் சூட்சுமமான பல அர்த்தங்களை தன்னகத்தே கொண்டவை.இந்த யந்திரங்களை உயிர்ப்பிக்க மந்திரங்கள் அவசியம் ஆகிறது. மந்திரங்களினால் உயிர்ப்பிக்கப் படும் யந்திரங்கள் சக்தி கேந்திரமாய் விளங்குகின்றன.யந்திரம் மற்றும் அதை உயிர்ப்பிக்கும் மந்திரம் ஆகியவற்றை அறிந்து உணர்ந்து தெளிவதையே தந்திரம் என்கிறோம்.
இத்தகைய யந்திர வழிபாட்டினைப் பற்றிய தகவல்கள் சித்தர் பெருமக்களின் பாடல்களின் ஊடே கொட்டிக் கிடக்கின்றன. அவற்றில் இருந்து சிலவற்றை ஏற்கனவே இங்கே பகிர்ந்திருக்கிறேன். அதன் தொடர்ச்சியாக இன்றைய பதிவில்அகத்தியர் அருளிய "சண்முக யந்திரம் " பற்றிய தகவலை பகிர்ந்து கொள்கிறேன். இந்தத் தகவல் "அகத்தியர் 12 000 " என்னும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.
பாரப்பா சண்முகனார் பூசைகேளு
பத்தியுடன் முக்கோணம் பதிவாய்ச் செய்து
நேரப்பா அறுகோணந் தன்னிலேதான்
நிசமான ஓம்மென்றே நன்றாய்ப்போடு
காரப்பா அதனிடையின் வெளியிலேதான்
கருணையுடன் சரவணபவா வென்றேதான்
சேரப்பா அட்சரத்தை நாட்டிக்கொண்டு
சிவசிவா அதனைச் சுற்றி ஓம்போடே.
போடப்பா சுற்றியே ஓங்காரம்போட
நன்மையுள்ள சக்கரமுஞ் சித்தியாச்சு
வீடப்பா பிலப்பதற்கு சக்கரத்தைச்சுத்தி
விருத்தமென்ற வளையமடா மூன்றுபோடு
கோடப்பா கீற நன்றாயக் கோட்டைபோட்டு
குறிப்பாக நால்வாச லிட்டுக்கேளே.
கேளப்பா வாசலிற் தேவதையைக்கேளு
கீழ்வாசலில் பிரமனுட பீஷம்போடு
தாளப்பா தென்வாசல் மாலின்பீஷம்
தயவான மேல்வாசல் ருத்திரபீஷம்
வாளப்பா வடவாசல் மயேசன்பீஷம்
மைந்தனே வாசலிலே தேவதைகள்நாட்டி
ஆளப்பா சதாசிவன்போல் நீயிருந்துகொண்டு
அன்பாகச் சக்கரத்தைப் பூசைசெய்யே.
செய்யப்பா பூசைவிதி தன்னைநன்றாய்
செப்பமுடன் செய்வதற்குத் திருவைநோக்கி
கையப்பா கால்முகங்கள் சுத்திசெய்து
கருரணைபெற விபூதியுத் தளமாய்ப்பூசி
வையப்பா சக்கரத்தைப் பீடமீதில்
மார்க்கமுடன் தானிருத்தி வைத்துமேதான்
மெய்யப்பா தூபமொடு தீபஞ்செய்து
வேதாந்தப் புருவமதில் சிம்மென்றுநில்லே.
நில்லப்பா மனதறிவால் வணக்கமாக
நினைவாகப் சண்முகர்க்குப் பூசைசெய
சங்கையுடன் ஓம்கிலி சிம்மென்றோதே
ஒமெனவே சண்முகர்க்குப் பூசைசெய்து
சோல்லப்பா மூலமென்ற அக்கினியினாலே
சிவசிவா புருவநடுக் கமலம்நோக்கி
நல்லப்ப நல்மனதாய் நோக்கமானால்
நாதாந்த சண்முகனார் தெரிசனையாம்பாரு.
பாரப்பா யோகபூசை அறிவானந்தம்
பதிவான தீபமென்ற மனக்கண்பார்வை
நேரப்பா வாசியென்ற அமுதபானம்
நிலையான பிர்மமாமாயே மாய்கைமாழும்
கருவான சூட்சமடா நாதவித்து
காத்து மனக்கண்ணாலே தன்னைக்காணே
அட்டாங்க யோகமுடன் மௌனயோகம்
அட்டசித்து னித்தனையு மறியலாச்சே.
இந்த பாடலில் உள்ள குறிப்புகளின் படி வரைந்த யந்திரத்தின் படத்தினை கீழே கொடுத்திருக்கிறேன். யந்திரங்களை கீறுவதற்கென தனித்துவமான சில முன்னெடுப்புகளும், முறைகளும் உண்டு. அதன்படியே அவற்றினை கீறிட வேண்டும்.
இந்த யந்திரத்தினை ஆறங்குல (6"x6") சதுரமான தங்கத்தால் ஆன தகட்டில் கீறிக் கொள்ளவேண்டும். இவ்வாறு கீறிய தகட்டினை, பீடம் ஒன்றில் பட்டுத் துணி விரித்து அதில் வைத்து செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளில் பூசைகளை தொடங்க வேண்டுமாம். விளக்கேற்றி வைத்து, உடல் தூய்மை செய்து, திருநீறு அணிந்து சுகாசனத்தில் கிழக்கு முகமாய் அமர்ந்து மனதை ஒரு முகமாக்கி, குருவை பணிந்து "ஓம்கிலி சிம்" எனும் மந்திரத்தை 108 தடவைகள் செபித்து மலர் தூவி பூசைகளை செய்திட வேண்டுமாம்.
