அஞ்சனா தேவியின் அருளைத் தரும் மந்திரம்
Labels: அகத்தியர், அஞ்சனா தேவி, மந்திரம்
சித்தர் பெருமக்கள் வணங்கிய ஒரு பெண் தெய்வத்தைப் பற்றியும், அந்த தெய்வத்தின் அருளை பெறுவதற்கான மந்திரம் மற்றும் தந்திரத்தை இன்றைய பதிவில் பார்க்க இருக்கிறோம். சித்த மரபில் வாலை என்கிற பெண் தெய்வ வழிபாடு பற்றி முந்தைய பதிவுகளில் பார்த்திருக்கிறோம். வாலை தெய்வம் எத்தனை சக்தி வாய்ந்தது, அதன் மகத்துவம் பற்றிய தகவல்களை இந்த இணைப்பில் சென்று வாசிக்கலாம்.
இன்று நாம் பார்க்க இருக்கும் தெய்வத்தின் பெயர் "அஞ்சனா தேவி" அல்லது "அஞ்சனை தேவி". இந்த தெய்வத்தைப் பற்றிய தகவல்கள் என பார்த்தால் அரிதாய் ஒன்றிரண்டு குறிப்புகளே எனக்குக் கிடைத்திருக்கிறது. ஆரம்பத்தில் இந்த தெய்வம் வாயு புத்திரனான ஆஞ்சனேயரின் தாயாராக இருக்கும் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் அதற்கான சாத்தியங்கள் குறைவு என்பதாலும், அத்தகைய குறிப்புகள் வேறெங்கும் இல்லாததினாலும் இந்த தெய்வம் வாலையைப் போல தனித்துவமான தன்மைகளையும், பண்புகளையும் கொண்டவளாய் இருக்க வேண்டும்.
சித்தர் பெருமக்களைப் பொறுத்தவரையில் அவர்களின் படைப்புகளின் ஊடே புராணங்களுக்கும், மிகைப் படுத்திய கதைகளுக்கும் இடமில்லை. எனது சிறிய அனுபவத்தில் நான் பார்த்த வரையில் அவர்களின் ஒவ்வொரு சொல்லுக்கும், செயலுக்கும் பின்னால் ஏதோ ஒரு காரணமோ, காரியமோதான் இருக்கிறது. அந்த வகையில் இந்த அஞ்சனா தேவியின் அருளை பெறுவதற்கான மந்திரத்தையும், அதை செயலாக்கும் நுட்பத்தையும் அகத்தியர் தனது "அகத்தியர் 12000" எனும் நூலில் அருளியிருக்கிறார். அந்த பாடல்கள் பின் வருமாறு.....
ஆச்சப்பா இன்னமொரு மார்க்கங்கேளு
அருளான அஞ்சனா தேவிமூலம்
பேச்சப்பா பேசாத மவுனமூலம்
பிலமான புலத்தியனே சொல்லக்கேளு
மூச்சப்பா நிறைந்தவெளி மூலாதாரம்
முத்திதரும் ஆதாரத்தில் மனக்கண்சாத்தி
காச்சப்பா ஓங்கிலியும் ரங்ரங்கென்று
கண்ணார நூறுருவிற் காணலாமே.
காணுகிற விதமென்ன மைந்தாகேளு
கற்பூர தீபஒளி சோதிபோலே
தோணுகிற போதுமனம் ஒன்றாய்நின்று
சோதியெனு மஞ்சனா தேவியென்று
பேணியவள் பாதமதைசிர மேல்கொண்டு
பிலமாக மானதாய்ப் பூசைப்பண்ணி
ஊணிமன மொன்றாக நீறுசாத்தி
உத்தமனே நித்தியமுந் தியானம்பண்ணே.
பண்ணப்பா நித்தியமுந் தியானம்பண்ண
பதிவான இருதயமே வாசமாகி
முண்ணப்பா நிறைந்ததிரு சோதிபோலே
முக்யமுடன் காணுமந்த சோதிதன்னால்
கண்ணப்பா கண்ணுமன மொன்றாய்நின்று
காணுதடா அண்டபதங் கண்ணிநேரே
உண்ணிப்பா உன்னியந்த விண்ணுமண்ணும்
ஊடுருவிப் பார்த்ததைநீ ஒண்டிக்கேளே.
ஒண்டுமிடந் தனையறிந்து அண்டத்தேகி
ஊசாடு மஞ்சனா தேவிமூலம்
நின்றுமன தறிவாலே தியானம்பண்ணி
நேமமுடன் விபூதியைநீ தரித்துக்கொண்டு
சென்றுஅந்த ஆகாச வெளியைப்பாரு
திருவான அஞ்சனா தேவிதன்னால்
கண்டுகொள்வாய் பகல்காலம் நட்சத்திரங்கள்
காணுமடா கண்னறிந்து கண்ணால்பாரே.
கண்ணாரப் பூமியைநீ நன்றாய்ப்பார்த்து
கருணைவிழிப் பார்வையினால் உண்ணிப்பாரு
பொன்னான பூமிநடுப் பாதளத்தில்
பொருளான வெகுநிதிகள் பொருந்தக்காணும்
முன்னோர்கள் வைத்தநிதி கண்டாயானால்
மோகமென்ற ஆசையைநீ வைக்கவேண்டாம்
மெய்ஞானி செய்தவத்தை நன்றாய்ப்பாரு
மெஞ்ஞான அஞ்சனா தேவிதானே.
மூலாதாரத்தில் மனதை நிறுத்தி, அஞ்சனா தேவியின் மூலமந்திரமான "ஓங் கிலியும் ரங்ரங்" என்ற மந்திரத்தினை நூறு தடவைகள் செபிக்க வேண்டுமாம். இவ்வாறு தொடர்ந்து செபித்து வந்தால் அஞ்சனாதேவி மனக்கண்ணில் ஜோதி வடிவாக காட்சி தருவாளாம். அப்போது நம் நெற்றியில் திருநீறு சாத்தி அந்த தேவியை வணங்கி, மனதால் பூசித்து மந்திர ஜெபத்தை தொடர வேண்டும் என்கிறார்.
இவ்வாறு தொடர்ந்து ஜெபித்து வந்தால், பகல் நேரத்தில் நட்சத்திரங்கள் தென்படுமாம், அத்துடன் பூமியில் பாதாளத்தில் முன்னோர் வைத்த நிதிகளும் தென்படுமாம். அப்போது அந்த பொருட்களின் மீது ஆசை கொள்ளாமல், மெய்ஞானிகள் செய்த தவ முறைகளை எண்ணினால், அஞ்சனா தேவியின் அருளினால் அவை யாவும் கைகூடும் என்கிறார் அகத்தியர்.
நாகபாம்பின் விஷம் இறக்கும் மந்திரம்
Labels: அகத்தியர், மந்திரம்
சித்தர்கள் அருளிய எத்தனையோ ஆச்சர்யமான தகவல்களில், நாக பாம்பானது கடித்து விஷம் தலைக்கேறி விட்டால் அந்த விஷத்தை இறக்கும் மந்திரம் ஒன்றை பற்றி இன்று பார்ப்போம். நம்புவதற்கு அரிதான இந்த தகவலை ஒரு தகவல் பகிர்வாக மட்டுமே அணுகிட வேண்டுகிறேன்.
அகத்தியர் அருளிய "அகத்தியர் பரிபூரணம்" என்னும் நூலில் விஷம் இறங்க ஒரு மந்திரத்தை பின் வருமாறு கூறுகிறார்.
சித்தியுள்ள நாகமதின் வித்தையப்பா
தெளிந்துகொண்டு மனதுறுதி யாகப்பாரு
கொல்லென்ற கூத்துவனார் லபியினாலே
கொடுமையென்ற விஷமேறித் தலைமேற்கொண்டா
சொல்லென்ற சொல்லதினால் மைந்தாமைந்தா
சுகமாகத் தீருதற்கு மந்திரங்கேளு
வில்லென்ற விசைபோலே விஷத்திற்பாய்ம்
விசையாக அங்கிலிசிங் நசிநசியென்னே.
யெண்ணியுரு அருபதிலே விஷந்தான்தீரும்
யென்மகனே உறுதிகொண்டு இருந்துபாரு
புத்தியுட னாயிரத்தெட் டுறுவேசெய்தால்
ஆதிதொடுத் தந்தமந்திரம் சித்தியாமே.
ஒருவரை நாக பாம்பு தீண்டி விஷம் அவர உடலெங்கும் பரவி தலைக்கேறி விட்டால், அவர் அருகில் அமர்ந்து "அங்கிலி சிங் நசி நசி" என்ற மந்திரத்தை அறுபத்தி நான்கு தடவை தொடர்ந்து உச்சரிக்க உடலில் பரவிய விஷம் இறங்கிவிடும் என்கிறார். இந்த மந்திரத்தை சொல்லுகிறவர் முன் கூட்டியே இந்த மந்திரத்தில் சித்தியடைந்திருக்க வேண்டியது அவசியம். "அங்கிலி சிங் நசி நசி" என்ற மந்திரத்தை தொடர்ச்சியாக ஆயிரத்து எட்டு தடவை செபித்தால் இந்த மந்திரம் சித்தியாகுமாம்.
இந்த தகவலின் பின்னாலிருக்கும் அறிவியல் ஆய்வுக்கு உட்பட்டது. எனவே இதனை ஒரு தகவலாக மட்டுமே அணுகிட வேண்டுகிறேன்.
நாளைய பதிவில் நெருப்பில் நடக்கும் ஜாலம் பற்றி பார்ப்போம்.
புத்தாண்டு வாழ்த்தும், 600வது பதிவும், வயிரவ மந்திரமும்!
Labels: அகத்தியர், மந்திரம்
நண்பர்கள் அனைவருக்கும் எனது உளம் நிறைந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த நாள் துவங்கி இனிவரும் நாட்களில் உங்களின் எண்ணங்கள், செயல்கள், சிந்தனைகள் யாவும் மேம்பட்டு சிறந்திட எல்லாம் வல்ல குருவருளை வணங்கி வேண்டிக்கொள்கிறேன். மேலும் இன்றைய பதிவு நமது “சித்தர்கள் இராச்சியம்” வலைப் பதிவின் அறுநூறாவது பதிவாக அமைகிறது. இது நாள் வரை நீங்கள் அளித்த அன்பும், ஆதரவும் இனி வரும் நாட்களிலும் தொடர்ந்திட பணிவுடன் வேண்டுகிறேன்.
