நோக்கு வர்ம செயல்பாடு!
Labels: அகத்தியர், வர்மம்
நமது உடலானது எழுபத்தி இரண்டாயிரம் நாடிகளால் பின்னப் பட்டிருப்பதாக சித்தரியல் கூறுகிறது. இது குறித்து ஏற்கனவே முந்தைய பல பதிவுகளில் பார்த்திருக்கிறோம். இவற்றில் மிக முக்கியமானது பத்து நாடிகளாகும். அவை பற்றியும் இந்த தொடரின் ஆரம்பத்தில் விளக்கியிருக்கிறேன்.
இந்த நாடிகளின் ஊடே பத்து விதமான வாயுக்கள் ஓடுவதாக சித்தர் பெருமக்கள் கூறியிருக்கின்றனர். அவை முறையே
பிராணன் - உயிர்க்காற்று
அபாணன் - மலக் காற்று
வியானன் - தொழிற்காற்று
உதானன் - ஒலிக்காற்று
சமானன் - நிரவுக்காற்று
நாகன் - விழிக்காற்று
கூர்மன் - இமைக்காற்று
கிருகரன் - தும்மற் காற்று
தேவதத்தன் - கொட்டாவிக் காற்று
தனஞ்செயன் - வீங்கல் காற்று
இந்த வாயுக்கள் நமது நாடிகளின் ஊடே ஓடிக் கொண்டிருப்பதாகவும், அப்படி ஓடும் இந்த வாயுக்கள் நாடிகளின் முடிச்சுகளில் ஒன்றோடு ஒன்று சந்திக்கும் இடங்களையே வர்ம ஸ்தானங்கள் அல்லது வர்ம புள்ளிகள் என்றும் குறிப்பிடுகின்றனர். இப்படி ஒரே முடிச்சில் பல வாயுக்கள் சந்திக்கும் போது அவை நுட்பமான வர்ம புள்ளிகளாகின்றன.
இத்தகைய நுட்பமான வர்ம ஸ்தானங்களில் அடி படும் போது அவை உயிராபத்தை விளைவிக்கக் கூடியவை. “படாத இடத்தில் பட்டு பொட்டென போய்விட்டான்” என்கிற பேச்சு வழக்குகள் இந்த நுட்பமான வர்ம ஸ்தானங்களில் படும் அடியினையே குறிப்பிடுகிறது.
இப்படி நுட்பமான வர்ம புள்ளிகளை எந்த ஒரு குருவும் ஆரம்ப நிலையில் கற்றுத் தருவதில்லை. குறைந்தது பன்னிரெண்டு வருட பயிற்சிக்குப் பின்னரே குருவானவர் இதனை அருளுவாராம். அந்த கட்டத்தில்தான் மாணவர் வர்மக் கலைக்குத் தேவையான உடல் லாவகமும், மனவலிமையும், மனப்பக்குவமும் பெற்றவராகி இருப்பாராம்.
இப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட வாயுக்கள் சந்திக்கும் நுட்பமான வர்ம புள்ளிகளே நோக்கு வர்மத்தில் பயன் படுத்தப் படுகிறது. இந்த புள்ளிகளின் மீது கவனக் குவிப்போடும், தன் முனைப்போடும் பார்வையை செலுத்தும் போது பார்வையின் தீவிரம் பொறுத்து விளைவுகளை உண்டாக்க முடியும் என்கிறார் அகத்தியர்.
பார்வையின் தீவிரம் பொறுத்து ஒருவரை நிலை குலையச் செய்வதில் துவங்கி, அவரை மயக்கமடையச் செய்யவோ அல்லது அவரின் உயிரினை போக்கவோ செய்திட முடியுமாம். இவை தவிர இன்னும் மேம்பட்ட நிலையில் அவரை தன் விருப்பத்திற்கு ஏற்ப இயக்கவும் முடியும் என்கிறார். இதைத்தான் சமீபத்தைய திரைப் படத்தில் காட்சிப் படுத்தியிருந்தனர்.
