Wikipedia

Search results

Friday, 2 October 2015

Sithargal Ulagam 3

வசிய திருநீறு...

Author: மதன்
Labels: அகத்தியர், வசியங்கள்
கோவிலில் இறைவனை தரிசித்த பிறகும், பெரியவர்கள், ஆன்றோர்களை சந்தித்து விடை பெறும்போதும் அவர்கள் விபூதி வழங்கி ஆசிர்வதிப்பது காலம் காலமாய் நடைமுறையில் இருக்கும் ஒரு வழக்கம். கால ஓட்டத்தில் பெரியவர்களிடம் விபூதி வாங்கிடும் பழக்கம் அருகி விட்டாலும், கோவிலில் இந்த மரபு இன்றும் வழக்கில் இருக்கிறது. இந்த விபூதியானது அதனை அணிந்து கொள்கிறவர்களை  தீவினைகளில் இருந்து காப்பாற்றும் கவசமாய் இருப்பதுடன், செல்வத்தையும் தருகிறது. இது பொது விதியாக இருந்தாலும், சிலர் தங்கள் தேவைகளை, லட்சியங்களை நிறைவேற்றிடும் பொருட்டு வசிய விபூதியை உருவாக்கி பயன் படுத்தி இருக்கின்றனர்.
இத்தகைய வசிய திருநீற்றைத் தயாரிக்கும் பல்வேறு முறைகளை சித்தர்களின் நூல்களிலும், மலையாள மாந்திரிக நூல்களிலும் காணமுடிகிறது. அப்படியான ஒரு வசிய திருநீற்றினை தயாரிக்கும் முறையினை இன்றைய பதிவில் பகிர்ந்து கொள்கிறேன். அகத்தியரின்  "அகத்தியர் பரிபூரணம்" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்ட தகவல் இது. இதன் உண்மைத் தன்மை ஆய்வுக்கும் விவாதத்திற்கும் உரியது. எனவே இதனை ஒரு தகவல் பகிர்வாக மட்டும் அணுகிட வேண்டுகிறேன்..
கிருபையுள்ள புலத்தியனேவ சிய மொன்று
     கெணிதமுடன் சொல்லுகிறே னன்றாய் கேளு
துருவமுள்ள வுருத்திரபூமி யிலே சென்று
      சுகமாக வெந்தஅஸ்திநீயெ டுத்து மைந்தா
அருவமுள்ள அஸ்தியுடன் விஷ்ணு மூலி
     ஆதிசத்தி தன்னுடைய வேருங் கூட்டிக்
கருவையினிச் சொல்லுகிறேன்க லசப் பாலாற்
     கருணையுடன் றானரைத்தே யுண்டை செய்யே.
 
செய்யடா உருண்டைதனையு லர வைத்துச்
     செம்மையுட னெருவடுக்கிப் புடத்தைப்போடு
மெய்யடா சொல்லுகிறே நீறிப் போகும்
     வேகாந்த மானதொரு நீற்றை வாங்கி
வையடா சவ்வாதுடனேபு னுகு சேர்த்து
     மார்க்கமுடன் அங்கெனவே லட்ச மோதி
மையமென்ற நெற்றியிலேவி பூதி பூசி
     மார்க்கமுடன் அரசரிடஞ் சென்று பாரே.
 
சென்றுமிக நின்றுடனேயி ராச மோகம்
     சிவசிவா செகமோகம்ஸ்ரீவ சிய மாகும்
அண்டர் பிரானருள் பெருகிவ சிய முண்டாம்
     அப்பனே ஓம்கிலியு றீயு மென்று
பண்டுபோலி லட்சமுரு வேற்றிப் பின்னர்
     பாலகனே லலாடமிசைப் பூசிச் சென்றால்
தொண்டரென்றே சத்துருக்கள்வ ணங்கு வார்கள்
     துஷ்டனென்ற மிருகமெல்லாம்வ சிய மாமே.
 
ஆதி குருவான சிவன் விரும்பி வசிக்கும் பூமியான இடுகாட்டிற்குச் சென்று எரியும் சுடலையில் இருந்து  நன்கு வெந்த அஸ்தியை சேகரித்து எடுத்து வந்து, அதன் எடைக்கு சம அளவில்  விஷ்ணு கிரந்தியின் வேரினைச் சேர்த்து கல்வத்தில் இட்டு அதனோடு  தாய்ப்பால் சேர்த்து நன்கு அரைத்து உருண்டையாக செய்து கொள்ள வேண்டுமாம். இந்த உருண்டைகளை சூரிய ஒளியில் நன்கு உலரவிட்டு எடுத்து நான்கு வரட்டிகளைக் கொண்டு புடமிட வேண்டுமாம். இதனால் அந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும் என்கிறார். இந்த திருநீற்றுடன் சவ்வாதும், புனுகும் சேர்த்து ஒரு சிமிழில் சேகரித்துக் கொள்ள வேண்டுமாம். 
இந்த திருநீற்றில் இருந்து  சிறிதளவு எடுத்து கைகளில் வைத்துக் கொண்டு "அங்" என்று லட்சம் உரு செபித்து பின்னர் அதனை நெற்றியில் பூசிக்கொண்டு அரசரிடம் சென்றால் அரசர்கள் வசியமாவார்களாம். இது இராஜவசியம் என்றும் அத்துடன் செக மோகமும் பெண்வசியமும் உண்டாகும் என்கிறார். 
மேலும் இந்த திருநீற்றில் இருந்து  சிறிதளவு எடுத்து கைகளில் வைத்துக் கொண்டு "ஓம்கிலிறீ" என்று லட்சம் உரு ஓதி நெற்றியில் விபூதியைப் பூசிக் கொள்ள வேண்டுமாம் அப்போது எதிரிகளும் வணங்கும் நிலை உண்டாவதுடன் தீங்கு செய்யும் விலங்குகளும் வசியமாகும் என்கிறார்.


போகர் அருளிய மிருக வசியம்!