இந்த புத்தாண்டு நாளில் முயற்சியுடையோர் வாழ்வில் முன்னெடுக்கும் ஆக்கப் பூர்வமான முன்னெடுப்புகள் யாவும் சித்திக்க உதவிடும் சொர்ண வைரவரின் மந்திரம் ஒன்றினை பகிர்ந்து கொள்கிறேன். இந்த மந்திரம் அகத்தியரால் தனது "அகத்தியர் பரிபாஷை" என்னும் நூலில் அருளப் பட்டிருக்கிறது. தொழில் முனைவோருக்கும், செய்தொழில் வெற்றிகள் வேண்டுவோருக்கும், பொருள் தேடும் முயற்சியில் சுண்ங்கியிருப்போருக்கும் இந்த மந்திரம் உதவுமென்கிறார் அகத்தியர்.
இந்த மந்திரத்தின் மகிமையை அகத்தியர் பின்வருமாறு விளக்குகிறார்.
தான்பார்க்குந் தொழிற்கெல்லாம் வயிரவனும்வேணும்
தன்மையுடன் தொட்டதெல்லாம் பலிக்கும்பாரே
மான்பார்த்த சிவகிருபை யிருந்துதானால்
மக்களே செய்தொழிலும் பங்கமாமோ
கோன்பார்த்தக் குருமுடிக்க அருகில்நின்று
குணங்குறிகள் தவறாமல் மனதிற்றோணி
வான்பார்த்த கருவெல்லாம் வெளியதாக
மக்களே தோணுமடா மகிழ்ந்துபாரே.
செய்யும் தொழில்கள் எல்லாவற்றிற்க்கும் சொர்ணபைரவர் வேண்டுமாமாம். அப்படி அவர் மந்திரம் சித்தித்தால் தொட்டதெல்லாம் பலிக்கும் என்கிறார் அகத்தியர். மேலும் சிவபெருமானின் கருணை இருந்தால் செய்யும் தொழிலில் பங்கமே வராது என்கிறார் அதற்கு வைரவர் துணை என்றென்றும் வேண்டும். செய்தொழிலில் குணம் குறைகள் மனதில் தோன்றி தவறுகள் நேராது காக்க இந்த மந்திரம் உதவுமென்கிறார். அத்துடன் எல்லா உண்மைகளும் வெளிப்படையாகத் தோன்றும் மகிழ்ந்து பார் என்றும் சொல்கிறார்.
இத்தனை சிறப்பு வாய்ந்த மந்திரம் என்ன?, அதை எப்படி பயன் படுத்துவது என்பதை பின்வருமாறு அருளுகிறார்.
பண்ணப்பா சொர்ணவயி ரவன்றன் பூசை
பாங்கான மந்திரத்தைச் சொல்லக் கேளு
எண்ணப்பா ஓங்கென்றும் ஸ்ரீங்கென்றுந்தான்
என்முன்னே சொர்ணரூபா வாவாவென்றும்
கண்ணப்பா நானெடுத்த கருவெல்லாந்தான்
கைவசமாய்ச் செய்துவைக்க வாவாவென்று
சண்ணப்பா நூற்றெட்டு உருவேயானால்
தன்வசமாய் போகுமடா தான்பார்ப்பீரே.
"ஓங் ஸ்ரீங் என் முன்னே சொர்ணரூபா வாவா. நான் எடுத்த கருவெல்லாம் கைவசமாய் செய்து வைக்க வாவா"என்பதுதான் சொர்ண வயிரவரின் மந்திரம். இதனை நூற்றி எட்டு உரு செபித்தால் மந்திரம் சித்தியாகுமாம் என்கிறார்.
மேலும் இந்த மந்திரத்தை யாரிடம் உபதேசம் வாங்கிட வேண்டும் என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்.
பாரடா தவமுனிவர் சித்தரெல்லாம்
பண்பாக மறைத்ததென்ன உட்கருவின்மூலம்
நேரடா வெளிக்கருவின் மூலந்தானும்
நெகிழாமற் பலவிதமாய்ச் சொல்லிவைத்தார்
காரடா யிக்காண்டந் தன்னிற்றானும்
கண்மணியே காணுதற்கு வகையாய்ச்சொன்னேன்
ஆரடா அறிவார்கள் குருசொல்லவேணும்
அல்லதா லின்னூலே சொல்லும்பாரே.
சித்தர்கள், தவமுனிவர்கள், மறைத்ததெல்லாம் என்ன? உட்கருவின் மூலத்தை வெளிப்படையாகச் சொல்லாது மறைத்து வைத்தார்கள். அதையும் இந்தக் காண்டத்தில் உனக்கு தெளிய வைத்து விட்டேன் என்று சொல்லும் அகத்தியர், இதனை வேறு யாரும் சொல்ல மாட்டார்கள் என்கிறார்... குருவாக இருப்பவர்களே இந்த மந்திரத்தை உபதேசிக்க வேண்டும். அப்படி குரு இல்லாதவர்களுக்கு இந்நூலே குருவாக இருந்து சொல்லும் என்றும் சொல்கிறார்.
எனவே, எல்லாம் வல்ல குருநாதரை மனதில் தியானித்து மிகவும் எளிதான இந்த மந்திரத்தை பயன்படுத்தி, நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளின் ஊடாக நலமும், வளமும் பெற குருவருள் துணை நிற்கட்டும்.
மீண்டுமொரு முறை எனது இதயம் நிறை புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்.
மாந்திரிகம்!
Labels: மந்திரம், மாந்திரிகம்
மாந்திரிகம்!, சித்தரியலில் மாந்திரிகம் என்பது தனியொரு பெரும் பிரிவாக உள்ளது. இயன்ற வரையில் மிகையில்லாமல் அந்த தகவல்களை இங்கே தொகுத்து பகிர்ந்திட முயற்சிக்கிறேன்.தொடரின் நெடுகில் ஏதேனும் தகவல் பிழைகள் இருக்குமாயின் சுட்டிக் காட்டி திருத்திடுமாறு வேண்டுகிறேன். இந்த துவக்க பதிவில் மாந்திரிகம் பற்றிய பொதுவான சமூக கருத்தாக்கங்களைப் பார்ப்போம்.
மாந்திரிகம் என்றாலே நம்மில் பலருக்கு அச்சம் கலந்த பயவுணர்வுதான் உண்டாகும். ஏனெனில் சிறு வயது முதலே அத்தகைய ஒரு எண்ணப் போக்கில்தான் நாம் வளர்க்கப் பட்டிருக்கிறோம். மேலும் மாந்திரிகம் என்பது தவறானது, தவறானவர்கள் கைகொள்ளுவது எனவே அத்தகைய ஒன்றோடு தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்பதான கருத்தாக்கமே சமூகத்தில் வேரூன்றியிருக்கிறது. மாந்திரிகத்தைப் பயன் படுத்தும் மந்திரவாதிகளைக் கோரமான தோற்றத்தை உடையவர்களாகவும், பிறருக்கு தீமை செய்யும் கொடியவர்களாகவும் உருவகித்து வைத்திருக்கிறோம்.
மாந்திரிகம் என்பது செய்வினை, பில்லி, சூனியம், ஏவல், வைப்பு, வசியம் போன்ற வினைகளின் அங்கமாகவே நம் சமூகத்தில் புரிந்து கொள்ளப் பட்டிருக்கிறது. இந்த வினைகள் யாவும் சக மனிதனை அடிமை செய்து அவனை தன் இஷ்டப் படி கஷ்டப் படுத்தும் செயல்களாய் எண்ணிக் கொண்டிருக்கிறோம். தற்போது அறிவியல் வளர்ந்து விட்ட நிலையில் இவையெல்லாம் பகுத்தறிவுக்கு ஒவ்வாத மூட நம்பிக்கைகள் என நிராகரித்து ஒதுக்கிக் கொண்டிருக்கிறோம்.
இப்படி முற்றிலும் நிராகரிக்கப் பட்டிருக்கும் ஒரு கருத்தாக்கம் குறித்து யாரும் வெளிப்படையாக விவாதிக்கவோ அல்லது ஆராயவோ தயாராக இல்லை என்பதுதான் நிதர்சனம். அப்படியே முன் வந்தாலும் கூட, சக மனிதர்களினால் கேலிக்குரியவர்களாகவோ அல்லது அருவெருப்பா னவர்களாகவோ கருதி ஒதுக்கப் படும் சங்கடங்கள் இருக்கின்றன.
மாந்திரிகத்தின் சாத்திய, அசாத்தியங்களை நிறுவுவது இந்த தொடரின் நோக்கமில்லை. மாந்திரிகம் என்கிற கலை மாறுபட்ட பரிணாமங்களை உள்ளடக்கியது, அதன் கூறுகள் எவ்வாறெல்லாம் பயன் தருகின்றன என்பதை அறியத் தருவதே இந்த தொடரின் நோக்கம். இந்த தொடரின் முடிவில் மாந்திரிகம் என்பது வதைத்தலும், வதைக்கப்படுதலுமே என்கிற அடிப்படை எண்ணப் போக்கில் மாறுதல் உங்களுக்குள் உருவாகுமானால் அதையே இந்த தொடரின் வெற்றியாக கருதுவேன்.
எல்லாம் சரிதான்!, அதென்ன மாந்திரிகம்?
விவரங்கள் நாளைய பதிவில்...
நிறைந்த அன்புடன் நலமும், வளமும் பெருகிட...
இருபத்தியோராம் நூற்றாண்டின் முதல் தசாப்தம் இன்றோடு நிறைவு பெறுகிறது.ஆண்டின் கடைசி பதிவு இது, வருட துவக்கத்தில் இத்தகைய ஒரு முயற்சியில் ஈடுபடுவேன் என கனவிலும் நினைத்திருக்கவில்லை. பதிவுலகம் பற்றிய அனுபவம் ஏதுமில்லாது பதிவிடத் துவங்கியவளுக்கு, குருவருளால் இன்றைக்கு அறுநூற்றி ஐம்பத்தியோரு நண்பர்கள், ஆயிரக் கணக்கில் வாசகர்கள். பிரமிப்பாயிருக்கிறது.
இந்த ஒன்பது மாத கால அனுபவத்தில் அருமையான பல நல் உள்ளங்களின் அன்பினையும், ஆதரவினையும், ஆசிகளையும் பெற்றிருக்கிறேன் என்பது பெருமிதமான உணர்வினை தருகிறது. அன்பும், அக்கறையும் இனி வரும் நாட்களிலும் தொடர்ந்திட வேண்டுகிறேன்.