தொடர்ந்து இம்மாதிரி பூசை செய்து வந்தால் யோக பூசை, அறிவானந்தம், தீபம் என்ற மனக்கண் பார்வை, வாசி என்ற அமிர்த பானம், பிரம்ம மய நிலை, மாயை நீங்குதல், நாதவித்து சூட்சுமங்கள், மனக்கண்ணால் தன்னை அறிதல். அட்டாங்க யோகம், மௌன யோகம், அட்டமா சித்துக்கள் ஆகியவை சித்திக்கும் என்கிறார் அகத்தியர்.
ஆர்வமும், நம்பிக்கையும் உள்ளவர்கள் குருவினை பணிந்து வணங்கி முயற்சிக்கலாம்.
..
நந்தி தேவரை தரிசிக்கும் முறை!
Author: மதன்
சித்தர்கள் மரபில் ஆதி குருவான சிவனின் நேரடி சீடராக அறியப் படுகிறவர் நந்தி. இவரை நந்தி தேவர், நந்தீசர் எனவும் குறிப்பிடுகின்றனர். நந்தி என்றால் எப்போதும் பேரானந்த நிலையில் இருப்பவர் என பொருள் கூறப் படுகிறது . சித்த மரபின் இரண்டாவது குருவாக அறியப் படும் இவரே திருமூலரின் குருவாக விளங்கியவர்.
இத்தனை சிறப்புகள் வாய்ந்த நந்தி தேவரை அகத்தில் தரிசிக்கும் ஒரு முறையினையே இன்று பார்க்க இருக்கிறோம். நம்புவதற்கு சற்று சிரமமான தகவல்தான் இது. நிஜத்தில் நம்முடன் இல்லாத சித்தர் பெருமக்களை தரிசிக்கும் முறை பற்றி பல பாடல்கள் நமக்கு கிடைத்திருக்கின்றன. இந்த பாடல்களின் பின்னால் ஏதேனும் சூட்சுமமோ அல்லது மறைபொருளோ இருக்கலாம், என்னுடைய சிற்றறிவுக்கு எட்டிய அளவில் எனக்கு கிடைத்த ஒரு தகவலை இங்கே பகிர்கிறேன்.
அகத்தியர் அருளிய "அகத்திய பூரண சூத்திரம்" என்னும் நூலில்தான் நந்திதேவரை தரிக்கும் முறை கூறப் பட்டிருக்கிறது. அந்த பாடல் பின்வருமாறு....
பார்க்கையிலே பரமகுரு தியனாங்கேளு
பக்குவமாய்ச் சொல்லுகிறேன் புத்தியாக
ஏர்க்கையுட னுதையாதி காலந்தன்னில்
இன்பமுடன் சரீரமதைச் சுத்திசெய்து
மார்க்கமுடன் பூதியுத் வளமாய்ப்பூசி
மைந்தனே சுகாசனமா யிருந்துகொண்டு
தீர்க்கமுடன் புருவநடுக் கமலமீதில்
சிவசிவா மனதுபூ ரணமாய்நில்லே.
- அகத்தியர்.
நில்லாந்த நிலைதனிலே நின்றுமைந்தா
நிஸ்பயமாய் லிங்கிலிசிம் மென்றுஓது
சொல்லந்த மானகுரு நாதன்றானும்
சுடரொளிபோ லிருதயத்தில் தோன்றும்பாரு
நல்லதொரு நாதாந்தச் சுடரைக்கண்டா
நந்தியென்ற சோதிவெகு சோதியாச்சு
சொல்லந்தச் சோதிதனைக் கண்டால்மைந்தா
தீர்க்கமுட னட்டசித்துஞ் சித்தியாமே.
- அகத்தியர்.
சூரிய உதய நேரத்தில் உடல் தூய்மை செய்து, திருநீறு அணிந்து சுகாசனத்தில் அமர்ந்து கொள்ள வேண்டுமாம். உடலையும் மனதையும் தளர்த்திய பின்னர் கண்களை மூடி புருவ மத்தியில் மனதினை ஒருமைப் படுத்தி, தியான நிலையில் இருந்து "லிங் கிலி சிம்" என்கிற மந்திரத்தினை தொடர்ந்து செபிக்க வேண்டுமாம்.
இவ்வாறு தினசரி செபித்து வந்தால் பரமகுருவான நந்திதேவர் நம் இதயத்தில் சோதிவடிவாகக் காட்சி கொடுப்பார் என்றும், அவர் தரிசனத்தினைக் கண்டால் அட்ட சித்துக்களும் சித்திக்கும் என்கிறார் அகத்தியர்.
ஆச்சர்யமான தகவல்தானே!
தும்பிக்கையான் பாதம் பணிவோம்!
Author: மதன்
"காணபதம்" அல்லது கணாபத்யம் என்றழைக்கப் படும் மரபின் தனிப் பெருங் கடவுளான விநாயகரின் அவதார தினம் இன்று. ஒவ்வொரு வருடம் ஆவணி மாதத்தில் வரும் சதுர்த்தி திதி விநாயகரின் அவதார தினமாக கொண்டாடப் படுகிறது. ஆறு வெவ்வேறு வழிபாட்டு மரபுகள் ஒன்றிணைந்து இந்து மதமாய் உருவெடுத்த போது விநாயகர் இந்து மதத்தின் முழு முதற் கடவுளாக அங்கீகரிக்கப் பட்டார்.
ஓம்காரத்தின் சூட்சும வடிவம்தான் விநாயகர் என்று சொல்வோரும் உண்டு. இத்தகைய சிறப்புகள் வாய்ந்த விநாயகரை சித்தர் பெருமக்களும் போற்றித் துதித்தனர். அநேகமாய் சித்தர் பெருமக்கள் அனைவருமே தாங்கள் அருளிய நூல்களின் முதல் பாடலில் விநாயகரை துதித்துப் போற்றியே துவங்கியிருப்பது சிறப்பு. இது தொடர்பான தகவல்களை முன்னரே பகிர்ந்திருக்கிறேன். தேவையுள்ளவர்கள் இந்த இணைப்பில் அவற்றை காணலாம்.