Author: மதன்
Labels: போகர், வசியங்கள்
சமீப நாட்களில் வன விலங்குகள், மக்கள் குடியிருக்கும் பகுதிக்குள் வந்து விடுவதாகவும், அதனால் மக்களுக்கு துயர் உண்டாவதாகவும் பல செய்திகளை பத்திரிக்கைகளீல் பார்க்க முடிகிறது. நாம் அவற்றின் வாழ்விடங்களான வனப் பகுதிகளை ஆக்கிரமித்து குடியேறியதுதான் இத்தகைய நிலைக்கு காரணம்.
முற்காலத்திலும் கூட மனிதன் தன் தேவைகளுக்காக அடர் வனங்களின் ஊடே வாழ்ந்திருந்தனர். ஆனால் அவர்கள் மிருகங்களோடு இணக்கமாயிருக்கும் உத்திகளை கைக் கொண்டிருந்தனர். இத்தகைய உத்திகளை நம் முன்னோர்கள் மிருக வசியம் என்றழைத்தனர். இன்றும் கூட மலைவாழ் மக்கள் இத்தகைய சில உத்திகளை தமது அன்றாட பழக்கத்தில் வைத்திருக்கின்றனர்.
மனித நடமாட்டமில்லாத மலைகளிலும், காடுகளிலும் உறைந்திருந்த நம் சித்தர் பெருமக்களும் இத்தகைய பல மிருக வசியங்களை அருளியிருக்கின்றனர். அவற்றில் சில வசிய முறைகளை இங்கே பகிர்ந்திருக்கிறேன். அந்த வரிசையில் இன்று போகர் அருளிய மிருக வசியம் ஒன்றினை பார்ப்போம். இந்த தகவல் “போகர் 7000” எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.
                                                                                  
தானென்ற மூலிநரி விரட்டிக்கப்பா
தப்பாமா லாதித்த வாரந்தன்னில்
வண்மையுடன் ஓம்சடா சடாவென்று
ஆனென்ற வாயிரத்தெட் டுருசெபித்து
வவ்வேரை மறுவாரம் பிடுங்கிக்கொள்ளே
குறியான வேரையுநீ பிடுங்கிக்கொண்டு
நள்ளுவாய் நிழலுலர்த்திக் கொண்டு
நலமான செப்புகுளிசத்திலடைத்துக்கொள்ளே
அணிவாய் முன்னுருவே தியானஞ்செய்து
ஆச்சரிய மந்திரத்தான் மிருகஞ்சேராது.
 
நரிவிரட்டி என்றொரு மூலிகை உண்டு. இதற்கு “நரிமிரட்டி”, “கிலுகிலுப்பை”, “பேய்மிரட்டி” என வேறு பெயர்களும் உண்டு. இந்த மூலிகையை தேடி கண்டு பிடித்து, ஒரு ஞாயிற்றுக் கிழமை நாளில் அந்த செடியின் முன்னர் அமர்ந்து  "ஓம் சடா சடா" என்ற மந்திரத்தினை 1008 தடவைகள் செபித்துவிடவேண்டுமாம். பின்னர் அடுத்த ஞாயிற்றுக் கிழமை அன்று அந்த செடியினை பறித்து அதன் வேரை பிடுங்கி நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டுமாம்.
செம்பினால் ஆன தாயத்து ஒன்றினை செய்து, அதில் காயவைத்த நரிமிரட்டி வேரினை அடைத்து, "ஓம் சடா சடா"என்ற மந்திரத்தினை முன்னூறு தடவைகள் செபித்துக் பின்னர் அணிந்து கொள்ள வேண்டுமாம். இவ்வாறு அணிந்தவரை மிருகங்கள் நெருங்காது என்கிறார் போகர். 
ஆச்சர்யமான தகவல்தானே!
 

மாந்திரிகம் - அட்டமா சித்துக்கள்
Author: மதன்
Labels: அகத்தியர், மாந்திரிகம், வசியங்கள்
மாந்திரிகம் என்பது பழந்தமிழத்தில் புழக்கத்தில் இருந்த கலை. பெரும்பாலும் இதொரு தற்காப்பு கலையாகவே அறியப் பட்டிருந்தது. மருத்துவத்திலும் மாந்திரிகத்தின் பயன்பாடுகள் இருந்தன. காலப் போக்கில் மனிதனின் பேராசை இந்த கலையின் திறத்தையும், குணத்தையும் நிழலான காரியங்களின் பக்கம் மாற்றி வைத்தன.
சித்தர் பெருமக்களின் பாடல்க்ளின் ஊடே இந்தக் கலையைப் பற்றி உயர்வாக குறிப்பிடப் பட்டிருக்கின்றது. இந்த கலையினை அறிந்து தெளிந்து தேர்ந்தவர்கள் ஒருபோதும் தங்களை வெளிக் காட்டிக் கொள்ள மாட்டார்களாம். அத்தகைய சிறப்புடையவர்களை எளிதில் இனம் காண இயலாது என கூறியிருக்கின்றனர். மேலும், அவசிய அவசரங்கள் இருந்தால் மட்டுமே இந்தக் கலையினை நாடவும், கைகொள்ளவும் வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது.
இந்த மாந்திரிகத்திலும் எட்டு நிலைகளை வகுத்துக் கூறியிருக்கின்றனர். இவற்றை மாந்திரிக அட்டமாசித்து அல்லது அட்டகன்மம் என்கின்றனர். இந்த தகவல்களை முன்னரே பல பதிவுகளின் ஊடே பார்த்திருக்கிறோம். அவற்றை மீள் வாசிக்க விரும்புவோர் இந்த இணைப்பில்சென்று அந்த பதிவுகளை வாசித்தறியலாம்.
வசியம், மோகனம், தம்பனம், உச்சாடனம், ஆக்ருசணம், பேதனம், வித்துவேடணம், மாரணம் ஆகியவையே மாந்திரிகத்தின் எட்டு நிலைகள். இவை குறித்தும் ஏற்கனவே பகிர்ந்திருக்கிறேன். இனி வரும் நாட்களில் இந்த அட்ட கன்மங்களைக் கொண்டு நோய்நொடிகள் பிரச்சனைகள் என்று தேடிவரும் மக்களுக்கு எவ்வாறு தீர்வுகளை கொடுக்கபட்டது  என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
முதலாவதாய் இன்றையபதிவில் வசியம் பற்றி பார்ப்போம்.
வசியம்.
 