நாளை இனிதே துவங்கும் புத்தாண்டு, கடந்த இரண்டாயிரத்து ஐந்தாம் ஆண்டின் நாட்காட்டியை அச்சு அசலாக ஒத்திருக்கிறது என்பது ஆச்சர்யமான ஒற்றுமை.ஆதி சித்தரான சிவனுக்கு மிகவும் உகந்த நாளாக கருதப் படும் சனிபிரதோஷமன்று வருடம் துவங்குவது மத நம்பிக்கையாளர்களுக்கு மகிழ்வான செய்தி. சனவரி மற்றும் மார்ச் மாதங்களில் மூன்று பிரதோஷங்கள் வருவதும் குறிப்பிடத் தக்க ஒன்று, அதேபோல வைஷ்ணவர்கள் சிறப்பாக கருதும் வைகுண்ட ஏகாதசி தினம் இந்த வருடம் கிடையாது என்பதும் அபூர்வமான ஒன்று.
இந்த புத்தாண்டு நம் அனைவருக்கும் அன்பையும், சமாதானத்தையும், ஆரோக்கியத்தையும் நல்குவதாய் அமைந்திட வேண்டுமென பிரார்த்திப்போம்.இனி வரும் நாட்களில் நீங்கள் முன்னெடுக்கும் எண்ணங்கள், முய்ற்சிகள்,செயல்கள் யாவும் வெற்றியடைய, கருவூரார் தனது மாநிரீக காவியத்தில் அருளியுள்ள அரிய மூன்று மாந்திரங்களை இன்றைக்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
இந்த மந்திரங்களை குருவை வணங்கி, மனசுத்தியுடன் காலை,மாலை வேளைகளில் அமைதியான ஓர் இடத்தில் கிழக்கு முகமாய் அமர்ந்து வேளைக்கு நூற்றி எட்டு தடவையாக மொத்தம் 10008 தடவைகள் செபிக்க வேண்டுமென்கிறார்.நம்பிக்கையுடன் தொடர்ந்து செய்திடுங்கள், பலன் கிட்டும்.
நினைவாற்றலை அதிகரிக்கவும், மறந்து போனவைகளை நினைவுக்கு கொண்டு வர வைக்கும் மந்திரம்.அனைவரும் செய்திடக் கூடிய எளிய மந்திரம் இது...
"ஓம் றீயும் ஐயும் சவ்வும் ஸ்ரீயும் கிலியும் ஆருசணாய சுவாகா"
உடல் ஆரோக்கியம் நிலைக்கவும்,நோய்வாய் பட்டவர்களின் துயர் நீங்கவும் பின் வரும் மந்திரம் உதவும். மேலே சொன்ன முறைப் படி 10008 தட்வை செபிக்க இந்த மந்திரம் சித்தியாகுமாம்.அதன் பின்னர் நோய்வாய் பட்டால் இந்த மந்திரத்தை இருபத்தியோரு தடவை செபிக்க துயர் நீங்கும் என்கிறார் கருவூரார்.
"ஓம் சங்கு உருள நசி சக்கரம் உருள மசி சிக்கு பிணி பீடை நசி சுவாகா"
பின் வரும் மந்திரத்தை மேற் சொன்னவாறு 10008 தட்வை செபித்தால் மந்திரம் சித்தியாகுமாம்.அதன் பின்னர் தினமும் காலை எழுது காலைக்கடன் முடித்த பின்னர் இருபத்தியோரு தட்வை செபிக்க அன்றைய தினம் செல்வம் கையிலிருக்கும் என்கிறார் கருவூரார்.
"ஓம் மகா லட்சுமி ராவே மகாளி லட்சுமி ராவே தீன லட்சுமி ராவே சர்வ பூரணி க்ஞ்சாட்சரிலோக ரட்சகி சர்வ சம்பத்து ரட்சகி ஸ்ரீ பாதார விந்தமு சரணம் பஞ்சாக்கரரூபி வசியம் வசியம் சிவா ஸ்ரீயும் றீயும் வங் சுவாகா"
நாளைய புத்தாண்டு பதிவில் செல்வம் நிலைக்கவும், பெருகவும் உதவும் அரிய சக்தி வாய்ந்த யந்திரம் ஒன்றினைப் பற்றிய தகவலுடன் சந்திக்கிறேன்.இயன்ற வரையில் இந்த தகவலை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். ஏனெனில் பகிர்ந்து கொள்ளும் மனப்பான்மையே அன்பையும், சமாதானத்தையும் தழைத்தோங்க வைத்திடும்.
கல்வியும், செல்வமும், வீரமும் தரும் மந்திரங்கள்
Labels: அகத்தியர், மந்திரம்
மந்திரங்கள் சூட்சும உருவாக்கம், அதற்கு பொருள் கிடையாது, ஒலிக்குறிப்புகள் உருவாக்கும் அதிர்வுகளை ஒட்டிய அறிவியல். புராணங்களுக்கும், மிகைப் படுத்திய கதைகளுக்கும் இங்கே இடமில்லை. மிக நேர்த்தியாக உருவாக்கப் பட்ட எழுத்துக்களின் தொகுப்பு.அவை ஓரெழுத்தாகவும் இருக்கலாம், பல எழுத்துக்களின் தொகுப்பாயும் இருக்கலாம். அவற்றின் முறையான பிரயோகம் தரும் அல்லது உருவாக்கும் பலன் மட்டுமே சாதகனின் நோக்கமாய் இருத்தல் வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் கல்வி, செல்வம் மற்றும் வீரத்தை அருளக் கூடிய மந்திரங்களையும், அவற்றை செயலாக்கும் நுட்பத்தினையும் பார்ப்போம். அகத்தியரின், அகத்தியர்12000 என்ற் நூலில் இருந்து எடுக்கப் பட்டவை இந்த மந்திரங்கள்.
முதலில் கல்வியில் சிறக்க, கல்வியின் அதிதேவதையான சரஸ்வதியின் மந்திரத்தையும், அதனை செயல்படுத்தி பயனடையும் உத்தியை அகத்தியர் பின் வருமாறு கூறுகிறார்.
"பாரப்பா சரஸ்வதியின் மந்திர பீஜம்
நல்வாக்கு வாணி ஸ்ரீம் காயத்திரி என்று
லட்சமுரு செபித்தாயானால் காணப்பா
புத்திகூர்மையா ம்வாக்குவ ன்மைசித்தே"
- அகத்தியர் 12000 -
சரஸ்வதியின் பீஜ மந்திரமான " நல்வாக்கு வாணி ஸ்ரீம் காயத்திரி" என்று அந்தி சந்தி வேளைகளில் 108 தடவைகள் வீதம் லட்சம் உரு ஜெபித்தால் இந்த மந்திரம் சித்தியாவதுடன் புத்தி சாதுர்யமும் வாக்கு வன்மையும் உண்டாகும் எகிறார் அகத்தியர்.
இதில் மந்திரம் என்பது - " நல்வாக்கு வாணி ஸ்ரீம் காயத்திரி".
மந்திர பிரயோகம் என்பது - அந்தி சந்தி வேளைகளில் ஜெபிப்பது.
மந்திரசித்தி என்பது - புத்தி சாதுர்யமும் வாக்கு வன்மையும் உண்டாவது.
செல்வத்தின் அதி தேவதையான இலக்குமியின் மந்திரத்தையும், அதனை செயல்படுத்தி பயனடையும் உத்தியை அகத்தியர் பின் வருமாறு கூறுகிறார்.
"சித்தியாம் இலக்குமியின் மந்திர பீஜமப்பா
சிறப்பாக இடாயி இடாயி டாகினி டிடிடி றீங்
கென்று பத்தியாய் லட்சமுரு ஓது ஓது
சகலசெல்வமும் கூடிவரும் தரணியிலேபகராதே"
- அகத்தியர் 12000 -
இலக்குமியின் பீஜ மந்திரமான "இடாயி இடாயி டாகினி டிடிடி றீங்" என்று அந்தி சந்தி வேளைகளில் 108 தடவைகள் வீதம் லட்சம் உரு ஜெபித்தால் இந்த மந்திரம் சித்தியாவதுடன் சகல செல்வங்களும் சேரும் எகிறார் அகத்தியர்.
இதில் மந்திரம் என்பது - "இடாயி இடாயி டாகினி டிடிடி றீங்".
மந்திர பிரயோகம் என்பது - அந்தி சந்தி வேளைகளில் ஜெபிப்பது.
மந்திரசித்தி என்பது - சகல செல்வங்களும் சேருவது.
வீரத்தின் அதி தேவதையான வீரபத்திரரின் மந்திரத்தையும், அதனை செயல்படுத்தி பயனடையும் உத்தியை அகத்தியர் பின் வருமாறு கூறுகிறார்.
"ஆச்சப்பா வீரபத்திர மந்திர பீஜம் கேளு
அகோராயா வீரவீரபுரபுர அரிஅரிஎன்றுலட்சம்
மாச்சலிலா செபித்துவந்தால் மைந்தா
வீரபத்திரர் வீரமய் வருவார் சார்ந்தே"
- அகத்தியர் 12000 -
வீரபத்திரரின் பீஜ மந்திரமான "அகோராயா வீரவீரபுரபுர அரிஅரி" என்று அந்தி சந்தி வேளைகளில் 108 தடவைகள் வீதம் லட்சம் உரு ஜெபித்தால் இந்த மந்திரம் சித்தியாவதுடன் வீரபத்திரர் வீரமாய் துணை வருவார் எகிறார் அகத்தியர்.
இதில் மந்திரம் என்பது - "அகோராயா வீரவீரபுரபுர அரிஅரி".
மந்திர பிரயோகம் என்பது - அந்தி சந்தி வேளைகளில் ஜெபிப்பது.
மந்திரசித்தி என்பது - வீரபத்திரர் வீரமாய் துணை வருவது.
இந்த மந்திரங்களை குருமுகமாய் உபதேசம் பெற்று, விநாயக மந்திரஞ் சொல்லி மனதை ஒருமுகப் படுத்தி செயல்படுத்தும் எவரும் முறையான பலன்களை பெறலாம் என்கிறார் அகத்தியர். நம்பிக்கை இருக்கிற எவரும் இதை பயன்படுத்தி பலனடையலாம்.