விநாயகரின் அவதார தினமான இன்று அகத்தியர் அருளிய "கணபதி யந்திர" வழிபாட்டு முறை ஒன்றினைப் பற்றிய தகவலை பகிர்வது பொருத்தமாய் இருக்கும். இந்தத் தகவல் அகத்தியர் அருளிய “அகத்தியர் பரிபூரணம்” என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.
பாரப்பா சிவயோகம் பூரணமேயாகும்
பத்திகொண்டு பூரணமே கெதியென்றெண்ணி
நேரப்பா தானிருந்து அட்டாங்கயோகம்
நேர்மையுடன் பார்ப்பதற்க்கு கருவைக்கேளு
காரப்பா கருணைவளர் கணபதியின் தியானம்
கருணையுள்ள வட்டமதில் ஓங்காரஞ்சாத்தி
சேரப்பா ஓங்காரந் தன்னிலேதான்
ஸ்ரீயென்று கணபதியின் பீசஞ்சாத்தே.
சாத்தியதோர் சக்கரத்தை முன்னேவைத்து
சகல உபசாரமதாய்ப் பூசைபண்ணி
போத்திநன்றாய்ப் பூரணத்தில் மனதைநாட்டி
புத்தியுடன் செபிக்கிறதோர் மந்திரங்கேள்
பார்த்திபனே ஓம் நமோகுரு கிலியும்
ஸ்ரீகுரு கணபதி சுவாகாவென்று
புத்தியுடன் பதினாறு உறுவே செய்தால்
நேத்திரத்தின் பேரொளிபோல் மூலநாயன்
நிச்சயமாய் உனதுவசம் வசியமாமே.
ஆமப்பா கணபதியை வசியம்பண்ணி
அதன்பிறகு அஷ்டாங்க யோகம்பார்த்தால்
தாமப்பா தன்வசமா யஷ்டகர்மம்
சச்சிதா னந்த பூரணத்தினாலே
ஓமப்பா அறுபத்து நாலுசித்தும்
உண்மையுடன் தானவனாய்த் தானேசெய்வாய் .
வாமப்பா பூரணத்தின் மகிமையாலே
வரிசையுட னட்டாங்க வரிசைகேளே.
இந்த பாடல்களில் உள்ள தகவல்களைக் கொண்டு வரையப் பட்ட யந்திரத்தை கீழே உள்ள படத்தில் காணலாம்.
இந்த யந்திரத்தினை மூன்று அங்குலம் சதுரமான வெள்ளி அல்லது செப்புத் தகட்டில் கீறிடலாம். இதற்கு செப்பாலான ஆணியினை பயன் படுத்திட வேண்டுமாம். உடல் சுத்தியுடன் கிழக்கு முகமாய் அமர்ந்து குருவினை வணங்கி, இந்த யந்திரத்தை தகட்டில் கீறிட வேண்டும் என்கிறார் அகத்தியர்.
இவ்வாறு கீறிய தகட்டினை தாம்பாளம் ஒன்றில் பட்டுத் துணி விரித்து, அதில் வைத்து செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளில் பூசைகளை செய்ய வேண்டுமாம். விளக்கேற்றி வைத்து, கிழக்கு முகமாய் அமர்ந்து பின் வரும் மந்திரத்தை 16 தடவைகள் செபித்து மலர் தூவி பூசைகளை செய்திட வேண்டும் என்கிறார்.
"ஓம் நமோ குரு கிலியும் ஸ்ரீ குரு கணபதி சுவாகா"
இம்மாதிரி பூசை செய்து வந்தால் கணபதியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்றும், அதன் பின் அஷ்டாங்க யோகம் செய்தால் அவை சித்தியாகும் என்கிறார். மேலும் இதனால் அறுபத்தி நான்கு சித்தும் கைகூடிவரும் என்கிறார் அகத்தியர். இது போன்று விநாயக வணக்கதின் முக்கியதுவத்தும் சித்தர் இலக்கியங்களில் நிறையவே விரவிக் கிடக்கிறது.
இந்த நல்ல நாளில் விநாயகப் பெருமானின் பாதம் பணிந்து அவரது பேரருள் நம் எல்லோருடைய வாழ்விலும் நிலைத்திருக்க வேண்டி வணங்கிடுவோம்.
அகத்தியர் அருளிய சூரணங்கள்.
Author: மதன்
தேவையான சரக்கினை சுத்தம் செய்து, வெயிலில் நன்கு உலர்த்தி, அதனை அடுப்பிலேற்றி வறுத்து, அதனை இடித்து சலித்து எடுப்பதையே சூரணமாக்குதல் என்கிறோம்.சித்த மருத்துவத்தில் இத்தகைய பல சூரணங்கள் கூறப் பட்டிருக்கின்றன. இவற்றில் திரிகடுகம் எனப்படும் "சுக்கு", "மிளகு", "திப்பிலி" சூரணங்களை மாமருந்துகள் என்றால் மிகை இல்லை.
இந்த மூன்று பொருள்களையும் கொண்டு திரிகடுக சூரணம், திரிகடுக லேகியம், திரிகடுக குளிகை, திரிகடுக நெய், திரிகடுக குடிநீர் என பலவகையான மருந்துகளை தயாரிக்கும் முறைகளையும் அவற்றின் சிறப்பையும், மருத்துவ குணங்களையும் முன்னரே பல பதிவுகளின் ஊடே விரிவாகவும் விளக்கமாகவும் பார்த்திருக்கிறோம். அவற்றை மீள் வாசிக்க விரும்புவோர் இந்த இணைப்பில் சென்று அந்த பதிவுகளை வாசித்தறியலாம்.
அந்த வரிசையில் இன்று "சுக்கு", "மிளகு", "திப்பிலி" சூரணங்களின் மருத்துவ குணங்களை தனித்தனியாக பார்க்கலாம். இந்த தகவல் அகத்தியர் அருளிய "அகத்தியர் பரிபூரணம்" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது. அந்த பாடல்கள் பின்வருமாறு...