கீழே உள்ள படத்தில் நமது முகத்தில் உள்ளதாக அகத்தியர் சொல்லும் நோக்கு வர்ம புள்ளிகளை சிவப்புப் புள்ளியால் குறியிட்டுக் காட்டியிருக்கிறேன். இந்த படத்தினை ஒரு தகவல் பகிர்வாக மட்டுமே கருத வேண்டுகிறேன். யாரும் ஆர்வ மிகுதியினால் விஷப் பரிட்சைகளில் இறங்கிட வேண்டாம். ஏனெனில் நம்மைப் போன்றவர்களால் இதனை நிச்சயம் கைக் கொள்ள முடியாது. குருமுகமாக முறைப்படியான தொடர் பயிற்சிகள் மற்றும் கடுமையான கட்டுப்பாடுகளின் ஊடே வளர்த்தெடுக்கப் பட வேண்டியது இந்தக் கலை.
இந்த நோக்கு வர்ம தாக்குதலில் இருந்து நம்மை காத்துக் கொள்ளவும் வழிவகைகள் இருக்கின்றனவாம். அவற்றை குருமுகமாகவே அறிவது சிறப்பு என்பதால் அதை இங்கே ஒரு தகவலாக மட்டுமே பதிந்து வைக்கிறேன். தற்போதும் தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி மற்றும் கேரளத்தின் சில பகுதிகளில் தேர்ந்த வர்மக் கலை ஆசான்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அத்தகையவர்கள் ஒருபோதும் தங்களை வெளிக் காட்டிக் கொள்வதில்லை. எனவே ஆர்வமுள்ளவர்கள் அவர்களைத் தேடியறிந்து பணிந்து இந்தக் கலையினை பழகிடலாம்.
நம்மிடம் இருக்கும் நூல்கள் நமது தேடலின் பாதையில் வழிகாட்டும் விளக்காக மட்டுமே இருக்க முடியும். அதைத் தாண்டிய நிபுணத்துவத்தை குருமுகமாக மட்டுமே அறியமுடியும்.
நோக்கு வர்மம் மேலும் சில தகவல்கள்!
Labels: வர்மம்
நோக்கு வர்மம் என்பது நான்கு வகையான வர்ம பிரிவுகளில் ஒன்று என்பதை முன்னரே பார்த்திருக்கிறோம். இந்த நோக்கு வர்மத்திற்கு “மெய்தீண்டாக் கலை” என்றொரு பெயரும் உண்டு. தவிர்க்க இயலாத ஆபத்துக் காலங்களில் மட்டுமே இந்தக் கலையினை பயன்படுத்திட வேண்டும் என சித்தர் பெருமக்கள். வலியுறுத்தியிருக்கின்றனர்.
நம்மை தாக்க வரும் மனிதர்கள் அல்லது விலங்குகளின் மீது பார்வையைச் செலுத்துவதன் மூலம் அவர்களை செயலிழக்கச் செய்து நம்மை தற்காத்துக் கொள்வதே இந்த கலையின் அடிப்படை நோக்கம். மேலும் குறைந்த இடைவெளியில் உள்ளவர்கள் மீது மட்டுமே இந்த முறையினைப் பயன்படுத்தி செயலிழக்கச் செய்யமுடியும். நுட்பமான இந்த கலையில் தேர்ந்தவன் எவராலும் வெல்ல முடியாதவனாகி விடுவான் என்கிறார் அகத்தியர். இதன் பொருட்டே குருவானவர் இந்தக் கலையை அத்தனை எளிதில் தம் மாணவருக்கு அருளிட மாட்டாராம்.
ஒரு வேளை மாணவன் வர்மக்கலையை முழுவதுமாக கற்றுத் தேர்ந்த பின்னர், காலப்போக்கில் அகந்தை காரணமாய், தன்னையே எதிர்க்க துவங்கினால் என்ன செய்வது என்று தயக்கத்தின் காரணமாய், குருவானவர் இது போன்ற சில நுட்பமான வர்மங்களை தங்கள் பரம்பரைக்கு என்று வைத்துக் கொண்டு மற்றவற்றையே கற்று கொடுத்தமையும் இந்த கலையின் அழிவிற்கு இன்னுமொரு காரணமாகிறது.