அடுத்த பதிவில் வேறொரு தகவலுடன் சந்திக்கிறேன்...
மந்திர சித்தி.!
Labels: அகத்தியர், மந்திரம்
மந்திரம் என்பது சூட்சுமம், மாந்திரீகம் என்பது சூட்சுமமான மந்திரத்தினை செயல்படுத்தும் நுட்பம். எந்த ஒரு வினைக்கும் விளைவுகள் உண்டு என்பது நியதி. இதன் அடிப்படையில் மந்திரம், மாந்திரீகத்தின் பயன் அல்லது பலன் என்று ஒன்று இருக்குமல்லவா....அந்த பலனைத்தான் மந்திரசித்தி என்கின்றனர். மந்திரம் சித்தியானால் மட்டுமே தகுந்த பலன் கிடைக்கும்.
நமது மூளையில் பல லட்சக்கணக்கான அறைகள் இருப்பதாகவும், மந்திர ஒலியானது அந்த் அறைகளை உயிர்ப்பித்து திறப்பகாதகவும், மந்திர ஒலியின் அதிர்வுகள் அந்த அறைகளில் நிரம்பியிருந்து தேவையான தருணத்தில் பயன் தருவதாகவும் குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. அர்த்தமற்ற ஒலிக் குறிப்புகள், அவை உருவாக்கிடும் அதிர்வுகள், அதைத் தொடர்ந்த ஆற்றல் வெளிப்பாடு என்பதாக மேற்சொன்ன கருத்தோடு பொறுத்தியும், இருத்தியும் பார்த்தால் பல புதிய கோணங்கள் புலப்படும்.
சித்தர் பாடல்களில் பொருள் விளங்காமைக்கு ஒரு சுவாரசியமான தகவல் இருக்கிற்து. அதாவது சித்தர்கள் தங்களின் நூல்களை சபித்திருப்பதாகவும், அவற்றிற்கான சாப நிவர்த்தியினை முறையாக செய்தவருக்கு, அந்த பாடல்களின் பொருள் விளங்கும் என்பதாக ஒரு குறிப்பு இருக்கிறது.இந்த தகவல் அநேகமாய் மறைத்தே வைக்கப் பட்டிருக்கிறது. முறையான குருவருளின் துணையோடு பயிலும் போதுதான் இத்தகைய நுணுக்கங்களை அறிய முடியும்.
உதாரணத்திற்கு அகத்தியர் அருளியதும் எல்லோரும் பாராயணம் செய்யக் கூடியதுமான மந்திர தோத்திரம் ஒன்றை பாருங்கள்....
"ஆதி மயமாய் விளங்கு மந்திரதோத்திரம்
அரி ஓம் ஓம்யென்ற ருட்கண் சாத்தி
நீதியுடன் நேமமனுட்டா னஞ்செய்து
நிரஞ்சனமாஞ் சற்குருவை நீதியாக
ஓதியிரு கலையறிந்து வாசிகொண்டு
உண்மையுடன் சுழிமுனையில் ஓம்யென்றுண்ணே
ஓம்றிங்றிங் சிம் நசிமசிமசி சிவசிவய நம
ஓம்உம்கிலி அங்லங்அம் சிவயநம
ஓம்வங்சிங் ரங்ரங் சிவயநம
ஓம்வயநமசி உம்உம்லங் சிவயநம
ஓம்நங்கிலி நமவம்வசி வயநம
ஒம் மசிமசி சிவசிவ நம் ஓங்அங்
அங்லங்றிங் சிவய நம
ஓம் அம்உம் நம்சிம்சிவ சிவாயநமஓம்
சிங்கிலி நமசிவய நமஓம் சிவசிவா
நசிநசி சிவய நம ஓம்
மங்கிலிசிங்கி சிவசுவய நமஓம்
மசிமசிவய மசிவய நமஓம்
றிங்றிங் சவ்றிங்சிவய நமஓம்
லங்லங் ருங்றிங் சிவய நமஓம்
லாலீலூலம் சிங்சிவய நமஓம்
ஓம்சிவ சிவமந்திர தோத்திரந்தன்னை
உண்மையுட னந்திசந்தி யுருவே செய்தால்
தாம் சிவசிவ ரூபந்தானே யாடுஞ்
சகலகலைக் கியானமெல்லாந் தன்னுள் தங்கும்
ஆம் சிவசிவ யோகமருளே காணும்
அட்டமாசித்து களுமாடலாகும்
ஓம்சிவ பில்லிவிச ரோகமெல்லாம்
ஓடுமடா மந்திர தோத்திரத்தின் சித்தே"
- அகத்தியர் -
இந்தத் தோத்திரத்தை அந்தி சந்தி வேளைகளில் பாராயணம் செய்வதால் கிடைக்கும் பலன்களையும் அந்தத் தோத்திரத்திலேயே விளக்குகிறார் அகத்தியர். உங்களுக்கு புரிந்ததை பின்னூட்டத்தில் விளக்கிடலாமே!
நாளைய பதிவில் கல்வி, செல்வம், வீரம் இவற்றை அருளும் மந்திரங்களையும், அவற்றை செயல் படுத்தி மந்திர சித்தி அடையும் வழியினையும் பார்ப்போம்...
மந்திரங்களின் வகையும், மந்திரவாதியின் தகுதியும்!
Labels: அகத்தியர், கருவூரார், மந்திரம்
கடந்த இரு பதிவுகளின் தொடர்ச்சியாக மந்திரங்கள் என்பது சூட்சுமத்தின் திறவு கோல் என்பதையும், மாந்திரீகம் அதனை செயல்படுத்தும் நுட்பம் என்பதையும் உணர்ந்திருப்பீர்கள். இந்த சூட்சுமத்தின் எல்லைகள் மிகப் பெரியது. ஆனால் நிதர்சனத்தில் பெரும்பாலானவர்கள் இவற்றை செப்பிடு வித்தைகளாகவும், மை விளையாட்டுக்களாகவும், பொய்யான கட்டுக் கதைகளாகவும், ஏமாற்றுத் தந்திரங்களாகவும் மட்டுமே புரிந்து வைத்திருக்கின்றனர்.
மெய்யான மாந்திரிகம் பற்றி அகத்தியர் தனது நூலில் பின்வருமாறு விளக்குகிறார்.
"மெய்யான மாந்திரீக ஏதென்றால்
மேதினியாய் சித்தர் மொழி அனேகமுண்டு
வையகங்கள் தானறிக மாந்திரீக
மதிப்புடனே கடவுள் பதந்தனை வணங்கி
கூறுவேன் புலத்தியனே எல்லாம் மெய்தான்
துய்யவே உச்சாடனம் பொய்யுமாமோ
துப்பரவாய் தேவதைகள் தானுமப்பா
வையகங்கள் தானறிய வருதல் பொய்யோ
நண்ணான கெசகரண வித்தையப்பா
நாநிலத்தில் மெய்யாகும் பொய்யல்ல
பெண்ணான மாதருக்கு குளிசங் கட்டல்
பேருலகில் பொய்யல்ல மெய்யேயாகும்
தண்ணமுடன் நம்பு எல்லாம் மெய்யே
சத்தியமாய் நடதவர்க்கு எல்லாஞ் சித்தே"
- அகத்தியர் மாந்திரீக காவியம் -
நமக்கு கிடைத்திருக்கும் குறிப்புகளின் படி சித்தர்கள் மநதிரக்கலையினை மக்களின் நோய்களைத் தீர்க்கவும், விஷ ஜந்துக்களிடமிருந்து பாதுகாப்பதுடன், பில்லி, சூனியம், ஏவல், பூத பிசாசுகளிடமிருந்து மக்களைக் காப்பதற்க்கும், ஆன்ம பலத்தை அதிகரிப்பதற்கும், கொடிய வறுமையில் வாடும் மக்களுக்கு மந்திரங்களை யந்திரங்களாக வடிவமைத்துக் கொடுப்பதன் மூலம் அவர்களின் துன்பங்களை நிவர்த்திக்கவும் பயன் படுத்தி இருக்கின்றனர்.
கருவூரார் தனது அட்டமாசித்து என்னும் நூலில் மந்திரங்களின் தன்மையினை பொறுத்து அவற்றை எட்டுவகையாகப் பிரிக்கிறார்.. அவையாவன,
1, மூல மந்திரங்கள்.
2, பீஜ மந்திரங்கள்.
3, பஞ்சாக்கர மந்திரங்கள்.
4, தேவாதி மந்திரங்கள்.
5, வசிய மந்திரங்கள்.
6, அஸ்திர மந்திரங்கள்.
7, மகாசக்தி மந்திரங்கள்.
8, சித்த மந்திரங்கள்.
தற்போது புழக்கத்தில் இருக்கும் மந்திரம், மற்றும் மாந்திரீக முறைகள் மிகக் கடின வழிகளில் மேற்க் கொள்ளப்படுபவையாகவே இருக்கின்றன.ஓரிரு முறைகள் உச்சாடனம் செய்வதன் மூலம் பாரிய சக்தியை உருவாக்கும் மந்திரப் பிரயோக முறைகள் இன்னும் சித்தர் பாடல்களில் மறை பொருளாகவே உள்ளன. இவற்றை பகுத்தறியும் தன்மை தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே வாய்க்கும் என்கிறார் அகத்தியர்.
"அப்பனே! மாந்திரீய சிவயோகிக்கு
குன்றாத குருவருளுமிருக்க வெண்டும்
கூர்மயான புத்தியது மிகவும் வேண்டும்
வென்றிடவே பொய்கொலை களவுமாற்கம்
வேதாந்தக் கண்மணியே நீக்கல் வேண்டும்
தொன்றிசையாம் குருமொழியை மகுடமாகத்
தோற்றமுடன் கொள்பவனே சித்தனாமே"
- அகத்தியர் மாந்திரீக காவியம் -
நாளைய பதிவில் அகத்தியர் அருளிய மந்திர தோத்திர பாடலொன்றினை பற்றி பார்ப்போம்.
மந்திரமும், மாந்திரீகமும்....