சுக்குச் சூரணம்
பாரேநீ யின்னமொரு சூட்சங் கேளு
பாங்கான சுக்குதனைச்சூர ணமே பண்ணி
காரேநீ கரும்புச்சர்க்க ரையவ் வீதங்
கலந்துமே யிருவேளை யேழு நாளுஞ்
சேரேநீ தின்றுவர வாய்வு தீருந்
திறமான தீபன முண்டா மப்பா
ஊரெல்லா மருந்திருக்கக் காட்டிற் போய்நீ
உலுத்தரைப் போலலையாதே உண்மை கேளே.
சுக்கைச் சூரணம் செய்து, அந்த எடைக்கு சமமாக கரும்புச் சர்க்கரையை கலந்து சேமித்துக் கொள்ள வேண்டுமாம். இம்மருந்தை ஏழுநாள் காலை மாலை உண்டு வர வாய்வு தீருவதுடன், பசியும் உண்டாகுமாம்.
திப்பிலி சூரணம்
உண்மையென்ற திப்பிலையைசூர ணமே செய்து
உகமையுடன் றேனிலேகு ழைத்துத் தின்ன
வண்மையுடன் புகைந்திருமுஞ் சேத்தும நோய்தான்
மாறியே பசியுண்டாம ருவிப் பாரு
திப்பிலியை சூரணம் செய்து தேனில் குழைத்துச் சாப்பிட புகைந்து இருமும் இருமலும், சிலேத்தும நோய்களும் குணமடைந்து பசி உண்டாகுமாம்.
மிளகு சூரணம்
நன்மையுடன் மிளதகுதனைசூர ணமே செய்து
நலமான பசுநெய்யிற் சீனி கூட்டி
தன்மையுடன் மூன்றுநாள் அந்தி சந்தி
தானருந்த சளியிருமத வறிப் போமே.
மிளகினை சூரணம் செய்து அதனுடன் பசுநெய்யும், சீனியும் சேர்த்து மூன்றுநாள் காலை மாலை சாப்பிட சளி இருமல் ஆகியவை நீங்குமாம்.
மாதவிலக்கும், சித்தர்கள் அருளிய தீர்வுகளும்!
Author: மதன்
இதுவரை மாதவிலக்கு, மாதவிலக்கு சுழற்சி, அவற்றின் இயங்கியல், ஏற்படும் பிரச்சினைகள் என விரிவாகவே பார்த்து விட்டோம். இந்த தகவல்கள் யாவும் நவீன அறிவியல் நமக்கு கண்டறிந்து சொன்ன உண்மைகள். இனி நம் முன்னோர்கள் இந்த பிரச்சினைகளை எவ்வாறு எதிர்கொண்டார்கள் என்பதைப் பற்றியே பார்க்க இருக்கிறோம். மாதவிலக்கு பிரச்சினைகள் தொடர்பில் நிறைய தகவல்கள் சித்தர்களின் பாடல்களின் ஊடே காணக் கிடைக்கிறது.
இந்த தகவல்களை முழுமையாக தொகுப்பது என்பது சவாலான ஒன்று.மேலும் நிறைய நேரம் பிடிக்கும் காரியம் என்பதால், என்னால் இயன்ற அளவில் திரட்டிய தகவல்களையே இனி வரும் பதிவுகளின் ஊடே பார்க்க இருக்கிறோம். இந்தத் தகவல்கள் பலவற்றை இன்றும் நாம் கைவைத்தியம் என்கிற பெயரிலும், பாட்டி வைத்தியம் என்கிற பெயரில் அன்றாடம் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம் என்பதையும் இந்த இடத்தில் நினைவு படுத்திட விரும்புகிறேன்.
மற்றொரு முக்கிய குறிப்பு ஒன்றினையும் இந்த இடத்தில் பதிவது அவசியம் என கருதுகிறேன். சித்தர் பெருமக்கள் இத்தகைய பிரச்சினைகளுக்கு எத்தகைய தீர்வுகளை முன் வைத்திருக்கின்றனர் என்பதை பகிர்வதே "சித்தர்கள் இராச்சியம்" வலைப்பதிவின் முதன்மையான நோக்கம். எனவே இங்கே பகிரப் படும் தகவல்களை ஒரு வழிகாட்டுதலாய் மட்டும் அணுகிட வேண்டுகிறேன். தேவையும், அவசியமும் உள்ளவர்கள் தேர்ந்த வல்லுனர்கள்/மருத்துவர்களின் ஆலோசனையோடு சிகிச்சை மேற்கொள்வதே சிறப்பு.
சித்தர் பெருமக்கள் மாதவிலக்கு தொடர்பில் அருளிய தீர்வுகளை மூன்று வகையாய் அணுகிடலாமென நினைக்கிறேன். அவை முறையே...
மாதவிலக்கு வராமல் இருப்பது, தள்ளிப் போவது போன்ற பிரச்சினைகளுக்கான தீர்வு.
மாதவிலக்கின் போது ஏற்படும் வலி, உடல் தளர்வு போன்ற பிரச்சினைகளுக்கான தீர்வு.
பெரும்பாடு எனப்படும் அதிகமான, தொடர் குருதிப் போக்கினை கட்டுப் படுத்துவதற்கான தீர்வு.
இன்றைய பதிவில் மாதவிலக்கு வராமல் இருப்பது அல்லது தள்ளிப் போகும் பிரச்சினைகளுக்கான இரண்டு தீர்வுகளை மட்டும் பார்ப்போம்.“அகத்தியர் வைத்தியம் 600” எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்ட தகவல்கள் இவை.