இன்றும் கூட, நம்முடைய பேச்சு வழக்கில் உள்ள “கண் திருஷ்டி”, “கண்படுதல்”, “கெட்டபார்வை”, “ஒரு பார்வையில் சப்த நாடியும் ஒடுங்கிப் போதல்” என்பது மாதிரியான வார்த்தை பிரயோகங்கள் பயன் பாட்டில் இருப்பதை கவனிக்க வேண்டுகிறேன். இவற்றை நோக்கு வர்மத்தின் நீட்சியாகவோ அல்லது எச்சங்களாகவே கருதலாம்.
நமது இந்த மெய் தீண்டாக் கலையே சீனாவில் போதி தர்மர் என்னும் பௌத்த துறவியினால் போதிக்கப் பெற்றது . இந்த நோக்கு வர்மத்தை தற்போது சீனாவில் “திம்-மாக்” என அழைக்கின்றனர். இது பற்றிய மேலதிக விவரங்களை இந்தஇணைப்பில் காணலாம்.
இது போலவே வர்மத்தின் மருவிய தோற்றமே ஜப்பானிய தற்காப்புக் கலையான “அக்கிடோ” என்றும் கூறுகின்றனர். அக்கிடோ பற்றிய தகவல்களை இந்த இணைப்பில்அறியலாம்.
இப்படி ஆசிய நாடுகள் எங்கும் பரவிய கலையின் தாயகம் தமிழகம். இது தமிழர்களின் கலை, ஆனால் இன்று ஏறத்தாழ தமிழர்கள் அனைவராலும் மறக்கப் பட்டுவிட்ட அல்லது தமிழகத்தில் அழிந்தே போய்விட்ட கலை இது. இன்றைக்கு நமக்கு பழம் பெருமை மட்டுமே மிச்சமாயிருக்கிறது. இது மிகவும் வருந்தத் தக்க நிலை. இந்த நிலையிலாவது நம்மிடம் இருக்கும் தகவல்களைக் கொண்டு இந்தக் கலையினை மீட்டெடுக்கும் முயற்சியில் அரசு மற்றும் தன்னார்வலர்கள் களமிறங்கிட வேண்டும்.
நோக்கு வர்மம் எவ்வாறு செயல்படுத்தப் படுகிறது?, நோக்கு வர்மப் புள்ளிகள் எவை? நோக்கு வர்மத்தால் என்ன செய்ய முடியும்?..... இந்த விவரங்களுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.
நோக்கு வர்மம்.... சில அடிப்படைகள்!
Labels: வர்மம்
நோக்கு வர்மம். தீபாவளி நாளில் இருந்துதான் இந்த வார்த்தை பிரபலமாகி இருக்கிறது. அதற்கு முன்னர் வரை இப்படியான ஒன்றைப் பற்றி நம்மில் நிறைய பேருக்கு தெரிந்திக்க வாய்ப்பில்லை. இத்தனைக்கும் இது நம்முடைய அடையாளம், குறைந்த பட்சம் இப்படியான தகவல்கள், திரைப்பட ஊடகம் மூலமாவது தமிழர் பார்வைக்கு வந்திருப்பது மகிழ்வைத் தருகிறது. தமிழன் தன் பார்வையையும் கூட ஆயுதமாக உணர்ந்து அறிந்து பயன்படுத்தியிருக்கிறான் என்பதே பெருமிதமான உணர்வுதானே!.
இப்படித்தான் தமிழரின் அநேக பெருமைகள் மறைவாகவே இருக்கின்றன. அவை தாமாய் மறைந்ததா இல்லை மறைக்கப் பட்டதா என்று ஆராயப் புகுந்தால் தேவையில்லாத வீண் மன கசப்புகளே மிஞ்சும்.