வசியம் என்பது ஒரு மனிதனை அல்லது மனிதர்களை தன் வயப்படுத்தி, தனது இச்சைகளுக்கு ஏற்ப அவரை அல்லது அவர்களை ஆட்டுவிப்பதேயாகும். இந்த வசியக் கலையை பயன்படுத்தி எந்தவகையில் தீர்வுகளை அளிக்க முடியும் என்பதை அகத்தியர் தனது அகத்தியர் 12000 என்னும் நூலில் விளக்கியிருக்கிறார்.
வசியமாய்க் காரீயத்தகடு வாங்கி
வளமாக நயமவசி என்று மாறி
உண்மையுள்ள மாந்தருக்கு கட்டினாக்கால்
பசிதாக மானதுபோல் உனைக் கண்டோர்கள்
பணிவார்கள் வசியமதாய்ப் பண்பாய் மைந்தா
நிசிதமுள்ள மிருக தாவர சங்கங்கள்
நேர்மையுடன் வசியமதாய் வணங்கும்பாரே.
 
காரீயத்தகடு ஒன்றை எடுத்து, அதில் "நயமவசி" என்று எழுதிக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அந்த காரீயத்தகட்டை கைகளில் ஏந்தியபடி கிழக்குமுகமாய் அமர்ந்து வசிய மூலமந்திரத்தினை 1008 தடவைகள் தொடர்ச்சியாக செபிக்க வேண்டுமாம்.
இவ்வாறு செபித்து முடிந்ததும், தீர்வும், தேவையும் உள்ளவர்கள் உடலில் இந்த யந்திரத்தினை கட்டிவிட வேண்டுமாம். அதன் பின் அவர்களுக்கு மிருகங்கள் தாவரங்கள் வசியமாகுமாம். அத்துடன் அவர்களும் பண்பும் பணிவும் நிறைந்தவர்களாக நடந்து கொள்வார்கள் என்கிறார்.
வசிய மூலமந்திரம் - ஓம் யநமசிவ அரிஓம் ஐயும் கிலியும் சுவாகா.



வசிய திலகம்!

Author: மதன்
Labels: இராமதேவர், வசியங்கள்
கடுமையான யோகங்கள், தியானங்கள் செய்யும் போது, மனிதர்கள் மற்றும் விலங்கினங்களினால் இடையூறு எதுவும் ஏற்படாமல் இருக்க ஒரு வகையான வசிய திலகத்தை சித்தர் பெருமக்கள் பயன்பாட்டில் வைத்திருந்தனர். அதிலும் குறிப்பாக சிவயோகம் செய்திடும் போது இத்தகைய திலகத்தை அணிந்து கொண்டனர் என்கிற தகவல் இராமதேவர் அருளிய "இராமதேவர் சிவயோகம்" என்னும் நூலில் விவரிக்கப்பட்டிருக்கிறது. 
அந்த பாடல்கள் பின்வருமாறு..
 
ஆமப்பா சிவயோகத் திருக்கும்போது
அருளான திலர்தவகை யொன்றுகேளு
நாமப்பா சொல்லுகிறோ மண்டத்தோட
நலமான மரமஞ்சள் கஸ்தூரிமஞ்சள்
தாமப்பா சாதிக்காய் சாதிப்பத்திரி
தாழம்பூத் தாளுடனே சந்தனமும்பூவுங்
காமப்பால் கல்மதமுங் கஸ்தூரிகோவுங்
களங்கமற்ற புழுகுடனே கற்ப்பூரங்கூட்டே.
 
கூட்டப்பா சரக்குவகை பதிமூன்றுந்தான்
குறிப்பாக வோரிடையா யெடுத்துக்கொண்டு
நாட்டப்பா கல்வமதிற் பொடித்துக்கொண்டு
நலமான பழச்சாறும் பன்னீர்வார்த்து
ஆட்டப்பா வடிமிளகு போலேமைந்தா
வரைக்கையிலே புழுகிட்டு அரைத்துநன்றாய்
நீட்டப்பா கயிரதுபோல் நீட்டிக்கொண்டு
நிழலுரத்திப் பதனமதாய் வைத்தக்கொள்ளே.
 
கொள்ளுகிற விதமென்ன வென்பாயாகிற்
குணமாகச் சிவயோகத் திருக்கும்போது
நல்லுருவாய்த் திலர்தமதை யெடுத்துக்கொண்டு
நாட்டப்பா குருபதிமேற் றிலர்தம்போடச்
சொல்லுகிற மந்திரந்தா னொன்றுகேளு
சுருக்கடா சுவாவென்று திலர்தம்போட்டு
உள்ளுறவா யிடுதயத்தின் மனதைநாட்டி
உம்மெனவே தம்பித்து வொடுங்கிநில்லே.
 
ஒடுங்கியந்த வொடுக்கமதி லொடுங்கிநில்லு
வுலகத்தி லுள்ளவர்க ளுன்னைக்கண்டாற்
படிந்துவுந்தன் பாதத்திற் பணிவாரையா
பக்குவமாய்ப் பிணியாளர் பணிந்துகண்டால்
நடுங்கிமிகப் பணிந்தோடும் பிணிகளெல்லாம்
நலமான சிவயோகச் செந்தீப்பட்டு
மடிந்துவிடும் பிணிகளெல்லா முலகிலுள்ளோர்
மண்டினிற்பா ருன்சமுகங் கண்டிலாரே.
 