மீறாமற் றூரமில்லாப் பெண்களுக்கு
வேலியிலைப் பசுவின்பாலில்மிகவருந்த நேரும்
கூறான தூதுவளை சாறுவாங்கி
கொடைகொடையாகக் கிடக்குங் குளத்துப்பாசி
ஏறாமற் புனைக்கா யளவுகூட்டி
யிதமாகச் சர்க்கரையும் மேகமொன்றாய்
பேறுபட மூன்றுநா ளருந்தும்போது
புறப்படுமே செங்குருதி சிவப்பதாமே
வேலிப் பருத்தி இலையை அரைத்து பசுப்பாலில் கலக்கி, அதிகளவில் அருந்த மாதவிலக்கு ஏற்படும் என்கிறார். மேலும் குளத்துப்பாசியை புனைக்காய் அளவு எடுத்து அத்துடன் தூதுவளை சாற்றையும் அளவான சர்க்கரையும் சேர்த்து மூன்று நாட்கள் அருந்த மாதவிலக்கு உண்டாகுமாம்.
கிரமாதீத சூதகம்
ஒழுங்கான மாதவிலக்கு சுழற்சி என்பது 28 தினங்களுக்கு ஒருமுறை ஏற்படும். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு இப்படி நடப்பதில்லை. ஒரு சிலருக்கு இரண்டு, மூன்று தினங்களுக்கு முன்னதாகவே மாதவிலக்கு கண்டு மறைந்து போவதையும், அல்லது சேர்ந்தாற் போல 2-3 மாதங்களுக்கு சூதகமே வெளிப்படாமலும் இருக்கும். இதனை சித்த மருத்துவத்தில் 'ஒழுங்கீன சூதகம்' 'கிரமாதீத சூதகரோமம்' என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இதற்கு வெங்காயம், கரியபோளம், மிளகு இவைகளில் வகைக்கு 21/2 கிராம் எடுத்து, அவற்றைத் தனித்தனியே இடித்துத் தூளாகச் சேகரித்துக் கொள்ள வேண்டும். பிறகு அம்மியில் சிறிதளவு தேன் விட்டு அதில் இந்த தூளை இட்டு, மை போல் அரைத்து, அதை 16 சிறு மாத்திரைகளாக உருட்டி வைத்துக் கொண்டு தினசரி காலை, பகல், மாலை ஆக மூன்று வேளை உணவிற்குப் பின்னர் இரண்டு மாத்திரை வீதம் வாயில் போட்டு, அரை ஆழாக்கு அளவு பசுவின்பால் குடித்து வர வேண்டும்.
இந்த விதமாக மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து சாப்பிட்டால், மாதவிலக்கு ஒழுங்கு முறையுடன் மாதா மாதம் தவறாது வெளியேறுமாம்.
குறிப்பு : "மாதவிலக்கு பிரச்சினைகளும், தீர்வுவும்" என்கிற பழைய பதிவினை இங்கே வாசிக்கலாம்.
தேகநலம் தரும் வெள்ளி பற்பம்.
Author: மதன்
சித்த மருத்துவத்தில் தேவையான சரக்குகளை தனியாகவோ அல்லது சேர்த்தோ புடம் போட்டோ, வறுத்தோ, எரித்தோ, ஊதியோ வெளுக்குபடிச் செய்து எடுத்துக் கொள்வது பற்பம் அல்லது பஸ்பம் எனப்படும். உலோகங்களை பற்பமாக்கி அவற்றை மருந்தாகக் கொடுக்கும் வழக்கம் சித்தரியலில் உண்டு. ஆயுர்வேத மருத்துவத்திலும் கூட ஏழு வகையான பற்பங்கள் குறிப்பிடப் பட்டிருக்கின்றது.
அந்த வகையில் அகத்தியர் அருளிய "அகத்தியர் வைத்திய காவியம்" என்ற நூலில் வெள்ளியைப் பற்பமாக்கும் முறை ஒன்று காணக் கிடைக்கிறது. அந்தத் தகவலை இன்றைய பதிவில் காண்போம். இந்த பற்பம் "ரசிதம்" எனப் படுகிறது.
செய்யவே இன்னம் ஒரு பற்பம் கேளு
செயமாக வூதசட்டி வெளி தன்னை
துய்யதாய் குகையில் இட்டு உருகும்போது
துரையான வெளியிடை மகிழம்பூச்சார்
அய்யனே இரண்டு இடை விட்டு இறக்கி
அப்பனே வெய்யது மடிந்து போகும்
பொய்யல்ல அப்பொடியை முன்சாற்றாலே
புகழாக அரைத்து பில்லை உலர்த்திக் கேளே.
உலர்த்தியதோர் வில்லைக்கு கவசம் கேளே
உண்மையுடன் முட்கா வேளை வேரைத் தானும்
பிலக்கவதை முன்னீரால் அரைத்துக் கட்டி
பிரியமுடன் குகையில் இட்டுச் சில்லும் மூடி
உலர்த்தி நன்றாய் மண்சீலை வலுவாய்ச் செய்து
உள்ளபடி நூறெருவில் புடத்தைப் போடு
பெலத்ததோர் ரசிதம் என்ற வெள்ளி பற்பம்
பெருமையுள்ள வெண்ணையிலே கொடுத்துப் பாரே.
கொடுத்து மிகப் பார்க்கையிலே தீரும் நோய்கேள்
குணம் இல்லாக் காசமொடு இரத்த காசம்
அடுத்து நின்ற மேகம் சயம் மந்தகாசம்
அப்பனே திப்பிலியலகலும் சொன்னோம்
தெடுத்து மிகப் புளி புகையைத் தவிர்க்க வேணும்
சுயமாக வேளைக்குப் பணவிடையி பாதி
கடுத்து நின்ற பவுத்திரமும் மூலைச் சூலை
காணாமல் ஓடுமடா கண்டு பாரே.