நோக்கு வர்மம் என்பது அடிப்படையில் வர்மங்களின் வகைகளில் ஒன்று. இதைப் பற்றிய அறிமுகம் மற்றும் விளக்கத்தினை ஏற்கனவே ஒரு பதிவில் பகிர்ந்திருக்கிறேன். அதன் விவரங்களை இந்த இணைப்பில் சென்று வாசிக்கலாம். இந்த முறை வர்மம் பற்றி அகத்தியர், போகர் போன்ற பெருமக்கள் தங்களின் நூல்களில் விளக்கிக் கூறியிருக்கின்றனர்.
ஒரு சிலர் நமது நோக்கு வர்மம் மேல் நாடுகளில் புழக்கத்தில் இருக்கும் ஹிப்னாடிஸம், மெஸ்மரிசம் கலைகளுக்கு இணையானதா என்ற கேள்விவியினை மின்னஞ்சல்களில் முன் வைத்திருக்கின்றனர். என்னுடைய வாசிப்பு அனுபவத்தில் இரண்டும் வெவ்வேறான அடிப்படையைக் கொண்டவை என்றே கருதுகிறேன். இதற்கு இவற்றின் அடிப்படைகளை புரிந்து கொள்வது அவசியமாகிறது.
பதினெட்டாம் நூற்றாண்டில் மெஸ்மர் என்பவரால் பிரபலமானதால் இதற்கு மெஸ்மரிசம் என்ற பெயர் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த ஹிப்னாடிஸம், மெஸ்மரிசம் போன்ற கலைகள் பற்றி திரைப்படங்கள், கதைகள் மிகையான ஒரு தோற்றத்தை உருவாக்கி வைத்திருக்கின்றன என்பதே உண்மை. நிதர்சனத்தில் இந்த ஊடகங்கள் காட்சிப் படுத்துவதைப் போல நினைத்த மாத்திரத்தில் ஒருவரை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவே முடியாது. ஏனெனில் இந்த முறையில் ஒருவரை இயக்க விரும்புபவர் அவர் அனுமதி இன்றி நிச்சயமாக அதைச் செய்திட முடியாது.
அவர் அனுமதி பெற்ற பின்னர் "அறிதுயில் நிலைக்கு" அவரை கொண்டு சென்று அதன் பின்னர் அவர் ஆழ்மனதிற்குள் ஊடுருவி அவரை கட்டுப்பாடிற்குள் கொண்டுவர வேண்டும். அதிலும் அறிதுயில் நிலைக்கு செல்பவர் யாருக்கும் எக்காரணம் கொண்டும் சொல்ல கூடாது அல்லது தெரியகூடாது என்று தீர்மானமாக இருக்கும் விஷயங்களை தெரிந்து கொள்ள முடியாது.
இங்கு அறி துயில் என்பது கேட்டல், பேசுதல், தொடுகை போன்ற உணர்வுகளுடன் கூடிய ஒருவகை உறக்க நிலை.
இந்த ஹிப்னாடிஸம், மெஸ்மரிசம் போன்ற கலைகளால் ஒருவரிடம் இருக்கும் மன அழுத்தம், கவலைகள், தீய பழக்கவழக்கங்கள், குற்ற உணர்ச்சி போன்றவற்றை இல்லாது செய்யலாம் அது தவிர அவரின் கடந்தகால வாழ்க்கை சம்பவங்கள். முற்பிறப்பு நினைவுகள் வரை அறியலாம் என்று கூறப்படுகிறது.
மாறாக நோக்கு வர்மம் என்பது நொடிப் பொழுதில், நினைத்த மாத்திரத்தில் பார்வையாலேயே எதிரியை வீழ்த்தவோ அல்லது தன் முன்னாலிருக்கும் ஒருவரை தனது முழுக் கட்டுப்பாடிற்குள் கொண்டுவரவோ முடியும். இது மிகையான வாதமாக இருக்க முடியாது. ஏனெனில் இது பற்றி அகத்தியரும், போகரும் உறுதியான கருத்துக்களையே தங்களின் நூலில் கூறியிருக்கின்றனர்.
எல்லோரும் நினைப்பதைப் போல இந்த கலை அடியோடு அழிந்து போய் விட்டதா என்றால் இல்லை என்றுதான் சொல்லுவேன். இன்றும் கூட இந்த கலையின் எச்சங்கள் நம்மிடையே இருந்து கொண்டுதானிருக்கின்றன. அது பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.