மரமஞ்சள், கஸ்தூரி மஞ்சள், சாதிக்காய், சாதிபத்திரி, தாழம்பூ இதழ், சந்தனம், முப்பூ, காமப்பால், கல்மத்தம், கஸ்தூரி, கோரோசனை, புனுகு, கற்பூரம் ஆகிய பதின்மூன்று சரக்குவகைகளை சம எடையில் எடுத்து கல்வத்தில் இட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டுமாம். மேலும் அதனுடன் பழச்சாறும் பன்னீரும் சேர்த்து மீண்டும் மைப் போல அரைக்க வேண்டுமாம் அப்போது மிளகு நிறத்தில் அந்த கலவை கிடைக்கும். இந்த கலவையுடன் மேலும் ஒரு பங்கு புனுகு சேர்த்து நன்கு அரைத்து கயிறுபோன்று நீளவடிவாக உருட்டி நிழலில் உலர்த்தி சேமித்துக் கொள்ள வேண்டுமாம்.
சிவயோகம் செய்யும் போது முன்னர் சேமித்த கலவையில் சிறிது எடுத்து புருவமத்தியில் திலகமாக இட்டுக் கொள்ள வேண்டுமாம். அப்போது பார்க்கும் மக்கள் எல்லோரும் பணிந்து வணங்கிச் செல்வார்களாம். அத்துடன் மனிதர்கள் உள்ளிட்ட எந்த ஒரு உயிரினமும் எந்தவித இடையூறும் செய்யமாட்டார்கள் என்கிறார் இராமதேவர். 
ஆச்சர்யமான தகவல்தானே....
 

அகத்தியர் அருளிய மிருக வசியம்!

Author: மதன்
/ Labels: அகத்தியர், வசியங்கள்
இயல்பில் சித்தர்கள் வெகுசன வாழ்விடங்களில் இருந்து விலகியே வாழ்ந்திருந்தனர். தங்களுடைய அக மற்றும் புறத் தேடல்களுக்கு மனித சஞ்சாரமற்ற தனிமையான இடங்களே அவசியமாக இருந்தன. இதன் பொருட்டே காடுகள், மலைகள் என இயற்கையின் மடியில் வாழ்ந்திருந்தனர்.
இம்மாதிரியான இடங்களில் மனித சஞ்சாரம் வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம்... ஆனால் விலங்குகள்?
வனத்தில் நிறைந்திருக்கும் விலங்குகளிடம் இருந்து தங்களை காத்துக் கொள்வதற்கென சில உபாயங்களை சித்தர்கள் பயன் படுத்திவந்தனர். இன்றும் கூட காடுகளில் வாழ்ந்திருக்கும் பழங்குடியினர் இம்மாதிரியான சில வழிமுறைகளை கைக் கொண்டு காட்டு விலங்குகளிடம் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்கின்றனர்.
அகத்தியரும் கூட தனது அகத்தியர் பரிபூரணம் என்கிற நூலில் இம் மாதிரியான ஒரு வசிய உத்தியை அருளியிருக்கிறார். அதனை இன்று பார்ப்போம்.
இருந்துநிலை தானறிந்து யோகஞ்செய்ய
யேகாந்த புலத்தியனே ஒன்றுகேளு
வறிந்துநின்ற மிருகமெல்லாம் வசியமாக
மார்க்கமுடன் மந்திரந்தான் ஒன்றுகேளு
அருந்தவமாய்ச் சொல்லுகிறோம் நன்றாய்க்கேளு
அக்உக் கென்றுமிக அழுத்தியூது
பரந்துவரும் மிருகமெல்லாம் அசந்துபோகும்
பாலகனே சுழிமுனையில் பதிவாய்நில்லே.
- அகத்தியர் பரிபூரணம்.
இந்த பாடல் அகத்தியர் தனது சீடனான புலத்தியருக்கு சொல்வதைப் போல அமைந்துள்ளது. மனதை ஒரு நிலைப் படுத்தி சப்தமாக அக் உக் என்று அழுத்தி உச்சரிக்க மிருகங்கள் எல்லாம் வசியமாகும் என்கிறார். இந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரிப்பதன் மூலம் எந்த வகையான வன விலங்குகளிடம் இருந்தும் நம்மை காத்துக் கொள்ளலாமாம்.
இம் மாதிரியான ஆச்சர்யமான தகவல்கள் எல்லாம் ஏட்டளவில் உறைந்து கிடக்கின்றன. ஆர்வமுள்ளவர்கள் அல்லது ஆய்வாளர்கள் இவற்றை எல்லாம் பரீட்சித்து இதன் உண்மைத் தன்மையை உறுதி செய்தால் பலரும் பயன் படுத்திடக் கூடியவையாக இருக்கும்.



வசியக்காப்பு!
Author: மதன்

Labels: அகத்தியர், வசியங்கள்
வசியம் பற்றி ஏற்கனவே முந்தைய பல பதிவுகளில் பார்த்திருக்கிறோம். இன்றைய கால கட்டத்தில் இம்மாதிரி வசியம் மற்றும் வசிய தாயத்துக்கள், வசிய காப்புகளுக்கென எத்தனை பணம் வேண்டுமானாலும் செலவழிக்க நம்மில் பலர் தயாராக இருக்கின்றனர். இம்மாதிரியான வசிய பொருட்கள் பற்றி பல தகவல்கள் சித்தர்களின் நூல்களிலும், மலையாள மாந்திரிக நூல்களிலும் காணக் கிடைக்கின்றன. அப்படியான ஒரு வசிய காப்பு பற்றி அகத்தியரும் கூறியிருக்கிறார்.
இந்த தகவல் அகத்தியரின் “அகத்தியர் 12000” என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.
ஆமென்ற வசியம் ஒன்று சொல்லக்கேளு 
ஆதிமுதலான கொடியறுகு வாங்கி 
ஓமென்ற கண்டித்து மதுவில் போட்டு 
உரிமையுடன் மண்டலம் சென்றெடுத்துப்பாரு 
நாமென்ற நீரதுவும் நன்றாய்வற்றி 
நடுவான கொடியதுவும் பதமாய் நிற்கும் 
தாமென்றதன் பதமாய் வந்த மூலம் 
தருவான மூலமதின் தன்மைகேளே. 
 