Labels: கருவூரார், மந்திரம்
சித்தர்களின் பார்வையில் மந்திரம் என்பது ஒலியியல் மற்றும் அதிர்வுகளின் அடிப்படையில் அமைந்த நுட்பம். இந்த கலையினை முறையாக எவரும் கற்றுக் கொண்டு பயன் படுத்திட இயலும். தகுந்த குருவின் வழி நடத்துதலின் பேரில் யாரும் கற்றுக் கொள்ளக் கூடியது. இவற்றை நல்லவற்றிற்கும் பயன் படுத்தலாம், தீயவற்றிற்கும் பயன்படுத்தலாம். இதனை உணர்ந்தே சித்தர்கள் மந்திரக் கலையை நல்லொழுக்கமும் பரோபகார சிந்தனையும் கொண்டவர்கள் மட்டுமே கையாள வேண்டும் என்பதற்க்காக தங்களுக்குள் மிகமிக இரகசியமாக வைத்திருந்தனர்.
அப்படி இருந்தும், பிற்காலங்களில் சுயநலவாதிகளும், பேராசைக்காரர்களும் இந்தக் கலையைக் கையாளத் தொடங்கியதால் மந்திரக்கலை என்றாலே மக்கள் அஞ்சி கலங்கும் ஒரு நிலை உருவாகியது. இன்றைக்கும் சில நபர்கள் தங்களை சித்தர்களின் பிரதிநிதிகள் என்றும், நலமருளும் தேவதைகள் தங்களின் மந்திர சக்திக்கு கட்டுப் பட்டவை என்று பொதுமக்களை நம்பச் செய்து,அவர்களின் அறியாமையை மற்றும் இயலாமையை பயன்படுத்தி கொள்ளையடிப்பதை கண்கூடாக பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
கருவூர்ச் சித்தர் அன்றைக்கே இத்தகைய போலி மந்திர வாதிகளை தனது ”அட்டமாசித்து” என்னும் நூலின் ஆரம்பத்திலேயே மக்களுக்கு அடையாளம் காட்டி விடுகிறார்...
"வணங்கு வாயுலகினிலே மாந்திரீகர்
மகிதலமும் என்வசமே என்று சொல்வார்
கணங்களெல்லாம் எந்தனுக்குச்சித்தியென்பார்
கண்ணதனில் கண்டேனே தெய்வமென்பார்
குணமான வக்கிரத்தின் மாறெல்லாம்
குறிகண்டு மாறுவோரென்று சொல்வார்
இணங்காதே கோடிகோடி உருவே செய்தொம்
என்றல்லோ வெடுத்துரைப்பார் மட்டிமாடே"
- கருவூரார் -
நன்மை தரும் பல விசயங்களுக்குப் பயன் படுத்த வேண்டிய இந்த மந்திரக்கலை நிதர்சனத்தில் மக்களை அமானுஷ்யத்தின் பிடியில் வைத்து அச்சமூட்டவும், பொருள் பறிக்கவும், பெண்களை வஞ்சிக்கும் வகையில் பயன் படுத்தப் படுகிறது என்பது கவலையளிக்கும் ஒன்று. இதன் பொருட்டே சித்தர்கள் இந்த அரிய கலையை அதிகம் பரப்பி விடாமல் தமக்கு நம்பிக்கையான சிடர்களிடம் மட்டுமே உபதேசித்தனர்.
மந்திரங்கள் என்பது ஒரு வகையில் கணித சூத்திரங்களைப் போன்றதே..., இவற்றை வெறுமனே மூட நம்பிக்கைகள் என ஒதுக்கி விடாது, இந்த துறையில் மேலதிக ஆய்வுகள் செய்யப் பட்டால் பல விஷயங்களை பற்றிய அளப்பறிய தெளிவுகள் கிடைக்கலாம். மனித குலத்திற்கு எத்தனையோ நன்மைகளை செய்யும் விஷயங்களை உருவாக்கிடும் சாத்தியங்கள் மந்திரக் கலையில் இருக்கின்றது.
விவரம் அறிந்த எவரும் மந்திரங்களை உருவாக்கிட இயலும், ஆனால் அவற்றை பிரயோகிக்கும் முறையில்தான் மந்திரக் கலையின் வெற்றி பொதிந்திருக்கிறது. மந்திரங்களை முறையாக பயன்படுத்தி அவற்றை செயலாக்கம் செய்யும் முறையினைத்தான் மாந்திரீகம் என்கின்றனர்.
சித்தர்கள் மந்திரங்களின் தன்மைகளைப் பொறுத்து அவற்றை எட்டு வகையாக பிரித்திருக்கின்றனர். மேலும் மந்திரக் கலையினை கையாளுவோரின் தகுதிகள் பற்றியும் வரையறுத்துக் கூறியிருக்கின்றனர்.
அந்த விவரங்கள் நாளைய பதிவில்....
மந்திரமாவது...!
Labels: அகத்தியர், மந்திரம்
ஒலியின் தத்துவத்தில் இருந்து தோன்றியதே இந்த பேரண்டம். அமைதியின் ஆழத்திலும் கூட ஒலி உறைந்திருக்கிறது. இத்தகைய ஒலி உருவாக்கும் அதிர்வுகள் நிரம்பிய சூழலில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒலி மற்றும் அது உண்டாக்கும் அதிர்வுகளை அடிப்படையாக கொண்டதே சித்தர்களின் ”மந்திரக் கலை”. இன்னமும் எளிமையாக கூறுவதெனில் ”ஒலி அது ஏற்படுத்தும் எதிரொலி” இந்த தத்துவமே மந்திரக் கலையின் அடிநாதம்.
காற்றில்லாத வெற்றிடத்தை தவிர மற்ற எல்லா ஊடகங்களிலும்(திட, திரவ, வாயு) ஒலியானது அலை அலையாக பரவும் தன்மையுடையது. நவீன அறிவியலில் எல்லா ஒலிகளுக்குமான அதிர்வெண்கள் மற்றும் அலைவரிசைகள் வரையறுக்கப் பட்டிருக்கின்றன. பொருட்களும் குறிப்பிட்ட அதிர்வெண்ணை கொண்டிருப்பதாக நிரூபிக்கப் பட்டிருக்கிறது. இந்த ஒலியினையும் அது தரும் அதிர்வுகளையும் சித்தர்கள் எவ்வாறு பயன் படுத்தினர் என்பதே இந்த தொடரின் நோக்கம்.
மந்திரம் பற்றி அகத்தியர் தனது “அகத்தியர் மாந்திரீக காவியம்” என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார்.
"தொண்டு செய்து பெற்றவர்கள் கோடியுண்டு
தொல்லை யென்று விட்டவர்கள் கோடியுண்டு
விண்டுமே தெரிந்ததுவும் கோடியுண்டு
விட்டகுறை பட்டவர்கள் கோடியுண்டு
சண்டமாரு தம்போல் மந்திரத்தை
தரணியில் கற்றவர் கோடியாமே"
- அகத்தியர்
அநேகமாய் எல்லா சித்தர்களும் மந்திரம் பற்றிய தங்களது தெளிவுகளை நூலாக்கியிருக்கின்றனர். இவை பலவும் மறை பொருளாய் அருளப் பட்டிருப்பதனால், இவற்றின் சரியான மொழியாக்கம் கைவரப் பெறாத காரணத்தினால் இவற்றின் உண்மைத் தன்மை பற்றி பல விதமான கருத்துக்களும், எள்ளல்களும், கேலிகளும் உண்டு.
சித்தர்களைப் பொறுத்த வரையில் எல்லா பொருட்களும் ஒலி வடிவான தத்துவங்களில் இருந்தே தோன்றியவை. அதனால் இவை எல்லாவற்றிற்கும் மந்திர வடிவங்கள் உண்டு. குறிப்பிட்ட ஒலிகளை எழுப்புவதன் மூல அந்த மந்திரங்களை உருவாக்க இயலும்.அதனைக் கொண்டு அந்த பொருளை கட்டுப்படுத்த அல்லது தங்கள் விருப்பத்திற்கேற்ப பயன் படுத்த இயலும் என நம்பினர். மந்திரங்களின் மூலம் பஞ்சபூதங்களை தங்களுடைய கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என வலியுறுத்திக் கூறியிருக்கின்றனர்.
இதன் தொடர்ச்சியை நாளைய பதிவில் காண்போம்...
குரு வணக்கமும்... குரு தரிசனமும்...!
Labels: குரு வணக்கம், சித்தர் வணக்கம்,மந்திர யோகம், மந்திரம்
குரு வணக்கத்தின் மிக முக்கியமான பகுதி இது....
ஆத்ம சுத்தியுடன், எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாது குருவருளை நாடுவோர் மட்டுமே இத்தகைய முயற்சிகளில் ஈடுபட வேண்டும். கபட எண்ணங்களை முன்வைத்து செய்யப்படும் முயற்சிகள் தோல்வியில் முடியும். சித்தர்கள் என்பவர்கள் ஆசாபாசங்களை கடந்தவர்கள். வழிபாடுகள் என்கிற பெயரிலான ஆராதனைகளை அவர்கள் விரும்புவதும் இல்லை, ஏற்றுக் கொள்வதுமில்லை. ஆனால் இன்றைக்கு பலர் ஆயிரத்தெட்டு போற்றிகளை கொண்ட பூசை முறைகளை சித்தர்களுக்கானது என கூறிவருகின்றனர்.
இனி வணங்கும் முறையினை பார்ப்போம்....
அமைதி நிறைந்த தூய்மையான, வெளிச்சம் மிகுந்த அறையொன்றில், கிழக்கு முகமாய் நாம் வணங்க விரும்பும் சித்தரின் படம் ஒன்றினை வைத்து, அதன் முன்னால் ஒரு திரியினைக் கொண்ட விளக்கு ஒன்றினை ஏற்றி வைத்திட வேண்டும். சுத்தமான குவளை ஒன்றில் நீர் நிரப்பி வைக்க வேண்டும்.ஒரு அங்குலம் விட்டமும் மூன்று மில்லிமீட்டர் தடிப்பான ஒரு செப்பு நாணயம் ஒன்றை சித்தர் படத்தின் முன்னர் வைத்திட வேண்டும்.
இப்போது சித்தரின் படத்திற்கு முன்னால் ஒரு துணி விரித்து அதில் பத்மாசனத்தில் அமர வேண்டும். பத்மாசனத்தில் அமர சிரமப் படுவோர் சாதாரணமாக அமர்ந்து கொள்ளலாம். மூச்சினை சீராக்கி, உடம்பை தளர்த்தி அமைதி நிலைக்கு வர வேண்டும். இந்த தருணத்தில் முந்தைய பதிவில் நாம் குறிப்பிட்ட மூல மந்திரத்தினை (நாம் வைத்த படத்திலுள்ள சித்தருக்குரிய) நூற்றியெட்டு முறை மனதில் மட்டுமே ஜெபிக்க வேண்டும். இந்த முறையில் தினமும் சூரிய உதயத்தின் போதும், அஸ்மனத்தின் போதும் தொடர்ந்து தினசரி இரண்டு முறை செய்திட வேண்டும்.