மருத்துவ வர்மம்....
Labels: அகத்தியர், சித்த மருத்துவம், வர்மம்
வர்மக் கலையானது அடிப்படையில் மருத்துவம் சார்ந்த ஒன்று என்பதை ஏற்கனவே பார்த்திருக்கிறோம். மனித உடலானது எழுபத்தி இரண்டாயிரம் நாடிகளால் பின்னப் பட்டிருப்பதாகவும், அவற்றின் ஊடே பத்து வகையான வாயுக்களின் ஓட்டம் இருப்பதாகவும் சித்தர் பெருமக்கள் கூறியிருக்கின்றனர்.
அவை முறையே...
பிராணன் - உயிர்க்காற்று
அபாணன் - மலக் காற்று
வியானன் - தொழிற்காற்று
உதானன் - ஒலிக்காற்று
சமானன் - நிரவுக்காற்று
நாகன் - விழிக்காற்று
கூர்மன் - இமைக்காற்று
கிருகரன் - தும்மற் காற்று
தேவதத்தன் - கொட்டாவிக் காற்று
தனஞ்செயன் - வீங்கல் காற்று
என்பதாக வரையறுத்திருக்கின்றன. இந்த நாடிகள் ஒன்றோடு ஒன்று இனையும் அல்லது பினையும் இடங்களை நாடிமுடிச்சுகள் என்கின்றனர். இந்த இடங்களில் இந்த வாயுக்கள் தேங்கியிருக்குமாம். இவற்றை நாடி பார்த்து அறிந்து விட முடியும் என்றும், அதனை பார்க்கும் முறைகளையும் அகத்தியர் அருளியிருக்கிறார்.
இந்த நாடி முடிச்சுகளையே வர்மப் புள்ளிகள் என்கின்றனர். இந்த புள்ளிகளை அழுத்துவதன் மூலமோ, அல்லது தட்டுவதன் மூலமோ இந்த வாயுக்களின் ஓட்டத்தினை சீரமைக்க முடியும் என்பதே வர்மக் கலையின் அடிப்படையாக புரியப் படுகிறது. இந்த வர்மங்களின் வகைகளை ஏற்கனவே முந்தைய பதிவுகளில் விளக்கியிருக்கிறேன். தேவையுள்ளோர் இந்தஇணைப்பில் அந்த பதிவுகளை பார்வையிடலாம்.
இன்றைய மருத்துவத்தில் ஒருவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டுமெனில் அவரை மயக்க நிலைக்கு ஆழ்த்தியோ அல்லது வலி தெரியாமலிருக்கும் மருந்துகளைக் கொடுத்தோ சிகிச்சை செய்கிறோம். இதற்கென பிரத்தியேக மருந்துகள் இப்போது உள்ளன. ஆனால் வர்மக் கலையில் உடலில் ஒரு சில புள்ளிகளைத் தட்டுவதன் மூலமே ஒருவரை மயக்க நிலைக்கு ஆழ்த்தவும், குறிப்பிட்ட பாகத்தினை மரத்துப் போகச் செய்யவும் முடியும்.
சிகிச்சை முடிந்த பின்னர் மீண்டும் சில குறிப்பிட்ட இடங்களைத் தட்டுவதன் மூலம் மூர்ச்சையை தெளிய வைக்கவும், மரத்துப் போன இடத்தில் உணர்வினை மீட்டெடுக்கவும் முடியும். இந்த அடிப்படையே பின்னாளில் தற்காப்புக் கலையாகவும், உயிர் கொல்லும் போர்கலையாகவும் மாறியது.
இவைதவிர ஆயுதங்களால் வெட்டுபடுவதாலோ அல்லது வேறு வழிமுறைகளாலோ உடலில் கயமேற்பட்டு இரத்தம் அதிகமாக வெறியேறினால் அந்த இரத்தப் போக்கினை உடனடியாக நிறுத்தவும் வர்மக்கலை வழி சொல்கிறது. இதனை அகத்தியர் இவ்வாறு விளக்கியிருக்கிறார்.