தன்மையுடைய வெள்ளியுடன் செம்பு சேர்த்து 
தருவான தங்கமது மூன்றும் ஒன்றாய் 
உண்மையுடன் தானுருக்கி தகடுதட்டி 
உறுதியுள்ள மூலமதை வைத்துருட்டி 
செம்மைபெற ரவி வளையம் போலே செய்து 
தெரியாமல் பொருந்தினவாய் சேர்த்துக்கொண்டு 
நன்மைபெற சற்குருவை தியானம் செய்து 
நலமாக ஞாயிறுமுன் வைத்துப் போற்றே. 
 
வைத்ததொரு ரவி வளையம் வளவு தன்னை 
வலது கையில்தான் பூட்டி மனதாய் நின்றால் 
மைதொடுத்த விழியாளும் மன்னர்தானும் 
மகத்தான மிருகம் முதல் வசியமாகும் 
மெய்த்ததொரு இம்முறைதான் அதீத வித்தை 
வேதாந்த வேதியர்தான் சொன்ன மார்க்கம் 
உத்ததொரு வித்தைதனை உலகத்தோர்க்கு 
உரையாதே உரைத்ததினால் உறுதிபோமே. 
 
கொடி அறுகம் புல்லை வேருடன் பிடிங்கிக் கொண்டு வந்து அதை பிரணவ மந்திரமான ஓம் என்பதுபோல் வளைத்து தேனில் போட்டு ஒரு மண்டல காலம் வைக்கவேண்டுமாம். பின் அதை எடுத்தப் பார்க்க, நீரெல்லாம் வற்றிப் பதமாக இருக்குமாம்.
வெள்ளி, செம்பு, தங்கம் ஆகிய மூன்று உலோகங்களையும் சம எடையாக எடுத்து ஒனறாகச் சேர்த்து உருக்கி தகடாகத் தட்டிக் கொள்ள வேண்டுமாம். பின்னர் இந்த தகட்டில் தேனில் உறவைத்து எடுக்கப் பட்ட பதமான அந்த கொடியறுகை வைத்து சுருட்டவேண்டுமாம். பின்னர் சூரியனைப் போன்று வளையமாகச் செய்து கொண்டு இரு முனையையும் இணைத்து ஒட்டிக் கொள்ள வேண்டுமாம். அதன் பின்னர் இந்த வளையத்தை சூரிய ஒளி படும்படியான இடத்தில் வைத்து வணங்கிக் கொள்ள வேண்டுமாம்.
இப்போது இந்த வளையத்தினை வலது கையில் அணிந்து கொள்ளவேண்டுமாம். அப்படி வளையத்தை அணிந்து கொண்டு சென்றால், பெண்கள் துவங்கி மன்னாதி மன்னர்கள், விலங்குகள் என அனைவரையும் வசியமாக்குமாம்.
இந்த வித்தையை வேதாந்த வேதியரான சிவனார் தமக்குக் கூறியது என்றும் இத்தனை சிறப்பான இந்த வித்தையை உலக மக்களுக்கு சொல்ல வேண்டாம் என்றும் வலியுறுத்துகிறார். அப்படிச் சொன்னால் இது பொய்த்துப் பலிக்காது போய்விடும் என்கிறார் அகத்தியர்.

வசியம் தொடர்ச்சி...!

Author: மதன்
/ Labels: கருவூரார், மாந்திரிகம், வசியங்கள்
 
வசிய முறையில் சித்தியடைய மந்திரம், யந்திரம் மற்றும் இவற்றை பிரயோகிக்கும் தந்திரம் அவசியமென முந்தைய பதிவில் பார்த்தோம். அந்த வகையில் முக்கியமான யந்திரத்தை எப்படி அமைத்திட வேண்டும் மற்றும் இதனை எவ்வாறு பயன் படுத்திட வேண்டும் என்பதை இன்றைய பதிவில் பார்ப்போம்.
 
வசிய முறைக்கு பயன்படுத்த வேண்டிய யந்திரத்தினை அமைக்கும் முறையினைப் பற்றி கருவூரார் தனது பாடலில் பின்வருமாறு கூறுகிறார்.
 
 
"தானேதானாறுவகை நேரேகீறி
தண்மையாயாறுவரை குறுக்கேகீறி
கோனேகேளிருபத்தைந் தரையுமாச்சு
கொற்றவனேயரைதோரும் பீடங்கேளு
தேனேபார் முதல்வரையில் நாற்கோணந்தான்
தெளிவாகமருவரையில் முக்கோணந்
மானே நான் சொல்லுகிற ணன்டைவீட்டில்
மத்திடுவாய்வட்டமதை போடுபோடே"
 
"போடே நீயடுத்தவரை யைங்கோணம்பார்
பொன்னவனேயறுகோண படுதத்வீடு
நாடேநீநடுவணையைப் பிடித்துமாறு
நாயகனேயரைதோறும் மாறிக்கொள்ளு
வாடாதேவயநமசி யென்றுபோடு
வகையாகநடுவணையை முன்போல்மாறு
தேடாதேவகாரத்தில் றீயும்போடு
தெளிவாகயகராகத்தில் ஸ்ரீயும்போடே"
 
"ஸ்ரீயும்போட்டானவுடன் சொல்லக்கேளு
திகழானநகாரத்தில் ஐயும்போடு
நீயுமேமகாரத்தில் கிலியும்போடு
நேர்மையாய்சிகரத்தில் சௌவும்போடு
வாயுள்ளோய் எ - ஒ - அ - இ - உ - போடு
வாகாகவகாரத்தில் லம்தானையா
மாயுள்ளவளரென்சீஷா வகுக்கக்கேண்மோ
மைந்தனேயகாரத்தில் சௌவும்போடே"
 
"போட்டவுடன் நகாரத்தில் ஐம்தானப்பா
பொன்னவனேமகாரத்தில் ஈம்தான்போடு
நாட்டுவாய்ச்சிகாரத்தில் நம்தானையா
நலமாகப்போட்டுமல்லோ நவிலக்கேளு
தாட்டிகமாயிவையெல்லாங் கோர்வையாக
தப்பாமலரைதோரும் வரைந்துகொண்டு
காட்டுவேன்நடுவணையை முன்போல்மாறு
கருத்தகவரைதோறு மிப்படிப்படியேமாறே"
 
இந்த பாடல்களின் படி யந்திரத்தினை கீறினால் கீழே உள்ள படத்தில் இருப்பதைப் போல யந்திரம் இருக்கும்.
 