இந்த பூசை முறையில் சிலவற்றை ஒழுங்குடன் செய்தல் வேண்டும். ஒவ்வொரு முறையும் குரு வணக்கத்திற்கு முன்னர் குவளையில் புதிய நீர் நிரப்பிட வேண்டும். எக்காரணம் கொண்டும் மலர்களையோ, பழங்கள் அல்லது உணவு பொருட்களை படையல் போடுவது போன்றவற்றை செய்திடக் கூடாது. சித்தர்கள் புறவழிபாட்டினை வெறுப்பவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இந்த முறையில் குரு வணக்கத்தினை எத்தனை ஆர்வத்துடனும், ஆத்ம சுத்தியுடனும் செய்து வருகிறோமோ அத்தனை விரைவில் நாம் வணங்கும் சித்தரின் அருளாசி கிடைக்கும். நமது முயற்சியின் தீவிரத்தினை பொறுத்து குறிப்பிட்ட அந்த மகா புருஷரின் திருவுருவ தரிசனமும் கிடைக்குமாம்.
மெய்யான குருவருள் நாடுவோருக்கு இந்த முறை கிடைத்தற்கரிய ஒரு வாய்ப்பு.
இதுவரை சித்தர்களை வணங்கும் முறையினை பார்த்தோம், அடுத்த பதிவில் சித்தர்களே வணங்கிய தெய்வம் பற்றி பார்ப்போம்...
குரு வணக்கம்?, சித்தர் வணக்கம்?
Labels: குரு வணக்கம், சித்தர் வணக்கம்,மந்திர யோகம், மந்திரம்
குரு வணக்கமும், சித்தர் வணக்கமும் ஒன்றா?, என நேற்று நண்பர் ஒருவர் மின்னஞ்சலில் சந்தேகம் எழுப்பி இருந்தார். அது பற்றிய சில விவரங்களை தந்துவிட்டு நமது குரு வணக்கத்தை தொடர விரும்புகிறேன்.
சித்தர் வணக்கம் என்பது குழந்தைகள் குருகுல வாசத்தினை ஆரம்பிக்கும் போது குருவானவர் ”சித்தர் வணக்கம்” என்கிற மந்திரத்தை உச்சரித்து துவங்குவார். ‘‘ஹரி நமோத்து சிந்தம்’’ என்பதே சித்தர் வணக்க மந்திரம். நமக்கு முந்தைய தலைமுறை வரையில் பின்பற்றப் பட்ட இந்த பழக்கம் சமீப காலத்தில் வழக்கொழிந்து போய்விட்டது. மற்றபடி இந்த சித்தர் வணக்கத்துக்கும், சித்தர்கள் மரபியலுக்கும் தொடர்பிருப்பதாக தெரியவில்லை.
இன்னமும் துல்லியமாக சொல்வதானால் இந்த சித்தர் வணக்கம் சமண மதத்தோடு தொடர்புடையது என்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.திருத்தக்க தேவர் என்னும் சமண முனிவர் இயற்றிய சீவக சிந்தாமணி என்னும் நூலில் கடவுள் வாழ்த்தாக முதல் பாடலை சித்தர் வணக்கம் என்று பின்வருமாறு எழுதியிருக்கிறார்.
"மூவா முதலா உலகம் ஒரு மூன்றும் ஏத்தத்
தாவாத இன்பம் தலை ஆயது தன்னின் எய்தி
ஓவாது நின்ற குணத்து ஒள் நிதிச் செல்வன் என்ப
தேவாதி தேவன் அவன் சேவடி சேர்தும் அன்றே".
எனவே இந்த சித்தர் வணக்கத்திற்கும் நாம் எழுதிக் கொண்டிருக்கும் குரு வணக்கத்திற்கும் தொடர்பில்லை.
இனி நம்முடைய குரு வணக்கத்தினை பார்ப்போம்.
நேற்றைய பதிவில் குறிப்பிட்ட சித்தர்களுக்கான மூல மந்திரங்கள் ஒவ்வொன்றும் தொடர்புடைய சித்த புருஷர்களை என்றும் தங்கள் தொடர்பில் வைத்திருக்க சீடர்கள் பயன்படுத்திய சூட்சுமமாகவே கருதப் படுகிறது. இந்த மந்திரங்களை முறையாக பயன் படுத்துவதன் மூலம் தாங்கள் முன்னெடுக்கும் எந்த ஒரு செயலுக்கும் தங்கள் குருநாதரின் அருளும், ஆசியும் கிடைப்பதுடன்....சமயங்களில் அவர்களை நேரடியாக தரிசிக்கும் வாய்ப்புக் கூட கிட்டுமாம்.
ஆமாம்! , நம்ப முடியாத செய்தி இதுதான்....என்றைக்கோ சமாதியடைந்த சித்த புருஷர்களை இந்த மூலமந்திரங்களின் துணை கொண்டு நேரில் தரிசிக்க முடியுமாம். சித்த புருஷர்களை நேரில் சந்திக்க வாய்ப்புள்ள அந்த முறையினை அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.
காத்திருங்கள்....!
குரு வணக்கம்... ஓர் தெளிவு...
Labels: குரு வணக்கம், மந்திர யோகம்,மந்திரம்
சித்தர்களின் மரபியல் குரு, சிஷ்ய பாரம்பரியத்தின் மீது கட்டமைக்கப் பட்டது. இங்கே குருவே எல்லாவற்றுக்கும் மேலானவராகவும், இறை நிலைக்கு இனையானவராகவும் வைத்துப் போற்றப் படுகின்றனர். குருவை வணங்குவதும் அவர் வழி நிற்றலுமே மேன்மையாக போற்றப் பட்டிருக்கிறது. இத்தனை மகத்துவம் வாய்ந்த இந்த பாரம்பர்யத்தை அறிந்து தெளிய நினைக்கும் எவரும் குரு வழிபாட்டினைப் பற்றி அறிந்திருக்க வேண்டியது அவசியம்.
சித்தர்களின் எந்த ஒரு செயலும், முயற்சியும் தங்களின் குருவினை முன் வைத்தே துவங்கியிருக்கின்றனர். ஒவ்வொரு சீடரும் தன் குருவினை தியானிக்கவும், வணங்கிடவும் தனித்துவமான சூட்சும மூல மந்திரங்களை பயன் படுத்தினர். இதன் பின்னால் இருக்கும் மகத்துவம் நமக்கு பிடிபடாவிடினும் இதன் காரண காரியங்களை குருமுகமாக நிச்சயம் பெற இயலும்.
இந்த பதிவில் மகிமை வாய்ந்த சித்தர்களின் மூல மந்திரத்தினை பகிர்ந்து கொள்கிறேன். இவை மிகவும் முக்கியமானவை.
நந்தீசர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ நந்தீச சித்த சுவாமியே போற்றி!"
அகத்தியர் மூல மந்திரம்...
“ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!”
திருமூலர் மூல மந்த்திரம்...
"ஓம் ஸ்ரீம் கெம் ஸ்ரீ மூலநாத சித்த சுவாமியே போற்றி!"
போகர் மூல மந்திரம்...
"ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகாபோகர் சித்த சுவாமியே போற்றி!"
கோரக்கர் மூல மந்திரம்...
“ஓம் ஸ்ரீம் க்லம் ஸ்ரீ கோரக்க சித்த சுவாமியே போற்றி!"
தேரையர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் லபம் நசீம் ஸ்ரீ தேரைய சித்த சுவாமியே போற்றி!"
சுந்தரானந்தர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் ஆம் ஊம் ஸ்ரீ சுந்தரானந்த சித்த சுவாமியே போற்றி!"
புலிப்பாணி மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் கிலீம் ஸ்ரீ புலிப்பாணி சித்த சுவாமியே போற்றி!"
பாம்பாட்டி சித்தர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்த சுவாமியே போற்றி!"
காக புசண்டர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் லம் ஸ்வம் ஸ்ரீ காக புசண்ட சித்த சுவாமியே போற்றி!"
இடைக்காடர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் ருணம் ஸ்ரீ இடைக்காட்டு சித்த சுவாமியே போற்றி!"
சட்டைமுனி மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் சம் வம் சட்டைமுனி சுவாமியே போற்றி!"
அகப்பேய் சித்தர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் சௌம் ஸ்ரீ அகப்பேய் சித்த சுவாமியே போற்றி!"
கொங்கணவர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் நசீம் ஸ்ரீ கொங்கண சித்த சுவாமியே போற்றி!"
சிவவாக்கியர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ சிவவாக்கிய சித்த சுவாமியே போற்றி!"
உரோமரிஷி மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் கிலம் ஸ்ரீ உரோம ரிஷி சுவாமியே போற்றி!"
குதம்பை சித்தர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் சம் ஸ்ரீ குதம்பைச் சித்த சுவாமியே போற்றி!"
கருவூரார் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் வம் லம் ஸ்ரீ கருவூர் சித்த சுவாமியே போற்றி!"
இந்த மந்திரங்களை எவ்வாறு பயன் படுத்துவது?
விவரங்கள் அடுத்த பதிவில்.....
காயந்திரி மந்திரம் மறைந்ததா?, மறைக்கப் பட்டதா...? - 03.
Labels: காயந்திரி மந்திரம், மந்திர யோகம்,மந்திரம்
பழந்தமிழர்கள் ஐந்து வகையான காயந்திரி மந்திரங்களை பயன் படுத்தியதாக தெரிகிறது. இந்த மந்திரங்களை எவரும் பயன் படுத்தலாம் என்கின்றனர். கருவூரார் அருளிய காயந்திரி மந்திரத்தினை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
"ஓம் பூர்வ புலன்கள் சுவை ஆகுக.!
தத்துவ வித்துக்கள் அரணாகுக.!
பாரின்கோ தேவர்கள் வசிக்கும் தீ மகிழட்டும்.!
தீயே யோகப் பரஞ்சோதி ஆகட்டும்.!"