வெள்ளியின் எடைக்கு சரி சமனாக மகிழம் பூச்சாறு விட்டு உருக்க வேண்டுமாம். பின்னர் உருக்கிய வெள்ளியை பொடியாய் ராவி மகிழம்பூச் சாறுவிட்டு அரைத்து வில்லைகளாக்கி உலர்த்தி சேமித்துக் கொள்ள வேண்டுமாம். முட்கா வேளை வேரினை எடுத்து மகிழம்பூ சாறுவிட்டு அரைத்து முன்னர் உலர்த்தி சேமித்த வில்லைக்கு கவசமாய் இட்டு மேலே சீலைமண் செய்து நன்றாக காயவைத்து, நூறு வறட்டிகளைக் கொண்டு புடம் இட்டுக் கொள்ள வேண்டும் என்கிறார் அகத்தியர். (புடங்கள் பற்றிய எனது முந்தைய பதிவில் நூறு வறட்டிப் புடம் பற்றிய தகவல் இருக்கிறது.)இப்படி செய்தால் அந்த வில்லைகள் நீறி பற்பம் ஆகியிருக்குமாம். இதுவே "ரசிதம்" என்று அழைக்கப்படும் வெள்ளி பற்பம்.
இப்படி தயார் செய்யப் பட்ட வெள்ளி பற்பத்தை ஒரு மண்டல கால அளவிற்கு அரைப்பண எடை அளவில் எடுத்து வெண்ணையில் குழைத்துக் காலையும், மாலையும் தொடர்ந்து உண்ண வேண்டும் என்கிறார். இப்படி தொடர்ந்து ஒரு மண்டலம் உண்டுவர காசம், இரத்த காசம், மேகம், சயம், மந்த காசம் ஆகியவை குணமாகும்.
இந்த வெள்ளி பற்பத்தை ஒரு மண்டல கால அளவிற்கு அரைப்பண எடை அளவில் எடுத்து சம அளவு திப்பிலியுடன் கலந்து தினமும் ஒரு வேளையாக தொடர்ந்து உண்ண வேண்டும் என்கிறார். இப்படி தொடர்ந்து ஒரு மண்டலம் உண்டுவர பவுத்திரம், மூலச் சூடு ஆகியவை நீங்கும் என்கிறார்.
பத்தியமாக மருந்துண்ணும் நாட்களில் புளி, புகை போன்றவைகளும் தவிர்க்க வேண்டுமாம்.
குழந்தைப் பேறு!... அகத்தியரின் தீர்வு!!
தாய்மையே ஒரு பெண்ணை பூரணத்துவமானவளாக ஆக்குகிறது என்கிற நம்பிக்கை நமது சமூகத்தில் வேரோடியிருக்கிறது. திருமணம் ஆன ஒவ்வொரு பெண்ணும் அவளது சுற்றமும் இந்த தாய்மை அடைதலை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பது தொட்டுத் தொடரும் பாரம்பரிய நிகழ்வு.
ஒரு வேளை அதே பெண்ணிற்கு தாய்மை அல்லது கருவுறுதல் தாமதமானால் கொஞ்சமும் ஈவிரக்கம் இல்லாத அவளின் சமூகம், அந்த பெண்ணிற்கு தரும் பட்டம் ”மலடி”, இது காலம் காலமாய் பெண்கள் மீது நடத்தப்படும் உளவியல் ரீதியான வன்முறை, தற்காலத்தில் இந்த போக்கில் கொஞ்சம் விழிப்புணர்வு வந்திருப்பது ஆறுதலான ஒன்று.
தற்போதைய நவீன அலோபதி மருத்துவம் பல தீர்வுகளை முன் வைத்தாலும் கூட அவை செலவு பிடிப்பனவாக இருக்கிறது. சித்த மருத்துவத்தில் இதற்கு பல தீர்வுகளை சித்தர் பெருமக்கள் அருளியிருக்கின்றனர். அவற்றை தொடர்ச்சியாக பதிவுகளின் ஊடே பகிர்ந்து வருகிறேன். அந்த வரிசையில் இன்று அகத்தியர் அருளிய வைத்திய முறை ஒன்றினை பார்ப்போம். "அகத்தியர் வைத்தியம் 600" என்னும் நூலில் இந்த முறை அருளப் பட்டிருக்கிறது.
கேளுநீ கெர்ப்பந்தான் வாழ்வதற்கு
கெடியான நன்னாங்கள்ளி வேரு
ஆளவேயரைத்துப் புன்னைக்காய் போலே
ஆவின்வெண்ணெய் பாக்களவு கலந்து
நீளநீகுளித்த முதல் மூன்றுநாளும்
நினைவாகத் தானருந்த கெர்ப்பமுண்டாம்
கோளறவே பத்தியந்தான் புளிபுகையும்
கொள்ளாம லாவின்பால் சோறுமுண்ணே.
- அகத்தியர்.
கர்ப்பம் தரிக்காத பெண்களுக்கு மாதவிலக்கு ஆன மூன்றாவது நாள் தலை முழுகி அதற்கு மறுநாள் முதல் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு நன்னாங்கள்ளி வேரினை அரைத்து புன்னைக் காயளவு எடுத்து அத்துடன் பசுவின் வெண்ணெய் பாக்களவு கலந்து உட்கொண்டு, இல்லறத்தில் ஈடுபட்டு வர கருத்தரிக்குமாம்.
பத்தியமாக மருந்துண்ணும் மூன்று நாட்களும் புளியும், புகையும் நீக்குவதுடன் சாதத்தில் பசுப்பால் விட்டு சாப்பிடவேண்டும் என்கிறார்.
ஆச்சர்யமான தகவல்தானே!,
தேவையிருப்பவர்கள் தகுதியான சித்த மருத்துவரின் ஆலோசனை பெற்று, இந்த முறையினை பயன்படுத்தி தீர்வு காணலாம். மற்றவர்கள் தேவையுள்ளோருக்கு இந்த தகவலை அறியத் தரலாம்.
அடுத்த பதிவில் வேறொரு தகவலுடன் சந்திக்கிறேன்.
உடலுக்கு வலிமை தரும் சந்தனாதி தைலம்.
Author: மதன்
எள் + நெய் என்பதே எண்ணெய்யாகும். எண்ணெய் என்பது நல்லெண்ணையையே குறிக்கும். எள் என்பதை 'திலம்' என்று வடமொழியில் கூறுவர். திலத்தால் உண்டானதை தைலம் எனக் கூறுவர். தேவையான சரக்குகளைப் பொடித்து எள் நெய் சேர்த்துப் பக்குவத்தில் காய்ச்சி எடுப்பதே எண்ணெய் அல்லது தைலம் எனப்படும்.