 
இப்போது நமக்கு தேவையான அனைத்து முன் தயாரிப்புகளும், உபகரணங்களும் தயாராகி விட்டது.வாருங்கள் வசிய சித்தி பெறுவதற்கான செயல் முறையினை(தந்திரம்) பார்ப்போம்.
 
குருவருளை வேண்டி அவரின் மேலான அனுமதியுடன் ஒரு ஞாயிற்று கிழமை நாளில் நீராடி, செம்பட்டு ஆடை அணிந்து வடகிழக்கு திசையை நோக்கி வில்வ மரத்தினாலான ஆசனத்தில் அமர்ந்துகொண்டு, முன்னால் செம்பட்டிலான துணியில் யந்திரத்தை வைத்து; வசிய மூல மந்திரமான “ஓம் யநமசிவ அரிஓம் ஐயும் கிலியும் சுவாகா” என்ற மந்திரத்தை செபித்தவாறே மல்லிகை மலர்களால் யந்திரத்தை 108 தடவை அர்ச்சிக்க வேண்டும் என்கிறார். இதனை காலை மாலை என இரு வேளையும் ஒரு மண்டலம் தொடர்ச்சியாக செய்து வர வசியம் சித்திக்குமாம்.
 
ஆச்சர்யமான தகவல்கள்தானே!, அடுத்த பதிவில் மற்றொரு மாந்திரிக முறையுடன் சந்திக்கிறேன்.
 
காத்திருங்கள்!!

வசியம்.
Author: மதன்
Labels: மாந்திரிகம், வசியங்கள்
இதுவரையில் சித்தர்களின் மாந்திரிகம் பற்றிய அறிமுகம் மற்றும் அதற்கான முன் தயாரிப்புகளைக் குறித்து பார்த்தோம். இனிமேல்தான் இந்த தொடர் சுவாரசியமான பகுதிக்குள் பயணிக்க இருக்கிறது. ஆம், மாந்திரிகத்தின் எட்டு படிநிலைகளை பற்றி இனி வரும் நாட்களில் பார்ப்போம்.
நண்பர்களே!, மாந்திரிகத்தின் செயல்பாடுகள் மற்றும் அதன் விளைவுகள் இதுவரை அறிவியல் ரீதியாக நிரூபிக்கப் படவில்லை. மேலும் இம்மாதிரியான கலைகளை போலியான அறிவியல்(Pseudo Science) என்று நவீன அறிவியல் நிராகரிக்கிறது. எனவே இந்த கலையில் தவறான முன்னெடுப்புகள் அல்லது முயற்சிகள் தேவையற்ற எதிர்விளைவுகளையும், பாதிப்புகளையும் உண்டாக்கி விடக் கூடும்.
ஆகவே தகுதியான குருவின் வழிகாட்டுதல் இல்லாத பட்சத்தில் யாரும் இவற்றை முயற்சிக்க வேண்டாம். இங்கே பகிரப் படும் தகவல்கள் அனைத்தும் காலத்தால் அழிந்து கொண்டிருக்கும் சித்தர் பெருமக்கள் அருளிய தகவல்களை ஆவணப் படுத்தி, அனைவருடனும் பகிர்ந்து கொள்ளும் ஒரு சிறு முயற்சி மட்டுமே!.
மாந்திரிக வரிசையில் இன்று முதலாவதாக வசியம் பற்றி பார்ப்போம். வசியம் என்பது ஒரு மனிதனை அல்லது மனிதர்களை தன் வயப்படுத்தி, தனது இச்சைகளுக்கு ஏற்ப அவரை அல்லது அவர்களை ஆட்டுவிப்பதாகும். தேவைகளைப் பொறுத்து இந்த வசியம் எட்டு பிரிவுகளாக அறியப் படுகிறது. அவை “ஜனவசியம்”, “ராஜவசியம்”, “புருஷவசியம்”, “ஸ்திரிவசியம்”, “மிருகவசியம்”, “தேவவசியம்”, “சத்துருவசியம்”, “லோகவசியம்” என அறியப் படுகிறது. இவற்றிற்கென தனித்த்துவமான செயல்முறைகள் சித்தர்களின் பாடல்களில் கூறப் பட்டிருக்கின்றன.
எந்த ஒரு மாந்திரிக முறையிலும் சித்தியடைய மந்திரம், யந்திரம் மற்றும் அதனை பிரயோகிக்கும் தந்திரம் ஆகிய மூன்றும் ஒன்றினைவது அவசியமாகிறது. இது தொடர்பான முன் தயாரிப்புகளைப் பற்றி முந்தைய பதிவுகளில் பார்த்திருக்கிறோம். இருப்பினும் வாசிப்பின் வசதி கருதி மீண்டுமொரு தடவை வசிய முறைக்கான முன் தயாரிப்பு தகவல்களை மீண்டுமொரு முறை இங்கே தருகிறேன்.
வசிய முறையில் சித்தியடைய பயிற்சியினை ஒரு ஞாயிற்றுக் கிழமையில் துவக்கிட வேண்டும். மந்திர உச்சாடனத்தின் போது உருத்திராட்ச மணி மாலையினை பயன் படுத்திட வேண்டும். வட கிழக்கு திசையினை நோக்கியாவாறு, வில்வ மரத்தினால் ஆன பலகையை ஆசனமாக பயன் படுத்தி அமர வேண்டும். வசியத்திற்கான அதிதேவதை ஈசன், மல்லிகை மலரை பூசைக்கு பயன்படுத்திட வேண்டும்.
செம்பட்டு ஆடையை அணிவதற்கும்,அணிவிப்பதற்கும் பயன் படுத்திட வேண்டும். வசிய முறைக்கான மூல மந்திரம் “ஓம் யநமசிவ அரிஓம் ஐயும் கிலியும் சுவாகா”. வெள்ளி அல்லது செப்புத் தகட்டில் கீறப்பட்ட யந்திரத்தை பயன்படுத்திட வேண்டுமாம். காலை, மாலை என இரு வேளைகளும் பூசைகளை செய்திட வேண்டும்.
எல்லாம் சரிதான் இந்த யந்திரத்தை எப்படி அமைப்பது?, அந்த யந்திரத்தை பயன் படுத்தி எவ்வாறு சித்தியடைவது?
விவரங்கள் அடுத்த பதிவில்...