காயமது திருமேனிதனில்
ஆயுதங்களின் அடவால் வெட்டுண்டு
குருதியது வெளிப்போந்தாக்கால்
குருதியதை நிறுத்தும் உபாயமது
உத்தமனே உரைப்பேன் கேளு
கரமதின் கவளிகளது பிளவுண்டு
குருதி கண்டால் மணிக்கட்டுதனில் பற்றிய
மணி பந்த சூட்சுமமதில் பெருவிரலது
கொண்டு அழுத்தி மனதினில்
நூற்று எண்பது மாத்திரை அதை
எண்ணி விரலகற்ற குருதியது
அடங்கும் அடங்கு மடாபரி தொன்று
அறிந்து கொள்ளடா மணிகட்டதுமுதல்
முண்டது காண் பகுதிதனில்
வெட்டுண்டு இருதியது வருங்கால்
பதறாதே பய்ய வேமுண்டது உள்
வர்மநிலை தனில் ஆட்காட்டியதால்
மாத்திரை அரை யூன்றியே பூரணமாய்
நூற்று இருபத்து எண்ணியே விரலகற்ற
குருதியது தானெனவே நிற்கும்பாரு
பாரெனவே சிரசதனில் குருதியது
பெருக்கம் கண்டால் சென்னிபற்றிய
செவிக்குத்தி கால மதில் ஆட்காட்டியதில்
மாத்திரையது காலளவு வழுத்தி
அகவினில் எண்ணமது இரு நூற்று
நாற்பது தாமதித்து விரலகற்றிட
சுகம்தானே சுகமாய்தானே
மற்றொன்று கேளாய் மகனே
அதரமது அருகில் தானடா சுழிவர்மம்
சுண்டு அன்னம் முகவாய் தனில்
குருதி காண் சுழியதில் விரலுன்றி
மாத்திரையது கால் வரையறுத்து
உள்மனதினில் அறுபது எண்ணமிட
குருதியது சேதமிடல் தட்டென
நிற்கு மடா ஊட்டமான ஊட்டியதனில்
வெட்டுண்டு குருதியது கொட்டுங்கால்
குறியானது குரல் முடக்கியதில்
விரல்களது ஊன்றியே பாங்காய்
பரிவுடனே மாத்திரையது அரைதான்
வழுத்தி நவமணி முறை பூஜ்யமதில்
எண்ணிட இரத்த மது சுகமாய் நிற்ககுமடா
கரமது வெட்டுண்டு இரத்தப்
போக்கால் அவதி கண்டால்
மற்றொரு உபாயமது கூறுவேன்
கேளாய் மகனே கம்கூட்டது
சேருமிட சேர்க்கையதில் விரலூன்றி
சுகமாய் அழுத்திட உதிரப்போக்கது
தீரும்பாரு திடமான கால்களதில்
ஊனது தோன்றி குருதியது நீர் போன்று
வெளியேறி னாக்கால் தயவான
நெறி வர்மமது இருபுறமும் பற்றிட
குருதியது தானென நிற்கும் பாரு
நின்றெனவே முழங்காலதின்
கீழ்தானடா ஆயுதமதால் தாக்கமது
கண்டால் நடுத்தொடை சூட்சுமத்தில்
திறனாய் அழுத்திட குருதியது
நிற்கும் பாரு பாரெனவே இரத்தப்
பெருக்கத்தை நிறுத்த இறுதியான
வர்மசூட்சுமம் இது தானடா மைந்தா
பாதமது இணையும் காலது பொருத்துதனில்
பற்றிய வர்மமதில் பெருவிரலால்
தட்டெனவே அழுத்திட குருதியது
சீரென சினராமல் நிற்குமடா
- அகத்தியர்.
சமீபத்தில் விபத்தில் காயமடைந்து குருதி கொட்டக் கொட்ட கொண்டு வரப்பட்ட இரண்டு பேரின் குருதிப் போக்கினை இந்த முறையினால் உடனடியாக என்னால் நிறுத்திட முடிந்தது. இப்படியான அவசர நேரங்களில் வர்மம் போலொரு சிறந்த மருத்துவமுறை இருக்க முடியாது என்பது எனது தாழ்மையான கருத்து.