இவ்வாறு தயார் செய்யப்படும் தைல வகைகளில் ஒன்றான "சந்தனாதி தைலம்" தயாரிக்கும் முறை ஒன்று அகத்தியர்அருளிய "அகத்தியர் வைத்திய காவியம்" என்னும் நூலில் காணக் கிடைக்கிறது. அந்த தகவல்களை இன்றைய பதிவில் பார்ப்போம்.
பாரப்பா இன்னுமொரு சந்தனாதி
பகருகிறேன் அமுக்குறாவேர் பொடியும்நாழி
சேரப்பா சித்தாமுட்டி பொடியும்நாழி
சிறப்பான கொம்பரக்கு பொடியும்நாழி
நேரப்பா இம்மூன்றும் பதக்குநீரில்
தீயிட்டு நாலொன்றாய்க் குறுக்கிவாங்கி
அரப்பா நல்லெண்ணெய் நாழிவிட்டு
அப்பனே பசுமோர் நாழியூற்றே
மோர்விட்டு நன்னாரியரத்தை முதல்
முகிழ்மதுரஞ் குப்பைகடுகு ரோகிணி
வாரிட்ட கச்சோலந் தேவதாரம்
மஞ்சளொடு மரமஞ்சள்கஸ்தூரி மஞ்சள்
மாரிட்ட பெருங்குரும்பை யமுக்குறாவேர்
மஞ்சிட்டி கெந்தியொடு நாகப்பூவும்
நேரிட்ட வகையொன்று விராகனொன்று
நிறுத்திநீ யாட்டியதைக் கலக்கிக் காய்ச்சே
காச்சப்பா மூன்றுநாள் கொதிக்கச்செய்து
களரவே நாலாநாள் வடித்துமைந்தா
தேச்சப்பா வுடம்பெல்லாம் நசியம்பன்னு
தீராத சுரம்தணியும் முடம்பும்தேறும்.
- அகத்தியர்.
அமுக்குறாவேர்ப் பொடி, சித்தாமுட்டி பொடி, கொம்பரக்கு பொடி இவைகளை வகைக்கு ஒரு நாழி அளவில் எடுத்து ஒரு பாண்டத்தில் இட்டு அத்துடன் ஒரு பதக்கு அளவு நீர் வார்த்து நான்கில் ஒருபங்காகக் காய்ச்சிக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அத்துடன் நல்லெண்ணெய் ஒரு நாழி அளவும் பசு மோர் ஒரு நாழி அளவும் சேர்த்துகொள்ள வேண்டுமாம். மேலும் நன்னாரி, அரத்தை, அதிமதுரம், குப்பைமேனி, கடுகுரோகிணி, கச்சோலம், தேவதாரு, மஞ்சள், மரமஞ்சள், கஸ்தூரிமஞ்சள், பெருங்குரும்பை, அமுக்குறாவேர், மஞ்சிட்டி, கெந்தி, நாகப்பூ ஆகியவற்றை வகைக்கு விராகன் எடைவீதம் எடுத்து சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ள வேண்டுமாம்.
அந்தக் கலவையினை மூன்று நாட்கள் தொடர்ச்சியாகக் கொத்திக்கவைத்து நான்காம் நாள் வடிகட்டி உடல் முழுவதும் சொட்டுச் சொட்டாக விட்டு நன்கு பூசி 10 நிமிடம் ஊறவைத்து தலை முழுக வேண்டும். இப்படி முழுகிவந்தால் தீராத சுரங்கள் நீங்குவதுடன் உடலும் வலிமையடையும் என்கிறார்.
தேவை உள்ளவர்கள் அனுபவம் வாய்ந்த சித்த மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் இதனைப் பயன் படுத்தி பலன் பெறலாம்.
படர்தாமரைக்கு ஓர் எளிய தீர்வு!
Author: மதன்
தோலில் ஏற்படும் தொற்று நோய்களில் முதன்மையானது “படர்தாமரை” எனப்படும் ஒரு வகையான தேமல் ஆகும். இது உச்சந்தலை, முகம், பிறப்பு உறுப்புகள் ஆகிய இடங்களில் படர்ந்து பரவும் தன்மையுடைய தொற்று நோயாகும்.
இத்தகைய தேமல் பரவிய இடங்களில் தோல் நிறமாற்றம் அடைந்து அடர் கருப்பு நிறமாகி விடும். தீராத அரிக்கும் தன்மை உடைய இதனை சொறிந்து விட்டால் அதிலிருந்து வெளியாகும் நீர்மத்தினால் இது மேலும் உடலின் மற்ற பாகங்களில் பரவிடும். பெரும்பாலும் உடல் சுத்தம் மற்றும் உடைச் சுத்தம் இல்லாதவர்களுக்கே இத்தகைய தொற்று உண்டாகிறது.
தற்போதைய நவீன மருத்துவம் இந்த பிரச்சினைக்கு நல்ல பல தீர்வுகளை அளிக்கிறது. இருப்பினும் இந்த நோய்க் கிருமிகள் உடலின் உள்ளுறையும் தன்மையுடவை என்பதால் தொடர் சிகிச்சையினால் மட்டுமே முழுமையான தீர்வு கிடைக்கும். இது செலவு பிடிக்கக் கூடியது.
இந்த படர்தாமரை பிரச்சினைக்கு அகத்தியர் அருளிய தீர்வு ஒன்றினை பார்ப்போம். "அகத்தியர் வைத்தியகாவியம்" என்னும் நூலில் இருந்து இந்தக் குறிப்பு எடுக்கப் பட்டது.