கருவூரார் சொன்ன தேவ வசியம்...

Author: மதன்
Labels: கருவூரார், சித்தர் பாடல், சித்தர்கள்,மூலிகைகள், வசியங்கள்
"பாரப்பா நாக மல்லி மூலம் வாங்க
பாடுகிறேன் மந்திரந்தான் பண்பாய்மக்காள்
செய செய ஓம் கிலியும் பகவதா
வென்று தியானம் செய்து ஆரப்பா பிடுங்கி
வந்து நிழலு லர்த்தி அப்பனே பொடியாக்கி 
திரியி லூட்டி பெறப்ப காராவின் நெய் யெரித்து 
மையைப் போட்டிடவே தேவரெல்லாம் வசியமாவார்". 
 
- கருவூரார் பலதிரட்டு -
 
விளக்கம் :- 
 
பண்பான மாணவர்களே நாக மல்லி என்கின்ற செடியைப் பிடுங்க மந்திரத்தை சொல்லப் பாடுகிறேன் கேள் "ஜெய ஜெய ஓம் கிலியும் பகவதா" என்று மந்திரம் ஜெபித்து பிடுங்கிவந்து நிழலில் காயவைத்துப் பொடிசெய்து துணியில் வைத்து உருட்டி திரியாக்கி ஒரு விளக்கில் காராம் பசுவின் நெய் விட்டு முன் செய்த திரியை அதில் போட்டு எரித்து அந்த மையை எடுத்து திலகமாக நெற்றியில் இட்டால் தேவர்கள் எல்லாம் வசியமாவார்கள் என்கிறார் கருவூரார் பலதிரட்டு என்ற நூலில்.


கருவூரார் சொன்ன மிருக வசியம்...
Author: மதன் Labels: கருவூரார், சித்தர் பாடல், மூலிகைகள்,வசியங்கள்
"பாரப்பா வேண் குன்றி மூலம் வாங்க
நேரப்பா மந்திரந்தான் வம்வம் வசி வசி 
நிறை மிருக வசீகரி ஓமென்று போற்றி
வேரப்பா பிடுங்கி யதைவா யிலிட்டு
பேசவே மிருக வசீகரங் காணும்". 
 
- கருவூரார் பலதிரட்டு -
 
விளக்கம் :- 
 
வெண் குன்றி மூலிகை வேர் எடுக்க, "வம் வம் வசி வசி மிருகவசீகரி ஓம்" என்கின்ற மந்திரத்தை சொல்லி, வேரைப் பிடுங்கி எடுத்து வாயில் போட்டுக் கொண்டு எந்த மிருகத்தை அழைக்கிறோமோ அது வசியமாகும் என்கிறார் கருவூரார் பலதிரட்டு என்ற நூலில்.

அகத்தியர் சொல்லும் சத்துரு வசியம் செய்யும் முறை...

Author: மதன்
/ Labels: அகத்தியர், சித்தர் பாடல், மூலிகைகள்,வசியங்கள்
"தானான புலஸ்தியனே தருமவானே
தயாநி தியே சங்கநிதி சார்பேகேண்மா
கோணான வானை யேன்னு மூலிசாபம்
கொடுஞ் சுருக்கு பிரனவங்களே தென்றாக் கால் 
மானானவட் சரமாம் றீங்ரீ யுமாகும் 
மகத் தானவுரு வதுதான் லட்சமோது
பானான படை மன்னர் கோடி பாகம்
பாலகனே தலைவணங்கு மூலிதானே". 
 
- அகத்தியர் மாந்திரீக காவியம் -
 
விளக்கம் :- 
 
தருமவானே, தயாநிதியே, சங்கநிதியே, புலச்தியனே என் சீடனே கேள், கோணான வானை எனும் மூலிகையின் சாபம் நீக்குவதற்கு மந்திரம் "றீங்ரீ" என்று லட்முரு ஓதி எடுத்து உன்னுடன் வைத்துக் கொண்டால் உன்னை எதிர்த்து வரும் கோடிப் படையானாலும் தலை வணங்கும் மூலிகை தானே, என்கிறார் அகத்தியர் தனது மாந்திரீக காவியத்தில்.
இந்த உலகத்தில் சித்தனென்ற பெயரெடுக்க...

Author: மதன்
Labels: சித்தர் பாடல், சித்தர்கள், மூலிகைகள்,வசியங்கள்
"ஒப்பான இன்னொரு முறைமை கூர்வேன்
ஓகோகோ நாதர்கள் மறைத்த செதி
செப்பவே விஷ்ணு வாங்க சாபம்
செம்மையுடன் மாணாக்க ளறிய வேண்டி
தப்பாது பிரணவ ங்களே தேன்றாக்கால்
தயாபரனே சிம் சிம் சிம் மென்றேயோது
எப்படியும் லட்ச முரு செபித் தாயானால்
ஏன் மகனேலோ கசித்த னாகுவாயே". 
 