இதன் உச்சரிப்புகள் நாம் இப்போது புழக்கத்தில் வைத்திருக்கும் காயத்ரி மந்திரத்தின் ஓசைகளை ஒத்திருப்பதை எவரும் அவதானிக்கலாம். இதன் மகத்துவத்தை காகபுசுண்டர் பின் வருமாறு கூறுகிறார்
"மவுனமே இப்படித்தான் செய்யும் பொய்யோ
வாய்க்குமல்லோ காயந்திரி வலுவே செய்யும்
கெவுனமே மேல்கிளப்பும் தொழிலே தானே
கேசரத்தில் ஏற்றி வைக்கும் சித்தி தானும்
மவுனமேயென்று சொன்னார் முன்னோரெல்லாம்
வந்தவர்கள் கண்டு கொண்ட வகையிதாமே
ரவிதனை மறவாமல் நோக்கி நோக்கி
காயத்ரி செபஞ்செய்து இருந்து பாரே"
- காகபுசுண்டர் -
இந்த காயந்திரியை பயன்படுத்தி எவ்வாறு பலனடைவது என்பதைப் பார்ப்போம்..
காயந்திரி சூரியனை நோக்கி சொல்லப் படும் மந்திரம். அதிகாலையில் சூரியன் உதிக்கும் முன்னர் சூரியனை பார்த்தபடி நின்று கொண்டோ, அல்லது பத்மாசனத்தில் அமர்ந்தோ ஆத்ம சுத்தியுடன் நூற்றியெட்டு முறை மனதுக்குள் உச்சரித்து ஜபம் செய்ய வேண்டும். உடலும்,உதடும் அசையாமல் மனதை ஒரு நிலைப் படுத்தி உச்சரிப்பதே சிறப்பு.
இந்த மகா மந்திரத்தினை காலையிலும், மாலையிலும் தொடர்ந்து ஜெபித்து வர ஆத்மா தன்னிலையறிந்து, பக்தி, தொண்டு, யோகம், தியானம், சமாதி என்கிற ஐந்து உயர் நிலைகளும் சித்திக்கும். இதனை காலையும் மாலையும் தொடர்ந்து செய்வதே சிறந்தது.இந்த மகா மந்திரமே எந்த நிலையிலும் அருள்தரக் கூடியது என்றும், இது நம் காயத்துக்கு (உடலுக்கு) திரியாக (உயிர்) இருந்து காக்கும் என்று கூறியுள்ளனர் சித்தர்கள்.
இதன் மகத்துவம் உணர்ந்து, நாமும் உயர்ந்து, மற்றவர்களையும் உயர்த்திடுவோம்..
வேறொரு தகவலுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்...
காயந்திரி மந்திரம் மறைந்ததா?, மறைக்கப் பட்டதா...? - 02.
Labels: காயந்திரி மந்திரம், மந்திரம்
கொஞ்சம் தயக்கத்துடன் இந்த பதிவினை எழுதுகிறேன். இந்த கருத்துக்கள் அனைத்துமே கடுமையான விமர்சனம் அல்லது விவாதங்களை உருவாக்க கூடியவை. எனவே பதிவின் சாரத்தினை ஒரு தகவல் பகிர்வாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன், பிழையிருப்பின் சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்ளவும், வருத்தங்களை தெரிவிக்கவும் தயாராக இருக்கிறேன்.
பழந்தமிழகத்தில் சாதியில்லை, மதம் இல்லை, இயற்கையையே வணங்கினர். மொழி சிறந்து, கலைகள் மிளிர்ந்து, நுட்பங்கள் உயர்ந்திருந்தன. ஆணும், பெண்ணும் சமூகத்தில் சம அங்கமாய் வாழ்ந்திருந்தனர். ஆதியில் இதுவே மெய்யான தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சாரமாய் இருந்தது.
விந்திய மலைக்கு தெற்கே ஆரியர்கள் மற்றும் களப்பிரர்களின் அழுத்தமான சுவடுகள் பதிய ஆரம்பித்த பின்னர் அவர்களின் கலாச்சாரம் தமிழர்களின் மீது வலுவாக திணிக்கப் பட்டது.இன்றைய நமது தமிழும், கலாச்சாரமும் இந்த இரு பிரிவினரின் பாதிப்புகளின் எச்சம்தான்.
தமிழின் நுட்பங்கள் மற்றும் செறிவான மொழியியலை தாங்கள் உணர்ந்து கொள்ளும் பொருட்டு உருவாக்கப் பட்டதே சமஸ்கிருதம்(சம - இணை , கிருதம் - மொழி ) என்கிற சர்ச்சையான கருத்து உள்ளது. காலப் போக்கில் இவ்வாறு மொழி மாற்றம் செய்யப் பட்டவைகளை ஆரியர்கள் தங்களுடையதாகக் கூறி அவற்றில் தங்களின் கற்பனாவாத மூட நம்பிக்கைகளை உட்புகுத்தி, கடவுளின் பிரதி நிதிகளாக தங்களை நிறுவிக் கொள்ளும் முகமாக சடங்குகள், வழிபாட்டு முறைமைகள், பாவபுண்ணிய தீர்மானங்களை தமிழர்களின் மீது திணித்தனர்.
இன்னும் தெளிவாக சொல்வதாயின், பரிதிமாற்கலைஞரின் ”தமிழ்மொழியின் வரலாறு” என்ற நூலின் எட்டாவது பக்கத்து வரிகளைத் தருகிறேன்....
“தமிழரிடத்திருந்த பல அரிய விஷயங்களையும் மொழிபெயர்த்துத் தமிழர் அறியுமுன்னரே அவற்றைத் தாமறிந்தன போலவும், வடமொழியினின்றுமே தமிழிற்கு அவை வந்தன போலவும் காட்டினர்"
இது தொடர்பாக மேலதிக தகவல் வேண்டுவோர், புலவர் அறிவுடைநம்பி, சிலம்பு நா.செல்வராசு மற்றும்மொழியியல் அறிஞரான Avram Noam Chomsky ஆகியோரின் நூல்களை வாசித்தறியலாம். இனையத்தில் கூட இது பற்றிய தகவல்கள் காணக் கிடைக்கின்றன. இந்த பதிவின் நோக்கம் அவற்றையெல்லாம் அலசுவதில்லை.
தமிழில் இருந்து இவ்வாறு மொழிமாற்றம் செய்யப் பட்டவைகளில் ஒன்றுதான் காயத்ரி மந்திரம் என்ற கருத்து உள்ளது. காயம் = உடல், திரி = உயிர், மந்திரம் = காக்கும், உடலையும் உயிரையும் பேணிக் காக்கும் கவசம் காயந்திரி மந்திரம் எனப்படுகிறது. இந்த மூல மந்திரத்தின் மொழிபெயர்ப்பு அல்லது இனையான உச்சரிப்புகளைக் கொண்டதே தற்போது புழக்கத்தில் இருக்கும் காயத்திரி மந்திரம் எனப்படுகிறது. இந்த மந்திரம் காலம் காலமாக குருமுகமாக மட்டுமே உபதேசிக்கப் பட்டு வந்தது... பரவலாக அறியப் படாமல் காயந்திரி மந்திரம் மறைந்து போனதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
காயந்திரி மந்திரம், அதனை பயன்படுத்தும் வகையினை அடுத்த பதிவில் காண்போம்...
காயந்திரி மந்திரம் மறைந்ததா?,மறைக்கப் பட்டதா...?
Labels: காயந்திரி மந்திரம், திருமூலர், மந்திரம்
காயத்ரி மந்திரம் என்பது அநேகமாய் நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்....ஆனால் இந்த தொடர் அது பற்றியதல்ல, தலைப்பை இன்னொரு முறை தீர்க்கமாய் படித்துக் கொள்ளுங்கள்.
குறிப்பிட்ட சில சொற்கள் அல்லது அட்சரத்தை ஒரே சீரான கதியில் திரும்பத் திரும்பச் சொல்லிட அந்த ஒலி அதிர்வுகள் சக்தியாய் உருமாறி ஜெபிப்பவரின் உடலையும் , உயிரையும் கவசம் போல காக்கிறது. இதுவே மந்திரங்களின் அடிப்படை தத்துவம்.
இத்தகைய மந்திரங்களில் தலையாயதாக கருதப் படுவது காயத்ரி மந்திரம். இதை தொடர்ந்து முறையாக ஜெபித்து வருபவர்களுக்கு நலத்தையும், வளத்தையும் அருளக் கூடியது. மேலும் இவர்களுக்கு எந்த தீங்கும் நேராது என்கிற நம்பிக்கையும் உள்ளது.
காயத்திரி மந்திரத்தை ஜெபிப்பவரின் மனம், வாக்கு , காயம் ஆகியவற்றால் செய்த பாவங்களை அகற்றி பிரம்மத்தை உணரவைக்கும் என்றும் கூறப் படுகிறது.ஞானத்தின் உயரிய நிலையான பிரம்மத்தையே உணரவைக்கும் வல்லமை கொண்டு விளங்குவதால் இந்த காயத்ரி உபதேசத்தை "பிரம்மோபதேசம்" என்றும் கூறுகின்றனர்.
"வேத சாஸ்திரங்களில் நான் காயத்ரியாக இருக்கிறேன்"என்று பகவத்கீதையில் பகவான் கிருஷ்ணர் கூறுவது இதன் மகத்துவத்தை உணர்த்தும்.
இத்தனை பெருமை வாய்ந்த காயத்திரி மந்திரத்தை உலகுக்கு அளித்தவர் விசுவாமித்ர முனிவர். இவர் காயத்தையே(உடலை) திரியாக எரித்து மாகா மந்திர சக்தியான காயத்திரி மந்திரத்தினால் வேத மாதாவான காயத்திரி அம்மனை தரிசித்து எண்ணற்ற சித்திகளைப் அடைந்து பிரம்மரிஷி என்ற பட்டம் பெற்றவர்.
விசுவாமித்ர முனிவரால் அருளப்பட்ட காயத்ரி மந்திரம் இதுதான்...சமஸ்கிருத மொழியில் அமைந்திருக்கிறது இந்த மந்திரம்....
"ஓம் பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்"
இத்தனை சிறப்பான காயத்ரி மந்திரம் பற்றி திருமூலர் தமிழில் இப்படி சொல்கிறார்...
காயத்திரியே கருது சாவித்திரி
ஆய்தற்க்குவப்பவர் மந்திரமாங்குன்னி
நேயத்தேர்ரேறி நினைவுற்று நேயத்தாய்
மாயத்துள் தோயா மறையோர்கள் தாமே!