இவை தவிர பல்வேறு நோய்க் குறியீடுகளை அறியவும், அவற்றிற்கான சிகிச்சை முறைகளையும் அகத்தியர் தனது நூலில் விவரித்திருக்கிறார். நேரமும், குருவருளும் அனுமதித்தால் எதிர் காலத்தில் அவை பற்றி விரிவாக பதிவிட முயற்சிக்கிறேன்.
இனி, எல்லோரும் மிக ஆவலும் எதிர்பார்த்திருக்கும் நோக்கு வர்மம் பாக்கி இருக்கிறது. அதென்ன நோக்கு வர்மம்?. இப்போது அதை பயன்பாட்டில் இருக்கிறதா? நோக்கு வர்மத்தால் என்ன செய்யலாம்?, என்ன செய்ய முடியும்?
இந்த கேள்விகளுக்கான பதிலுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.
வர்மம் மர்மமா?
Labels: போகர், வர்மம்
வர்மக் கலை என்பது அடிப்படையில் ஒரு மருத்துவக் கலை. ஆனால் கால ஓட்டத்தில் தற்காப்பு கலையாக உருமாற்றம் பெற்று, தற்போது வர்மக்கலை ஒரு நுட்பமான போர்க் கலை என்பதாக திரைப் படத் துறையினர் மூலம் வெளிக்காட்டப் பட்டிருக்கிறது. மறைந்து போயிருந்த இந்த கலையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து பலரின் ஆர்வத்தை இந்தக் கலையின் பக்கம் திருப்பியவர்கள் என்கிற வகையில், அவர்கள் பாராட்டப் பட வேண்டியவர்களே.
நமது உடலானது எலும்புகளாலும், தசைகளாலும், நரம்புகளாலும் பின்னப் பட்டிருக்கிறது. இதில் ஒரு உறுப்பானது மற்ற உறுப்புடன் எவ்வாறு பிணைக்கப் பட்டிருக்கிறது, அவைகள் பிணைக்கப் பட்டிருக்கும் தொழில் நுட்பம் எத்தகையது என்பதை நவீன அறிவியலில் கதிரொளி (xray) மற்றும் வருடி (scan) மூலமாக நாம் பார்க்க முடிகிறது. அதனை வைத்தே சேதமடைந்த அல்லது நோய்வாய்ப்பட்ட ஒரு உறுப்பிற்குத் தேவையான சிகிச்சைகள் தரப்படுகின்றன.
இத்தகைய அறிவியல் வளர்ச்சி இல்லாத ஒரு காலகட்டத்தில், மேலே குறிப்பிட்ட நவீன முறைகளை விடவும் நேர்த்தியான, செலவில்லாத ஒரு வைத்திய முறையாக வர்மக் கலை விளங்கியிருக்கிறது என்பது நமக்கு கிடைத்திருக்கும் நூல்களின் வாயிலாக அறிய முடிகிறது. துரதிர்ஷ்டவசமாக இந்த தகவல்கள் நமக்கு முழுமையாக கிடைக்கவில்லை. பல அரிய நூல்கள் அழிந்து போயிருக்கலாம், அல்லது அழிக்கப் பட்டிருக்கலாம் என்றே கருதத் தோன்றுகிறது.
தற்போது நமக்குக் கிடைத்திருக்கும் வர்ம நூல்கள்...
ஒடிவு முறிவு சாரி
வர்ம சூத்திரம்
வர்ம கண்ணாடி
வர்ம காண்டம்
வர்ம பீரங்கி
வர்ம சூடாமணி
இந்த கலை அழிந்து போனதற்கும் இந்த கலையின் சிறப்பே கூட ஒரு காரணமாக இருந்திருக்கக் கூடும். ஏனெனில் இந்தக் கலையில் தேர்ந்த ஒருவன் சகல விதத்திலும் தன் சக மனிதர்களை விட அசாத்திய திறமைகளைக் கொண்டவனாகி விடுகிறான். அப்படிப் பட்டவனால் எதனையும் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும்.