- அகத்தியர் மாந்திரீக காவியம் -
 
விளக்கம் :- 
 
இன்னுமொரு முறை சொல்கிறேன் கேள், பெரிய பெரிய சித்தர்கள் எல்லாம் மறைத்த செய்தி உனக்காக சொல்கிறேன் விஷ்ணு வாங்க செடிக்கு சாபம் நீக்குவதற்கு மந்திரம் எதுவென்றால், என் மாணவர்கள் அறிந்து கொள்வதற்காய் சொல்கிறேன். "சிம் சிம் சிம்" என்று ஒருலட்சம் முறை செபித்து பிடுங்கி வைத்துக் கொண்டால், இந்த உலகத்தில் சித்தனென்ற பெயரெடுக்கலாம். என்கிறார் அகத்தியர் தனது மாந்திரீக காவியத்தில்.
அகத்தியர் சொல்லும் லோகவசியம் செய்யும் முறை...
Author: மதன்

Labels: அகத்தியர், சித்தர் பாடல், மூலிகைகள்,வசியங்கள்
"ஆகுவா யம்பலவா புலஸ்தியா கேள்
அப்பனே பூனைத்தா ள்வணங்கு மேனி
வகுடனே சாபமத்தை நீக்குவதற்கு
வளம் பெரிய பிரணவமே தேன்றாக்கால்
சாகுயடைய வட்சரமாம் தூ தூ வாகும்
சதுர மன்னர் தான் மயங்குந் தழை தானாகும்
நாகுடனே லட்சமுருவோ துவோது
நாயக னேநாடெல்லாம் வைசியந் தானே" 
 
- அகத்தியர் மாந்திரீக காவியம் - 
 
விளக்கம் :- 
புலஸ்தியன் என்ற என் சீடனே கேள், பூனை வணங்கி என்கின்ற செடிக்கு சாபம் நீக்குவதற்கு மந்திரம் எதுவென்றால் "தூ தூ " என்று ஓத சாபம் நிவர்த்தியாகும். சகல பலம் பொருந்திய மன்னரையே மயக்கக் கூடிய இந்தத் தழைக்கு ஒருலட்சம் தடவை "தூ தூ " என்று ஓதி உருக்கொடுத்து பிடுங்கி வைத்துக் கொண்டால் இந்த நாடு எல்லாமே உனக்கு வசியமாகும். என்கிறார் அகத்தியர் தனது மாந்திரீக காவியத்தில்.


சித்தர்கள் சொன்ன வசியங்கள்...
Author: மதன்

Labels: சித்தர்கள், வசியங்கள்
மேன்மை பொருந்திய சித்தர்கள் அனைவருமே, உலக மக்கள் நெறி தவறாமல் வாழ வேண்டும் என்பதற்காக, யோக ஞானம், வைத்தியம், வாதம், சோதிடம், மாந்திரீங்கம் என்ற ஐந்து வகைக் காவியங்களை இயற்றித்தந்துள்ளனர். 
 
அந்த மாந்திரீக காவியத்தில் அட்டமாசித்துக்கள் என்ற பிரிவில், அட்டமா சித்துக்களை எட்டு பிரிவுகளாக பிரித்துள்ளனர். 
அவையாவன,
 
1. வசியம் :- 
இது மற்றவர்களைத் தன் வசப்படுத்தல்.
 
2. மோகனம் :- 
இது பிறரை தன்மீது மோகம் கொள்ளச் செய்தல்.
 
3. ஸ்தம்பம் :- 
இது எந்த வொரு இயக்கத்தையும் அப்படியே ஸ்தம்பிக்கச் செய்வது.
 
4. உச்சாடனம் :- 
இது தீய சக்திகள் அனைத்தையும் தன் இடம் விட்டு விரட்டுவதாகும். 
 
5. ஆக்ருஷணம் :- 
இது துர் தேவதைகளை தன்முன் பணிய வைப்பது.
 
6. பேதனம் :- 
இது சுயநினைவற்றுப் பேதலித்துப் போகச் செய்வது.
 
7. வித்வேஷணம் :- 
இது ஒருவருக்கொருவர் பகையை உண்டாக்கிப் பிரிப்பது.
 
8. மாரணம் :- 
இது உயிர்கள் அனைத்திற்கும் கேடு விளைவிப்பது. 
 
 
இதிலே நாங்கள் பார்க்கப் போவது வசியம் என்பதைப் பற்றி மட்டுமே. மற்றவைகளை பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம். இந்த வசியத்தையும் எட்டுவகையாகப் பிரித்துள்ளனர். அது,
1.ஜன வசியம்.
2.ராஜ வசியம்.
3.புருஷ வசியம்.
4.ஸ்திரீ வசியம்.
5.மிருக வசியம்.
6.தேவ வசியம்.
7.சத்துரு வசியம்.
8.லோக வசியம்...ஆகியவை.
 
இப்படியான வசிய வேலைகளால் நாம் பிறரிடம் இருந்தோ, பிற ஜீவராசிகளிடமிருந்தோ பல நன்மைகளைப் பெற்று வாழலாம்.
 
அது மட்டுமல்ல இப்படி முயற்சி செய்து மேற்கொள்ளப் படும் வசியக் கலையை எந்தவொரு தவறான காரியங்களுக்கோ, மற்றவர் வாழ்வு அழிவிற்கோ பயன்படுத்தக் கூடாது. அதனால் வரும் கேடுகள் உடனடியாக இல்லாவிட்டாலும் அவரவர் காலத்திலேயே அனுபவிக்க நேரிடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 
 
ஆகவே...
 
வசியக் கலையை நமது நல்வழிக்காகவும், நாம் செல்லும் நல்வழிக்கு தடங்கல் ஏற்படாமல் இருப்பதற்காகவும் பயன்படுத்தி, நாமும் வாழ்ந்து, மற்றவரையும் வாழ விடுவோம்.
 
அவர்கள் சொன்ன வசிய மூலிகைகள் என்ன அவற்றை எவ்வாறு எடுப்பது, எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி அடுத்த அடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.

posted from Bloggeroid

No comments:

Post a Comment