- திருமூலர் -
இந்த இடத்தில்தான் நெருடல் வருகிறது. பொதுவாக சித்தர்கள் மந்திரங்கள் அனைத்துமே தமிழிலேயே இருக்கின்றது அப்படி இருக்க திருமூலர் சொல்லும் காயத்திரி மந்திரம் வேதங்களில் சொல்லப்பட்ட சமஸ்கிருத காயத்ரி மந்திரமா? அல்லது சித்தர்கள் தங்களுக்கென தனியான காயத்ரி மந்திரம் சொல்லி இருக்கிறார்களா? அப்படி சொல்லி இருந்தால் அது என்ன?
காத்திருங்கள்.....விவரங்கள் அடுத்த பதிவில்.....
அது என்ன ”எட்டிரண்டு”....?
Labels: சித்தர் பாடல், மந்திர யோகம், மந்திரம்
யோக ஞானம் பயில்வோர் ஒவ்வொருவரும் அறிந்து தெளிய வேண்டிய தத்துவம்தான் இந்த எட்டிரண்டு. ஆதி முதல் அந்தம் வரை அனைத்துக்குமே ஆதாரம் இந்த எட்டிரண்டு தத்துவம்தான். அண்ட சராசரங்கள் முழுதும் நீக்கமற நிறைந்திருப்பது இது ஒன்றுதான். இதன் மகத்துவம் உணர்ந்து தெளிந்தவர்களுக்கே சித்தரகசியம் சித்திக்கும்.
எட்டிரண்டின் பெருமையினை அநேகமாக எல்லா சித்தர்களும் உபதேசித்திருக்கின்றனர்.
"எட்டிரண்டு அறிந்தோர்க்கு இடர் இல்லை"
என்கிறார் இடைக்காட்டு சித்தர்.
எட்டுமிரண்டையும் ஒரத்து மறை எல்லாம்
உனக்குள்ளே ஏகமாய் தேர்ந்து
வெட்ட வெளியினைச் சார்ந்து - ஆனந்த
வெள்ளத்தில் மூழ்கி மிகு களி கூர்ந்து
என்கிறார் கடுவெளி சித்தர்.
"எட்டும் இரெண்டும் இனிதறிகின்றலர்
எட்டும் இரெண்டும் அறியாத ஏழையர்
எட்டும் இரெண்டும் இருமூன்று நான்கெனப்
பட்டது சித்தாந்த சன்மார்க்க பாதமே!"
என்கிறார் திருமூலர்.
எல்லாம் சரிதான், அது என்ன எட்டிரண்டு?
ஆங்கில எண்கள் புழக்கத்திற்கு வருவதற்கு முன்னர் பழந் தமிழகத்தில் தமிழ் எழுத்துக்களே எண்களை குறிக்க பயன் படுத்தப்பட்டன. இதில் எட்டு என்ற எண்ணைக் குறிக்க "அ" என்ற எழுத்தும் இரண்டு என்ற எண்ணைக் குறிக்க "உ" என்ற எழுத்தும் பயன் படுத்தப் பட்டது. இந்த அ, உ என்ற இரண்டு உயிரெழுத்துக்களையே சித்தர்கள் தங்களின் பாடல்களில் மறை பொருளாக எட்டிரண்டு என குறிப்பிட்டனர்.
இத்தனை முக்கியத்துவம் கொடுத்து மறைபொருளாக சித்தர்கள் பாடியது எதனால்?
இயற்கையின் ஓசைகள் அனைத்துமே இந்த அ, உ என்கிற சப்தத்தை கொண்டு தான் இயங்குகின்றன. இந்த அகார, உகார நாதத்தில் இருந்துதான் அனைத்துமே தோன்றின.அனைத்து ஒலிகளுக்கும் மூல ஆதாரமே இந்த எட்டிரெண்டுதான். வேதம், இசை, மந்திரம், யந்திரம், தந்திரம் என அனைத்திலுமே இவை இரகசியமாக அமைந்துள்ளது.
இந்த அட்சரங்கள் பற்றியும், அதன் இயக்கம், தொழிற்பாட்டு முறைகள் பற்றி ஆத்ம சுத்தியுடன் தெளிவாக உணர்ந்து தெரிந்து கொள்வோருக்கு மட்டுமே ஞானம் சித்திக்கும். இதன் மகத்துவத்தின் பொருட்டே சித்தர்கள் இதனை மறைவாய் வைத்தனர்.
இத்தனை மகத்துவமான எட்டிரண்டை பூரணமாய் அறிந்து தெளிந்தோர் பெரியோர். அவர் வழி நிற்போருக்கு குறையேதுமில்லை.
உண்மையை உணர்வோம்.! தெளிவடைவோம்.!
அடுத்த பதிவில் வேறொரு தகவலுடன் சந்திக்கிறேன்...
ஓரெழுத்து மந்திரம்.....தொடர்ச்சி.!
Labels: சித்தர் பாடல், மந்திர யோகம், மந்திரம்
பிரணவ மந்திரமான ”ஓம்” காரத்தில் இந்த ஓரெழுத்து மந்திரம் ஊமை எழுத்தாக உள்ளது என்கிறார் கொங்கணவர்.
சிவவாக்கியரோ "அஞ்செழுத்தில் ஒரேழுத்து " என குறிப்பு தருகிறார். அதாவது ந ம சி வா ய என்கிற ஐந்தெழுத்தில் ஓர் எழுத்து என்கிறார்.
திருமூலரோ ”நாயோட்டு மந்திரம் நமனை வெல்லும்”என்கிறார். அது சரி!, நாயை எப்படி விரட்டுகிறோம்.....!
”ச்சீய்”....!
ஆம்! , இத்தனை மறைவாக சித்தர்கள் குறிப்பிட்ட அந்த ஓரெழுத்து மந்திரம் “சி” என்பதாகும். இதனை ”சி”காரம் என்றும் குறிப்பிடுகின்றனர்.
ஓம் என்கிற ஓங்காரத்தில் இந்த ”சி” ஊமை எழுத்தாய் இருக்கிறது என கொங்கணவர் ஏன் சொன்னார்?
இதற்கான விளக்கம் பின்வரும் சிவவாக்கியர் பாடலில் கிடைக்கிறது.
அகாரம் என்னும் அகரத்தில் அவ்வு வந்துதித்ததா?
உகாரம் என்னும் அகரத்தில் உவ்வு வந்துதித்ததா?
அகரமும் உகாரமும் சிகாரமின்றி நின்றதா?
விகாரமற்ற யோகிகள் விரிந்துரைக்க வேணுமே?
அகாரமாகிய ”அ”வ்வும், உகாரமாகிய ”உ”வ்வும் சிகாரமாகிய ”சி”வ்வும் இல்லாமல் இனைய முடியாது. இது எப்படி என்பதை யோகி ஒருவரே உபதேசிக்க வேண்டும் என்கிறார். இந்த ரகசியம் காலம் காலமாய் குருமுகமாவே வழங்கப் படுகிறது. இதனையே குரு உபதேசம் என்கின்றனர்.
அடுத்த பதிவில் வேறொரு தகவலுடன் சந்திக்கிறேன்...
Labels: சித்தர் பாடல், மந்திர யோகம், மந்திரம்
ஆமாம், ஒரே ஒரு எழுத்தால் ஆன மந்திரம்தான்.! மிக ஆச்சர்யமான இந்த ஓரெழுத்து மந்திரம் பற்றி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?... அதனாலேதான் இந்த பதிவு...
இந்த மந்திரத்தை ”பேசாத மந்திரம்”, ”ஊமை எழுத்து”, ”நெஞ்செழுத்து”, ”மௌன அட்சரம்” “நாயோட்டு மந்திரம்” என பல பெயர்களில் சித்தர்கள் தங்கள் பாடல்களில் விளக்கியுள்ளனர்.
கொங்கணவர் இந்த மந்திரம் பற்றி இப்படி சொல்கிறார்..
"ஓம் என்ற அட்சரம் தானுமுண்டு அதற்க்குள் ஊமை எழுத்தும் இருக்குதடி"
திருமூலர் இதனை “நாயோட்டு மந்திரம்” என்கிறார்.
"நாயோட்டு மந்திரம் நமனை வெல்லும் என்பரே
நாயோட்டு மந்திரம் இந்நாய்க்கு மிக உகந்ததே
நாயோட்டு மந்திரம் நாயேன்யான் விட்டிலேன்
நாயோட்டு மந்திரம் இந் நாயை வீடு சேர்க்குமே!"
- திருமூலர் -
சிவவாக்கியர் இந்த மந்திரத்தினை இப்படி குறிப்பிடுகிறார்
"அஞ்செழுத்தில் ஒரேழுத்து அறிந்து சொல்ல வல்லிரேல்"
மற்றொரு பாடலில் சிவவாக்கியர் பின்வருமாறு விளக்குகிறார்.
அகாரம் என்னும் அகரத்தில் அவ்வு வந்துதித்ததா?
உகாரம் என்னும் அகரத்தில் உவ்வு வந்துதித்ததா?
அகரமும் உகாரமும் சிகாரமின்றி நின்றதா?
விகாரமற்ற யோகிகள் விரிந்துரைக்க வேணுமே?
வள்ளலாரும் இந்த மந்திரத்தின் குறிப்பை இப்படிச் சொல்கிறார்.
"ஒரேழுத் தில் ஐந்துண்டென்பார் வெண்ணிலாவே -அது
ஊமை எழுத்தாவதென்ன வெண்ணிலாவே "
அகத்தியரும் இந்த மந்திரத்தின் அருமைகளை பின் வருமாறு கூறுகிறார்.
"எகமேனும் ஓரெழுத்தின் பயனைப் பார்த்தே
எடுத்துரைக்க இவ்வுலகில் எவருமில்லை
ஆகமங்கள் நூல்கள் பல கற்றுக் கொண்டே
அறிந்தொமேன்பர் மௌனத்தை அவனை நீயும்
வேகாச் சாகாத தலை கால் விரைந்து கேளாய்
விடுத்த அதனை உரைப்பவனே ஆசானாகும்
தேகமதில் ஒரெழுத்தை காண்பவன் ஞானி
திருநடனம் காண முத்தி சித்தியாமே!"
இத்தனை மகத்துவம் வாய்ந்த அந்த ஓரெழுத்து மந்திரம்தான் என்ன?
No comments:
Post a Comment