ஒரு வேளை ஆசாபாசங்களில் சிக்கியிருக்கும் தவறான மனிதர்கள் கையில் இந்த கலை சிக்கி அவர்கள் தங்கள் சுயநலத்திற்கு பயன் படுத்த ஆரம்பித்தால் அது சமூகத்தில் ஆபத்தான விளைவுகளையும், முன்னுதாரணங்களையும் ஏற்படுத்தி விடும் என்று கருதியே, சரியான மாணவன் கிடைத்தால் மட்டுமே கற்றுத் தருகிற கலையாகிப் போனது. சரியான மாணவன் கிடைக்காவிட்டால் அந்த குருவோடு அந்த கலை அழிந்து போக வேண்டியதுதான்.
பலரும் நினைப்பதைப் போல இந்த கலையினை எளிதில் கற்றுக் கொள்ள முடியாது. இதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை சித்தர்கள் வகுத்திருக்கின்றனர். போகர் ஒரு பாடலில் சீடனை தெரிந்தெடுக்கும் வகையினை இப்படிச் சொல்கிறார்.
"மறைவில் வைப்பதென்றால் மைந்தா கேளு
வகைவிபரம் கைபாகம் மறைப்பொன் றில்லை
உறவாடிச் சிலபேர்கள் நூல் தாவென்று
ஓவியம் போல் மொழிபேசி உன்னை மேய்ப்பார்
திறமான நூலவற்கு வெளியிடாதே
சீடனென்று பன்னிரண்டு வருடம் காத்தால்
அறிவான பக்தியவர்க் கிருந்த தானால்
அப்பனே நிலையறிந்து நூலை ஈயே"
- போகர்.
குறைந்தது பன்னிரெண்டு ஆண்டுகள் ஒருவரின் நடவடிக்கைகளைக் கண்காணித்து அவரது தகுதியினை சோதித்து அறிந்த பின்னரே அவருக்கு இந்த கலையினை கற்றுக் கொடுக்க வேண்டுமென கூறுகிறார். சரியான மாணவனைக் கண்டறிந்த உடனும் அவருக்கு இந்தக் கலையினை போதிக்க முடியாது. இந்தக் கலையினை ஏற்றுக் கொள்ளும் உடல் மற்றும் மனப் பக்குவத்தை பெறுவதற்கான பயிற்சிகளே முதலில் வழங்கப் படும். அவற்றில் தேறினால் மட்டுமே குருவானவர் வர்மக் கலையினை மாணவருக்கு அருளுவார். இதெல்லாம் இன்றைய அவசர உலகத்துக்கு சாத்தியமாகுமா?
ஆக, பொறுமை, நிதானம், தீர்க்கமான சிந்தனை, பிற உயிர்களின் மீது அன்பும், கருணையும் செலுத்தும் மனிதாபிமான பாங்கு போன்ற இயல்புகள் மிளிரப் பெற்றவரே இந்தக் கலையை கற்றுக் கொள்ளும் தகுதியுடையவராவார். இவர்களுக்கு மட்டுமே இந்த கலை முழுமையாக போதிக்கப் படுமாம். அவர்கள் நடவடிக்கையில் எள்ளளவு சந்தேகம் வந்தாலும் குருவானவர் முழுமையாக கற்றுத் தராமல் போகும் வாய்ப்புள்ளது.
பதிவின் நீளம் கருதி வர்மக் கலையின் மருத்துவப் பயன்பாடு மற்றும் நோக்கு வர்மம் பற்றி அடுத்தடுத்த பதிவுகளில் பகிர்ந்து கொள்கிறேன்.
Wikipedia
Search results
Wednesday, 9 December 2015
நோக்கு வர்ம செயல்பாடு!
Subscribe to:
Post Comments (Atom)
இக்கலைகளை கற்றுக்கொள்வதற்கான ஆசான்களின்
ReplyDeleteதொடர்பு எண்கள்...