சாகுமாம் படு தாமரைக்குக்கேளு
சாதக மாம்வேரின் பட்டை
காவதிக மதுக்காரை வேரும்வித்தும்
கழஞ்சிரண்டு பழச்சாற்றில் கரையஆட்டே
ஆட்டியே பாக்களவாய் மூன்றுகட்டி
யப்பனே யுள்ளுக்கும் மேலும்பூசு
வாட்டியே யுதிர்ந்துவிடும் பாரே.
- அகத்தியர்.
மாமரத்தின் வேரின் பட்டையும், மதுக்காரை வேரும் அதன் விதையும் ஆகியவற்றை சம அளவில் எடுத்து தூளாக்கிக் கொள்ளவேண்டும். பின்னர் இவற்றில் இரண்டு கழஞ்சு அளவில் எடுத்து பழச்சாறு விட்டு நன்கு அரைத்து பாக்களவு உருண்டைகளாக மூன்று உருண்டைகள் உருட்டி உண்ணவேண்டுமாம். மிகுதியை படர்தாமரை பாதிப்பு உண்டான இடங்களில் பூசிவர குணமாகும் என்கிறார்.
மேலே சொன்ன மூலிகைகள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. விலையும் மிக மலிவுதான். தேவை உள்ளவர்கள் தகுதியான சித்த மருத்துவரின் ஆலோசனை பெற்று இயற்கையான இந்த மருந்தினை நாம் வீட்டிலேயே தயாரித்து பலன் பெறலாம்.
குறிப்பு : ஒரு கழஞ்சி என்பது சற்றேற 5 கிராம் ஆகும்.
தீவினை அழிக்கும் புவனை யந்திரம்...
Author: மதன்
சித்தர்கள் வணங்கிய தெய்வத்தின் பெயர் வாலை என்பதாகும். ஆதி சக்தியின் பத்து வயது பெண் வடிவமே இந்த வாலை. வாலையை பூசிக்காத சித்தர்களே இல்லையெனலாம். வாலை தெய்வத்தைப் பற்றி மேலதிக விவரம் வேண்டுவோர் இந்தஇணைப்பில் சென்று வாசிக்கலாம்.
புவனை அம்மன் என்பவள் இந்த புவனமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் மகாசக்தியின் அம்சமாவாள். வாலை தெய்வம் குழந்தையின் அம்சமென்றால், புவனை அவளின் தாய் அம்சம் என்கின்றனர் சித்தர் பெருமக்கள். இந்த அன்னையின் அனுசரனையின்றி ஏதும் நடவாது என்பதும் சித்தர்களின் கூற்று. இந்த மகா சக்தியின் அருளினை ஒரு யந்திரத்தின் மூலம் ஒருவர் பெற முடியுமானால் எத்தனை ஆச்சர்யமான விஷயம்.
அத்தகைய யந்திரம் பற்றி அகத்தியர் தனது அகத்தியர் பரிபூரணம் என்னும் நூலில் விளக்கியிருக்கிறார்.
தெரிசிக்க இன்னமொரு கருவைக்கேளு
சிவசிவா புவனைபதி னாறுவீட்டில்
தெரிசிக்க வேணுமென்னா லந்தவீட்டில்
செம்மையுடன் ஓம்கிலி சிறிறீங்கென்று
தெரிசிக்கப் பதினாறு வீட்டிலேதான்
சிந்தையுடன் கால்தலையாய் மாரிக்கொண்டு
தெரிசிக்க மானதமாய்ப் பூசைசெய்து
திருவேற நூற்றெட்டு உருவேசெய்யே.
- அகத்தியர்.
உருவேத்திப் புவனையுட சக்கரத்தை
உண்மையுடன் மானிடர்க்குக் காட்டினாக்கால்
கருவொத்து நின்றுபல வியாதியெல்லாம்
கண்காணா தோடுமடா கருத்தாய்ப்பாரு
வருவித்த வஞ்சனைகள்ள பில்லிஏவல்
மகத்தான பிசாசுகளு மதிகெட்டோடும்
திருவுத்த குருவருளால் புவனைதானும்
தீர்க்கமுட வினைத்தபடி செய்வாள்பாரே.
- அகத்தியர்.
இந்த பாடலில் உள்ள குறிப்புகளின் படி வரைந்த யந்திரத்தின் படத்தினை கீழே கொடுத்திருக்கிறேன்.
இந்த யந்திரத்தினை மூன்றங்குல (3"x3") சதுரமான தங்கத்தால் ஆன தகட்டில் கீறிக் கொள்ளவேண்டும். யந்திரங்களை கீறுவதற்கென தனித்துவமான முறைகள் இருக்கின்றன. அந்த தகவல்களை முந்தைய பதிவுகளில் பார்க்கலாம். அதன் படியே இந்த யந்திரங்கள் கீறப்பட வேண்டும்.
இவ்வாறு கீறிய தகட்டினை தாம்பாளம் ஒன்றில் பட்டுத் துணி விரித்து அதில் வைத்து செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமை நாளில், கிழக்கு முகமாய் அமர்ந்து பின் வரும் மந்திரத்தை 108 தடவைகள் செபித்திட வேண்டும்.
"ஓம் கிலி சிறி றீங்"
இவ்வாறு செபித்து முடிந்ததும் தீர்வும், தேவையும் உள்ளவர்களுக்கு இந்த யந்திரத்தினை கட்டிவிட வேண்டுமாம். அதன் பின் அவர்களைப் பீடித்த நோய்கள் அனைத்தும் நீங்குவதுடன். அவர்களின் எதிரிகள், வஞ்சகர்கள் நீங்கிவிடுவார்களாம். பில்லி, சூனியம், ஏவல் போன்றவை எது இருந்தாலும் அது அவர்களை விட்டு நீங்கிவிடுமாம். அத்துடன் புவனை அம்மனின் அருளும் கிட்டும் என்கிறார் அகத்தியர்.
நம்பிக்கையுள்ளவர்கள் குருவினை வணங்கி முயற்சித்து பலன் பெற்றிடலாம்.
posted from Bloggeroid
No comments:
Post a Comment